குறட்செல்வம்/குடிமை

17. குடிமை


ஒழுக்கம் என்பது ஒன்றல்ல—இரண்டல்ல. பல கூறுகளை உடையது. எனினும் இரண்டு பெரும் பிரிவாக ஒழுக்க நெறியை வகைப்படுத்தலாம். தனி மனிதன் தன்னுடைய வாழ்க்கை வட்டத்தில், தனக்காகக் கடைப்பிடிக்கும் ஒழுக்கம் ஒன்று. பிறிதொன்று தனிமனிதன் தான் வாழும் சமுதாயத்தோடு தொடர்புகொள்ளும் முறையில் கடைப்பிடிக்கும் ஒழுக்கம்.

இந்த சமுதாய ஒழுக்கத்தைக் குடிமை ஒழுக்கம் என்று சொல்லலாம். இதையேதான் குடிமைப் பயிற்சி என்று தமிழிலும், Citizenship என்று ஆங்கிலத்திலும் வழங்குகிறார்கள்.

ஒரு நாட்டின் பெருமை அந் நாட்டுக் குடிமக்களின் சிறப்பாலேயே அமைகின்றது. குடிமக்களின் நிலையுட் சமுதாயக் கூட்டு ஒருமைப்பாட்டுணர்வு இன்றியமையாதது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமுதாய வாழ்வியல் நூலை ஆக்கித்தந்த திருவள்ளுவர் இதனைத் தெளிவாக வலியுறுத்துகின்றார். திருக்குறளின் ஒழிபியலே குடியியல் பேச எழுந்ததாகும்.

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

என்பது குறள். இக் குறளுக்கு சாதிகள் வழிப்பட்ட நச்சு நாகரிக்ச் சூழலில் வாழ்ந்த பரிமேலழகர் சாதி முறைகளுக்கு உட்பட்டு உரை எழுதுகின்றார். ஒழுக்கத்திற்கு அவர் தரும் விளக்கம் "அவரவர் வருணத்திற்கேற்ற ஒழுக்கம்" என்பது வள்ளுவத்தில் இல்லாத வருணத்தைக் கூட்டிக் கலக்க முயற்சிக்கிறார்.

ஆனால் திருவள்ளுவர் கருதிய கருத்து வேறு. மனிதன் ஒரு பெரிய சமுதாயத்தில் ஓர் உறுப்பினனாக இருக்கவேண்டுமானால், அந்தச் சமுதாயம் முழுமைக்கும் நலன்தரக் கூடியதென முடிவெடுக்கப் பெற்ற அடிப்படைச் சமுதாய ஒழுக்கங்களைக் கடைப் பிடிக்கவேண்டும். குடி என்பது நாட்டின் குடிமகன் என்பதை உணர்த்துமே தவிரச் சாதியை உணர்த்தாது.

தனிமனித ஒழுக்கங்களைப் போலவே, நாட்டு ஒழுக்கங்கள் என்றும் சில உண்டு. சிறப்பாக இன்று நம் பாரத நாட்டை எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தன்னுடைய உரிமையைப் பெற மூன்று ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்கவேண்டும். இவை இன்றையச் சூழலில் பாரதநாட்டுச் சமுதாயப் பொது ஒழுக்கம்.

இந்த நாட்டில் வாழுகின்ற எல்லா மக்களும் சாதி, இன, மொழி, மத வேறுபாடின்றி 'ஒரே குலம்' என்று கருதிப் போற்றுவது முதல் ஒழுக்கம்.

தன்னிச்சை வழி இயங்காமல், பலர் கருத்தறிந்து, பலரின் முடிபுக்கிணங்கி வாழும் மக்களாட்சிப் பண்பு இரண்டாவது ஒழுக்கம். அடுத்து இந்நாடு பொது வீடு—இவ் வீட்டிலுள்ள உடைமை அனைத்தும் எல்லோரும் அனுபவிப்பதற்கேயாம். சிலரிடத்து புளிச்ச ஏப்பமும், பலரிடத்தில் பசியேப்பமும் இருப்பது—இருக்க அனுமதிப்பது நியாயமுமல்ல—நீதியுமல்ல. ஆதலால் எல்லோரும் எல்லா நலன்களும் பெற்று அனுபவிக்கக் கூடிய சமவாய்ப்புச் சமுதாயத்தை ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது மூன்றாவது ஒழுக்கம். வாழ்வில் இம் மூன்று ஒழுக்கங்களையும் கடைப்பிடித்து ஒழுகுவோரே இந்தியக் குடியுரிமைக்கு ஏற்புடையராவர். அவர்தம் பெயரே பாரத நாட்டு மக்கள் பட்டியலில் என்றும் நின்று விளங்கும்.

அப்படி மக்கட் பண்புடன் வாழாதார் பெயர்கள் மக்கள் பட்டியலிலிருந்து விலக்கப்பெற்று, இழிதன்மையுடைய 'கால்நடை'களின் கணக்கில் சேர்க்கப்படும். இக் கருத்திலேயே 'ஒழுக்கமுடைமை, குடிமை' என்ற குறள் எழுந்தது.

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.


"https://ta.wikisource.org/w/index.php?title=குறட்செல்வம்/குடிமை&oldid=1509578" இலிருந்து மீள்விக்கப்பட்டது