குழந்தைச் செல்வம்/கடல்

20. கடல்

[கற்களும் பாறைகளும் அடர்ந்த கடற்கரையில், கடல் கொந்தளிப்பாயிருந்த தருணத்தில், மணலிலே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை கடலை நோக்கிக் கூறியது.]

எல்லை அறியாப் பெருங்கடலே! - நீதான்
     இரவும் உறங்காயோ?கடலே!
அல்லும் பகலும் அலைகடலே!- உனக்கு
    அலுப்பும் இலையோ? கருங்கடலே ! 1

உருண்டு திரண்டு வருங்கடலே ! -உடைந்து
    ஓடிப் போவதேன்? கடலே!
வெருண்டு மதிகெட் டாய்கடலே! பாறை
    விலகிப் போகுமோ? கடலே! 2

பொங்கு திரைகளோ?கடலே! - அவை
      புரவி நிரைதாமோ? கடலே!
எங்கும் உனதொலியோ? கடலே! - அன்றி
      இடியின் முழக்கமோ? கடலே! 3

ஓடம் எடுத்தெறியும் கடலே! - தயை
      உனக்குச் சற்றிலையோ? கடலே !
ஆடல் வீடிதனைக் கடலே!- நீயும்
      அழிப்ப தழகாமோ? கடலே! 4

மலையை வயிற்றடக்கும் கடலே ! - எண்ணில்
      மகர மீனுலவும் கடலே!
விலைகொள் முத்தளிக்கும் கடலே! சிப்பி
     விளையா டற்குதவும் கடலே! 5

மழைக்கு மூலமும் நீ, கடலே ! - அதை
     வாங்கி வைப்பதும் நீ, கடலே !
வழுத்து மகிமையெலாம், கடலே!- எவர்
     மதித்து முடிக்கவலார்,கடலே! 6

"https://ta.wikisource.org/w/index.php?title=குழந்தைச்_செல்வம்/கடல்&oldid=1672076" இலிருந்து மீள்விக்கப்பட்டது