குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/பகுத்துண்ணாமை கொலையே!

6. பகுத்துண்ணாமை கொலையே!

திருக்குறள் அதிகார அமைப்புகளை உடையது. இந்த அதிகார அமைப்புகளைத் திருவள்ளுவரே செய்தார் என்று கருதுவோரும் உண்டு. அங்ஙணமின்றி இந்த அதிகார முறைவைப்புகள் திருவள்ளுவரால் செய்யப்பெறவில்லையென்றும்; பின் வந்த உரையாசிரியர்கள் செய்தனரென்றும் கூறுவாரும் உண்டு.

யார் செய்தால் என்ன? அதிகார அமைப்பிற்கேற்றவாறு திருவள்ளுவர் குறள்களைப் பாடிவைத்தார் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த அதிகார அமைப்பிலும் நிறைந்த பொருளாக்கம் இருக்கிறது; பயன் இருக்கிறது. ஒரு செய்தியை ஒரு தடவைக்குப் பத்துத் தடவை திரும்பத் திரும்ப நினைந்தாலே நெஞ்சகம் அந்த நெறியில் ஈடுபடுகிறது. அதனால், ஒரு நன்னெறியினைப் பலவகைகளில்-பல கோணங்களில் பல தடவை ஆராய்ந்து உயர்தலே வாழ்க்கைக்கு உற்ற முறையென்பதால் அதிகார அமைப்புகளும் சாலச் சிறந்தனவேயாம்.

இங்ஙணம், தனித்தனி நெறிகளுக்கேற்றவாறு திருக்குறள் அதிகாரங்கள் அமைந்துள்ளன. இத்தகைய அதிகார அமைப்பில் கொல்லாமையும் ஒன்று.

உயிர்கள், உடம்பொடு தொடர்பு கொண்டு வாழ்க்கை நிகழ்த்தித் தம்மை வளர்த்து உயர்த்திக்கொள்ளும் சாதனமே வாழ்வியல். இந்த வாழ்வியலுக்கு ஏற்றவாறு இசைந்துள்ள உடம்பொடு உயிரிடை ஏற்பட்டுள்ள நட்பை-உறவைப் பாதுகாப்பது ஒரு பேரறம் ஆதலாலன்றோ, "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்றார் திருமூலர்.

உடம்பிற்கும் உயிர்க்கும் ஏற்பட்டுள்ள உறவை நீக்குதலையே ‘கொலை’ என்று கூறுகிறோம். கொல்லப் பெறுதல் உடம்பேயாயினும், உயிர்க்கொலை என்றே கூறுகிறோம். காரணம், உடம்பு இல்வழி உயிரின் இயக்கமும்-துய்த்தலும் நுகர்தலும்-வளர்ச்சியும் இல்லாது போதலினாலேயாம்.

அதுபோலவே, உயிர் தங்கி உலவும் உடலியக்கத்துக்கு எரிபொருளாகிய உணவினை வழங்குதலைப் பேரறம் என்று கூறுகிறோம். உணவு இல்வழி உடலியக்கமில்லை. உடல் இயங்காவழி உயிர்க்கும் இலாபமில்லை. அதனாலேயே உடல் உயிர் உறவு இயக்கத்தைப் பாதுகாக்கின்ற உணவு, மருந்து முதலியன வழங்கும் உடன்பாட்டு அறங்களாலும், அது போலவே உடல் உயிர் உறவை நீக்காமையைக் கொல்லாமை என்ற எதிர்மறை அறத்தாலும் மனித உலகம் போற்றுகிறது.

திருக்குறளில், கொல்லாமை என்று ஒர் அதிகார முண்டு. கொல்லுதலின் கொடுமையை வள்ளுவர் நினைந்து நினைந்து கொதித்து கண்டிக்கின்றார். இந்த அதிகாரத்தில் முதற் குறளாக கொல்லாமையை அறம் என்று பொதுவாக உணர்த்தி, அடுத்த குறளில்,

"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை"

என்று கொல்லாமை நெறியை வற்புறுத்துகின்றார். இந்தக் குறளில் பலரோடு பங்கிட்டு உண்பதும், பல உயிர்களைப் பேணிக் காப்பதும் பேரறம் என்று குறிப்பிடுகிறார்.

இந்தக் குறளுக்கும் கொல்லாமைக்கும் என்ன தொடர்பு? இதனை, ‘விருந்தோம்ப’லில் கூறக்கூடாதா? ‘ஒப்புரவறித’லில் கூறக் கூடாதா? அல்லது ‘ஈகை’யில்தான் கூறக் கூடாதா? இங்ஙனம், அங்கெல்லாம் கூறாமல், 'கொல்லாமை’ அதிகாரத்தில் பகுத்துண்டு பல்லுயிரோம்பும் பாங்கான நெறியைக் கூறியது ஏன்? கொல்லுதலும் குற்றமே. அதைவிடக் குற்றம், உண்டி முதலியன வழங்கிக் காப்பாற்றாமல் சாகவிடுவது, அது கொலைக்குற்றமே என்பதை உணர்த்தவே இங்குக் கூறினார்.

கூடிவாழும் மனித சமுதாயத்தில் ஓர் உறுப்பினனாக விளங்கும் மனிதனுக்குச் சமுதாய ரீதியாகக் கடமைகளும் உண்டு; உரிமைகளும் உண்டு. ஒரு சமுதாயத்தில் ஓர் உறுப்பினனாகப் பிறந்த மனிதனைச் சோறு இன்றிச் சாகவிடும் சமுதாயம் கடமையுணர்வு இல்லாத சமுதாயமாகும்; அதையே ஒரு கொலைகார சமுதாயம் என்று கூறினாலும் பொருந்தும். கத்தியெடுத்துக் கொன்றால் மட்டுமே கொலை யென்பதல்ல.

பெற்ற செல்வத்தைப் பங்கிட்டுக் கொடுத்து, பலரையும் பேணி வளர்க்காமல் பலரையும் சோறிட்டும் மருந்து முதலியன வழங்கியும் பேணி வளர்த்துப் பாதுகாக்காமல் சாகடித்தலும் கொலைக் குற்றமேயாகும் என்பதனை உணர்த்தவே இந்தக்குறள் கொல்லாமை அதிகாரத்தில் அமைந்திருக்கிறது. இந்த அடிப்படையில் இன்று நம்முடைய நாட்டினை நோக்கினால் கொலைகாரர்கள் மிகுதியும் உள்ளனரோ என்று வினா எழுந்தால் மறுப்பார் யார்?