காக புசுண்டர்

காகபுசுண்டர் பாடல்கள்

நூல் – 26

பக்கம் 380

1 காகபுசுண்டர் பாடல்கள் தொகு

1 தொகு

சிறந்த பாராபரம் ஆகி எங்கும் தானாய்த்

தீர்க்கமுடன் ரவி மதியும் சுடர் முன் ஆகிப்

பறந்தருளும் ஐம்பூத மாயை தோன்றிப்

பல்லாயிரங்கோடி அண்டம் படைத்த போதம்

வரம்பெருகி யனந்தனந்தம் உயிரும் ஆகி

மதபேத மாகவுந்தான் வடிவைக் காட்டிச்

சரம்பெரு கண்டத்தில் எழுந்தே நின்ற

சச்சிதா னந்தமதைப் பணிகு வோமே

2 தொகு

ஓமென்ற சுழுனையடா அண்ட வுச்சி

ஒமுடிந்த பட்டணத்துக்கு அப்பாற் சென்று

நாமென்று சொல்லற்று யோக ஞானம்

நாட்டுகிறேன் அஞ்சனமுந் திலதப் போக்கும்

வாமென்ற வயித்தியமும் அட்ட கர்மம்

வாதமென்ற வித்தையெல்லாந் தெளிவ தாகக்

காமென்ற பீடமதிற் கண்டு தேறிக்

காட்டுகிறேன் மெய்ஞ்ஞானக் கருவைப் பாரே

3 தொகு

பாரேநீ யோகமென்ற வழியைச் சொல்வேன்

பத்தடா ஐம்புலனைப் பரத்தினூடே

சீரொருவர் தெரியாமல் மதங்கள் பேசித்

திருவான வுச்சியிலே சேரா மற்றான்

ஆரொருவன் ஆதாரம் வெவ்வே றென்றே

அடுக்கடுக்காய்ப் பன்னிரண்டு தலங்க ளென்று

வீரேதான் பேசியே மெலிந்து போவான்

விடமுண்ட அண்டமதை விரும்பிக் காணே

4 தொகு

காணப்பா தலமெல்லாம் அண்ட வுச்சி

கமலமடா பதினெட்டாங் கோட்டிற் சென்று

பூணப்பா மனத்தையுந்தான் பிச்சொட்டாமற்

பூட்டடா பிரமத்திற் புகுந்து எந் நாளும்

வீணப்பா மந்திரங்கள் ஒன்று மில்லை

விதியில்லை மதியில்லை கெதியு மில்லை

தோணப்பா தோணுமடா மனம் ஒன் றான

சுத்தமுடன் நீயிருந்து தவஞ் செய்வாயே

5 தொகு

செய்யப்பா வாசிமுனி மகனே கேளு

தீர்க்கமுடன் முன்னுரைத்த ஆயிரத்தில்

மெய்யப்பா சரக்கு நீத்து வகை யெல்லாம்

மேன்மையுடன் கட்டினங்கள் உருக்கினங்கள்

பொய்யப்பா சொல்லவில்லை ரத்னப் பாக்குப்

புனிதமுடன் சரியாகச் சொல்லிப் போட்டேன்

வையப்பா இந்நூலில் மவுனமெல்லாம்

வகையாகச் சொல்லுகிறேன் பணிந்து கேளே

6 தொகு

கேளப்பா கேசரமே அண்டவுச்சி

கெட்டியாய்க் கண்டவர்க்கேமவுன மாகும்

ஆளப்பா பரப்பிரம யோக மென்றே

அடுக்கையிலே போதமுந்தான் உயரத் தூக்கும்

வானப்பா கெவுன மணி விந்து நாதம்

வலுத்ததடா கெட்டியாய்த் திரண்டு போகும்

நாளப்பா அண்ண மெல்லாஞ் சத்தியோடு

நடனமிடுஞ் சிலம்பொலியுங் காண லாமே

7 தொகு

காணலாம் பிரமத்தில் நிர்ண யந்தான்

காட்டுகிறேன் வாசமுனி கருவாய்க் கேளு

பூணலாம் அண்டவுச்சி தன்னில் நின்று

பொறிகளையும் உண்டாக்கிப் புவனந் தன்னில்

தோணலாம் உயிர்ப் பயிரைப் படைத்தெந் நாளும்

தொந்தமென்னும் ஏழுவகைத் தோற்றமாகி

ஆணலாம் நாலுவகை யோனி யாகி

அண்டமடா அனந்தனந்த மான வாறே

8 தொகு

வாறான பிரமத்தின் நடுவே மைந்தா

வந்ததடா ரவிமதியும் சுடர் மூன்றாகிக்

கூறாகப் பின்னியடா கீழே பாயும்

கூறுகிறேன் இருக்கண்ணில் ஒளிவைக் கேளு

வீறான அண்டவுச்சி முனைக்கப் பாலே

வெற்றியுடன் நரம்பதுதான் விழுது போலே

நேராக இருகண்ணில் பின்னலாகி

நிச்சயமா யொளிவாகி நிறைந்தார் பாரே

9 தொகு

பாரப்பா பரப்பிரமம் ஒளிவினாலே

பத்தியே நரம்புவழி பாயும் போது

ஆரப்பா இருகண்ணில் ஒளிவ தாகி

அண்ட மெல்லாம் ஏகமாய்த் தெரியலாச்சு

காரப்பா நரம்பென்ற விழுது வட்டம்

கபாலத்தில் முக்கூறாயச் சுழுனை யாச்சு

வீரப்பா காதுக்கும் நாக்குக் குந்தான்

வெற்றிபெற இன்னமுந்தான் உரைக்கக் கேளே

10 தொகு

கேளப்பா மூலமடா லிங்கந் தன்னில்

கிருபையுடன் தண்டுக்குங் கீழ் மேலாக

நாளப்பா தமர்போலே பிடரி மார்க்கம்

நன்றாக ஓடுமடா நரம்பி னூடே

வாளப்பா அண்டமுட்டி உயர மைந்தா

வலுவாக முன்சொன்ன நரம்பி னூடே

தேளப்பா சேர்ந்துமிகப் பின்ன லாகிச்

சிறந்திடவே புருவமத்தி யாகும் பாரே

11 தொகு

பாரடா புருவமத்தி யேதென் றக்கால்

பரப்பிரம மானதோர் அண்ட வுச்சி

நேரடா முன்சொன்ன நரம்பு மத்தி

நிலைத்ததடா சுழுனையென்று நினைவாய்ப் பாரு

வீரடா அண்ணாக்கில்நேரே மைந்தா

மேவடா மனந்தனையும் செலுத்தும் போது

காரடா சுழுனையிலே மனந்தான் பாய்ந்து

கலந்தைந்து பூதமுந்தான் ஒன்றாய்ப் போமே

12 தொகு

போமடா முன்சொன்ன நரம்பி னூடே

பூரித்து ரவிமதியும் சுடர்தாம் மூன்றும்

ஆமடா பின்னியும் கீழே பாயும்

அந்தரங்கந் தனைப்பார்க்க அடங்கிப் போகும்

நாமடா வெளி திறந்து சொல்லி விட்டோம்

நாதாந்த பரப்பிரம நாட்டந் தன்னை

ஓமடா விந்துவுந்தான் அண்ட வுச்சி

உறுதியுடன் சித்தமதை ஊன்றிப் பாரே

13 தொகு

பாரான சாகரமே அண்ட வுச்சி

பதினாலு லோகமெல்லாம் பரத்தி னூடே

சீராகத் தெரியுமடா மவுன மார்க்கஞ்

சித்தான சித்து விளையாடி நிற்கும்

வீரான மந்திரங்கள் பிறந்த தெப்போ

விண்ணுவென்றும் பிரமனென்றும் வந்த தெப்போ

கூரான முக்குணங்கள் உதித்த தெப்போ

கூறாத அட்சரத்தின் குறியைக் காணே

14 தொகு

காணார்கள் பிரமுந்தான் உதிக்கு முன்னே

கருணையுள்ள மந்திரங்கள் பிறந்த துண்டோ

தோணாமல் மந்திரங்கள் அனந்தங் கற்றுச்

சுழுனையென்ற மூக்குநுனி தன்னைப் பார்த்து

வீணாகத் திரிந்து மிகப் பித்தர் போலே

வேரோடே கெட்டுழல்வான் விருதாமாடு

கோணாமல் அண்ணாக்கின் நேரே மைந்தா

குறிப்பறிந்து பார்த்தவர்க்கே முக்தி தானே

15 தொகு

முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது

மோசமடா :மனந்தானும் இரண்டாய்ப் போகும்

சத்தியடா மனந்தானே யேக மாகத்

தனித்திருந்து நித்திரையைத் தள்ளி மைந்தா

புத்தியடா பிரமத்திற் புகுந்து கொண்டாற்

பூலோக மெல்லாந்தான் பணியு முன்னை

எத்தியே திரியாமல் பிடரி மார்க்கம்

ஏறுகின்ற வாசியுந்தான் கற்பந் தானே

16 தொகு

தானென்ற கற்பமடா மதுவுண்டக்கால்

சஞ்சார சமாதி யென்பது அதற்குப் பேரு

ஊனென்ற பசிதீரும் கோபம் போகும்

உதயகிரி தனிற் சென்று ஊடுருவிப் பார்க்கத்

தேனென்ற திரையெழுந் தீய்ந்து போகுந்

திரிவாரே உச்சிநடுச் சென்ற போது

கோனென்ற கருவியெல்லாம் ஒடுங்கிப் போகுங்

கூற்றுவனார் ஆட்டமதைப் பார்க்கலாமே

17 தொகு

பார்க்கலாம் ஒருகாலை உயரத் தூக்கிப்

பாடுவான் ஒருகாலைத் தாழ விட்டே

ஏர்க்கையிலே மேல்நோக்குங் காலைக் கேளாய்

என்மகனே மதியெனபது அதற்குப் பேரு

கார்க்கையிலே கீழ்நோக்குங் காலை மைந்தா

கண்டுபார் ரவியென்று கருதலாகும்

மார்க்கமுடன் அண்டவுச்சி மேலேதானும்

மகத்தான வன்னி இருப்பிடந்தான் பாரே

18 தொகு

பாரப்பா இதையறியார் சித்தர் கூடிப்

பார் தனிலே அறுபத்து நாலுயோகம்

ஆரப்பா இருக்கு மென்று வெவ்வேறாக

அலைந்தலைந்து கெட்டவர்கள் அனந்தங் கோடி

நேரப்பா ராசாங்க யோகம் பார்த்து

நிலையறிந்து கண்டவனே கோடிக் கொன்று

வீரப்பா பேசாமல் மனக்கண்ணாலே

விந்துவடா பாய்ந்ததலம் வெளியைக் காணே

19 தொகு

காணாத காட்சியெல்லாம் கண்ணிற் கண்டு

காசுமடா புசுண்டரென்று பேரும் பெற்றேன்

கோணாமல் நான்னா லைந்து சிறிது காலம்

துருவ மென்ற பிரமத்தை யடுத்துக் கேட்க

நாணாமல் அண்டவுச்சி தன்னிலே தான்

நாடியே மனத்தாலே நாட்ட மாகக்

கோணாமல் பாருமென்றே எனக்குச் சொல்லக்

கூசாமல் மனம் ஒன்றாய் இருத்தினேனே

20 தொகு

இருத்திய இருதயத்தில் மனமொன்றாக

ஏகபர மாம்பொருளை யிருத்தி யொன்றாய்

நிருத்தியே வெகுகோடி கால மட்டும்

நிருவிகற்பச் சமாதியிலே நிறைந்தெந் நாளும்

பொருத்தியே வாலைக்கண் திறந்து பார்க்கப்

பூலோகம் எங்கும் ஒன்றாய் நிறைந்தென் மைந்தா

கருத்தொன்றாய் நிறுத்தியடா கபாடம் நீக்கிக்

காரணத்தைக் கண்டு விளையாடு வாயே

21 தொகு

விளையாடிப் போதமய மாக வுந்தான்

வெட்டாத சக்கரத்தின் வெளிச்சம் பார்த்து

நிலையான அண்டமதில் நெற்றிக் கண்ணை

நீயறிந்தே அரவுவிடந் தன்னைப் போக்கி

அலையாமல் ஆரொருவர் உறவு மற்றே

ஆயிழையாள் மோகமதை யதட்டித் தள்ளி

மலையாமற் பிரமமே துணையென் றெண்ணி

மவுனமென்று மனந்தனையும் அடக்கி நில்லே

22 தொகு

நில்லென்றால் லோகத்தில் மனிதர் தாமும்

நிட்டையுடன் சமாதியுமே பொருந்தா மற்றான்

வல்லவர் போல் வேதபுராணங் காவ்யங்கள்

மந்திரங்கள் கோடானு கோடி யென்றும்

சொல்லுவார் கோவிலென்றுந் தீர்த்த மென்றுந்

திருடர்கள் தான் அலைந்தலைந்து திரிவார மட்டை

வெல்வதொரு பிரமநிலை அறியா மாற்றான்

வேரற்ற மரம் போலே விழுவார் பாரே

23 தொகு

பாரப்பா மலரெடுத்து லிங்கம் வைத்துப்

பார்த்தீப லிங்கத்தைப் பணியா மாற்றான்

வீரப்பா நீராட்டிப் பூசை செய்து

வீணர்கள்தாம் கத்தபம் போல் கதறுவார்கள்

தேரப்பா மலரதனைக் கிள்ளும் போது

செத்தசனம் போலாச்சுத் தெளிந்து பாரு

காரப்பா மனங்கொண்டு பரத்தினூடே

கண்டவரே கயிலாசத் தேகந் தானே

24 தொகு

தானென்ற பிரமத்தை யடுத்தி டாமல்

தாரணியில்தெய்வமடா அனந்த மென்னும்

ஊனென்ற குருவென்றுஞ் சீடன் என்றும்

உதயகிரி பாராத உலுத்த மாடு

வேனென்ற பொய்களவு கொலைகள் செய்து

வேசையர் மேலாசைவைத்து வீணன் ஆகித்

கோனென்ற குருபாதம் அடைய மாட்டான்

கூடுவான் நரகமதில் வீழ்வான் பாரே

25 தொகு

பாரப்பா நாக்கையுந்தான் அண்ணாக் கேத்திப்

பார்தனிலே பார்த்தவர்க்குப் பலித மில்லை

ஆரப்பா கண் வெடிக்குந் தேகம் போகும்

அடயோக மென்பார்கள் ஆகா தப்பா

சாரப்பா மனந்தனை யண்ணாக்கில் நேரே

சார்ந்து மிகப் பார்க்கையிலே வாசி தானும்

வீரப்பா மேலடங்கும் கீழ் நோக்காது

வெட்டாத சக்கரத்தை யறிய லாமே

26 தொகு

அறியலாம் மணந்தானே உயிர் தானாகும்

அண்டத்தில் சேர்ந்திடவே ஆகும் முத்தி

பரியேறிச் சவாரியுமே நடத்தலாகும்

பஞ்சமா பாதகங்கள் பறந்தே போகும்

விரிவான மனந்தனையும் அணுவதாக்கி

விட்டகுறை தொட்டகுறை விதியைப் பார்த்துக்

குறியான குண்டலியாமண்டவச்சி

கூறுகிறேன் முக்கோண நிலைய தாமே

27 தொகு

தாமென்ற உலகத்தில் மனித ரோடே

சஞ்சாரஞ் செய்யாமல் தனித்து நில்லே

ஓமென்ற ஊண் மிகுந்து உண்டிடாதே

ஓரமாய் வழக்கதனை உரைத்திடாதே

ஆமென்ற அட்சரத்தை மறந்திடாதே

ஆயாச மாகவுந்தான் திரிந்திடாதே

காம்ப்பேய் கொண்ட வனோடு இணங்கிடாதே

காரணத்தைக் கண்டுவிளை யாடுவாயே

28 தொகு

விளையாடிக் கருநெல்லி பறித்தே உண்ணு

வேகாத தலையாகும் விரும்பிப் பாரு

மலையமல் வொண்சாரை பிடித்தே யுண்ணு

மைந்தனே சாகாக்கால் அதுவே யாகும்

அலையாமல் சோதியதன் பாலை யுண்ணே

அக்கினியாங் கம்பமடா சுழுனை யாச்சுக்

கலைநாலு போகிறதை யெட்டிற் சேரு

கபடமற்ற தேகமடா கண்டு பாரே

29 தொகு

கண்டு கண்டு மனந்தானே அண்டஞ் செல்லக்

கலைநாலும் எட்டிலையுஞ் சேர்ந்து போகும்

தண்டு முண்டு செய்யாதே மனம் வேறானால்

தற்பரத்தை யெப்போதும் அறிய மாட்டாய்

தொண்டு செய்து பெரியோரை யடுத்து மைந்தா

தொழுது நீ யென்னூலை அன்பாய்க் கேளு

விண்டுமவர் சொல்லாவிட்டால் இந்நூல் சொல்லும்

வெற்றி பெற மனவடக்கம் வைத்துப் பாரே

30 தொகு

பாரப்பா விஞ்சை மந்த்ரம் என்பார் வீணர்

பாயடா விஞ்சைகிரி தன்னில் மைந்தா

ஆரப்பா சென்றேறிப் பார்க்கும் போது

அதீத முள்ள விஞ்சை மந்த்ரம் அனந்தங் காட்டும்

நேரப்பா சிருட்டிப்புச் சங்கா ரங்கள்

நிமிடத்தில் செய்திடுவாய் நிலையைக் கண்டால்

வீரப்பா அமிர்தமுந்தான் குமிழி பாயும்

வேறில்லாக் கனிதனையும் உண்கலாமே

31 தொகு

உண்கலாம் பிரமத்தில் அடங்கும் போதே

உறுதியுள்ள அண்டத்தில் உருகிப் பாயுந்

திங்கலாந் தோணுமடா அமிர்தச் சீனி

தித்திப்புப் பாலுடனே திடமாய் மைந்தா

தங்கலாந் தேகமது அழியாமல் தான்

சட்டையுமே கழன்றுமிகத் தங்கம் போலே

பொங்கலாம் மெய்ஞ்ஞானத் தீபத் தாலே

பூரித்துப் பார்த்திடலே புவன மொன்றே

32 தொகு

ஒன்றான பிரமமே வெவ்வே றாக

உலகத்தில் அனந்தமடா கூத்து மாச்சு

நன்றாச்சுத் தீதாச்சு நாலு மாச்சு

ஞாயிறு திங்களென்று பேருண் டாச்சு

குன்றாச்சு ஊர்வனகள் அனந்த மாச்சு

குருக்களென்றுஞ் சீடனென்றுங் குறிக ளாச்சு

நன்றாச்சு நாதவிந்தும் அடங்கி நின்ற

நாதனையும் ஒருமனமாய் நாட்டு வாயே

33 தொகு

நாட்டுவார் சித்தரெல்லாம் பேத மாக

நலம் போலே சாத்திரங்கள் கட்டினார்கள்

பூட்டியே மனிதரெல்லாம் நூலைப் பார்த்துப்

பூரணமாய் அண்டமதைப் பாரா மற்றான்

காட்டிலே திரிந்தலைந்த மானைப் போலே

கபடமாய் வாய்ஞானம் பேசுவார்கள்

கூட்டிலே அடைந்திருக்கும் குயிலைப் பாரார்

கூறாத மந்திரத்தின் குறியைப் பாரே

34 தொகு

குறியென்ற உலகத்திற் குருக்கள் தானும்

கொடியமறை வேதமெல்லாங் கூர்ந்து பார்த்தே

அறியாமல் பிரமத்தைப் பாரா மற்றான்

அகந்தையாய்ப் பெரியோரை அழும்பு பேசி

விரிவான வேடமிட்டுக் காவி பூண்டு

வெறும்பிலுக்காய் அலைந்திடுவான் நாயைப் போலே

பரியாசமாகவுந்தான் தண்டு மேந்திப்

பார்தனிலே குறட்டிடு நடப்பான் பாரே

35 தொகு

பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி

பணம்பறிக்க உபதேசம் பகர்வோம் என்பான்

ஆரப்பா பிரமநிலை காட்டா மற்றான்

ஆகாசப் பொய்களையும் அவன்தான் சொல்வான்

நேரப்பா சீடனுக்குப் பாவமாச்சே

நிட்டை சொல்லுங் குருக்களுக்குத் தோடமாச்சு

வீரப்பா அடங்குகின்ற இடத்தைப் பாரான்

விதிபோலே முடிந்ததென்று விளம்பு வானே

36 தொகு

வானென்ற அண்டமதில் சென்று புக்கு

வடவரையில் உச்சிநடுத் தீபங் கண்டு

தேனென்ற சுத்தசிவ கங்கை தன்னில்

தீர்த்தங்கள் ஆடித்திரு நாம மிட்டுக்

கோனென்ற மனமன்பாய் மலராய்ச் சார்த்திக்

கொடியமறை வேதமுந்தான் அடக்கங் கண்டு

தேனென்ற சித்தமே புத்தி யாகத்

தெளிந்தவரே மெய்ஞ்சானி யாவர் பாரே

37 தொகு

பாரண்ட மதையொன்றாய்ப் பார்க்கும் போது

பலபேத மாளையெல்லாம் மருண்டே யோடுஞ்

சீரண்டம் அகிலாண்ட பிரமாண்டங்கள்

செனித்தவகை உயிர்தோறும் நாயாய் நிற்பாய்

காரண்டல் ஆடக்கண் திறந்த போது

கண்கொள்ளாக் காட்சியெல்லாங் கலந்தே காட்டும்

வீரண்ட மேல்வட்டம் விரிந்த சக்கரம்

மெய்ஞ்ஞான வெளியதனிற் தொடர்ந்து கூடே

38 தொகு

கூடுவதென் குணமறிந்து மனமொன்றாகக்

கூத்தாடித் திரியாமல் கெவுனமாகப்

பாடுவது பலநூலைப் படித்திடாமற்

பராபரத்தின் உச்சிநடு வெளியே சென்றே

ஆடுவது தொந்தோமென் றாட்டைப் பார்த்தே

அடுக்கடுக்காய் ஆயிரத் தெட்டிதழுங் கண்டு

வாடுகிற பயிர்களுக்கு மழைபெய் தாற்போல்

வாடாத தீபத்தை அறிந்து பாரே

39 தொகு

பாரென்று மெய்ஞ்ஞானம் பகர்ந்து சொன்னீர்

பராபரத்து நிலையினுடைப் பாதஞ் சொன்னீர்

வீரென்ற அண்டமெல்லாம் பாழ தாகி

விராட பிரம மொன்றியாய் இருக்கும் போது

சீரென்ற உயிர்களெல்லாம் இருப்ப தெங்கே

சித்தருடன் திரீபூர்த்தி யிருப்ப தெங்கே

கூரென்று நீர் தங்கும் இடந்தான் எங்கே

குருபரனே இந்தவகை கூறு வீரே

40 தொகு

கூறுகிறேன் என்மகனே வாசி நாதா

குணமான வீச்சுரனார் சமையிற் கூடி

தேறுகின்ற பிரளயமாம் காலத் தன்னீர்

சீவசெந்து சித்தருடன் முனிவர் தாமும்

வீருடனே எங்கேநான் இருப்பா ரென்று

விமலருந்தான் விண்ணுவையும் விவரங் கேட்கக்

கார்மேக மேனியனங்கு அவரை நோக்கிக்

கண்டுமிகப் பணிந்தும் இனிக் கருது வானே

41 தொகு

கருதுவான் ஆலிலைமேல் துயில்வேன் யானும்

கனமான சீவசெந்தும் அனந்த சித்தர்

உறுதியாய் என்றனுடைக் கமலந் தன்னில்

ஒடுங்குவார் ஆதரித்து மிகவே நிற்பேன்

வருதியாய்ப் புசுண்டருந்தான் வருவா ரென்று

வலவனுடன் மாலானும் உரைக்கும் போது

சுருதியாய் எனையழைத்தே சிவன்தான் கேட்கச்

சூத்திரமாய் நல்வசனம் மொழிந்தேன் பாரே

42 தொகு

பாரென்று சிவனுடைய முகத்தைப் பார்த்துப்

பல்லாயிரங் கோடியண்ட உயிர்களெல்லாஞ்

சீரென்ற சித்தருடன் முனிவர் தாமுந்

திருமாலும் ஆலிலைமேல் துயிலும் போது

கூரென்ற உந்தியிடக் கமலந் தன்னிற்

கூடியே அடைந்திருப்பார் குணம தாக

வீரென்ற ஐவரையும் தாண்டி யப்பால்

வெகுசுருக்காய் வீதிவழி வந்தேன் பாரே

43 தொகு

பாரப்பா ஆகாயஞ் செல்லும் போது

பாலகனே சக்கரந்தான் சுற்றி யாட

ஆரப்பா சக்கரத்தைப் பாசகொட்டாமல்

அதன் மேலே ஏறியுந்தன் அப்பாற் சென்றேன்

நேரப்பா நெடுந்தூரம் போகும் போது

நிச்சயமாய்க் கம்பத்தின் நிலையைக் கண்டேன்

வீரப்பா அக்கினிபோல் படர்ந்து நிற்கும்

வெளியொன்றுந் தெரியாமல் இருக்குந் தானே

44 தொகு

இருக்குமடா எங்குமொன்றாய் அக்கினிக் கம்பம்

என்மகனே கம்பத்தின் நடுவே மைந்தா

உருக்கமுடன் பெண்ணரசி யொன்றி நிற்பாள்

ஓகோகோ அவள் முகத்தைப் பார்க்கும் போது

பெருக்கமுடன் முன்பார்த்தால் புருட ரூபம்

புத்திரனே பின்பார்த்தால் பெண்போல் ரூபம்

மருக்கமுடன் யான்தானும் கம்பத் தூடே

வத்தோடே வத்தாக இருக்கேன் பாரே

45 தொகு

பாரப்பா இப்படியே அனந்த காலம்

பராபரத்தி னூடே தானிருந்து வாழ்ந்தேன்

ஆரப்பா பிரமமுந்தான் மனமிரங்கி

அகண்டமதைப் படைப்பதற்கே அருளும் போது

வீரப்பா கம்பத்தில் இருந்த பெண்ணும்

விமலரென்றும் உமையென்றும் மிகவே தோன்றிச்

சீரப்பா சக்கரத்தில் இருந்து கொண்டு

திருமலைத் தானழைக்கத் தீர்க்கம் பாரே

46 தொகு

பாரப்பா திருமாலும் கமலந் தன்னில்

பல்லாயிரங் கோடி அண்ட உயிர்கள் எல்லாம்

நேரப்பா அழைத்து முக்குணத்தைக் காட்டி

நிலையான சமுத்திரங்கள் பூமிதானும்

சேரப்பா ரவியோடு திங்கள் தானும்

சிறந்தெழுந்த மலைகாடி சீவ சொத்து

வீரப்பா நவக்கிரகம் நட்சத் திரங்கள்

வெற்றியுடன் நால்வேதம் வகுத்த வாறே

47 தொகு

வாறான தெய்வமென்றும் பூத மென்றும்

வையகத்தில் வானமென்றும் பூமி யென்றும்

கூறான மாமேரு கிரிக ளென்றும்

கோவிலென்றும் தீர்த்த மென்றுங் குளமுண் டாக்கி

நேராகப் பிரமமே சாட்சியாக

நிலைத்தெங்கும் உயிர்தோறும் நிறைந்தா ரையா

வீராகத் திரியாமல் மவுனம் பார்த்து

வெற்றிபெற இன்னமுந்தான் உரைக்கக் கேளே

48 தொகு

கேளப்பா இப்படியே பிரள யந்தான்

கிருபையுடன் ஏழுலட்சங் கோடி யானால்

ஆளப்பா அரியயனும் சீவ செந்தும்

அகண்ட மென்ற பிரமத்தில் அடங்கு வார்கள்

நாளப்பா நானுமந்தப் படியே செல்வேன்

நலமாக இன்னமுந்தான் அகண்ட மானால்

வாளப்பா காகமென்ற ரூபம் ஆனேன்

வடவரையில் கூடுதொத்தி யிருந்தேன் பாரே

49 தொகு

பாரடா இப்படியே யுகங்கள் தோறும்

பார்தனில் நானிருந்தேன் எத்தனையோ கோடி

ஆரடா என்னைப் போல அறிவாருண்டோ

ஆதியென்ற சித்தருக்கும் ஆதி யானேன்

வீரடா விமலரிடஞ் செல்லும் போது

வெற்றியுடன் எனையெடுத்து முத்தமிட்டார்

காரடா கைலையின்மேல் இருக்கச் சொன்னார்

காகமென்ற ரூபமாய் இருந்தேன் பாரே

50 தொகு

காகமென்ற ரூபமாயிருந்து கொண்டு

காரணங்கள் அத்தனையும் கருவாய்ப் பார்த்து

வேகமுடன் வெளியோட்ட நிலையாய்ப் பார்க்க

வெகுதூரம் சுற்றியின்மை விவரங் காணேன்

மோகமுடன் பரந்தமனம் அணுவ தாக்கி

மூர்க்கமுடன் பரவெளியை மனவெளி தாக்க

நாகரீக மாகவுந்தான் அண்ட மேவி

நடுவணைய முச்சிநடு மத்தி தானே

51 தொகு

மத்தியமாம் வானதிலே வளர்ந்த லிங்கம்

மகாமேரு வுச்சியிலே வளர்ந்த லிங்கம்

சக்தியும் ஆவியுடை மான லிங்கம்

சஞ்சாரச் சமாதியிலே நிறைந்த லிங்கம்

புத்தியால் மனம் ஒன்றாய்ப் புகழ்ந்த லிங்கம்

பூவருந் தன்னில்தான் முளைத்த லிங்கம்

எத்திசையும் புகழ்ந்திடவே வந்த லிங்கம்

ஏகபர மான தொரு லிங்கந் தானே

52 தொகு

தானென்ற சிறுவீட்டுக் குள்ளே சென்று

தலைமாறிப் போனதொரு வாசி யைத் தான்

கோனென்ற பிரமத்தில் அடக்க மாகக்

குறித்திடுவாய் மனமடங்கிக் கூர்ந்து பார்க்க

வானொன்றிப் போகுமடா பாணம் பாணம்

மைந்தனே உண்டிடவே பசிதான் தீரும்

தேனென்ற சட்டைகளுங் கழன்று போகும்

தேவனுக்குந் தேவனாய் இருக்கலாமே

53 தொகு

இருக்கலாம் எந்தெந்த யுகங்களுக்கும்

ஏகாந்த மானதொரு பிரமந் தன்னில்

பெருக்கவே மனமடங்கி மவுனம் பெற்றும்

பேராசை யாகவுந்தான் பிரமத் துள்ளே

குருக்களைப்போல் அரசனைப்போல் இந்திரனைப்போல்

முணமான மூவரைப் போற்பிரமத் தூடே

திருக்கெடுத்தே யெந்தெந்த அவதாரங்கள்

செய்திடலாம் நிலையறிந்த பெரியோர் தானே

54 தொகு

தானவனே யென்குருவே புகண்ட நாதா

தரணியிலே சிவசெந்தாம் அகண்டமெல்லாம்

தோணதுவே மும்மூர்த்தி யிவர்கள் தாமும்

துடியாகப் பிரமத்தில் அடங்கு மென்றீர்

கோனவனே பின்னுந்தான் அகண்ட மெல்லாங்

குறிப்புடனே புடைக்கும் வகைக் குறியுஞ் சொன்னீர்

தானவனே மதுவுண்ணச் சொன்னீ ரையா

சத்தியமாய் அதன் விவரஞ் சாற்று வீரே

55 தொகு

சாற்றுகிறேன் என்மகனே வாசி நாதா

சத்தியமாய் அண்டத்தில் செல்லும் போது

போற்றுகிற அக்கினியும் பிரவே சித்துப்

புலன்களைந்தும் சேர்ந்ததனால் போத மாகும்

மாற்றிலையும் அதிகமடா உன்றன் தேகம்

மைந்தனே அபுரூப மாகுப்பா

வாற்றியே நிழற்சாய்கை யற்றுப் போகும்

வலுத்தடா காயசித்தி யாச்சுப் பாரே

56 தொகு

ஆச்சென்ற அபுரூப மான போதே

அட்டமா சித்திவகை யெட்டுமாடும்

மூச்சொன்றி யடங்கிப்போய் பிரமத் தூடே

முன்னணியும் பின்னணியும் ஒன்றாய்ப் போகும்

காச்சென்று காச்சிவிடு மவுனங் கண்டு

கலைமாறி நின்றிடமே கனக பீடம்

நீச்சொன்றும் இல்லையடா உன்னைக் கண்டால்

நிலைத்தடா சமாதியென்ற மர்க்கந்தானே

57 தொகு

மார்க்கமுடன் தவசுநிலை அறியா மற்றான்

மனந்தளர்ந்து திரிவார்கள் லோகத்துள்ளே

ஏக்கமுடன் முப்பதுக்குள் மவுனங் கண்டே

இளவயசா யிருப்பார்கள் பெரியோர் மைந்தா

காக்கவே சற்குருவின் பாதங் கண்டு

கருணையுடன் அவர் பதத்தை வணங்கிப் போற்றி

தீர்க்கமுடன் பிரமத்தில் மனந்தான் செல்லச்

சீவனுக்குச் சீவனாய் இருக்கலாமே

58 தொகு

இருக்கலாஞ் செடிபூடு கற்ப மில்லை

ஏகாந்த மானதொரு பிரமந் தன்னில்

உருக்கியே மனமடங்கிப் பார்க்கும் போதே

உத்தமனே காயமது உறுதியாச்சு

மருக்கியே திரியாமல் மதம் பேசாமல்

வண்ட ரோடிணங்கியடா மருவி டாமல்

குருக்கியே கோளரிடஞ் சேர்ந்திடாமல்

குருபாதங் கண்டு மிகப் பணிந்து பாரே

59 தொகு

பாரென்று சொல்லிய மெய்ஞ்ஞான மூர்த்தி

பரத்தினுடை அடிமுடியும் பகுந்து சொல்லும்

சீரென்று சொப்பனங்கள் அதிகமாகத்

திடப்படவே காணுமிடய் தீர்க்கஞ் சொல்லும்

காரென்று மணம் பிறந்த இடந்தான் சொல்லும்

கதிர்மதியும் சுற்றிவரு மார்க்கஞ் சொல்லும்

வீரென்றே உயிர் பிறந்த இடந்தான் சொல்லும்

வெற்றி பெற இந்தவகை விளம்பு வாயே

60 தொகு

வாயாலே சொல்லுகிறேன் மகனே கேளு

மகத்தான பிரமத்தின் பாதந் தன்னில்

ஓயாமல் முன் சொன்ன நரம்பு பின்னி

உத்தமனே ரவிமதியுஞ் சுற்றி யாடும்

மாயாமல் வாசியுந்தன் நடுவே நின்று

மார்க்கமுடன் சுழுத்தியிடம் மனந்தான் சென்றால்

காயான சுழுத்தி யென்றிதற்கு நாமம்

கண்டுபார் கண்டுகொள்ளாப் போதந்தானே

61 தொகு

தானென்ற பலரூப மதிகங் காணுந்

தன்னுடைய தேவதைபோற் பின்னிம் காட்டும்

ஊனென்ற பெண்ணைப் போலுன்னைக் கூடி

உத்தமனே சை யோகஞ் செய்தாற் போலே

தேனென்று மயக்கி வைக்குஞ் சுழுத்தி யாலே

தித்திப்பு போலேதான் ருசியைக் காட்டும்

கோனென்ற குருவருளைப் பணிந்து கொண்டு

குறிப்பறிந்து பூரணத்தின் நிலையைப் பாரே

62 தொகு

நிலையாத சமுத்திரமே சுழுத்தி யாச்சு

நின்றிலங்கும் வாசியைத்தான் வெளியிற் சேரு

தலையான அக்கினிப் படியே சேரு

சத்தியமாய் ரவிமதியைக் கூடச் சேர்த்து

மலையாமல் ஏகபரா பரனே யென்று

மனமயங்கி அண்டவுச்சி தன்னைப் பார்க்க

அலையாது மனந்தானும் பரத்திற் சென்று

ஆகாய வீதிவழி யாட்டும் பாரே

63 தொகு

ஆட்டுமடா ஆசையற்று ரோச மற்றே

அன்னை சுற்றந் தனைமறந்தே அகண்ட மேவும்

பூட்டுமடா நவத் துவாரங்கள் தம்மைப்

பொறிகள் ஐந்தும் சேருமடா புனித மாகக்

காட்டிலென்ன நாட்டிலென்ன மவுனங் கண்டால்

காமதேனு கற்பகமும் உனக்கே சித்தி

வீட்டிலே தீபம் வைத்தாற் பிரகாசிக்கும்

வெளியேறி னால்தீபம் விழலாய்ப் போமே

64 தொகு

போமடா புத்திசித்தம் என்ற தாக்கிப்

புகண்ட னென்று பேரெடுத்துப் புவனந் தன்னில்

ஆமடா வடசாளி மைந்த னென்றும்

அருமையாங் கன்னியுடை மைந்த னென்றும்

நாமடா ஐந்துபேர் தம்மிலே தான்

நாட்டமுடன் முன் பிறந்தேன் நான்தான் மைந்தா

வாமடா சாண்முழத்தில் காட்சி பார்க்க

வத்துவுந்தான் ஈச்சுரனார் என்பார் பாரே

65 தொகு

பாரப்பா என்குலந் தான் சொல்லக் கேளு

பார்தனிலே பிரமனுடை விந்து வாலே

ஆரப்பா பிறந்து விட்டோம் ஐந்து பேரும்

ஆகாய அண்டமதை யடுத்தே சென்றேன்

நேரப்பா வெகுகோடி காலம் வாழ்ந்தேன்

நிட்டையிலே மனந்தவறாது இருந்து கொண்டேன்

வீரப்பா பேசுவோர் லோகத்தோர்கள்

விட்டவிடந் தொட்டவிடம் விரும்பிக் காணே

66 தொகு

காணப்பா சாதிகுலம் எங்கட் கில்லை

கருத்துடனே என் குலஞ் சுக்குலந்தான் மைந்தா

தோணப்பா தோணாமற் சாதி பேதஞ்

சொல்லுவான் சுருக்கமாக சுருண்டு போனான்

வீணப்பா பிரமத்தில் ஆதி காலம்

வீரமுடன் பிறந்ததடா உயிர்கள் எல்லாம்

நானப்பா அப்படியே உதித்தேன் முன்னே

நன்றாக வுதித்தவிடம் நாடி தானே

67 தொகு

நாடியே யுதித்தவிடம் அறியாத் தோடம்

நடுவாக வந்தவிடம் பாரத் தோடம்

கூடியே பிறந்தவிடங் காணாத் தோடம்

குருபரனை நிந்தனைகள் செய்த தோடம்

வாடியே வத்தோடே சேராத் தோடம்

வம்பரோ டிணங்கியே திரிந்த தோடம்

கூடியே உறவற்றே யிருந்த தோடம்

கும்பியுங் கற்சிப்பியையும் அறியான் பாவி

68 தொகு

அறியாத பாவிக்கு ஞானமேது

ஆறுமுகன் சொன்ன தொரு நூலைப் பாரு

பரிபாடை யாகவுந்தான் சொல்லவில்லை

பராக்கிரமம் என்னுடைய நூலைப் பாரு

விரிவாகச் சித்தர் சொன்ன நூலை யெல்லாம்

வீணாக மறைப்பாகச் சொன்னா ரையா

குறியான அண்டமதை யொளித்தே விட்டார் கூறினார் வெவ்வேறாய்க் குற்றந் தானே

69 தொகு

குற்றமது வையாமல் அண்டத் தேகிக்

கூறாத மர=ந்திரத்தின் குறியைப் பார்த்துச்

சித்தமொன்றாய் அந்திசந்தி யுச்சிக்காலம்

தேவனுக்குப் பூசைசெய்து தெளிவு பெற்றுக்

குற்றமது வையாமல் மனமன் பாலே

குருபரனை நோக்கியடா தவமே செய்து

பற்றாசை வைத்துமிகப் பார்க்கும் போது

பராபரையுங் கைவசமே யாகு வாளே

70 தொகு

ஆகுவாள் அந்திசந்தி யுச்சி யென்றால்

அப்பனே ரவிமதியுஞ் சுடர்மூன் றாகும்

ஏகுவாய் மூன்றுமொன்றாய்ப் பின்னலாகி

இருந்திடமே பிரமாண்ட நிலைய தாகும்

போகுமே நீ செய்த காம மெல்லாம்

புவனை திரிசூலக் கையுடையக் கிருபை யாலே

வாகுமே வழியோடே சேர்த்தா யானால்

வாணியுந்தான் நாவில் நடஞ் செய்வாள் பாரே

71 தொகு

பாரடா வாணியுந்தான் இருந்த வீடு

பாலகனே சொல்லுகிறேன் பண்பாய்க் கேளாய்

ஆரடா அண்ணாக்கின் கொடியினூடே

அண்டத்தைப் பற்றியடா விழுது போலே

நேரடா நரம்பது தான் பொருந்தி நிற்கும்

நிலையான அக்கினியில் மத்தி தன்னில்

வீரடா அது வழியே அருள்தான் பாய்ந்து

விண்ணுலகில் வேணதமிழ் சொல்லு வானே

72 தொகு

சொல்லுவா ளனந்தமறை வேதமெல்லாம்

சுருதியடா முடிந்தெழுந்த பிரமத் தானே

வெல்லுவார் தனையறிந்த பெரியோ ரெல்லாம்

வீறாண்மை பேசார்கள் மவுன மாகி

அல்லுபகல் அற்றதொரு பிரமந் தன்னை

ஆரறிவார் உலகத் திலையா பாரு

சொல்லடங்கு மிடந்தன்னையுங் கண்டு தேறிச்

சூத்திரமாய்க் கல்லுப்பு வாங்கு வாங்கு

73 தொகு

வாங்கியே அண்டத்தில் மூளை சேர்த்து

வளமாக வப்பிலையும் பிசறு மைந்தா

தாங்கியே திருகுகள்ளிக் குள்ளே வைத்துத்

தமர்வாயைத் தான்மூடிச் சாபந் தீர்த்தே

ஓங்கியே திங்களுந்தான் மூன்று சென்றால்

உத்தமனே கள்ளியைத் தான் தரித்துக்கொண்டு

சாங்கமினிச் செய்யாமல் சீலை மண்ணுஞ்

சத்தியமாய்ச் செய்தபின்பே உலர்த்திப் பாரே

74 தொகு

பாரப்பா உலர்ந்ததன் பின் எடுத்து மைந்தா

பக்தியுடன் கசபுடத்திற் போட்டுப் பாராய்

ஆரப்பா ஆரவைத்தே யெடுக்கும் போதில்

அருணனிறம் போலிருக்குஞ் செந்தூ ரந்தான்

நேரப்பா அணுப்போல சரக்குக் கெல்லாம்

நிச்சயமாய்ப் பூசியுந்தான் புடத்திற் போடு

வீரப்பா நீருமடா நவலோகந் தான்

வேதையென்ற வித்தையெல்லாங் கைக்குள்ளாச்சே

75 தொகு

ஆச்சடா உடம்பிலுள்ள வியாதி யெல்லாம்

அணுப்போல வண்டிடவே பறந்து போகும்

வாச்சடா தேகசித்தி அதிக மாச்சு

வத்துடனே கூடியுந்தான் வாழலாச்சு

மூச்சடா தலைப்பிண்டங்கொடியு மாவும்

முத்தியடா வாங்கியபின் தயிலம் வாங்கி

ஏச்சடா தரியாமல் சூடன் சேர்த்தே

இன்பமுடன் வந்துவையும் பூசை செய்யே

76 தொகு

பூசையடா செய்து மிகப் பதனம் பண்ணு

புத்திரனே பேய்பீர்க்குத் தைலம் வாங்கி

ஆசைபுல்லா மணக்கதவு மதுபோல் வாங்கி

அப்பனே கேசரியின் நெய்யுஞ் சேர்த்தே

ஓசையுடன் தேவாங்கு பித்துஞ் சேர்த்தே

உத்தமனே தலைப்பிண்டந் தயிலஞ் சேர்த்துப்

பாசையடா பேசாமல் அரைத்து மைந்தா

பாலகனே சவாதோடு புனுகு சேரே

77 தொகு

சேரடா அணுப்போலே புருவத் தீட்டுத்

தீர்க்கமுடன் நீ தானுஞ் செல்லும்போதில்

ஆரடா உன்னைத்தான் ஆர்த்தான் காண்பார்

அண்டமெனும் பிரமத்தின் அருளினாலே

நேரடா திகைப்பூண்டு கொண்டு வந்து

நிச்சயமாய் முன்சொன்ன தயிலம் விட்டு

வீரடா அரைத்த பின்பு புருவத் திட்டால்

வேசையர்கள் வெகுபேர்கள் மயங்கு வாரே

78 தொகு

வாரான தில்லைப்பால் கருந்துளசியும்

வவ்வாலின் பித்துடனே மந்திப் பித்தும்

சீராக முன்சொன்ன கருவை விட்டுத்

திடமாக அரைத்திடுவாய் சாம மொன்று

நேராக அரைத்ததை எடுத்து மைந்தா

நிச்சயமாய்ப் புருவத்தில் இட்டுப் பார்க்க

வீராகப் பாதாளம் பிளந்தே யோடும்

வேதாந்த சாரணையை விரும்பிப் பாரே

79 தொகு

பாரடா பரப்பிரமத் தூடே சென்று

பரிதிமதி அக்கினியும் மூன்றும் ஒன்றாய்

நேரடா ஆதியுந்தான் எதிரி தன்னை

நிச்சயமாய்ப் பார்த்திடவே நீறிப் போவான்

கூரடா கோடானு கோடி சித்துக்

குறித்திடவே ஆகுமடா பிரமத் தாலே

வீரடா இந்நூலைக் கொடுத் திடாதே

வெற்றியுடன் எண்பதுமே விளங்க முற்றே

2 காகபுசுண்டர் உபநிடதம் தொகு

காப்பு தொகு

ஆதியெனை யீன்ற குரு பாதங் காப்பு

அத்துவிதம் பிரணவத்தின் அருளே காப்பு

நீதியாம் ஆரூட ஞானம் பெற்ற

நிர்மலமாஞ் சித்தருடைப் பாதங் காப்பு

சோதியெனப் பாடிவைத்தேன் முப்பத்தொன்றித்

துரியா தீதப் பொருளைத் துவக்க மாகத்

தீதில்லாக் குணமுடைய பிள்ளை யானார்

சீவேச ஐக்யமது தெரியுந் தானே

நூல் - 1 தொகு

தானென்ற குருவினுப தேசத்தாலே

தனுகரண அவித்தை யெல்லாம் தவறுண்டே போம்

வானென்ற சுவானுபவ ஞானம் உண்டாம்

மவுனாதி யோகத்தின் வாழ்க்கை யெய்தும்

நானென்ற பிரபஞ்ச உற்பத்திக்கு

நாதா தீ தக்யானம் நன்றா யெய்தும்

கோனென்ற கொங்கணவர் தமக்குச் சொன்ன

குறிப்பான யோகமிதைக் கூர்ந்துபாரே

2 தொகு

பாருநீ பிரமநிலை யார்தான் சொல்வார்

பதல்லை யாதெனினும் பவ்யமில்லை

சேருமிந்தப் பிரமாணந் தான் உணர்ந்து

தெரிவிக்கப் படாதருளிற் சிவசொரூபம்

ஊருகின்ற காலத்ர யங்களாலே

உபாதிக்கப் பர தத்வ முற்பத் திக்கும்

சாருமிந்த உபாதான காரணத்தின்

சம்பந்த மில்லாத சாட்சிதானே

3 தொகு

சாட்சிசத்தா யதீதகுணா தீதமாகிச்

சட்சுமனத் தாலறியத் தகாது யாதும்

சாட்சியதே யேது சாதனமுந் தள்ளிச்

சகலவந்தர் யாமித்வ சர்வபூத

சாட்சியினை யிவ்வள வவ்வளவாம் என்று

தனைக் குணித்து நிர்ணயிக்கத் தகாது யோகம்

சாட்சியதே ஞாதுர் ஞான ஞேய ரூபஞ்

சத்தாதி பிரமாதி தானே சொல்வாம்

4 தொகு

சொல்லுமெனக் கேட்டுகந்த மாணாக் காவுன்

தூல காரணப்பிரமந் துரியா தீதம்

அல்லுமல்ல பகலுமல்ல நிட்க ளங்கம்

அம்சோகம் அசபாமந் திரத்தி யானம்

சொல்லுமவனே நானென் றபிமானிக்குச்

சித்திவிர்த்தி நிரோதகமாம் யோகத் தானே

வெல்லறிஞர் பல போக விர்த்தி யோகி

விவேகதியா னாதிகளே மேலாம் பிர்மம்

5 தொகு

பிர்மசுரோத் ராதிஞானேந் திரிய மைந்தும்

பேசுதர்க்க வாக்காதியிந் திரிய மைந்தும்

கர்மமெனுஞ் சத்தாதி விடய மைந்தும்

சரணாதி நான்கு பிராணாதி யைந்தும்

வர்மமிவை இருபத்து நான்குங் கூடி

வருந்தூல சரீரவி ராட்டெனவே சொல்லும்

தர்மலத்தைச் சாக்கிரபி மானி விசுவன்

தனக்குவமை யாங்கிரியா சத்திதானே

6 தொகு

சத்தியுடன் ரசோகுணந்தான் நேத்ரத் தானம்

தனிப்போக மிதனோடே சார்ந்த ஆன்மா

வெற்றி பெறும் சீவாத்மா அசார மாச்சு

விவகார சீவனிதை விராட் டென்பார்கள்

வித்தையெனு மவித்தையிலே பிரதி விம்பம்

விலாசமிந்தத் தூலசூக்க விருத்தியாச்சு

தத்வமசி வாக்குச் சோதனை யினாலே

தான் கடந்து சூட்சுமத்திற் சார்ந்து கொள்ளே

7 தொகு

கொள்ளடா ஞானேந் திரியங்கள் ஐந்து

கூடினவை கர்மேந்திரி யங்கள் ஐந்து

தள்ளடா பிராணாதி வாய் வைந்து

சார்வான மனம்புத்தி தான் இரண்டு

விள்ளடா பதினேழு தத்துவங்கள்

விர்த்தியெனுஞ் சூட்சுமமாம் இரண்ய கர்ப்பத்

துள்ளடா அபிமானி சைதன்ய னாகுஞ்

சொப்பனா வத்தையெனச் சொல்லும் நூலே

8 தொகு

நூலான சாத்மிகமம் அகங்கா ரத்துள்

நுழைந்த விச்சா சக்தியல்லோ நுணுக்கமாச்சு

காலான கண்டமெனுந் தானத்துள்ளே

கலந்திருக்கும் போகமல்லோ இச்சா போகம்

நாலான ஆன்மாவே அந்த ரான்மா

ஞானமிந்தப் படி யறிந்தால் உகாரமாச்சு

தூலமெனுஞ் சூட்சுமத்தைக் கூர்ந்து நின்று

சொல்லுகிறேன் காரணத்தின் சுயம்பு தானே

9 தொகு

தானயயாக் கிருதமெனுஞ் சரீரத் துக்குத்

தானமதே இதயமா ஞான சத்தி

வானமதே அகங்காரம் வித்தை யாகில்

வரும் சுழுத்தி யபிமானி பிராக்ஞ னாகும்

கோனிதற்கே ஆனந்த போகமாகும்

கூடுகின்ற ஆன்மாவே பரமான் மாவாம்

கானிதற்குப் பரமான்மா சீவ னிந்தக்

காரணமே மகாரமெனக் கண்டு கொள்ளே

10 தொகு

கொள்ளுமந்தப் பொருள் தானே சத்துமல்ல

கூரான அசத்துமல்ல கூர்மையல்ல

உள்ளுநிரா மயமல்ல சர்வ மயமல்ல

உற்றுப்பார் மூன்றெழுத்தும் ஏகமாச்சு

தள்ளுகின்ற பொருளல்ல தள்ளா தல்ல

தான்பிரம ரகசியஞ் சந்தான முத்தி

விள்ளுமந்தப் படிதானே வேத பாடம்

விஞாரணையாற் சமாதிசெய்ய விட்டுப் போமே

11 தொகு

விட்டுப்போம் சமுசார வியாபா ரங்கள்

விடயசுக இச்சை வைத்தால் விவேகம் போச்சு

தொட்டுவிட லாகாது ஞான மார்க்கந்

துரியநிலை நன்றாகத் தோன்று மட்டும்

எட்டுகின்ற பரியந்தம் சுருதி வாக்கியத்

தெண்ணமெனுந் தியானத்தால் எய்தும் முத்தி

தட்டுகின்ற சீவத்வம் தனக்கில் லாமற்

சமாதியுற்றால் நாமதுவே சாட்சாத் காரம்

12 தொகு

சாட்சாதி பிரமத்தால் பூர்வ கர்மம்

தத்வாதி வாசனைகள் தாமே போகும்

சூட்சாதி பிராந்தி யெனும் மாயா சத்தி

தொடராமற் சேர்வதுவே சொரூப ஞானம்

தீட்சையினாற் பிரமாண்டம் பிண்டாண் டங்கள்

சிருட்டி முதல் யாவற்றுந் தெரியும் நன்றாய்

காட்சியென்ன ஏகவத்து வொன்றல் லாமல்

காண்பதெல்லாம் வியர்த்தமெனக் கண்டுகொள்ளே

13 தொகு

கண்டுபார் மூடமெனும் அஞ்ஞா னிக்குக்

காணாது சீவான்மா பரமான் மாவும்

தொண்டுபட்டுக் குருமுகத்தில் விசேட மாகச்

சுருதியெனும் வேதாந்தம் அப்பிய சித்தே

உண்டுமனு பவஞானங் கிர்த்யா கிர்த்யம்

யோகிதனக்கு ஏதேனுந் தேவை யில்லை

விண்டு சொல்வோம் ந்திகடக்க ஓட மல்லால்

விடயத்தாற் சாதனங்கள் வீணாம் என்றே

14 தொகு

வீணல்லோ சாதனப்ர யோச னங்கள்

மெய்ஞ்ஞான அபரோட்சம் வந்த போது

வீணல்லோ வேதபாடத்தின் இச்சை

வியோம்பரி பூரணத்தின் மேவி நின்றால்

வீணல்லோ இருட்டறையில் பொருளைக் காண

விளக்கதனை மறந்தவன்கை விடுதல்கபோலும்

வீணல்லோதியான தாரணைகள் எல்லாம்

மெய்பிரகா சிக்கும்வரை வேணுந் தானே

15 தொகு

வேணுமென்றா வெள்ளுக்கு எண்ணெய் போலும்

வித்தினிடத் தடங்கி நின்ற விருட்சம் போலும்

காணுகின்ற பூவிலுறை வாசம் போலும்

கன்றாவின பாலிலுள்ள நெய்யைப் போலும்

தோணுமயில் முட்டையின்மேல் வன்னம் போலும்

தூலமதிற் சூட்சுமந்தான் துலங்கி நிற்கும்

ஆணவத்தாற் சாதனத்தை மறந்தாயானால்

அபரோட்ச ஞானமுத்தி அரிது தானே

16 தொகு

அரிதில்லை பிரமவியா கிருத சீவன்

ஐக்கிய மெனும் சந்த்யானம் அப்ய சித்துச்

சுருதி கயிற்றால் மனமாம யானை தன்னைச்

சுருக்கிட்டுச் சிக்கெனவே துறையிற் கட்டிக்

குருவுரைத்த சிரவணத்தின் படியே நின்றால்

குதியாகு பிரபஞ்ச கோட்டிற் றானும்

திரிவதில்லை திரிந்தாலும் மதமி ராது

சீவ்வை ராக்யமெனும் திறமி தாமே

17 தொகு

திறமென்ன ஹம்சோகம் மந்த்ரா தீதம்

திருசியசூன் யாதிகளே தியானமாகும்

சரமென்ன சாக்ரசத்தாம் வித்தை சூன்யம்

சாதனையே சமாதியெனத் தானே போகும்

வரமென்ன விபரீத விர்த்தி மார்க்கம்

வாசனையே சாதனமாய் வகுத்துக் காட்டும்

அரமென்ன இதையறிந்தால் யோகி யாவான்

அஞ்ஞான மவனிடத்தில் அணுகா தென்னே

18 தொகு

என்னவே அஞ்ஞானி உலகா சாரத்

திச்சையினால் தர்மார்த்த வியாபா ரங்கள்

முன்னமே செய்ததன் பின் மரண மானால்

மோட்சமதற் கனுபவத்தின் மொழி கேட்பீரேல்

வின்னமதா யாங்கார பஞ்ச பூத

விடயவுபாதி களாலே மேவிக் கொண்டு

தன்னிமைய இலிங்க சரீரத்தோ டொத்துச்

சதாகாலம் போக்குவரத் தாகுந் தானே

19 தொகு

தானிந்தப் படியாகச் சீல ரெல்லாஞ்

சகசபிரா ரத்வவசத் தாகி னார்கள்

ஏனிந்தக் கூரபிமா னத்தினாலே

இத்தியாதி குணங்களெல்லாம் வியாபிக்கும்பார்

வானிந்து போன்மெலிந்து வளர்ந்து போகும்

வர்த்திக்கு மஞ்ஞானம் மாற்றவேண்டி

தானிந்தப் பிரம வுபாசனையைப் பற்றி

நாட்டம் வைத்தே வித்தையெல்லாம் நாச மாச்சே

20 தொகு

ஆச்சப்பா எத்தனையோ கோடி காலம்

அந்தந்தப் பிரளயத்துக் கதுவாய் நின்றேன்

மூச்சப்பா வோடவில்லை பிரமாதீத

முத்திபெற்றேன் பிரமாண்ட முடிவிற் சென்றேன்

கூச்சப்பா வற்ற பிர்ம சாட்சாத் காரம்

குழிபாதம் ஆகிய கோசரமாய் நின்றேன்

பேச்சப்பா சராசரங்கள் உதிக்கும் போது

பின்னுமந்தப் புசுண்டனெனப் பேர்கொண்டேனே

21 தொகு

பேர்கொண்டேன் சொரூபசித்தி அநேகம் பெற்றேன்

பெரியோர்கள் தங்களுக்குப் பிரிய னானேன்

வேர்கண்டேன் ஆயிரத்தெட டண்ட கூட

வீதியெல்லா மோர்நொடிக்குள் விரைந்து சென்றேன்

தார்கண்டேன் பிருதிவியின் கூறு கண்டேன்

சாத்திர வேதங்கள் வெகு சாயுங் கண்டேன்

ஊர்கண்டேன் மூவர் பிறப் பேழுங் கண்டேன்

ஓகோகோ இவையெல்லாம் யோகத் தாட்டே

22 தொகு

யோகத்தின் சாலம்ப நிராலம் பந்தான்

உரைத்தாரே பெரியோர்கள் இரண்டா மென்றே

ஆகமத்தின் படியாலே சாலம் பந்தான்

அநித்யமல்ல நித்யமென் றறியலாகும்

சோகத்தைப் போக்கிவிடும் நிராலம் பந்தான்

சூன்யவபிப் பிராயமதே சொரூப முத்தி

மோகசித்த விருத்திகளைச் சுத்தம் பண்ணி

மும்மூட்சு பிரமைக்ய மோட்ச மென்னே

23 தொகு

மோட்சசாம் ராச்யத்தில் மனஞ்செல்லாத

மூடர்களுக் கபரோட்சம் மொழியலாகா

சூட்கமறிந் தாலவனுக் கனுசந்தானம்

சொரூபலட்ச ணந்தெரியச் சொல்ல லாகும்

தாட்சியில்லை சாதனைத் துட்டயத்தில்

சட்சேந்திரி யாநாதா தீதமாகும்

மூச்சுலயப் படுவதல்லோ பிரம நிட்டை

மூலவிந்து சளாதீத மொழியலாமே

24 தொகு

மொழிவதிலே அகாரமெனும் பிரணவத்தின்

மோன பிராணாதியதே நாதமாச்சு

தெளியுமிந்த ஓங்காரத் தொனிவிடாமற்

சிற்ககனத் தேலயமாய்ச் சேர்க்க வேணும்

ஒளிதானே நிராலம்பம் நிர்வி சேடம்

உத்கிருட்ட பரம்பத வுபகாரத்தான்

வெளியோடே வெளிசேர்ந்தால் வத்து வாச்சு

விரோத சாத்ராதியெலாம் விருத்த மாச்சே

25 தொகு

விருத்தமாம் அனாதி பிரார்த்த கர்மம்

விடயாதி பரசஞ்ச வீட்டுமங்கள் எல்லாம்

ஒறுத்தவனே யோகி என்பான் அவன் ஆருடன்

உலகமெலாம் தானவது உண்மை ஆகும்

நிறுத்தவென்றால் நாசிகாக் கிரக வான்மா

நிலைபுருவ மத்தியிலே நிட்டனாகிக்

கருத்தழிந்து நின்றவிடம் சாட்சாத் காரம்

கண்மூக்கு மத்தியிலே கண்டு பாரே

26 தொகு

பார்ப்பதற்கு நீண்டதுவாம் குறுகி வட்டம்

பரிதிமதி யுதயமெனப் பளிகபா காசம்

தாப்பதற்கு மூன்றுசுழி பின்னாய் நிற்கும்

சாக்கிரத்தின் அடையாளம் தாக்கிப் பாரு

சேர்ப்பதற்கு சுழுமுனை யென்றிதற்கு நாமம்

திரிகோணக் குண்டலியே சிவசொ ரூபம்

காப்பதற்கு நடுநாடி யூடே சென்று

கால்நிறுத்திப் பிடரிவழிக் கண்ணைப் பாரே

27 தொகு

கண்ணான பிடரிமுது கோடு ரந்த்ரம்

கால்கூட்டிப் பார்த்தாலே தலைமே லாகும்

விண்ணான பெருவெளிக்குளீன மானால்

விமோசனமாம் நிராலம்ப மெனத்தான் சொல்லும்

ஒண்ணான யோகமல்லோ இந்த நிட்டை

உபதேசம் பெற்றவர்க்கே உண்மையாகும்

அண்ணாந்து பார்த்திருந்தால் வருமோ ஞானம்

அசபாமந் திரத்யானம் அறைகின் றேனே

28 தொகு

அறைகின்றேன் அசபையெனும் பிராணன் மாயை

அகண்ட பாரா பரத்தினுள்ளே ஐக்யஞ் செய்யக்

குறைவில்லை ஓங்கார மூல வட்டக்

குண்டலியாய் நின்றிடத்திற் குணாதீ தந்தான்

நிறைகின்றேன் நாசிகா ரந்த்ர வாயு

நீக்காமல் ஏகமாய் நிர்ண யித்துப்

பறைகின்றேன் அட்சர சாதனமுந் தள்ளிப்

பந்தமற்ற மாமோட்சப் பதிபெற்றேனே

29 தொகு

பதிபுருவத் தடிமுனைக்கீழ் அண்ணாக் கென்னும்

பவள நிறம் போன்றிருக்குந் திரி கோணந்தான்

துதிபெறுங் குவையுபத்த சுகந்தி யாகச்

சுபாவ சாதனையினால் மவுன மாச்சு

விதிவிகிதப் பாராரத்வ கர்மம் போச்சு

விடயபோ கத்தினிச்சை விட்டுப் போச்சு

மதியெனுமோர் வாயுவது அமிர்த மாச்சு

வத்துவதே காரணமா மகிமை யாச்சே

30 தொகு

மகிமையென்று யோகசா தனையினாலே

மகாகாச நிருவிகற்ப வாழ்க்கை யாச்சே

அகமகமென் றாணவத்தை நீக்கலாச்சே

அத்துவிதப் பிரமசித்தா னந்தகாரம்

சகளாதீதங் கடந்து களாதீ தத்தில்

சாதித்தேன் தன்மனமாய்ச் சார்ந்து போச்சு

பகலிருளில் லாதவெளிக் கப்பா லாச்சு

பந்தமற்ற மாமோட்சப் பதம் பெற்றேனே

31 தொகு

பெற்றதனைச் சொல்லிவிட்டேன் வடநூல் பாடை

பிரித்துமுப்பத் தொன்றினிலே பிரம ஞானம்

தத்துவத்தைச் சொல்லிவைத்தேன் யோகியானால்

சாதனை செய்வான் அறிவான் சைதன் யத்தில்

முத்தியடை வானதிலே நிருத்தஞ் செய்வான்

மும்மூட்சுத் துவமறிந்த மூர்த்தியாவான்

நித்யமெனும் உபநிடதப் பொருள்தான் சொல்லும்

நிலவரத்தால் யோகநிட்டை நிறைந்து முற்றே

3 காகபுசுண்டர் உபநிடதம் தொகு

காப்பு தொகு

கணபதியே அடியாகி அகிலமாகிக்

காரணத்தின் குருவாகிக் காட்சியாகிக்

குணபதியே கொங்கை மின்னாள் வெள்ளை ஞானக்

குருநிலையாய் அருள் விளங்கும் கொம்பே ஞானக்

கனவினிலும் நினைவினிலும் ஒளியாய் நின்ற

காரணத்தின் வடிவாகிக் கருத்துள் ளாகிப்

பணியரவம் பூண்ட சிவவாசி நேர்மை

பாடுகின்றேன் காவியந்தான் எண்ணிப் பாரே

நூல் 1 தொகு

எண்ணியெண்ணிக் காவியத்தை எடுத்துப் பாராய்

எந்நேரம் காமசிந்தை யிதுவே நோக்கும்

பண்ணிபன்றி பலகுட்டி போட்டா லென்ன

பதியானைக் குட்டியொரு குட்டி யாமோ

சண்ணியுண்ணி இந்நூலை நன்றாய்ப் பாரு

சக்கரமு மக்கரமும் நன்றாய்த் தோணும்

தண்ணி தண்ணி யென்றலைந்தால் தாகம் போமோ

சாத்திரத்தி லேபுகட்டித் தள்ளி யேறே

2 தொகு

புகட்டினான் தசதீட்சை மகிமை தன்னைப்

பூரிப்பா லெனக்களித்தே அகண்டந் தோறும்

சகட்டினாள் சகலசித்து மாடச் சொன்னாள்

சந்திரபுட் கரணிதனில் தானஞ் சொன்னாள்

பகட்டினாள் உலகமெல்லாம் முக்கோணத்திற்

பரஞான சிவபோதம் பண்பாய்ச் சொன்னாள்

அகட்டினா ளைவர்களை யீன்றாள் அம்மன்

அந்தருமை சொல்லவினி அடியான் கேளே

3 தொகு

கேளப்பா ஈசனொரு காலந் தன்னிற்

கிருபையுடன் சபை கூடியிருக்கும் போது

வாளப்பா மாலயர் தம் முகத்தை நோக்கி

வந்தவா றெவ்வகையோ சென்ற தேதோ

கோளப்பா செயகால லயந்தான் எங்கே

குரு நமசி வாயமெங்கே நீங்க ளெங்கே

ஆளப்பா ஐவர்களு மொடுக்க மெங்கே

அறுத் தெனக்கு இன்னவகை யுரைசெய்வீரே

4 தொகு

இன்னவகை ஈசரவர் கேட்கும் போதில்

எல்லோரும் வாய்மூடி யிருந்தா ரப்போ

சொன்னவகை தனையறிந்து மார்க்கண் டேயன்

சொல்லுவான் குழந்தையவன் கலகலென்ன

அன்னை தனை முகம் பார்த்து மாலை நோக்கி

அரிகரி ஈசர் மொழிக் குரைநீர் சொல்வீர்

பின்னைவகை யாருரைப்பார் மாயை மூர்த்தி

பேசாம லிருந்துவிட்டால் மொழிவா ரெங்கே

5 தொகு

எங்கென்று மார்க்கண்டன் எடுத்துச் சொல்ல

என்ன சொல்வார் ஏகவெளிச் சிவனை நோக்கிக்

கங்கைதனைப் பூண்டானே கடவு ளோனே

காரணமே பூரணமே கண்ணே மின்னே
சங்கையினி யேதறிவேன் மகுட சோதி
சந்திரனைப் பூண்டிருந்து தவம் பெற்றோனே

மங்கையிடப் பாகம் வைத்த மகுடத் தோனே

மாமுனிகள் ரிடிசித்தர் அறிவார் காணே

6 தொகு

அறிவார்கள் ரிடிசித்தர் முனிவேர் ரையா

அரகரா அதுக்கு கோளாறென் றக்கால்

பொறியாகப் புகண்டமுனி சொல்வா ரையா

போயழைக்கக் கோளாறி வசிட்டராகும்

நெறியாக இவ்வகை நான்றிவே னையா

நிலைத்தமொழி புகண்டரால் மற்றோர் சொல்லார்

புரிவாரு மிவ்வளவென் றுரைத்தார் மாயர்

பொருள் ஞானக் கடவுளைப்போல் மகிழ்ச்சி பூண்டார்

7 தொகு

மகிழ்ச்சியுடன் மார்க்கண்டா வாராய் கண்ணே

வரலாறு நீ யெவ்வாறு அறிவாய் சொல்வாய்

சுகட்சியுடன் கருதிப்பார் யுகங்கள் தோறும்

சூட்சமிந்த மாலொன்றன் வயிற்றில் சேர்வான்

அகட்சியுடன்ஆலிலைமேல் இருப்பா ரையா

அப்போதே இவரிடத்தி லெல்லா ஞானம்

இகழ்ச்சியுட னிவற்குப்பின் எவரோ காணேன்

இவ்வார்த்தை நான்றியேன் அவரைக் கேளீர்

8 தொகு

கேளுமென்றான் மார்க்கண்டன் சிவன்தா னப்போ

கிருபையுடன் இவ்வளவும் அறிவா யோடா

ஆளுகின்ற ஈசனுநாம் அறியோ மிந்த

அருமைதனை நீயறிந்தாய் அருமைப் பிள்ளாய்

காளகண்டர் மாயோனைச் சொல்லீர் என்றார்

கருவேது நீயறிந்த வாறு மேது

பாளுகின்ற முப்பாழுந் தாண்டி நின்ற

பரஞான சின்மயமுன் பகர்ந்தி டீரே

9 தொகு

பரமான பரமகயி லாச வாசா

பார்த்திருப்போ மாலிலைமேல் பள்ளி யாகித்

தரமான புசுண்டமுனி யந்த வேள

சக்கரத்தைப் புரளவொட்டார் தவத்தினாலே

துரமாக எவ்வாறோ திரும்பப் போவார்

சூட்சமதை நாமறிவோம் பின்னே தோதான்

வரமான வரமளித்த சூரன வாழ்வே

வசிட்டார் போயழைத்துவரத் தகுமென்றாரே

10 தொகு

தகுமென்ற வார்த்தைதனை அறிந்தே ஈசர்

தவமான வசிட்டரே புசுண்டர் சாகை

அக மகிழ அங்கேகி அவர்க்கு உரைத்தே

அவரையிங்குச் சபைக்கழைத்து வருவா யென்ன

செகமான செகமுழுதும் ஆண்ட சோதி

திருவடிக்கே நமக்கரித்துத் திரும்பினார் பின்

உகமானத் தனையறிந்தும் அரனார் சொன்ன

எளவுகண்டார் புசுண்டரெனுங் காகந் தானே

11 தொகு

காகமென்ற வேடமதாய் விருட்ச மீதிற்

காத்திருந்தார் வசிட்டரவர் கண்டார் நாதர்

ஏகமதா யெட்டான வசிட்டரே நீர்

எங்குவந்தீர் வாரும் என்றே இடமு மீயத்

தாகமுடன் ஈசரும்மை அழைக்கச் சொன்னார்

சங்கதியைத் தங்களிடஞ் சாற்ற வந்தேன்

பாகமுடன் எட்டான விவரந் தன்னை

பத்துமெய்ஞ் ஞானபொருள் அருள்பெற் றோரே

12 தொகு

பெற்றோரே யென்னுரைத்தீர் வசிட்டரே நீர்

பிறந்திறந்தே எட்டாங்காற் பிறந்து வந்தீர்

சத்தான சத்துகளும் அடங்கும் காலம்

சக்கரமுந் திரும்பி விட்டாற் சமயம் வேறாம்

சித்தான பஞ்சவர்கள் ஒடுங்கும் போது

சேரவே ரிடிமுனிவர் சித்த ரொடு

முத்தாகப் பஞ்செழுத்தில் ஒடுக்க மாவார்

முத்துமணிக் கொடியீன்றாள் முளைத்திட்டீரே

13 தொகு

முளைத்திட்டீர் இத்தோடெட்டு விசை வந்தீர்

முறையிட்டீர் இவ்வண்ணம் பெருமை பெற்றீர்

களைத்திட்டுப் போகாதீர் சொல்லக் கேளும்

கண்டமதில் விடம்பூண்டார்க் கலுவல் என்ன

கிளைத்திட்டுப் போனக்கால் மறந்து போவார்

கிளர்நான்கு யுகந்தோறும் இந்தச் செய்கை

பிழைத்திட்டுப் போவமென்றால் அங்கே போவோம்

பேய்பிடித்தோர் வார்த்தை சொல்ல நீர்வந்தீரே

14 தொகு

வந்தீரே வசிட்டரே இன்னங் கேளும்

வளமைநான் சொல்லிவந்தேன் வேடம் நீங்கி

இந்தமாமரக் கொம்பிலிருந்தே னிப்போ

இதுவேளை யெவ்வளவோ சனமோகாணும்

அந்தமோ ஆதியோ இரண்டுங் காணார்

அவர்களெல்லாம் ரிடி யோகி சித்த ரானார்

சந்தேகம் உமக்குரைக்கப் போக தையா

சாமிக்கே சொல்லுமையா இதோ வந்தேனே

15 தொகு

வந்தேனே யென்னுரைத்த வாறு கொண்டு

வசிட்டருமே வாயுலர்ந்து காலும் பின்னி

இந்தேனே முனிநாதா சரணங் காப்பீர்

என்று சிவன் சபை நாடி முனிவர் வந்தார்

மைந்தனையே யீன்றருளும் கடவுள் நாதா

மாமுனிவன் வாயெடுக்கப் புசுண்டர் சொல்வார்

சித்தனைசெய் ஈச்சுரனே வந்தேனையா

சிவசிவா இன்னதென்று செப்பி டீரே

16 தொகு

செப்புமென்ற புசுண்டமுனி முகத்தை நோக்கிச்

சிவன் மகிழ்ந்தே ஏது மொழி செப்புவார்கேள்

கொப்புமென்ற யுகமாறிப் பிறழுங் காலம்

குரு நமசி வாயமெங்கே பரந்தானெங்கே

அப்பு மெந்தப் பஞ்சகணத் தேவரெங்கே

அயன்மாலும் சிவன் மூவரடக்க மெங்கே

ஒப்புமிந்த யெகமாறிப் பிறந்த தெங்கே

ஓகோகோ முனிநாதா உரைசெய் வீரே

17 தொகு

உரையென் றுருந்தமக்குப் புத்தி போச்சு

உம்மோடே சேர்ந்தவர்க்கும் மதிகள் போச்சு

பரையென்றால் பரைநாடி நிலைக்க மாட்டீர்

பரமசிவன் தாமென்னும் பேறும் பெற்றீர்

இரையென்றால் வாய்திறந்து பட்சி போல

எல்லோரும் அப்படியே இறந்திட்டார்கள்

நிரையென்ற வார்த்தைகளைச் சொன்னே னானால்

நிசங்கொள்ளா தந்தரங்கம் நிசங் கொள்ளாதே

18 தொகு

கொள்ளாமற் போவதுண்டோ மவுன யோகி

கோடியிலே உனைப்போல ரிடியோ காணேன்

உள்ளாக ரிடியொருவர் இல்லா விட்டால்

யுகவார்த்தை யாருரைப்பார் யானுங் காணேன்

விள்ளாகல் தீராது முனிவனே கேள்

மெஞ்ஞான பரம்புகுந்த அருள்மெய்ஞ் ஞானி

தள்ளாமற் சபையிலுள்ளோர் எல்லார் கேட்கச்

சாற்றிடாய் முனிநாதா சாற்றிடாயே

19 தொகு

சாற்றுகிறன் உள்ளபடி யுகங்கள் தோறும்

தமக்குவந்து சொல்லுவதே தவமாய்ப் போச்சு

மாற்றுகிறேன் க்ஷணத்தின் முன்னுரைத்துப் போனேன்

வாதாட்ட மெனதாச்சே இனியென் சொல்வேன்

சேற்றிலே நாட்டியதோர் கம்பம் போலத்

திரும்பினது போலாச்சு யுகங்கள் தோறும்

ஆற்றுகிறா னந்தமது ஆகும் போது

அரகரா அந்நேரம் நடக்கை கேளே

20 தொகு

கேளப்பா நடந்தகதை சிவமே யுண்மை

கெடியாகச் சக்கரங்கள் திரும்பும் போது

பாளப்பா தசநாதம் மவுனம் பாயும்

பரமான மவுனமது பரத்திற் சாடும்

ஏளப்பா அடுக்குகளும் இடிந்து வீழும்

இருந்த சதா சிவமோடி மணியில் மீளும்

கேளப்பா இதுகேளா யெவருஞ் செல்வார்

ஓகோகோ அண்டமெல்லாம் கவிழ்ந்து போமே

21 தொகு

கவிழ்ந்துபோம் அப்போது அடியேன் அங்கே

கருத்து வைத்துத் தியானமொரு தியானமுண்டு

தவழ்த்து போங் காமலப் போ நிறுத்தி வேன்யான்

சமையமதி லச்கினிபோல் தம்பங் காணுஞ்

சிவந்த வண்ணம் நீலவுருச் சுடர்விட் டேகும்

சிவசிவா அக்கினிபோற் கொழுந்து வீசும்

நவந்து அதனருகே நான் சென்று நிற்பேன்

நகாரமுதல் அஞ்செழுத்தும் வரக் காண்பேனே

22 தொகு

காண்பேனே நகாரமது மகாரம் புக்கும்

கருத்தான மகாரமது சிகாரம் புக்கும்

தேண்பேனே சிகாரமது வகாரம் புக்கும்

சிவசிவா வகாரமது யகாரம் புக்கும்

கோண்பேனே வகாரமது சுடரிற் புக்கும்

குருவான சுடரோடி மணியிற் புக்கும்

நாண்பான மணியோடிப் பரத்திற் புக்கும்

நற்பரந்தான் சிலம்புக்குஞ் சிவத்தைக் கேளே

23 தொகு

கேளப்பா சிவமோடி அண்டம் பாயும்

கிருபையா யண்டமது திரும்பிப் பாயும்

கோளப்பா அண்டமது கம்பத் தூண் தான்

குருவான தசதீட்சை யொன்று மாச்சு

மீளப்பா தம்பமது விளக்குஞ் செய்கை

மேலுமில்லை கீழுமில்லை யாதுங் காணேன்

ஆளப்பா நரைத்தமா டேறு வோனே

அன்றளவோ வின்றளவோ அறிந்தி லேனே

24 தொகு

அறிந்திலேன் என்றுரைத்த புசுண்ட மூர்த்தி

அரகரா உன்போல முனியார் காணேன்

தெரிந்திலேன் என்றுரைத்தால் மனங் கேளாது

சிவனயந்து கேட்கவும் நீ யொளிக்க வேண்டா

பொருந்திலேன் பூருவத்தில் நடந்த செய்கை

பூரணத்தால் உள்ளபடி புகழ்ந்து சொல்லும்

பரிந்திலேன் மிகப் பரிந்து கேட்டேன் ஐயா

பழமுனியே கிழமுனியே பயன் செய்வாயே

25 தொகு

பழமுனிவ னென்றுரைத்தீர் கடவுளாரே

பருந்தீப் தமத்தைப் பலுக்கக் கேளும்

குழுவுடனே தம்பமதில் யானும் போவேன்

கோகோகோ சக்கரமும் புரண்டு போகும்

தழும்பணியச் சாகரங்கம் எங்கும் தானாய்ச்

சத்தசா கரம்புரண்டே யெங்கும் பாழாய்

அழகுடைய மாதொருத்தி தம்பத் துள்ளாய்

அரகரா கண்ணாடி லீலை தானே

26 தொகு

லீலைபோற் காணுமுகம் போலே காணும்

நிலைபார்த்தால் புருடரைப் போற் றிருப்பிக் காணும்

ஆலைபோற் சுழன்றாடுங் கம்பத்துள்ளே

அரகரா சக்கரங்கள் ஆறுங் காணும்

வாலைபோற் காணுமையா பின்னே பார்த்தால்

மகத்தான அண்டமது கோவை காணும்

சோலையா யண்டமதில் சிவந்தான் வீசும்

சிவத்திலே அரகரா பரமுங் காணே

27 தொகு

பரத்திலே மணிபிறக்கும் மணியினுள்ளே

பரம்நிற்கும் சுடர்வீசும் இப்பாற் கேளும்

நிரத்திலே சடம்தனில் யகாரங் காணும்

நிச்சயமாம் யகாரமதில் வகாரங் காணும்

வரத்திலே வகாரமதிற் சிகாரங் காணும்

வரும்போலே சிகாரத்தில் மகரங் காணும்

நரத்திலே மகாரத்தில் நகாரங் காணும்

நன்றாம்பஃ பூமியப்போ பிறந்த தன்றே

28 தொகு

பிறந்ததையா இவ்வளவும் எங்கே யென்றால்

பெண்ணொருத்தி தூணதிலே நின்ற கோலம்

சுறந்ததையா யிவ்வளவும் அந்த மாது

சூட்சமதே அல்லாது வேறொன் றில்லை

கறந்ததையா உலகமெல்லாங் காம்பஃ பாலைக்

காலடியிற் காக்க வைத்துச் சகல செந்தும்

இறந்ததையா இவ்வளவுஞ் செய்த மாது

எங்கென்றால் உன்னிடத்தில் இருந்தாள் கன்னி

29 தொகு

இடப்பாகம் இருந்தவளும் இவளே மூலம்

இருவருக்கும் நடுவான திவளே மூலம்

தொடக்காக நின்றவளும் இவளே மூலம்

சூட்சமெல்லாங் கற்றுணர்ந்த திவளே மூலம்

அடக்காக அடக்கத்துக் கிவளே மூலம்

ஐவருக்குங் குருமீல மாதி மூலம்

கடக்கோடி கற்பமதில் நின்ற மூலம்

கன்னியிவள் சிறுவாலை கன்னி தானே

30 தொகு

கன்னாயிவள் என்றுரைத்தார் புசுண்ட மூர்த்தி

கர்த்தரப்போ மனஞ்சற்றேகசங்கி னார்பின்

மண்ணுள்ள தேவர்களும் பிறப்பித் திந்த

மார்க்கத்தில் இருப்பதுவோ மவுனப் பெண்ணே

உன்னிதமாய் உன்கருணை யெங்கே காண்போம்

ஓகோகோ ஐவருந்தான் வணங்கினார்கள்

கொன்னியவள் வாக்குரையாள் சிவமே கன்னி

கொலுமுகத்தில் நால்வரும் போய் வணங்கி னாரே

31 தொகு

வணங்கியவர் வாய்புதைந்து நின்றார் பின்னே

மாதுகலி யாணியென வசனித் தார்கள்

வணங்கினார் தேவரொடு முனிவர் தாமும்

மற்றுமுள்ள தேவர்களும் நவபா டாளும்

வணங்கினார்அட்டகசந் திகிரி எட்டும்

வாரிதியும் சேடனுமால் அயனு மூவர்

வணங்கினார் மிகவணங்கித் தொழுதார் அப்போ

வாலையவள் மெய்ஞ்ஞானம் அருளீ வாளே

32 தொகு

அருளீவாள் திருமணியை மாலை பூண்டாள்

அரகரா சின்மயத்தி னீறு பூசிப்

பொருளீவாள் அவரவர்க்கும் ஏவல் சொல்லிப்

பொன்றாத பல்லுயிர்க்ககைக் கிடங்கள் வேறாய்க்

தெருளீவாள் சிவயோகந் தெளிவ தற்குச்

செயலுறுதி யாகவல்லோ தெரிய வேண்டித்

திருளீவாள் தாயான சிறிய வாலை

சிவசிவா சூட்சம் பூரணமு முற்றே

33 தொகு

பூருவத்தில் நடந்தகதை இதுதான் என்று

புகன்றுவிட்டுப் புசுண்டரும் தம்பதிக்குச் சென்றார்

காரணத்திலே வகுத்தேன் இந்த ஞானங்

கம்பமணி வாலை கொலுக் கூட்ட ம்பபா

நாரணத்தில் நின்றிலங்கும் மவுன மாலை

நாட்டினாள் சிவராச யோகங் கேளு

ஆரணத்தி பூரணத்தி யருள்மெய்ஞ் ஞானி

ஆதி சக்தி வேதமுச்சி யருள் செய்வாளே

4 காகபுசுண்டர் குறள் தொகு

குறள் வெண்பா தொகு

1

சின்மயத்தைப் போற்றிச் சிவராச யோகத்தில்
நன்மை பராபரத்தை நாடு.

2

அண்ட முடிமீதில் அங்கி ரவிமதியைக்
கண்டு தரி சித்தல் கதி.

3

வலம்இடமாய் நின்ற மதிரவியை மாறி
விலகா தடியினிற் பின் வீடு

4

அறுபத்து நால்யோகம் அவ்வளவும் தள்ளி
ஒருபொயுதும் உண்டுநிலை யோர்

5

உலகமே மாயமென உன்மனதிற் கண்டு
நவமாக நாதனடி நம்பு

6

சித்தர் பதினெண்மர் செய்கையில் தோன்றாத
அத்தனரு ளூம்புசுண்டன் யான்

7

சொன்னேன் அறிந்து சுகமாய் உலகோருக்
கெந்நாளும் வாழ்கவென்றே யான்

8

கண்ணுள் மணியாகிக் காரணமாய் நின்றான்
மண்ணும் உயிர்பதியு மாறு

9

விண்டேனே ஞானம் வெளியாக முப்பத்தி
ரண்டில் அறிவீர் நலம்

10

நேத்திரத்தைக் காகம்போல் நிச்சயமாய் நிற்க
ஆத்துமத்தில் ஆனந்த மாம்

11

உலகில் அறிந்தோர் ஒருநாளும் மாளார்
பலநினைவை விட்டுநீ பார்

12

கண்டோருஞ் சொல்லாற் கருத்தாற் பெரியோரைத்
தொண்டு செய்து பெற்ற சுகம்

13

ஆதியிற் சொன்னவிய ரண்ட மதையெடுத்து
மாது சிவன் பூசை செய்து வை

14

முப்பொருளைச் சுட்டு முழுதழுது நீறாக்கித்
தப்பாமல் உண்டுநிலை சார்

15

யோகமுடன் கற்ப முரைத்தேனீ ரெட்டினில்
வேகமுடன் கண்டுணரு வீர்

16

வாசிமுனி மைந்தா மருவு பிரமத்தில்
மோசம் வாரா குறள்

முற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=காக_புசுண்டர்&oldid=1027669" இலிருந்து மீள்விக்கப்பட்டது