குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/முன்னுரை

(Upload an image to replace this placeholder.)

முன்னுரை
தவத்திரு பொன்னம்பல அடிகளார்

அருள்நெறித் தந்தை, தமிழ்மாமுனிவர் இருபதாம் நூற்றாண்டின் அப்பரடிகள், மனிதநேய மாமுனிவர், காவி உடுத்திய கார்ல் மார்க்ஸ் எனப் பலவாறு அழைக்கப்பெற்ற நம் குருமகாசந்நிதானம் அவர்கள் எழுதிய பல்வேறு நூல்கள் இன்று தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளது. திருக்குறளைப் பற்றிய பல்வேறு சிந்தனைகள் இன்று செறிவாகச் சீர்செய்யப்பட்டு, சிறப்புடன் நமது கரங்களில் தவழ்கின்றது. பேச்சே வாழ்க்கை, வாழ்க்கையே பேச்சு என்று உலக உபதேசியாக மட்டும் இராமல் பேசியதை வாழ்வில் நடை முறைப்படுத்திச் சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளியில்லாத செயற்கரிய செயல்களை ஆற்றிய அருந்தவ வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

உலக உயிர்கள் நலம்பெற உபதேசித்த அப்பர் அடிகளும், சுவாமி விவேகானந்தர் பெருமானும், வள்ளலார் பெருந்தகையும் எந்த அடைப்புக் குறிகளுக்குள்ளும் தம்மைச் சிறைவைத்துக் கொள்ளவில்லை. மடங்கள் என்ற நிறுவனங்களில் தங்களைச் சிறைவைத்துக் கொள்ளாமல் சுதந்திர வானில் சுடர்விட்டுப் பிரகாசித்தார்கள். பட்டு, பீதாம்பரங்களை அணிந்துகொண்டு பல்லக்கில் பவனிவரும் - காலத்திற்கு ஒவ்வாப் பரம்பரை மரபுகளை மறுதலித்துவிட்டு, தம் கடமைக்குரிய மரபுகளை வழுவாது நிறைவேற்றி, தம் பாதங்கள் நோகப் பாலைவனத்தில் பயணம் செய்து பாமர மனிதனின் வாழ்வை வளப்படுத்தச் சிந்தித்துச் செயலாற்றிய சமய சமுதாய உலகில் முதல் திருமடத்தின் தலைவர் நம் அருள்நெறித் தந்தையேயாவார். சுவாமி விவேகானந்தர் பெருமானும், வள்ளலார் பெருந்தகையும் மடாதிபதிகளாய் இருக்கவில்லை! திருமடத்தின் பொற்கூண்டுக்குள் மரபுகள் எனும் கத்திரிகள், சுதந்திரச் சிறகுகளை வெட்டிய பொழுதும் அதையும் தாண்டி, உலக மக்களின் ஆன்ம விடுதலைக்கு

தி.2 வித்திட்டு, வேதம் புதுமை செய்த மடாலயத் தலைவர் தாம் நம் மகாசந்நிதானம் வளர்ந்து வருகின்ற உலகில் பேச்சும் எழுத்தும் வாழ்க்கை வாணிகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பொழுது, சமுதாய மாற்றங்களுக்கு விதைக்கின்ற நாற்றங்காலாக அவற்றை மாற்றிக் காட்டினார்கள். உருவமும், கோலமும் அடையாளமும் மட்டும் அல்ல துறவு நெறி எண்ணும் எண்ணதால் நினைக்கும் உள்ளத்தால், வாழும் வாழ்க்கை முறையால் வாழ்வதுதான் உண்மைத் துறவுநெறி என்று துறவிகளிடம் மிக்க கண்டிப்பாக இருந்த திருவள்ளுவப் பெருந்தகையின் குறள்நெறியை, குவலயம் எங்கும் பட்டிதொட்டி எங்கும் பரப்பும் பணியில் ஈடுபட்டு, குறள்நெறிக்கு இயக்கம் கண்ட முதல் துறவி நம் மகாசந்நிதானமே ஆவார். குறள்நெறி பற்றிய அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், ஆய்வுச் சிந்தனைகள், வானொலிச் சொற்பொழிவுகள், கருத்தரங்கங்களில் மலர்ந்த மலர்கள் தான் இன்று திருவள்ளுவர் சிந்தனை பற்றிய நூல் தொகுப்பாக மலர்ந்து மணம் பரப்புகின்றது.

சீனத்தில் கன்பூஷியஸ், கிரேக்கத்தில் சாக்ரட்டீசு, பிரெஞ்சு தேசத்தில் ரூஸ்ஸோ, சோவியத்தில் மார்க்சியம் புரட்சியை - மாற்றத்தை விளைவித்ததைப் போலத் தமிழ் மண்ணில் தமிழ் நிலத்தில் திருவள்ளுவப் பெருமானின் சிந்தனைகள் ஏன் புரட்சியை, மாற்றத்தைத் தோற்றுவிக்கவில்லை? என்ற நியாயமான வினாவினை மகாசந்நிதானம் எழுப்புகின்றார்கள். சிந்தனையைக் கிளறும் இந்த ஆழமான வினாவிற்கு அற்புதமான விடையையும் தருகின்றார்கள். “தமிழ் நிலத்தை, தமிழ் மண்ணை ஆண்ட அரசர்கள் அருளரசர்களாக இருந்தார்கள். ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ என்று புறநானூறு பாடும். 'உயிரெலாம் உறைவதோர் உடம்புமாயினான்’ என்று கம்பன் தசரதனைப் பாடுவான்! முடி ஆட்சிக் காலத்தில் மன்னன் உடம்பாகவும் மக்கள் உடம்பை இயக்குகின்ற உயிராகவும் வாழுகின்ற ஆட்சிமுறை இருந்தது. புறாவிற்காகத் தன் தசையை அறுத்த சிபிச் சக்கரவர்த்தியும், கன்றை இழந்த பசுவிற்காகத் தன் மகனைத் தேர்க் காலில் இட்ட மனுநீதிச் சோழனும், அநீதி இழைக்கப்பட்ட அபலைப் பெண்ணிற்காக உயிர்நீத்த பாண்டியன் நெடுஞ்செழியனும், கொழுகொம்பின்றி வாடிய முல்லைக்குத் தேர் ஈந்த பாரி வள்ளலும், தண்தமிழுக்குத் தலைஈந்த குமணவள்ளலும் போன்ற அருளரசர்கள் ஆண்டமையால் உயிர்க்குலம் துன்பத்தைச் சந்திக்கவில்லை! நலம் செய்யாத அரசுகள் சில வாய்த்தபோதிலும் அவை மனிதகுலத்திற்குத் தீங்கு இழைக்கவில்லை. நலம் செய்யாததோடு தீங்கிழைக்கும் அரசுகளை நோக்கித்தான் புரட்சிகள் தோன்றும். இடையிடையே இருள் கவிந்தாலும் வள்ளுவர் வழித்தோன்றியவர்கள் இலக்கிய மாணவர்களாகவே அமைந்துவிட்டோம்! பரிமேலழகர் காலம் முதல் இன்றைய உரையாசிரியர்கள் வரை பாட்டுக்குப் பொருள்வரையும் உரையாசிரியர்களாக வளர்ந்து விட்டோம். திருக்குறள் நெறிக்கு எழுத்தில் உரை கூறுகின்றோம். வாழும் வாழ்க்கையில் உரைசெய்யத் தவறிவிட்டோம்! திருவள்ளுவரை வழிபாட்டுக்குரிய பொருளாக மாற்றி விட்டோம்!” என்று அருள்நெறித் தந்தை திருக்குறள் வாழ்வியல் நூலாக வெற்றி பெறாமைக்குக் கூறும் விளக்கம் எண்ணி எண்ணிப் போற்றத்தக்கது.

பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர்
தொகுத்துவற்றுள் எல்லாம் தலை

என்ற திருக்குறள், கொல்லாமை எனும் அதிகாரத்தில் ஏன் வைக்கப்பட்டுள்ளது? என்ற வினாவினை எழுப்புவார்கள்! ஈகையில் வைக்கப்பட்டிருக்கலாம், ஒப்புரவறிதலில் வைக் கப்பட்டிருக்கலாம், விருந்தோம்பலில் கூறி இருக்கலாம். கத்தி எடுத்துக் கொன்றால் மட்டும் கொல்ை என்பதன்று. பெற்ற செல்வத்தைப் பலருக்கும் பங்கிட்டுக் கொடுத்து, பலரையும் பேணி வளர்க்காமல் சோறிட்டு மருந்து முதலியன வழங்கிப் பலரையும் பேணி வளர்த்துப் பாதுகாக்காமல் சாகடித்தலும் கொலைக் குற்றமே என்பதனை உணர்த்தவே இந்தக் குறள் கொல்லாமை அதிகாரத்தில் அமைந்திருக்கின்றது என்ற அரிய விளக்கம் அருமையானது.

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்

என்னும் குறளுக்கு அறிவியல் பார்வையில் தருகின்ற விளக்கம் அற்புதமானது. ஊர் நலம் போற்றுபவனின் விளைநிலம் உரிமையால் தனி மனிதனுடையதாக இருப்பினும் நிலம் பேணப்படுவதில் பொதுவுடைமையாகப் போற்றிப் பேணப்படும். உரிமையாளர் விவசாயம் செய்ய மறந்திருந்தால்கூட ஊரார் அவருக்காக வேளாண்மை செய்து விளைச்சலை வீடு கொண்டுவந்து சேர்ப்பர் என்ற விளக்கம் பாராட்டுக்குரியது.

அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை
பொறுத்தானொ(டு) ஊர்ந்தான் இடை

என்பதற்கு, சமய ஞானியாய் இருந்துகொண்டு கூறும் விளக்கம் அடிகள் பெருமான் சமய உலகின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட புரட்சித்துறவி என்பதனைப் பறைசாற்றுகின்றது.

மரபு வழிப்பட்ட சமயவாதிகள் வறுமைக்கும் ஏழ்மைக்கும் காரணமான பழியை, பரம்பொருள் மீதும் விதி - ஊழின் மீதும் போட்டுத் தப்பித்துக் கொள்ளும் பொழுது, ‘ஊழையும் உப்பக்கம் காண்பர்' என்று வாழ்க்கை வழித்தடத்தில் உரை கூறிய வள்ளல் பெருமான்தாம் நம் அடிகள் பெருந்தகை!

அறிவு என்பது செய்திகளின் தொகுப்பு அல்ல! நூல்களின் இருப்பிடம் அல்ல. கற்றதைத் திரும்ப, கூறியது கூறும் கிளிப்பிள்ளை மொழி அல்ல! துன்ப நீக்கத்திற்குரிய மருந்து! நேற்றையத் துன்பத்தை இன்றைய இன்பமாக மாற்ற உதவும் கருவிதாம் அறிவு என்ற விளக்கம் புதுமையானது; உலகம் முழுமைக்கும் பொதுமையானது.

வள்ளுவ மருத்துவர் உயிரைத் தேடுகின்றார். வாழ்பவனை எல்லாம் அவர் உயிர் உள்ளவனாக ஏற்றுக் கொள்ளவில்லை. இடுகாட்டில் எரியும் பினங்கள்! நடுவீட்டில் நடை போடும் பிணங்கள் என்று கூறுகின்றார். சுவாசிப்பதாலும் இதயம் துடிப்பதாலும் உடல் இயங்குவதாலும் உயிர் இருப்பதாக ஒத்துக் கொள்வதில்லை. இயந்திரங்களும் தான் இயக்கினால் இயங்குகின்றன. கடிகாரமும் பெண்டுலம் அசைந்தால் ஓடுகின்றது. இயந்திர மனிதனும்தான் இன்று இயங்குகின்றான். இதயம் இல்லா மனிதனும் இயங்குகின்றான். எவன் இதயத்தில் அன்பு துடிக்கின்றதோ அவனே உயிர்த் துடிப்புடைய மனிதன் என்று வகைப்படுத்துவது இதுவரை உலகம் எண்ணிப் பாராத சிந்தனை ஆகும்.

நட்பு, காதல், ஒப்புரவில் இன்றைய இருபதாம் நூற்றாண்டின் நிறைவுப் பகுதியில் காணுகின்ற வாழ்க்கைப் போக்கோடு எண்ணிப் புதிய சிந்தனையைத் தந்திருப்பது எண்ணி எண்ணிப் போற்றத்தக்கது.

குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்

என்ற குறள் நெறிக்கு, பொது வாழ்வில் - பொது நன்மைக்குப் போராடும் பொழுது மான அவமானம் பார்க்கத் தேவை இல்லை என்ற விளக்கம் சிந்திக்கத்தக்கது. இந்தக் குறளுக்கு வாழும் வாழ்க்கையால் உரை சொன்னவர் பேரறிஞர் அண்ணா என்பதைச் சுட்டிக்காட்டி இருப்பது இளைய தலைமுறைக்கு வழிகாட்டுவதாகும்.

வள்ளுவம் கடவுளை நம்புகின்றது. அது ஆனும் அல்ல; பெண்ணும் அல்ல. வள்ளுவம் காட்டும் கடவுளுக்குக் கோபுரங்கள் - கோட்டைகள் இல்லை. வள்ளுவம் காட்டும் கடவுளுக்குக் கணக்கும் இல்லை; வழக்கும் இல்லை; அது பேரறிவு! தூய்மையான அறிவு! குணங்களின் திரு உரு! இன்பத்தின் திரு உரு! அன்பின் திரு உரு! அறத்தின் திரு உரு! என்ற வரிகள் உண்மையான, போலித்தனம் இல்லாத சமய உலகை அடையாளம் காட்டுகின்றது.

திருக்குறள் ஒரு சமயத்திற்காகத் தோன்றிய நூல் அன்று! அது சமயச் சார்பற்ற நூல். ஆயினும் மனித குலத்தைச் சிந்தனையில் - அறிவியலில் - வாழ்க்கையில் வழிநடத்தும் நூல். திருக்குறள் கொள்கை சமயமாக உருப்பெறுகின்றது. அறிவின் வழிப்படும் பொழுது அன்பு கருக்கொண்டு அருள் உருப்பெறுகின்றது என்ற வைர வரிகள் சமயம் உறைந்துள்ள இடத்தை நமக்கு அடையாளம் காட்டுகின்றது.

முறை செய்து காப்பாற்றும் மன்னவனுக்குச் செவிகைப்பச் சொற் பொறுக்கும் பண்பும் அறிவுறுத்தும் நல் ஆலோசகர்களும் தேவை என்கிறார். உயிர்க்குலம் துன்புறும் போரை, விரும்பாத போக்கும் எதிர்பாராத தாக்குதலும் எதிரிகளால் ஏற்படலாம். எனவே நல்ல படை பலமும் தேவை என்கிறார்.

ஆண்டவன் வரம் கொடுத்தாலும் பணப் பெட்டியின் மீது பித்துக்கொண்ட பூசாரிப் புரோகிதர்கள் எனும் நந்திகள் சமய வாழ்க்கையைச் சடங்குத் தன்மையுடையதாக மாற்ற வல்லார்க்குச் சாமரம் வீசுகின்றனர்.

‘நியாயம் வழங்க வேண்டிய அரசியல், வாய்ப்புடையார் வாயிலில் காத்துக்கிடக்கும் சேவகத் தொழிலாக மாறிவிட்டது. எங்கு நாட்டின் நீதியியலை முறைப்படுத்தி நிர்வகிக்கின்ற அரசு தோன்றவில்லையோ அங்கு அரசை ஆட்டிப்படைக்கின்ற தனியார் நிதிக் குவியல் தோன்றும்’ என்ற சிந்தனைக்குரிய வாக்கு நினைவிற்கொள்ளத்தக்கது. திருவள்ளுவ நெறிவழி மனிதகுலத்தை மேம்படுத்துவதற்கு அக வாழ்விலும் புற வாழ்விலும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கக் கூறுகளை ஆழமாகச் சிந்தித்து, அற்புதமாக நமது மகாசந்நிதானம் தமிழ்ச் சமுதாயத்திடம் ஒப்படைத்துள்ளார்கள். இந்தச் சிந்தனைப் பெட்டகத்தைச் செயலாக்க வேண்டியது நமது கடப்பாடு.

பல குழுக்களாக விரவிக்கிடக்கின்ற தமிழ் இனத்தை ஒருமைப்படுத்த திருவள்ளுவப் பெருமான் முயன்றதைப் போல, பல பொழிவுகளாக விரவிக்கிடந்த கருத்துப் பெட்டகங்களைத் தொகுப்பு நூலாக மாற்றும் முயற்சியில் மணிவாசகர் பதிப்பகம் வெற்றி கண்டுள்ளது. பதிப்புக் கலையில் முத்திரை பதித்த வித்தகர் மெய்யப்பன், இதிலும் முத்திரை பதித்துள்ளார்.

இந்நூல் எழுத்துக் கருக்கொண்ட நாள் முதல் இன்றுவரை அல்லும் பகலும் அயராது உழைத்த பெருமை நம் ஆதீனக் கவிஞர் மரு. பரமகுருவைச் சாரும். பல வகைகளில் இந்நூல் தொகுக்கும் களத்தில் கடமை ஆற்றிய இராமசாமி தமிழ்க் கல்லூரி முதல்வர் தெ. முருகசாமி, பேராசிரியர் நா. சுப்பிரமணியம், ஆதீனப் புலவர் க. கதிரேசன், எழுத்துச்செம்மல் பெரியபெருமாள் போன்றவர்களின் பணிகள் அளப்பரியன்; எண்ணி எண்ணிப் போற்றும் கடப்பாட்டுக்குரியன.

இந்நூலுக்கு அரியதொரு அணிந்துரை நல்கிய திரு. தமிழண்ணலுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

இவ்வரிய நூலின் கருத்துக்களை, சிந்தனைப் பெட்டகங்களைச் செயலாக்குவதற்கு மகாசந்நிதானம் திருநாமத்தைச் சிந்தித்துப் பயணம் செய்வோம்!

இந்நூலை வாசிப்பதோடு நிறுத்திவிடாது அருள்நெறித் தந்தையின் சிந்தனைகளைச் செயலாக்குவதே, இந்நூலுக்கு அணிவிக்கின்ற பொன் அணியாகும். அருள் நெறித் தந்தையின் கனவு, நனவாகக் கற்றவழியில் கடமை ஆற்றுவோம்.