குழந்தைச் செல்வம்/திருவள்ளுவர்

43. திருவள்ளுவர்

இம்மை மறுமையின் - பயன்கள்
     எவருமே யடையச்
செம்மை நெறியினை - விளக்கும்
     தெய்வ நூல் செய்தோன். 1

வழுக்கள் போக்க வந்தோன் - நல்ல
     வாழ்வை ஆக்க வந்தோன்;
ஒழுக்கம் காட்ட வந்தோன் - தமிழுக்கு
     உயிரை ஊட்ட வந்தோன். 2

அறிவின் எல்லை கண்டோன் - உலகை
     அளந்து கணக்கிட் டோன்;
தறியில் ஆடை நெய்தோன் - தமிழில்
     தரும நூல் நூற்றோன். 3

சாதி ஒன்றேயாம் - தமிழர்
     சமயம் ஒன்றேயாம்
நீதி ஒன்றேயாம்-என்று
     நிலை நிறுத்தி நின்றோன். 4