கேரக்டர்/‘கமிஷன்’ குப்பண்ணா

‘கமிஷன்’ குப்பண்ணா

"குப்பண்ணாவை யாராவது பார்த்தீர்களா,சார்! ஆளே அகப்பட மாட்டேங்கிறானே?"

"எந்தக் குப்பண்ணா? கமிஷன் குப்பண்ணாவா? இத்தனை நேரம் இங்கேதானே இருந்தான்? இப்பத்தான் யாரோ ஒருவர் வந்து அவனைக் காரில் அழைத்துக்கொண்டு போனார்."

குப்பண்ணாவைத் தேடிக்கொண்டு தினமும் ஆயிரம் பேர் அலைவார்கள். அவனோ ஆயிரம் இடத்தில் சுற்றிக் கொண்டிருப்பான்.

"என்ன சார் பண்றது? சப்ஜட்ஜ் வீட்டிலே கல்யாணம். வக்கீல் வீட்டுப் பையனுக்குக் காலேஜ் அட்மிஷன்; இன்னொருத்தருக்கு வீடு வேணும்; வேறொருத்தருக்குக் கார்ப்பரேஷன் லைசென்ஸ்; எல்லாத்துக்கும் இந்தக் குப்பண்ணா தான்; முடியாதுன்னா யார் விடறா?" என்பான் குப்பண்ணா.

இந்தச் சமயம், 'குப்பண்ணா! உன்னைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்!" என்று சொல்லிக்கொண்டு வருவார் ஓர் ஆசாமி.

"என்ன சங்கதி, ரிஸ்ட் வாட்ச் விஷயந்தானே? வாங்க, இந்த ஓட்டலுக்குள்ளே போய்க் காப்பி சாப்பிட்டுக் கொண்டே பேசுவோம்" என்று அவரை ஓட்டலுக்குள் அழைத்துச் சென்று, "எங்கே கடியாரத்தைக் காட்டுங்க,

பார்க்கலாம்? எத்தனை ஜ்வல்ஸ்? பழசுமாதிரி இருக்கே? என்ன விலை?" என்பான்.

"என்ன, குப்பண்ணா! புது வாட்ச் இது! பார்த்தால் தெரியல்லே? சிங்கப்பூர்லேருந்து வந்தது. போன மாசந்தான் வாங்கினேன். இருநூற்று எழுபது ரூபாய்" என்பார் அவர்.

"அடாடா ஏமாந்துட்டேளே சார்! என்கிட்டே சொல்லியிருந்தா இதே வாச்சை இருநூற்றுமுப்பது ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்திருப்பேனே! சரி போறது. இப்ப யார் சார் வாங்கப் போறா? இருநூறு ரூபாய்க்குத் தருவதானால் சொல்லுங்க, ஓர் இடத்திலே கேட்டுப் பார்க்கறேன். அதுவும் உங்களுக்கு அதிருஷ்டம் இருந்தால் விலை போகும்."

"அப்படியெல்லாம் சொல்லக் கூடாது, குப்பண்ணா, உன்கிட்டே வந்தா காரியம் நடக்கும்னுதானே காலையிலேருந்து அலையறேன்."

"சரி. வாச்சைக் கொடுங்க. சரியா மூணு மணிக்கு என்னைப் பஸ் ஸ்டாண்ட்லே வந்து பாருங்க" என்று சுடிகாரத்தை வாங்கிக்கொள்வான். இதற்குள் இன்னொரு ஆசாமி அவனைத் தேடிக்கொண்டு வருவார். "என்ன குப்பண்ணா! உன்னை எங்கெல்லாம் தேடறது? காலையிலே எட்டு மணிக்கு என்னைப் போஸ்டாபீஸ் வாசல்லே வந்து காத்துண்டிருக்கச் சொல்லிட்டு நீபாட்டுக்கு வராமலேயே இருந்துட்டயே! காத்துக் காத்து எனக்குக் காலே வலியெடுத்துப் போச்சு. சரி, நான் சொன்ன விஷயம் என்ன ஆச்சு?" என்று கேட்பார்.

அவ்வளவுதான். ரிஸ்ட் வாச் ஆசாமியை அப்படியே நடுத் தெருவில் விட்டுவிட்டுப் புதிதாக வந்தவருடன் அவன் போய்விடுவான்.

"உன்னை நம்பி முகூர்த்தத்தை வெச்சுண்டுட்டேன். இன்னும் ஒரு வேலையும் ஆகல்லே; நாளோ ஓடிண்டிருக்குது. நீயோ அதுக்கு மேலே ஓடிண்டு இருக்கே. கலியாணத்துக்குச் சத்திரம் பிடிச்சுத் தரேன்னே. கச்சேரிக்கு ஏற்பாடு

பண்றேன்னு சொன்னே. 'பந்தல்காரன், மேளக்காரன், பால்காரன், சமையல்காரன் எல்லாம் என் பொறுப்பு: நீங்க ஒண்ணுக்கும் கவலைப்படாதீங்கோ'ன்னே?"

"நீங்க ஒண்ணுக்கும் கவலைப்படாதீங்க! இதோ, இப்பவே போய்ச் சத்திரத்தை 'பிக்ஸ்' பண்ணிடறேன். கச்சேரிக்கு ஏற்பாடு பண்ணிடறேன். பாவ்காரன், சமையல்காரன், மேளக்காரனுக்கெல்லாம் அட்வான்ஸ் கொடுத்துட்டு வந்துடறேன். போதுமா? அவ்வளவுதானே? அப்புறம் என்ன? இன்னொரு சின்ன விஷயம்: மாப்பிள்ளைக்கு ரிஸ்ட்வாட்சு போடணும்னு சொல்லிண்டிருந்தீங்களே, ஒரு இடத்திலே பஸ்ட் கிளாஸ் சிங்கப்பூர் வாச் இருக்குது. வேணுமா? விலை ரொம்ப மலிவு. அவன் முந்நூறு ரூபாய் சொல்றான். வேணு மானா சொல்லுங்க. இருநூற்றைம்பதுக்கு முடிச்சுத் தரேன். முந்திக்காட்டாப் போயிடும்" என்றெல்லாம் கூறி, அந்தக் கடியாரத்தை இருநூற்றைம்பதுக்கு அவர் தலையில் கட்டி விட்டு,வாச்சின் சொந்தக்காரரிடம் இருநூற்று நாற்பதுக்குத் தான் விலை போயிற்று என்று கூறுவான். இதைத் தவிர, இரண்டு பேரிடமும் கமிஷன் வேறு தட்டிவிடுவான்.

"என்ன குப்பண்ணா, உன்னைப் பாக்கிறதே அபூர்வமாய்ப் போச்சே?"

"இன்னும் நாலு நாளைக்கு ஒண்ணும் பேசாதீங்க, அண்ணா! வக்கீல் சேஷாத்திரி வீட்டிலே கல்யாணம். மூச்சு விட நேரமில்லே. தேங்காய் வாங்கி வரக் கொத்தவால் சாவடிக்குப் போயிண்டிருக்கேன்."

"எங்க வீட்டுக் கலியாணத்திலே ஆயிரம் தேங்காம் மிஞ்சிப் போயிடுத்தே. அதை வித்துக் கொடுன்னு சொல்வியிருந்தேனே. மறந்துட்டியா?"

"வக்கீல்: வீட்டிலே பெரிய காயா இருக்கணும்னு சொன்னா, அதனாலே யோசிக்கிறேன். சரி, எதுக்கும் என்ன விலைன்னு சொல்லுங்க?"

"நூறு பதினைஞ்சு ரூபாய்ன்னு போட்டுண்டு தள்ளி விடுடா; உனக்கும் கொஞ்சம் கமிஷன் தரேன்!"

"கமிஷனா? உங்ககிட்டே அதெல்லாம் வாங்குவேனா? அவர் என்ன விலை கொடுக்கிறாரோ, அதை அப்படியே வாங்கிக் கொடுத்துடறேன். எனக்கெதுக்கு, கமிஷனும் கிமிஷனும்?"

ஆனால், வக்கீல் வீட்டில் நூறு பதினெட்டு என்று விலை சொல்லி, ஆயிரம் காய்களையும் தள்ளிவிடுவான். தேங்காய் கொடுத்தவரிடம் பதினாலு ரூபாய் என்று சொல்லி அதில் ஒரு ரூபாய் பார்த்துக்கொள்வான். கடைசியில் வக்கீல் வீட்டுக் கலியாணத்தில் மிஞ்சிய தேங்காய்களை வேறொரு கலியாண வீட்டில் கொண்டுபோய் விற்று, அதிலும் பத்து ரூபாய் கமிஷன் பார்த்துக்கொள்வான்.

"ஏண்டா குப்பண்ணா! இப்படியே எத்தனை நாளைக்குத் தான் காலம் தள்ளப் போகிறாய்? ஏதாவது சொந்த வியாபாரம் ஆரம்பிக்கக் கூடாதோ?” என்று யாராவது கேட்டால் "எனக்கு எதுக்கண்ணா அதெல்லாம்? நாலு பேருக்கு உபகாரம் பண்றதிலே இருக்கிற சந்தோஷம் வேறெதிலே உண்டு? என்பான். ஆனால், அவன் புது வியாபாரம் ஆரம்பிக்காததற்குக் காரணம் அதுவல்ல; தன்னுடைய வியாபாரத்தில் வேறு எவனாவது கமிஷன் அடித்துவிடப் போகிறானே என்பது தான் அவனுக்குள்ள பயம்!




ஆசிரியர் சாவியின் நூல்கள்

வாஷிங்டனில் திருமணம்
விசிறி வாழை
வழிப்போக்கன்
வடம் பிடிக்க வாங்க, ஜப்பானுக்கு
வேதவித்து
கேரக்டர்
பழைய கணக்கு
இங்கே போயிருக்கிறீர்களா?
ஊரார்
திருக்குறள் கதைகள்
கோமகனின் காதல்
தாய்லாந்து
உலகம் சுற்றிய மூவர்
என்னுரை (கலைஞரின் முன்னுரையுடன்)
சாவியின் கட்டுரைகள்
சாவியின் நகைச்சுவைக்கதைகள்
ஆப்பிள் பசி
நான் கண்ட நாலு நாடுகள்
நவகாளி யாத்திரை
சிவகாமியின் செல்வன்

சாவி பப்ளிகேஷன்ஸ்
8-A, 7வது பிரதான சாலை
ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28