குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/மரபா? சீர்திருத்தமா?

7. மரபா? சீர்திருத்தமா?

மரபை வலியுறுத்த வந்தவர்கள் மரபு என்பதற்கு என்ன வரையறை வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி அவர்களே குறிப்பிடவில்லை. எது மரபு? பொதுவாக நேற்றையச் சீர்திருத்த்ம் இன்று மரபாகி விடுகிறது. இன்றையச் சீர்த்திருத்தம் நாளை மரபாகிவிடும். இது வளரும் உலகத்தின் இயற்கை. இந்தத் திருக்குறள் விழாவை நடத்துகிறவர்கள் நான்கு ஆண்டுகட்கு முன்பு இவ்விழாவை ஆரம்பித்தபோது அது புதுமை. அடுத்த ஆண்டு முதல் வழக்கம்போல் என்று மரபின் வழிச்சேர்த்து வழங்குகிறோம்.

இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் எப்படி வாழவேண்டும் என்று தனிப்பெரும் நூல் செய்த திருவள்ளுவரின் கருத்து இன்று நமக்கு மரபாகி இருக்கிறது. பொதுவாக, பொருளுடைமையில் ஆசையிருப்பதென்பது மரபு. ஆனால், பொருள் வருவதற்குரிய வழியைக் கண்டுபிடி-அவ்வழிப் பொருளைப் பெருக்கு என்ற வள்ளுவர் கருத்து மரபல்ல.

திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடியிருக்கிறார். அவர் கடவுள் வாழ்த்தோடு நூலைத், தொடங்கியதாலேயே அது மரபு என்றாகிவிடாது. விவசாயத்துறையில் சீர்திருத்தம் அரசியல் துறையில் சீர்திருத்தம் என்றால், நிலமே இல்லாமலோ அரசியலே இல்லாமலோ சீர்திருத்தம் செய்வதில்லை. நிலம், அரசியல் என்ற அடிப்படையை வைத்துக் கொண்டுதான் காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற திருத்தங்களைச் செய்யவேண்டும். இதைத்தான் வள்ளுவர் செய்திருக்கிறார். திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடியிருக்கிறார் என்றாலும், தொல்காப்பியம் குறிப்பிடுவது போல, நால்வகை நிலங்களையும் அந்தந்த நிலங்கட்குரிய தனித்தனி நான்கு கடவுள்களையும் திருக்குறள் பேசவில்லை. திருவள்ளுவர் பொருள் குறிப்பிலே, குணக்குறிப்பிலேதான் கடவுளைக் குறிக்கிறார். நாட்டில் வேறுபாடற்ற-ஒருமித்த கடவுள் உணர்ச்சி வேண்டும் என்று விரும்பி வலியுறுத்தினார். வழிபாடுபற்றி அவர் குறிக்க நேர்ந்தபோதும் வெறும்-ஆரவாரமான சடங்குகளைப் பற்றிப் பேசவில்லை. நினைத்தலையும், சிந்தித்தலையும் அதன் மூலமாகத் தன்னை வழிப்படுத்திக் கொள்ளுதலையுமே வள்ளுவர் குறிக்கிறார். இறைவன் தூய ஒளிபொருந்திய அறிவாக விளங்குபவன் என்ற அடிப்படையை மனத்தகத்தேகொண்டு ‘வாலறிவன்’ என்று பேசுகின்றார் வள்ளுவர். வள்ளுவத்துக்கு முன் எழுந்த நூல்களில் இதனைக் காண முடியுமா?

அடுத்து, பலாப்பழத்தைத் திருத்துவது என்கிறோம். அப்படியானால், பலாப்பழத்தில் உள்ள சுவையற்ற பகுதிகளை உண்ணுதற்கு ஒவ்வாதனவற்றை நீக்கிப் பலாச் சுளையை எடுப்பதுதான். அதுபோல, சீர்திருத்தம் என்றால், நடைமுறைக்கு ஒவ்வாதனவற்றை நீக்கிவிட்டு, நாட்டுக்கும் வாழ்க்கைக்கும், நடைமுறைக்கும் ஏற்றவற்றை ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொள்ளுதலேயாகும்.

"மரபு நூல்கள்” எனப்படுவன தமிழகத்தின் எல்லையைத் தாண்டவில்லை. ‘முன்னோர் சொல்லைப் பொன்னே போல் போற்றுதும்’ என்பது மரபு. "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்று வள்ளுவர் பேசுகிறாரே இது சீர்திருத்தமா இல்லையா? ‘சொன்னதை ஆராய்ந்துபார்’ என்பதே சீர்திருத்தம்தானே? எண்ணிய எண்ணியாங்கெய்துப எண்ணியர் திண்ணியார் ஆகப் பெறின்’ என்று கூறுவதன் மூலம், திருவள்ளுவர் எண்ணத்திற்கு வலிமையுண்டு என்று வலியுறுத்துகிறாரே, அது சீர்திருத்தம்தானே? எண்ணினால், எண்ணத்திற்குத் திண்மை ஏற்பட்டால் கை கால்களுக்கு வலிவு வந்துவிடும்; "நீ எண்ணிய எண்ணியங்கு எய்துவாய்?" என்பது சீர்திருத்தம்தானே? திருவள்ளுவர், வாழ்க்கையில் உள்ள மாசுகளை நீக்கி, வையகம் வாழ்வாங்கு வாழவேண்டுமென்று விரும்பித் திருக்குறளைச் செய்தார்; எனவே திருவள்ளுவர் வற்புறுத்தியது சீர்திருத்தமே என்று உறுதியாகக் கூறலாம்.

திருவள்ளுவர்க்கு முன்தோன்றி நூல் செய்த தொல்காப்பியர் நாட்டில் இருந்த நிலைமையை உள்ளவாறு

தி.13. கூறினார். இப்படியிருக்க வேண்டும் என்று திருவள்ளுவர் கூறினார். அதுவே சீர்திருத்தம்தான். மேலும் நூல் முறையிலேயே வள்ளுவர்தான் சீர்திருத்தம் செய்தார். திருக்குறளுக்கு முன்பு, ஒழுக்க இயலுக்காக முறையான ஒழுக்க நூல்-நீதி நூல் எதுவும் எழுந்ததில்லை. எனவே, ஒழுக்கம் இயல் கூற முதன் முதல் திருக்குறள் எழுந்ததே சீர்திருத்தம்தான். திருவள்ளுவர் நேரடியாக வந்து உன் வாழ்க்கை வளமுற இன்ன இன்ன கொள்கையைக் கடைப்பிடி என்று கூறுகிறார். அவர் மிக எளிமையாகவும், சுருக்கமாகவும் குறட்பாக்களை ஆக்கியிருக்கிறார்.

கள்ளுண்ணல், புலால் உண்ணல் ஆகிய தமிழ் மரபை வள்ளுவர் கடுமையாகச் சாடுகிறார்.

"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று"

என்கிறார் திருவள்ளுவர். இதிலே, “அவிசொரிந்து ஆயிரம் வேட்டல்" என்பது மரபு. அதாவது வேள்வி செய்தல் மரபு, ஆனால், "ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை" என்பது சீர்திருத்தம்.

வீட்டிற்குள்ளே பெண்ணைப் பூட்டிவைத்துக் கற்பைக் காப்பதுதான் இங்கு மரபாக இருந்திருக்கிறது. இதனையே "இற்செறித்தல்" என்று குறித்துள்ளனர், பழம்புலவர்கள். திருவள்ளுவரோ, இந்தச் செயல்முறையை வன்மையாக எதிர்க்கிறார். "சிறைகாக்கும் காப்பு எவன் செயும்?" என்று கேட்கிறார். "நிறை காக்கும் காப்பே தலை" என்று வலியுறுத்துவதன் மூலம் சீர்திருத்தம் செய்கிறார்.

அடுத்து, வாய்மை என்பதற்கு நாட்டில் இருந்த வழக்கு "உள்ளதை உள்ளவாறே சொல்லுதல்" என்பதுதான். வள்ளுவர் இந்த மரபை வலியுறுத்தவில்லை. உள்ளதை உள்ளவாறே சொல்லித் தீமை விளைவிப்பதைவிட, பிறருக்குத் தீமை விளைவிக்காத-நன்மை விளைவிக்கின்ற பொய்யையும் வள்ளுவர் வாய்மையின்பாற் பட்டதாக ஏற்றுக் கொள்ளலாம் என்கிறார். எனவே, அவர் தீமை விளைவிக்காத சொல்தான் "வாய்மை" என்கிறார். இது சீர்திருத்தமா இல்லையா?

ஈதல், விருந்தோம்பல் முதலிய அடிப்படைப் பண்புகளை மரபை வள்ளுவர் ஒத்துக்கொண்டு, ‘ஒப்புரவறிதல்’ என்ற புதிய-சீர்திருத்த்தைச் சொல்லி, அதன்மூலம் தலைசிறந்த மனிதப்பண்பைக் காட்டுகிறார். பலரோடு கூடிவாழு-ஒத்ததறிந்து வாழு-ஒத்ததறிதல் என்றால் நமக்கு மட்டும் ஒத்ததறிதல் அல்ல-மற்றவர்களுக்கும் ஒத்ததறிதல் என்பதுதான். இந்த ஒப்புரவுப் பண்பு உலகப் பேரிலக்கியங்களால் மிகமிகப் பாராட்டப்படக்கூடிய பண்பு. அது உலகந்தழுவிய வாழ்க்கையையே குறிக்கும்.

பெண்ணின் கடமைபற்றிப் பேசப் புகுந்த வள்ளுவர்,

"தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை"

என்று பேசுகிறார். வள்ளுவர் காலத்தில் குடும்ப மகளிரிடம் தெய்வம் தொழுகின்ற உணர்ச்சி மிக்கோங்கி வளர்ந்து, குடும்பப் பொறுப்புக்களில் அக்கறை குறைந்து குடும்ப நலன்கள் பாதிக்கப்படுகிற ஒரு நிலை இருந்திருக்க வேண்டும். அந்நிலையை மாற்றியமைத்துக் குடும்பம் பெண்களுக்கு அவர்களின் கடமையை உணர்த்தவும், குடும்ப நலன்கள் பாதிக்கப்படாமல் காக்கவும் விரும்பியே வள்ளுவர் ‘கொழுநனே தெய்வம்' என்ற சீர்திருத்தத்தை உண்டாக்கினார் என்று கூறலாம் அல்லவா?

அடுத்து,

"தேவர் அனையர் கயவர் அவரும்
மேவன செய்தொழுக லான்”

என்ற குறட்பாவில் திருவள்ளுவர் தேவர் என்ற மரபை ஒத்துக்கொண்டு, மனப்போக்குப்படிச் செயல் செய்கிறவர்களைக் கயவர்களாக்கி, அவர்களைத் தேவர்களோடு ஒப்பிட்டுப் பேசியது சீர்திருத்தம்.

ஊழ் மரபு, அதனை வள்ளுவர் ஒத்துக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள் மரபுக்கட்சியினர். ஊழை எந்த அளவில் வள்ளுவர் ஒத்துக்கொண்டிருக்கிறார்?

"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்"

என்று வள்ளுவர் கூறுகிறார். இதிலும் ‘முந்துறும்’ என்கிறாரே தவிர ‘ஊழே வெல்லும்’ என்ற உறுதிப்பாட்டை அவர் உணர்த்தவில்லை. மேலும்,

'ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்'

என்ற குறட்பா மூலம், தளர்வுறாமல் முயற்சி செய்தால் ஊழையும் வென்றுவிட முடியும் என்று எடுத்துக் கூறுகிறார். ஊழ் என்ற மரபை ஒத்துக்கொண்டு, தளராத முயற்சியால் அதை வென்று விடலாம் என்ற சீர்திருத்தக் கருத்தையே வள்ளுவர் வற்புறுத்தியிருக்கிறார். நிலத்தையும், வீட்டையும் வைத்துக்கொண்டு தேவையான திருத்தங்களைச் செய்வது தான் சீர்திருத்தம். இதைத்தான் திருவள்ளுவர் செய்தார்.