குலோத்துங்க சோழனுலா


தேர்மேவு பாய்புரவிப் பாசடைச் செங்கமலம் போர்மேவு பாற்கடற் பூத்தனையோன் - பார்மேல் 1

மருளப் பசுவொன் றின் மம்மர்நோய் தீர உருளுந் திருத்தே ருரவோன் - அருளினாற் 2

பேராப் பெரும்பகை தீரப் பிறவேந்தர் ஊராக் குலிர விடையூர்ந்தோன் - சோராத் 3

துயில்காத் தரமகளிர் சோர்குழைகாத் தும்பர் எயில்காத்த நேமி யிறையோன் - வெயில்காட்டும் 4

அவ்வா னவர்கோ னொருமணி யாசனத்தில் ஒவ்வாம லேத்த வுடனிருந்தோன் - கல்வை 5

எழக்குரைக்கும் பேழ்வா யிருங்கூற்றுக் கேற்ப வழக்குரைக்குஞ் செங்கோல் வளவன் - பழக்கத்தாற் 6

போந்த புலியுடனே புல்வா யொருதுறைநீர் மாந்த வுலகாண்ட மன்னர்பிரான் - காந்தெரியில் 7

வெந்தா ருயிர்பெற் றுடல்பெற்று விண்ணாள மந்தா கினிகொணர்ந்த மன்னர்கோன் - முந்திப் 8

பொருதேர்க ளீரைந்தி னீரைவர் போர்பண் டொருதேரால் வென்ற வுரவோன் - கருதி 9

மலைபத்தும் வெட்டு முருமின் உறவோன் தலைபத்தும் வெட்டுஞ் சரத்தோன் - நிலைதப்பா 10

மீளி தலைகொண்ட தண்டத்தான் மீளிக்குக் கூளி தலைபண்டு கொண்டகோன் - நாளும் 11

பதுமக் கடவுள் படைப்படையக் காத்த முதுமக்கட் சாடி முதலோன் - பொதுமட்க 12

வாங்கொயி னேமி வரையாக மண்ணாண்டு தூங்கெயில் கொண்ட சுடர்வாளோன் - ஓங்கிய 13

மால்கடற் பள்ளி வறிதாக மண்காத்து மேல்கடல் கீழ்கடற்கு விட்டகோன் - கோல்கொன் 14

றலையெறியுங் காவேரி யாற்றுப் படைக்கு மலையெறியு மன்னர்க்கு மன்னன் - நிலையறியாத் 15

தொல்லார் கலைவலையந் தோள்வலைய முன்றிருந்த வில்லா னடுவுள்ள வெற்பெடுத்தோன் - ஒல்லைக் 16

கொலையே நுடம்படையக் கொய்தாலு மெய்தாத் துலையேறி வீற்றிருந்த தோன்றல் - தலையேறு 17

மண்கொண்ட பொன்னிக் கரைகாட்ட வாராாதாள் கண்கொண்ட சென்னிக் கரிகாலன் -எண்கொள் 18

பணம்புணர்ந்த மோலியான் கோமகளைப் பண்டு மணம்புணர்ந்த கிள்ளி வளவன் - அணங்கு 19

படுத்துப் பொறையனைப் பொய்கைக்குப் பண்டு கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோன் - அடுத்தடுத்துச் 20

சீறுஞ் செருவிற் றிருமார்பிற் றொண்ணூறும் ஆறும் படுதழும்பி னாகத்தோன் - ஏறப் 21

பிரம வரக்க னகலம் பிளந்து பரமர் திருத்தில்லை பார்த்தோன் - நரபதியர் 22

தாழமுன் சென்று மதுரைத் தமிழ்ப்பதியும் ஈழமுங் கொண்ட விகலாளி - சூழ்வும் 23

ஏறிப் பகலொன்றி லெச்சுரமும் போயுதகை நூறித்தன் றூதனை நோக்கினான் - வேறாகக் 24

கங்கா நதியுங் கடாரமுங் கைவரச் சிங்கா தனத்திருந்த செம்பியர்கோன் -எங்கோன் 25

புவிராச ராசர் மனுமுதலோர் நாளில் தவிராத சுங்கத் தவிர்த்தோன் - கவிராசர் 26

போற்றும் பெரியோ னிவன்பின்பு பூதலங்கள் ஆற்றுந் திருந்தோ ளகளங்கன் - வேற்றார் 27

விரும்பரணில் வெங்களத்தி வேட்டுக் கலிங்கப் பெரும்பரணி கொண்ட பெருமான் - தரும்புதல்வன் 28

கொற்றக் குலோத்துங்க சோழன் குவலயங்கள் முற்றப் புரக்கு முகில்வண்ணன் - பொற்றுவரை 29

இந்து மரபி லிருக்குந் திருக்குலத்தில் வந்து மனுகுலத்தை வாழ்வித்த - பைந்தளிர்க்கை 30

மாதர்ப் பிடிபெற்ற வாரணமவ் வாரணத்தின் காதற் பெயரன் கனகளபன் - யாதினும் 31

தீட்டக் கரிய திருவே திருமாலை சூட்டத் திருமகுடஞ் சூடியபின் - நாட்டு 32

முறைவிட்ட வேற்று முடிமன்னர் தத்தம் சிறைவிட் டரசருளிச் செய்து - கறைவிட்டு 33

மைஞ்ஞாசு மெட்டு மதநாக மோரொட்டும் பைஞ்ஞாசு மெட்டும் பரந்தீர - இஞ்ஞாலம் 34

தாதைக்குப் பின்பு தபனற்குந் தோலாத போதத் திமிரப் பொறைநீக்கி - மாதரில் 35

ஒக்க வபிடேகஞ் சூடு முரிமைக்கண் தக்க தலைமைத் தனித்தேவி - மிக்க 36

புவனி முழுதுடைய பொற்றொடியுந் தானும் அவனி சுரர்கருதி யார்ப்ப - நவநிதிதூய் 37

தில்லையிற் செய்த திருப்பணிகள்

ஏத்துத் தருங்கடவு ளெல்லையி லானந்தக் கூத்துக் களிகூரக் கும்பிட்டுப் - போத்தின்மேற் 38

றில்லைத் திருமன்ற முன்றிற் சிறுதெய்வத் தொல்லைக் குறும்பு தொலைத்தெடுத்து - மல்லற் 39

றசும்பு வளர்கனித் தண்பெரு நாவல் அசும்பு பசும்பொ னடுக்கிப் -பசும்பொன் 40

அலகை யிகந்த அசலகுல வச்ரப் பலகை ததும்பப் பதித்து - மலர்கவிகைக் 41

காக்குங் கடலேழின் முத்தும் வரகங்கை தூக்கு மருவியிற் சூழ்போக்கி - நோக்கம் 42

தொடுக்குஞ் சிரச்சேடன் சூடா மணிகொண் டெடுக்குந் திருத்தீப மேற்றி - அடுக்கிய 43

தூய வயிரத்தால் வாவியாய்ச் சூழ்கடந்த பாய மரகத்தாற் பாசடையாய்த் - தூய 44

பருமுத்தா வாலியாய்ப் பற்பரா கத்தால் திருமிக்க செந்தா மரையாய்ப் - பெருவர்க்க 45

நீலத்தால் வண்டி னிரையா யுரையிருந்த கோலத்தாற் கோயிற் பணி குயிற்றிச் - சூலத்தான் 46

ஆடுந் திருப்பெரும்பே ரம்பலமுங் கோபுர மாடம் பரந்தோங்கு மாளிகையும் - கூடிப் 47

பொலங்கோட்டு மாமேருப் பூதரமும் போய வலங்கோட் டிகிரியு மானத் - தலங்கொள் 48

நிலையேழு கோபுரங்க ணேரே நெருங்க மலையேழு மென்ன வகுத்துத் - தலையில் 49

மகரங்கொள் கோபுரங்கண் மாக விமானச் சிகரங்க ளாகித் திகழ - நிகரில் 50

எரிபொற் படர்பாறை யென்னலா யெங்கும் விரிபொற் றிருமுற்ற மின்னச் - சொரிபொற் 51

கடாரப் பனிநீர் கவினிக் கனபொற் றடாகங்க ளாகித் ததும்ப - விடாதுநின் 52

றற்பக லாக வனந்த சதகோடி கற்பக சாதி கதிர்கதுவப் -பொற்பூண் 53

வரமகளிர் தத்தம் பணிமுறைக்கு வந்த சுரமகளி ராகித் துறும - ஒருதான் 54

பிறக்கு மிமயப் பெருங்கடவுட் குன்றம் மறக்கும் படிசெல்வ மல்கச் - சிறக்கும் 55

இருக்காதி யெம்மறையு மெவ்வுலகு மீன்றாள் திருக்காமக் கோட்டந் திகழ்வித் - தருக்கர் 56

புனையா மணியாலும் பொன்னாலு மின்ன மனையாலோ ரோர்தேர் வகுத்து - முனைவன் 57

திருவீதி யீரண்டுந் தேவர்கோன் மூதூர்ப் பெருவீதி நாணப் பிறக்கி - வருநாளிற் 58

பொங்கார் கவிசூழ் புவனம் பதினாலும் கங்கா புரிபுகுந்து கண்டுவப்பத் - தங்கள் 59

புவனி பெறவந்த பூபாலர்க் கெல்லாம் பவனி யெழுச்சி பணித்துக் -கவினும் 60

மடமயி லொக்க மகுடங் கவித்தாள் உடனுறை பள்ளி யுணர்ந்து - தடமுகில் 61

அஞ்சன சைலத் தபிடேகஞ் செய்வதென மஞ்சன மாடி வழிமுதற் - செஞ்சடை 62

வானவன் பொற்றாள் வணங்கி மறையவர்க்குத் தான மனைத்துங் தகைபெறுத்தி - வானிற் 63

கிளைக்குஞ் சுடரிந்தர நீலக் கிரியை வளைக்கு மிளநிலா மானத் - திளைக்கும் 64

உருவுடை யாடை தவிர்த்தொரு வெள்ளைத் திருவுடை யாடை திகழ்த்தி - ஒருபுடைப் 65

பச்சை யுடைவாள் விசித்த தொருபசும்பொற் கச்சை நவரத்னக் கட்டெறிப்ப - வச்ர 66

வெருவுதர வெல்லா விரவிகளும் வீழத் திருவுதர பந்தனஞ் சேர்த்தித் - திருமார்பிற் 67

கார்க்கடன் மீதே கதிர்முத்தத் தாமங்கள் பாற்கடல் போர்த்த தெனப்பரப்பிப் - பாற்கடல் 68

வந்த வனச மகளேபோன் மற்றது தந்த கடவுண் மணிதயங்கப் - பந்தச் 69

சுரகனகத் தோள்வலையச் சூட்டுக் கவித்த உரக பணாமணி யொப்ப - விரவி 70

மகரக் குழைதோண்மேல் வந்தசைவ மேருச் சிகரச் சுடர்போற் றிகழ - நிகரில் 71

முடியின் மணிவெயிலும் முத்தக் குடையில் வடியு நிலவு மலையப் - படியில் 72

வயங்கு கடக மகுடாதி மின்னத் தயங்கு பெரும் போதி சாத்தி - முயங்கிய 73

செவ்வி நுதலிற் றிருநீற்றுப் புண்டரம் வவ்வி மகளிர் மனங்கவற்ற - நொவ்விய 74

நாவியு மான்மதச் சாந்து நறையகில் ஆவியு மாகண் டமுமளப்பத் - தீவிய 75

தோண்மாலை வாசக் கழுநீர் சுழல்சோதிக் கோண்மாலை கூசக் குளிர்கொடுப்ப - நாண்மாலை 76

வேந்தர் தொழுதிறைஞ்ச வேதிய ரேத்தெடுப்பப் போந்து புறநின்ற போர்க்களிற்றை - வேந்தரில் 77

மாக்காதல் யாதவனும் மாறழிந்த மீனவனும் வீக்காம லெங்குள்ள மெய்ம்முகிற்கும் - கோக்கடவுட் 78

கெட்டாத வச்சிரமு மெலலா வுருமேறும் வெட்டாம லெங்குள்ள வெற்பினுக்கும் - முட்டா 79

முதுவாய் வடவையு முந்நான்கு கோளும் கதுவாம லெல்லாக் கடற்கும் - பொதுவாய் 80

அபயங் கொடுக்கு மயிரா பதத்தை உபய வயக்கோட் டுருமை - விபவ 81

நிருத்தத் தருமோர் நிதிப்பொருப்பைக் கண்ணுற் றெருத்தந் திருக்கவின வேறித் - திருத்தக்க 82

பள்ளித் திருத்தொங்கற் சோலை பகல்விலக்க வெள்ளிக் கவிகை மிசையோங்க - ஒள்ளிய 83

ஒற்றை வலம்புரி யூத வதன்பின்பு மற்றை யலகில் வளைகலிப்பக் - கற்றைக் 84

கவரி யிரட்டக் கடவுண் முரசார்த் துவரி யுவாவாடி யொப்ப - அவிர்வாளும் .85

சங்குந் திகிரியுஞ் சார்ங்கமுந் தண்டமும் எங்குஞ் சுடர்விட் டிருள்களையக் - கொங்கத்து 86

விற்கொடியு மீனக் கொடியுங் கொடுவரிப் பொற்கொடி யொன்றின் புடைபோதத் - தெற்கின் 87

மலையா னிலம்வரவே வார்பூங் கருப்புச் சிலையான் வரவு தெரியத் - தொலையாது 88

வீசுந் திவலை விசும்புகூர் மங்குவால் வாசவன் வந்த வரவறியக் - கூசாதே 89

யாவ ரொழிவா ரிவன்வரவே மற்றுள்ள தேவர் வருவ ரெனத்தௌிய- யாவர்க்கும் 90

பின்னர் வழங்கு முழங்கு பெருங்களிற்றுத் தென்னர் முதலானோர் சேவிப்ப - முன்னர்ப் 91

பரவி யுலகிற் பலமண்ட லீகர் புரவி மிசைகொண்டு போத - அருவிபோல் 92

விட்டு மதம்பொழியும் வேழந் திசைவேழம் எட்டு மொழியப் புகுந்தீண்டக் - கட்டி 93

இரவிக்கு நிற்பன வேழு மொழியப் புரவிக் குலமுழுதும் போத - விரவி 94

உடைய நிதிக் கடவு ளூர்தி யொழிய அடைய நரவெள்ள மார்ப்ப - விடையே 95

எழுந்த துகளுருவ வேறியுஞ் சுண்ணம் விழுந்த துகளுருவ வீழ்ந்தும் - தொழுந்தகைய 96

விண்ணுலகு மண்ணுல காகி விளங்கவிம் மண்ணுலகு பொன்னுலகாய் மாறாட - எண்ணரிய 97

மாகதரும் மங்கலப் பாடகரும் விஞ்சையர் பூகத ராயினார் போற்பரவ - நாகர் 98

கொழுந்தெழு கற்பக சாதி குவித்துத் தொழுந்தொறும் மன்னர் சொரிய - எழுந்துள 99

கைம்மழை யென்னக் கனகப் பெயறூர்த்து மைம்மழை மாட மறுகணைந்தான் - தம்முடைய 100

சாலை தொறுந்திரள்வார் சாளரங்கள் கைக்கொள்வார் மேலை நிலாமுற்ற மேற்றொகுவார் - மாலைதாழ் 101

தெற்றி யடைய மிடைவார் சிலர்பலர் நெற்றி சுருங்க நெருங்குவார் - பொற்றொடியார் 102

மாளிகையி லேறுவார் மண்டபத்தின் மண்டுவார் சூளிகை மாடந் தொறுந்துறுவார் - நீளும் 103

இரண்டு மருங்கினு மிப்படி மொய்ப்பத் திரண்டு பலரெதிரே சென்று - புரண்ட 104

கரும்புருவ வல்வில்லுங் கண்மல ரம்பும் பெரும்புவன வெல்லை பிடிப்பச் - சுரும்பு 105

நிரைக்கு நிரைமுரல நீலக் குழாங்கன் இரைப்பின் மொகுமொகு வென்ன - விரைச்சுருள் 106

மேகா ளகங்கள் மிஞிறுவாய் வைத்தூதக் காகாள மென்னும் படிகலிப்பப் - போகத் 107

தகரங் கமழ்கதுப்பிற் றாழ்குழை தோடாழ் மகரம் பிறழ்கொடியின் வாய்ப்பு - இகலனங்கன் 108

சேனா சமுகந் தெரிப்ப வதனெதிர் சேனா பராக மெனத்திகழப் - பூநாறும் 109

கண்ண மெதிர்தூ யுடனே தொடியுந்தூஉய் வண்ண மிழப்பார் மனமிழப்பார் - மண்ணுலகில் 110

இன்னற் பகைவ னிவன்கா ணகளங்கன் மன்னர்க்கு மன்னன் மகனென்பார் - முன்னர் 111

முதுகுல மன்னர் முடிவணங்க வந்த விதுகுல நாயகிசே யென்பார் - குதுகலத்தாற் 112

கண்மருஞ் செவ்விக் கடவுட் டிசாதேவர் எண்மருங் காணு மிவனென்பார் - மண்ணவர்க்கும் 113

தேவர்க்கு நாகர்க்குந் தெய்வ முனிவர்க்கும் யாவர்க்குங் காவ லிவனென்பார் - தீவிய 114

மாதவியுஞ் செங்கழு நீரும் வலம்புரியும் தாதகியுந் கொள்ளத் தரினென்பார் - மாதை 115

ஒறுக்கும் மிதிலை யொருவில்லைத் தொல்லை இறுக்கு மவனிவ னென்பார் - மறுக்காமற் 116

சென்று கனைகட றூர்த்துத் திருக்குலத்து நின்ற பழிதுடைப்பாய் நீயென்பார் - இன்றளவும் 117

துஞ்சுந் துயிலிழந்த தண்டர் சூழற்றுளையில் நஞ்சுங் குமிழியெழு நாளென்பார் - பஞ்சவனே 118

வாடையினுந் தண்ணென்னும் மந்தா நிலமெமக்குக் கோடையினுந் தீது கொடிதென்பார் - கூடி 119

முருகுவார் கூந்தலார் மொய்த்தலர்ந்த கண்ணாற் பருகுவார் போல்வீழ்ந்து பார்ப்பார் - பொருமதனன் 120

பார்த்தானோ புங்கானு புங்கம் படப்பகழி தூர்த்தானோ யாதென்று சொல்லுகேம் - ஆர்த்தான் 121

உளைத்தான் சிலையிக் கொருகோடி கோடி வளைத்தா னரும்புலகின் மாய்த்தான் - இளைத்தார் 122

பேதை தொகு

இனையர் பலர்நிகழ வீங்கொருத்தி முத்திற் புனையுஞ் சிறுதொடிக்கைப் பூவை - கனைமுகினோர் 123

ஆடாத தோகை யலராத புண்டரிகம் பாடாத பிள்ளைப் பசுங்கிள்ளை -சூடத் 124

தளிராத சூதந் தழையாத வஞ்சி குளிராத திங்கட் குழவி - அளிகள் 125

இயங்காத தண்கா விறக்காத தேறல் வயங்காத கற்பக வல்லி- தயங்கிணர்க் 126

கூழைச் சுருண்முடிக்கக் கூடுவதுங் கூடாதாம் ஏழைப் பருவத் திளம்பேதை - சூழும் 127

நிலைத்தாய வெள்ள நெருங்க மருங்கே முலைத்தாயர் கைத்தாயர் மொய்ப்பத் - தலைத்தாமம் 128

தொக்க கவிகைக் குலோத்துங்க சோழனை மிக்க பராந்தகனை மீனவனைப் -புக்கார் 129

வணங்க வணங்கி வழுத்த வழுத்தி அணங்க வணங்கா ளகலாள் -குணங்காவல் 130

மன்னன் புனையுந் திருமுத்த மாலையை அன்னம் படிந்தாட வாறென்னும் - பின்னவன் 131

கோவைத் திருப்பள்ளித் தொங்கற் குழாங்கிளிக்கும் பூவைக்கு நல்ல பொழிலென்னும் - பாவை 132

அயிர்க்கு மிருகோட் டயிரா பதத்தை மயிற்கு மலையென்று மன்னும் - குயிற்கிளவி 133

தேன்வாழுந் தாமஞ்சூழ் தெய்வக் கவிகையை மான்வாழ மாசின் மதியென்னும் - கோனுடையப் 134

பாங்குவளை யாழிப் பார்மடந்தை தன்னுடைய பூங்குவளை மாலை புனைகென்னும் -தேங்கமலத் 135

தற்புத வல்லி யவளே பிறந்துடைய கற்பக மாலையைக் காதலிக்கும் - பொற்போர் 136

பொலம்புரி காஞ்சிப் புகழ்மகட்கே தக்க வலம்புரி மாலைக்கு மாழ்கும் - பொலன்றொடி 137

போரார வாரப் பொலன்கொடி பெற்றுடைய பேரார மாலைக்குப் பேதுறும் - நேரியன் 138

ஏந்திழை மாத ரெவர்க்கும் பொதுவாய பூந்துழாய் மாலை புனைகென்னும் - வேந்தன்முன் 139

இவ்வகை யல்ல திலங்கிழையார் மால்கூரும் அவ்வகை கூரா ளயலொருத்தி - எவ்வுலகும் 140

முற்ற முடிக்க முடிக்காம வேள்சூட்டும் கொற்ற முடியனைய கொண்டையாள் - அற்றைநான் 141

சாத்து மபிடேகத் தாரைபோற் றாழ்கின்ற கோத்த பருமுத்தக் கோவையாள் - தேத்து 142

விடம்போற் பணிகட்டு வேழங்கட் கெல்லாம் கடம்போற் கொலையூறுங் கண்ணாள் - அடங்கா 143

வயிர்ப்பான் மறலி மகளுருக்கொ லீதென் றயிர்ப்பா ரயிர்க்கு மழகாள் - உயிர்ப்பாவை 144

கொல்லிக்கு முண்டுயி ருண்மைத்ரி கூடத்துச் சொல்லிக் கிடங்குந் துணைமணிக்கும் - வல்லி 145

இதற்கு நடைவாய்த் துயிர்வாய்த்த தென்ன மதர்க்கு மொருதிரு மாது -முதற்றன் 146

பணிவாயி லாயம் பரந்தகலக் கிள்ளைக் கணிவாயின் முத்த மருளி - மணிவாயாற் 147

சொல்ல யெனக்கன்னை சொல்லாயோ நீயன்றே வல்லாய் பிறவறிய வல்லவோ - கல்லரணக் 148

கோழித் திருநகரக் கொற்றவற்கு வெற்றிப்போர் ஆழித் தடக்கை யபயற்கு - வாழியாய் 149

காக்குங் கடலேழு மாடுங் கடாரமோ ஆக்கு நதியேழு மாரமோ - தேக்கிய 150

பண்ணேழுங் கன்னாவ தங்கிசமோ பண்டளந்த மண்ணேழும் வாகு வலயமோ - தண்ணறுந் 151

தூவ னறவப் பொழிலேழுங் தொங்கலோ காவன் மலையேழுங் கந்துகமோ - ஏவலால் 152

செய்யு நலனுடைய கோளேழுந் தீபமோ பெய்யு முகிேலூம் பேரியமோ - வையகம் 153

கூறு மவையிவை யென்று குறுந்தொடி வேறு தனிவினவும் வேலைக்கண் - சீறும் 154

ஒருத னடியின் மடிய வுபய மருது பொருது வயவன் - விருதன் 155

விலையி லமுத மதன விமலை முலையின் முழுகு முருகன் - வலைய 156

கனக சயில வெயிலி கணவன் அனக னதுல னமலன் - தினகரன் 157

வாசவன் றென்னன் வருண னளநேசன் கேசவன் பூசக்ர கேயூரன் - வாசிகை 158

ஆழிப் பெருமா னபய னனபாயன் சூழிக் கடாயானை தோன்றுதலும் - தாழாது 159

சென்றா டிருமுன்பு செந்தளிர்க் கைகுவித்து நின்றா ளினிவறிதே நிற்குமே - என்றாலும் 160

கோடு கழல்கண்டல் கொண்டற்கு மாலதி ஓடு நகாதே யுடையாதே - பீடுற 161

வந்து தொடுங்குன்ற வாடைக் கிளங்கொன்றை நொந்து தொடாதே குழையாதே - செந்தமிழ்த் 162

தென்ற லெதிர்கொண்ட தேமாங் கொழுங்கன்று மன்றல் கமழாதே வாழாதே - என்றுபோய் 163

சூதள வல்ல துணைமுலை தூயகண் காதள வல்ல கடந்தனபோய் - மாதர் 164

உருவத் தளவன் றொளியோக்க மாக்கம் பருவத் தளவன்று பாவம் - தெருவத் 165

துடைவ துடையாதா முள்ள முறவோர்ந் தடைவ தடையாதா மச்சம் - கடைகடந்து 166

சேயினு நல்ல பெருமா டிருந்தடந்தோன் தோயினுந் தோய மனந்துணியும் - ஆயினும் 167

ஏந்து தடந்தோ ளிணைப்பணைப்புக் கண்டிலன் காந்து தனதடங் கண்டிலன் - பூந்தடந் 168

தேரி னகலுந் திருந்தல்குல் கண்டிலன் காரி னெகிழளகங் கண்டிலன் - மாரவேள் 169

எய்யு மொருகருப்பு வல்வில் லெடுத்தானோ கொய்யு மலரம்பு கோத்தானோ - தையன்மால் 170

மந்தா கினிக்கோன் றிருப்புருவ வார்சிலையும் செந்தா மரைக்கண்ணுஞ் செய்ததென - நொந்தார் 171

வளைத்தளிர்ச் செங்கை மடுத்தெடுத்து வாசக் கிளைத்தளிர்ப் பாயற் கிடத்தி - துளைத்தொகை 172

ஆய்க்குழ லென்றா லதுவு மவனூதும் வேய்க்குழ லென்று விளம்பியும் -தீக்கோள் 173

நிகழ்நிலா வன்று நிருபகுல துங்கன் புகழ்நிலா வென்று புகழ்ந்தும் - இகலிய 174

பல்லிய மன்று பரராச கேசரி வல்லிய மென்று மருட்டியும் - மெல்லிய 175

கல்லார மன்று கதிரோன் றிருமருமான் மெல்லார மென்று விளம்பியும் - நல்லார் 176

அருத்தி யறிவா ரவையிவை யென்று திருத்தி விடவிடாய் தீர்ந்தாள் - ஒருத்தி 177

மங்கை தொகு

உருவ வரிக்க ணொழுக வொழுகப் புருவ முடன்போதப் போத - வெருவி 178

வனமுலை விம்மி வளர வளரப் புனைதோள் புடைபோதப் போத - வினைவர் 179

அருங்கலை யல்கு லகல வகல மருங்குபோ யுள்வாங்க வாங்க - நெருங்கு 180

பரவர ராச பயங்கரன்மேல் வேட்கை வரவர வாற்றாத மங்கை - பொரவரு 181

தேமிரைக்குங் காலையின் ஞாயிற் றிளஞ்செல்வி தாமரைக்கே சாலுந் தரத்ததோ - காமர் 182

அமுத மதியத் தலர்நிலா முற்றும் குமுத நறுமுகைக்கே கூறோ - நமதுகார் 183

கானின் மடமயிற்கே காணியோ தண்ணிள வேனில் குயிற்கே விதித்ததோர் - தேனிமிர் 184

தண்டா மரையா டலைவனை யாமும்போய் கண்டாலென் னென்னுங் கடைப்பிடியாள் - பண்டை 185

ஒளியா ரணங்காத றம்மைத்தா மொன்றும் தௌியாத வாறே தௌிந்தும் - களியன்னம் 186

வாவிக் கரையில் வரநீ ரரமகளிர் சேவிக்க நின்றாடுஞ் செவ்வியாள் - காவிற் 187

புகுதில் வனதெய்வப் பூங்குழை யாயத் தொகுதி புடைபரந்து சூழ்வாள் - மிகுதே 188

னிரையர வந்தரு செய்குன்ற நீங்கா வரையர மாதரின் வாய்ப்பாள் - பெருவிலைய 189

முத்தில் விளங்கின் முளரித் தவளப்பூங் கொத்தி னணங்கனைய கோலத்தாள் - பத்திய 190

பச்சை மரகதம் பூணிற் பணைமுலைசூழ் கச்சை நிலமகள்போற் காட்சியாள் -நிச்சம் 191

உரக பணமணிகொண் டொப்பிக்கி லொப்பில் வரகமலை யன்ன வனப்பாள் - நரபதி 192

மைம்முகில் வண்ணத்து வானவன் மீனவன் கைம்முகில் மேல்வரக் கண்டதற்பின் - மொய்ம்மலர் 193

நீலமே வேய்ந்தெடுக்க நீலமே பூண்டுடுக்க நீலமே யன்றி நினையாதாள் - நீலமே 194

முன்னுடைய செங்கே ழெறிக்கு முறிக்கோலம் தன்னுடைய மாமை தழீஇக்கொள்ளப் - பின்னர் 195

நெருங்கு கழுநீரும் நீலோற் பலமும் ஒருங்கு மலர்தட மொத்தும் -மருங்கே 196

இறங்கிய கற்பக வல்லியு மேறி உறங்கிய தும்பியு மொத்தும் - பிறங்க 197

வயங்கு தளிரீனு மாங்கொம்பர் பூக்கொண் டுயங்கு கருவிளை யொத்தும் - தயங்குவாள் 198

கோலத்தார் மௌலிக் குலோத்துங்க சோழற்கு ஞாலாத்தார் ரெல்லார்க்கு நாயகற்கு - நீலத்தின் 199

காசுங் கலாபமும் மேகலையுங் காஞ்சியும் தூசுங் துகிலுங் தொடியுநான் - கூசேன் 200

வௌியே தருவேன் விரையாரத் தொங்கல் கிளியே தருமேனீ கேளாய் - அளியேநீ 201

தாது கடிகமழ் தாதகித் தாமத்தின் போது கொழுதப் புறப்படாய்- ஓதிமமே 202

எங்கள் பெருமாளை யிங்கே தரவாநீ உங்கள் பெருமா னுழைச்செல்வாய் - பைங்கழற்காற் 203

சேயை நினைந்தேகி னம்முடைய சேக்கையான் சாயன் மயிலே தலைப்படாய் - பாயும் 204

கடமானே போல்வார்க்கு நீநின்னைக் காட்டின் மடமானே தானே வருங்காண் - கடிதென்று 205

கொள்ளைகொள் காமன் கொடும்பகைக்குக் கூசித்தன் பிள்ளைக ளோடிருந்து பேசுவாள் - உள்ள 206

அலகில் குலநீல ரத்னா பரணம் விலகி வெயிலை விலக்க - உலகிற் 207

பெரிய பெருமாள் பெரும்பவனி வீதி இரிய வெதிரேற் றிழந்தாள் - வரிவளை 208

ஆயத்தா ரென்னி லளியத்தா செல்லாரும் நேயத்தா ரல்லரே நிற்பாரே - தேயத்தார் 209

மன்னனை யஞ்சாதே வாரணத்தை யஞ்சாதே மின்னனை யாளையு மீதூரா -முன்னர் 210

கடமாக்குந் தெய்வக் களிறு விரும்பும் இடமாதும் யாமென்பார் போலப் - படமாய் 211

இரைப்பச் சுரும்போ டிருளளக பாரம் நிரைத்து வனமாகி நிற்பார் - விரைப்பூண் 212

முலையாய் வளரு முரட்குவடு கொண்டு மலையாய் நெருங்க வருவார் - தொலையாத 213

பாய பருமுத்தின் மாலை பலதூக்கித் தூய வருவியாய்த் தோன்றுவார் - சாயற் 214

கொடியா யடிசுற்றிக் கொள்வார் புரக்கும் பிடியாய் நறுந்துகள் பெய்வார் - விடுதுமோ 215

யாழாய் மிடற்றால் வணக்குதும் யாமென்பார் தோழாய் வளைத்தெங்குஞ் சூழ்போவார் - ஆழிக்கைத் 216

தியாகனை மானதனைத் திக்கானை யெட்டுக்கும் பாகனையே பின்சென்று பற்றுவார் - தோகையார் 217

நற்றுகில் கொண்ட நறுந்துழாய் மார்பாநின் பொற்றுகி றந்தருளிப் போதென்பார் - மற்றிவள் 218

தன்சங்கங் கொண்ட தடந்தா மரைக்கண்ணா நின்சங்கந் தந்தருள னேரென்பார் - மின்கொள்ளும் 219

இன்றுயிற் கெல்லா மெறிபாற் கடற்கொள்ளும் நின்றுயி றந்தரு ணீயென்பார் - என்றென்று 220

மானு மயிலு மனையார் வளைத்துளைப்பத் தானூங் களிறுந் தடையுண்ட - கோனும் 221

தடுத்த கொடிக்குச் சதமடங்கு வேட்கை அடுத்த திருநோக் கருளாக் - கொடுத்த 222

திருநகை மூர றிகழ்ந்தா னணங்கும் ஒருநகை கூர்ந்தொருவா றுய்ந்தாள் - பெருநகை 223

எய்தி யனங்க னெழப்போனான் மாதரும் உய்து சிறந்தா ளுழைச் சென்றார் - நொய்திற் 224

றொடுக்கும் புறஞ்சொற் றொடாமே முலைமீ தடுக்கும் பசலை யடாமே - உடுக்கும் 225

துகிலுஞ் சரியாமே சுற்றத்தா ரெல்லாம் புகிலும் புகாமே பொராமே - அகினாறும் 226

பள்ளியிற் செல்லாள் பருவ முருகற்றோய் வள்ளியிற் சால வயங்கினாள் - ஒள்ளிழை 227

மடந்தை தொகு

பின்ன ரொருத்தி பெருமைக் கரமகளிர் முன்ன ருரைக்கும் முதன்மையாள் - சென்னியில் 228

வண்ட லிடுநாவி வார்குழற்கு மாறுடைந்து கொண்டல் சொரிமுத்தின் கொண்டையும் -பண்டுவந் 229

தேற்றுப் பணைபணைக்கு மென்றோ ளிரண்டுக்கும் தோற்றுச் சொரிமுத்தின் சூழ்தொடியும் - ஆற்றற் 230

கலம்புரி செல்வக் கழுத்திற்குத் தோற்ற வலம்புரி முத்தின் வடமும் - பொலம்பூண் 231

எதிர்க்கு முலைக்கிரிந்த திக்கயக்கோ டிட்ட கதிர்க்கு நகைமுத்தின் கச்சும் - அதிர்க்கும் 232

அடல்விடு மல்குற் பரவைக் குடைந்து கடல்விடு முத்தின் கலையும் - உடலிமேல் 233

ஏந்து மினைய விளநிலா விட்டெறிப்பப் போந்து மறுகு புகுந்தொழிந்தாள் - வேந்தனும் 234

சட்கோடி மாணிக்க மொன்றுஞ் சமந்தகமும் உட்கோடு கேயூரத் தூடெறிப்பக் - கொட்கும் 235

கடல்சேப்ப வந்த கவுத்துவ மொன்றும் அடல்சேக்கு மார்பிற் கமைய - உடலி 236

அனந்த பணாமவுலி யாயிரமு மொற்றை மறுகு திருமலர வந்தான் - குறுகும் 237

முறுகு கதிரின் முகந்திரிய வேற்று மறுகு திருமலர வந்தான் - குறுகும் 238

நடையாய வெள்ளமும் நாணிரம்பு திங்கட் குடையாய வெள்ளமுங் கூடி - அடைய 239

மதியுதய மென்று வணங்க வனச பதியுதய மென்று பணிய - துதியில் 240

ஒருவரு மொல்வா வுருவமிக் கூறும் இருவரு மெய்திய வெல்லைத் - தெருவில் 241

நெருங்க மகளிர் நிறந்திறக்க வெய்து மருங்கு வருகின்ற மாரன் - திருந்திய 242

பாய பகட்டல்குல் பாரா வதன்பரப்பிற் போய மருங்குற் புறநோக்கார் -சாயா 243

முலையின் கதிர்ப்பு முருகு கெழுதோள் நிலையின் பணைப்பு நினையாக் - கொலையால் 244

உடைக்கு முலகடைய வூடாடு கண்ணின் கடைக்கு முடிவின்மை காணாக் - கிடைக்கும் 245

பருவக் கொடிவதன பங்கே ருகத்தின் புருவக் கொடி முடியப் போகா - உருவக் 246

களிக்கும் புடவி சதகோடி கற்பம் அளிக்கும் பெருமானை யஞ்சா - குளிர்க்கும் 247

கடுங்காற் கொடுந்தேரை முட்டக் கடாவிக் கொடுங்காற் சிலையைக் குனித்து - நடுங்கா 248

முகுந்த னிவனென்று முன்பெய்த வேவிற் புகுந்த திதுவென்று போனான் - திகந்த 249

முழுதா ளபயனை முகிணகையுந் தோளும் தொழுதா ெள்ாருதானே தோற்றாள் - அழுதாள் 250

திரிந்தாள் கலைநிலையுஞ் செம்பொற் றுகிலும் சரிந்தா டுணைவியர்மேற் சாய்ந்தாள் - பரிந்தார் 251

முடைக்கை யெதிர்க்குரவை கோத்தாய் முரல்யாழ் கடைக்கை தொடுக்கை நகையோ - விடைப்பே 252

ரினந்தழுவிப் பின்னையைக் கொள்வா யிவளைத் தனந்தழுவிக் கொள்கை தவறோ - அனந்தம் 253

கருந்துகிலக் கோவியரைக் கொள்வாய் கமலை தருந்துகி னோக்கத் தகாதோ - விருந்து 254

துளவ முகிற்கிது வந்தது தூய வளவர் திருக்குலத்து வந்தோ - அளவிறந்த 255

வன்கண் ணிவளளவுங் கண்டே மடவரல் புன்க ணடியேம் பொறேமென்று - மின்கண் 256

இவையிவை சொல்லிப்போ யின்னமளி யேற்றிக் கவிரிதழ் பின்னுங் கலங்கத் - துவரின் 257

வியக்குந் துகிரியைய மேம்பட் டுலகை மயங்குந் திருவாய் மலர்க்கும் - நயக்கும் 258

பொருப்புருவத் தோளின் புதுமைக்கு நேரே திருப்புருவஞ் செய்த செயற்கும் - பரப்படையக் 259

செங்கே ழெறித்து மறிக்குந் திருநயன பங்கே ருகஞ்சூழ் படுகொலைக்கும் - அங்கே 260

தரிக்குமே தென்றலுஞ் சந்த்ரோ தயமும் பரிக்குமே கண்கள் படுமே - புரிக்குழலார் 261

பாலிருத்தி மம்மர் படப்படப் பையப்போய் மாலிருத்தி யுள்ள மயங்கினாள் - மேலொருத்தி 262

அரிவை தொகு

தாளை யரவிந்தச் சாதி தலைவணங்கத் தோளை யுரகர் தொழவிருப்பாள் - நாளை 263

வளவர் பெருமான் வரும்பவனி யென்று கிளவி விறலியர்வாய்க் கேட்டாள் - அளவுடைத் 264

தோரிரா வன்றம்ம விவ்விரா வோதிமத்தோன் பேரிரா வென்று பிணங்கினான் - பேரிரா 265

என்று விடியுங்கொ லென்றாள் விடிவளவும் நின்று சுடுங்கோ னிலவென்றான் - நின்றார் 266

அடுத்தடுத் தேந்திய திவ்யா பரணம் எடுத்தெடுத் தொப்பித் தெழுந்து - சுடர்க்கதிரோன் 267

மாலைப் பகைவியைப் போக்கி வருவித்த காலைத் துணைவியைக் கண்டெழுந்தாள் - காலையோன் 268

சேமித்த பூங்கோயி லெல்லாந் திருவென்று காமித் திகழின் கடைதிறப்ப - நேமி 269

மணக்கத் துணையன்றில் வாயலகு வாங்கித் தணக்கக் கடிகாவிற் சார்ந்தாள் - கணக்கதிர் 270

வந்து பொருவதொரு மாணிக்கச் செய்குன்றில் இந்து சிலாதலத்தி லேறினான் - குந்திக் 271

கடப்பன கன்னிமா னேக்கியு மன்னம் நடப்பன பார்த்து நயந்தும் - தொடக்கிக் 272

களிக்கு மயிற்குலங் கூத்தாடக் கண்டும் கிளக்குலம் பாட்டெடுப்பக் கேட்டும் - பளிக்குருவப் 273

பாவை மணக்கோலம் பார்த்தும் பலநகை பூவை பகரப் புறஞ்சாய்ந்தும் - கோவை 274

அளிக்களி யாட்ட மயர்ந்துங் கபோத விளிக்களி கூர்ந்து வியந்தும் - களிக்கப் 275

பழிச்சி வணங்கிப் பெருமாள் பவனி எழுச்சி முரசோர்ந் திருந்தாள் - கழற்செழியர் 276

தென்சங்கங் கொண்டான் றிருச்சங்கஞ் செய்குன்றில் தன்சங்க மாகி யெதிர்தழங்க - மின்சங்கம் 277

போல விழுந்து மெழுந்தும் புடையாயம் கோல மறுகு குறுகுவாள் - ஞாலம் 278

எடுக்கும் பணிமன்னன் மின்னென் றிறைஞ்சிக் கொடுக்குஞ் சுடிகைக் குதம்பை -கடுக்கும் 279

மயில்வேண்டுஞ் சாயல் வதனாம் புயத்து வெயில்வேண்ட வேண்டி விளைப்ப - பயில்கதிர் 280

வெல்லாது தோட்சுடிகை மேகா ளகவிருண்மேல் எல்லாப் பருதியும் போலெறிப்ப - கொல்குயத்து 281

வீழ்சோதி சூழ்கச்சு மேரு கிரிச்சிகரம் சூழ்சோதிச் சக்ரந் தொலைவிப்பக் - கேழொளிய 282

பைம்பொற் கடிதடஞ்சூழ் மேகலை பார்சூழ்ந்த செம்பொற் றிகிரி யெனத்திகழ - அம்பொற் 283

புறவுஞ் சகோரமும் பூவையு மானும் பிறவு மினமென்று பெட்ப - உறவாய் 284

அடர்ந்த பொலன்கே ழடிச்சிலம்புக் கன்னம் தொடர்ந்து மறுமாற்றஞ் சொல்ல - நடந்துபோய் 285

மானவற்குப் புக்கதுறை வல்லவற்கு வில்லவற்கு மீனவற்குச் சென்று வௌிப்பட்டாள் - தானே 286

அலகு முகமுங் குவிகையு மாகி மலரு முகளமுமானப் - பலர்காணத் 287

தேனு மமுதுங் கலந்தனைய தீங்கிளவி மானு மடைய மனங்கொடுத்தாள் - கோனும் 288

தடாதே தடுத்தாளைத் தன்கடைக்கண் சாத்தி விடாதே களிறகல விட்டான் - படாமுலைமேல் 289

ஒத்திலங்கு வேர்வந் துறைப்ப நறைக்கழுத்து நித்திலங்கால் சங்க நிதிநிகர்ந்தாள் - எத்திசையும் 290

சோர்கின்ற சூழ்தொடிக்கைச் செம்பொற் றொடிவலயம் நேர்கின்ற பற்ப நிதிநிகர்த்தாள் - தேரின் 291

அரிவை துகினெகிழ வல்கு லரவின் உரிவை விடும்படமு மொத்தாள் - சொரிதளிர் 292

மாங்கொம்ப ரென்ன வருவாள் சுரமரப் பூங்கொம்ப ரென்னப் புறங்கொடுத்தாள் - பாங்கியரும் 293

ஒற்றை யுடைவா ளொருபுடையாள் கொற்றவையேல் மற்றை யருகிவளை வைத்திலனே - பெற்றுடைய 294

வாரத் தரணியாள் வாழ்தோ ளெதிர்மற்றை ஆரத் திருத்தோ ளளித்திலனே - நேரொத்த 295

பூந்தா மரையா ளெதிரேயிப் பொற்றொடிக்கும் ஏந்தார மார்ப மிசைந்திலனே -வேந்தர்கோன் 296

அன்னங்கா ணீர்சென் றரற்றீர் கபோதங்காள் இன்ன மபயம்புக் கெய்திடீர் - நன்னுதற் 297

பாவைகாள் கொல்யானைப் பாவடிக் கீழ்ப்பணியீர் பூவைகாள் செங்கோன்மை போற்றிசெய்யீர் - தாவிப்போய்ப் 298

பேதை மடமான் பிணைகாள் வளைத்துளையீர் கோதை மதுசுரங்காள் கூப்பிடீர் - யாதெல்லை 299

என்னா விதற்கென் றிரங்கி யிலங்கிழை தன்னார்வ மாற்றெதிர் சாற்றினார் - பின்னர்ப் 300

தெரிவை தொகு

பொருவி லொருத்தி புறங்காக்கு மாதர்

இருவி லிடைநின் றிறைஞ்சித் - திருவுலாப் 301

போதும் பெருமாள் புகுது மளவுமிங்

கியாதும் பயிலா திருத்துமோ - சூதாடேம் 302

பந்தா டுதுநாம் பசும்பொற் குழைசென்று

வந்தாடு கண்ணாய் வருகென்று - சந்தாடும் 303

கொம்மை வருமுலையுந் தோளுங் குறியாதே

அம்மென் மருங்குல்பார்த் தஞ்சாதே - தம்முடனே 304

கொண்டா ரருகிருந்த பாணருங் கோடியரும்

கண்டா ரெவருங் கடுகினார் - மண்டி 305

எடுத்தா ரெடுத்தன யாவு மெலரும்

கொடுத்தா ரொருதானே கொண்டாள் - அடுத்தடுத்து 306

முன்ன மெறிபந்தின் மும்மடங்கு நான்மடங்

கின்ன மெறிய வருகென்றாள் - அன்னம் 307

அடியு மிருகையு மம்புய மென்று

படியு மொழுங்கிற் பயில -முடியும் 308

தொடையிடை போய சுழல்கூந்தற் பந்தர்க்

கிடையிடை நின்றகா லேய்ப்ப - அடைய 309

விழுந்தன பார்கடவா வாறுபோன் மேற்போய்

எழுந்தன கைகடவா வென்னக் - கொழுந்தளிரால் 310

ஏற்றுதி விண்கொளா வம்மனை யெம்மனை

ஆற்றுதி யீதிங் கரிதென்னப் - போற்றரும் 311

கையோ பதயுகமோ கண்ணோ கடுகினவை

ஐயோ வறித லரிதென்னப் - பொய்யோ 312

திலக நுதலிற் றிருவேயென் றோதி

உலகு வியப்பவென் றோத - அலகிறந்த 313

பந்தாட் டயர்ந்து பணைமுலையார் பாராட்ட

வந்தாட்டு நீராட்டு மண்டத்து - விந்தை 314

பெருமா னனபாயன் பேரிய மூன்றும்

தருமா வாரந் தழந்த - ஒருமாதர் 315

ஏந்து துகிலொன் றுடுத்தாளோ வில்லையோ

போந்து மறுகு புகுந்தொழிந்தாள் - மாந்தளிரும் 316

தாதுந் தமினிய மாலையுந் தண்கழுநீர்ப்

போதும் பிறவும் புறம்புதையா - ஓதிக்குச் 317

சென்னி யமுனைத் தரங்கமுந் தீம்புனற்

பொன்னி யறலும் புறங்கொடுப்பப் - பின்னர் 318

ஒழுங்காய் சேயரிக்கண் ணூடொட்டும் மையால்

மழுங்காது கைபோய் மதர்ப்பச் - செழுங்கழுத் 319

தொன்று புனைந்த தொருசங்க மாணிக்கம்

இன்று பயந்த தெனவிளங்க - நின்றிலங்கும் 320

உச்சக் கலனணியாத் தோளினைக் கோரிரண்டு

பச்சைப் பசுங்காம்பு பாடழிய - நிச்சம் 321

அசும்பு பொலன்கச்சி னற்றத்தே கொங்கை

விசும்பு குடிவாங்க வீங்கப் - பசுஞ்சுடர்க் 322

கோல வயிறுதர பந்தனக் கோணீங்கி

ஆவின் வளர்தளிரி னைதாகி - மேலோர் 323

இழியு மொருசாம ரேகையு முந்திச்

சுழியும் வௌிவந்து தோன்றக் - கெழிய 324

இசையின் கலாபாரம் யாப்புறா வல்குல்

திசையின் புடையடையச் செல்ல - மிசையே 325

பொறைபுரி கிம்புரி பூட்டாத் துடைதூ

சுறையு மரகத மொப்ப - அறையும் 326

சிலம்பு சுமவாத செந்தா மரைபோய்

உலம்பு குரலஞ்சா தோடக் - கலம்பல 327

தாங்கி யுலகந் தரிப்பத் தரியென்று

பாங்கிய ரெம்மருங்கும் பாராட்டப் - பூங்கே 328

ழுருவி லொளிபோ யுலகடையக் கோப்பத்

தெருவி லெதிர்கொண்டு சென்றாள் - பெருமாளும் 329

கொற்றக் குடைக்கீழ் வடமேருக் குன்றனைய

வெற்றிக் களியானை மேல்வந்தான்-பற்றி 330

இருவருந் தம்மி லெதிரெதிர் நோக்க

ஒருவ ரெனவேட்கை யொத்தார் - குருசில் 331

மறந்த கடல்கடைய வந்தாண்மே லன்பு

சிறந்த திருவுள்ளஞ் செல்லச்- சிறந்தவள் 332

ஆக னசுத்திருந்தா ளாகத் திருவுள்ளக்

கோசு னகத்திற் கொடுசென்றாள் - நாகிள 333

நல்வி மடநோக்கான் ஞாலத்தை யோரடியால்

வவ்வி யிருதோளில் வைத்தமால் - செவ்வி 334

முருகு கமழ முகந்து முகந்து

பருகு மடமகளைப் பாரா - அருகு 335

மடுத்து முயங்கி மயங்கிய தாயர்

எடுத்து மலரணைமே விட்டார் - அடுத்தொருவர் 336

நொய்யாத கற்பகப் பூமாலை கொண்டைக்கும்

நெய்யாத பொற்றுகி னீவிக்கும் - செய்யாத 337

தொங்கற் றுளைக்கோவை யல்குற்குஞ் சூழ்கனகத்

துங்கப் பணிவலையந் தோளுக்கும் - கொங்கைக்குப் 338

பொன்னிப் புகாரிற் பொலன்குழம்பும் வல்லத்திற்

கன்னிப் பனந்தோடு காதிற்கும் - சென்னி 339

அளிப்பக் கொணர்ந்தனம்யா மன்னமே யென்று

தெளிப்பச் சிறிதே தெளிந்தாள் - கிளிக்கிளவி 340

பேரிளம்பெண் தொகு

மற்றொருத்தி செந்தா மரைமலர்மே லென்னுடனே

செற்றொருத்தி வாழு மெனச்செறுவாள் - சுற்றவும் 341

தெட்டுத் தசும்பசும்பு தெங்கி னிளம்பாளை

மட்டுத் தமனிய வள்ளத்து - விட்டு 342

மறித்து வயிர மடலொன்றின் வாக்கித்

தெறித்து ஞமிறோப்பிச் செவ்வி - குறித்துக்கொண் 343

டேந்தி முகம னியம்பி யிருந்தொரு

காந்தி மதிவதனி கைக்கொடுப்ப - மாந்தி 344

குதலை சூழறிக் குயிற்குங் கிளிக்கும்

விதலை யுலகில் விளைத்து - நுதலை 345

வியரா லலங்கரியா வேந்தன் கொடுமை

அயரா வெளிவிடா வஞ்சாப்- பெயரா 346

அருகிருந்த பாணனை நோக்க அவனும்

குருசில் வருதமரங் கூறப் - பரிபுரக் 347

காலு நிதம்புமுங் கையுந் திருக்கழுத்தும்

கோலு மதாணிக் குலமெல்லாம் - மேலோன் 348

குரகத மேழு முழுகிக் குளிப்ப

மரகத சோதி வயங்கப் - புருவ 349

இடைபோய்க் குமிழின் மலர்வந் திறங்கப்

புடைபோய்க் கருவிளை பூப்ப - விடையாக 350

ஏக முருக்கு மலர விளம்பாளைப்

பூக மிடறு வரப்பொதிய - போகப் 351

பொரும்பெருங் தெங்கிளநீர் தாழ்ந்து பிறங்கப்

பரும்பொருங் காம்பு பணைப்ப - விரும்பிய 352

நறுந்துணர் மாந்தளிர் வார்ந்து நளியக்

குறுந்தொடிக் காந்தள் குலைப்பச் - செறிந்து 353

சலித்துத் தனியிள வஞ்சி தளரக்

கலித்துக் கதலி கவின - ஒலித்தே 354

அளிக்குஞ் சகோரமு மன்னமு மானும்

களிக்கு மயூர கணமும் - விளிக்கும் 355

புறவுந் தொடர்ந்துடனே போத வவையே

பிறவு மினமென்று பெட்பர் - சுறவுயர்த்தோன் 356

காலை புகுந்து காப்ப தொருபசும்பொற்

சோலை யெனவந்து தோன்றினாள் - ஞாலத்தோர் 357

தெய்வப் பெருமாளுஞ் சேவடி முன்குவித்துக்

கைவைத்து நின்றவளைக் கண்ணுற்றான் - தையல் 358

வெருவமுன் சூர்தடித்த வேளே நயக்கும்

பருவமு மார்பிற் பணைப்பும் - புருவமும் 359

செந்தா மரைக்கண்ணும் மாமேரு வைச்சிறிய

பந்தாகக் கொள்ளும் பணைத்தோளும் - உந்தியும் 360

உய்ய விருகாது மூக்கு முடுபதியை

நைய வெறிக்கு நகைநிலவும் - செய்ய 361

பவளத் துவர்வாயும் பாதாம் புயமும்

கவளக் களிற்றௌிதிற் கண்டு - குவளைக் 362

சுருநெடுங் கண்களிப்ப வுள்ளங் களிப்பப்

பருநெடுந் தோளும் பணைப்ப - ஒருநின் 363

சிலம்புகளோ ரேழுஞ் சென்றடைந்து நோலேன்

அலம்பு சுடலேழு மாடேன் - வலம்புவனம் 364

ஏழுஞ் செலவயரே னெங்கோவே நின்குடைக்கீழ்

வாழுந் திருவெனக்கு வாய்க்குமே - தாழி 365

முடைதழுவு தோளும் முலையுந் தழுவ

விடைதழுவு தாமரைக்கை வீரா - கடகரியைக் 366

கைதழுவிக் கோரத்தைக் காறழுவி நின்புலியை

மெய்தழுவிக் கொள்ள விடுவாயோ - மொய்திரைசூழ் 367

ஞால மறிக்கவும் நாயக நின்புகல்விற்

கால வுததி கலக்கவும் - சால 368

வருந்தா வகைவருந்த வாழி பெயரும்

பெருந்தேவி யார்க்குப் பெறலாம் - திருந்திய 369

குந்த மொசித்ததுவுங் கொற்றத் திருத்தோளால்

வந்த விடையேழு மாய்த்ததுவும் - முந்துறக் 370

கோவிய மாதர்க்கே யுள்ளங் குறைகிடந்த

ஆவியே மாதாக வஞ்சுமே - ஓவிய 371

சேரன் சிலையினுஞ் சீரிதே சென்றொசிய

மாரன் சிலையை வணக்காயால் - சேரன்றன் 372

முன்றிற் பனைதடிந்தாய் முட்டா திரவொறுக்கும்

அன்றிற் பனைதடித லாகாதோ - கன்றி 373

மலைக்குஞ் செழியர் படைக்கடலை மாய்த்தாய்

அலைக்குங் கடன்மாய்த் தருளாய் - மலைத்தவர் 374

தங்கள் புகழ்நிலவை மாய்த்தா யரிமரபிற்

றிங்களின் றண்ணிலவு தீராயால் - பொங்கொலிநீர்த் 375

தெம்முனை யாழ்தடிந்தா யெங்கள் செவிகவரும்

எம்முனை யாழ்தடிந்தா லென்செய்யும் - செம்மணியின் 376

செஞ்சோதி சிங்களத்து மாற்றுவாய் செக்கரின்

வெஞ்சோதி கண்டால் விலக்காயால் - வெஞ்சுமத்துக் 377

காதி விடைபண்டு காடவன் முன்றடிந்தாய்

வீதி விடைதடிய வேண்டாவோ - யாதுகொல் 378

வன்பல் வலந்துகைத்த வாட்டானை யின்றிந்த

மென்பல் லவந்துகையா மேம்பாடு - தன்பூங் 379

சுருப்புச் சிலைகொண்டு மோதுங் கழுத்திற்

சுருப்புசாண் புக்கழுந்தத் தூக்கும் - நெருப்புமிழ் 380

அப்புக் கழுவேற்று மாறாப் பெருங்கோப

வெப்புப் படுத்தெங்கண் மெய்யுருக்கும் - தப்பா 381

உடல்பிள வோட வொருதேரிடட் டூரும்

அடன்மகர போசன மாக்கும்- விடுதூதால் 382

அக்கால தண்ட மகற்றி யுலகளித்தாய்

இக்காம தண்ட மௌிதன்றே - மைக்கோல 383

வண்ணா வளர்ந்த மகரா லயமறந்த

கண்ணா வநங்கன்போர் காவாயேல் - மண்ணுலகில் 384

எப்புடி யாவா ரிளம்பிடியா ரென்றென்று

மைப்படியுங் கண்ணாள் வருந்தினாள் - இப்படியே 385

தையலார் பெற்றோகைச் சாயலார் கையகலா

மையலார் போலராய் மன்றேற - வையம் 386

பெருகுடையா நீரேழும் பாரேழும் பேணும்

ஒருகுடையான் போந்த னுலா. 387

குலோத்துங் சோழனுலா முற்றிற்று

வெண்பா தொகு

என்றினி மீள்வ தரிதி னிரணியனை

அன்றிரு கூறா யடர்த்தருளிக் -கன்றுடனே

ஆவின்பின் போன வனக னனபாயன்

மாவின்பின் போன மனம்

கட்டளைக் கலித்துறை தொகு

ஆடுங் கடைமணி நாவசை யாம லகிலமெல்லாம்

நீடுங் குடையிற் றரித்த பிரானென்பர் நித்தநித்தம்

பாடுங் கவிப்பெரு மாளொட்டக் கூத்தன் பதாம்புயத்தைச்

சூடுங் குலோத்துங்க சோழனென் றேயெமைச் சொல்லுவரே. 2

"https://ta.wikisource.org/w/index.php?title=குலோத்துங்க_சோழனுலா&oldid=11788" இலிருந்து மீள்விக்கப்பட்டது