கோடுகளும் கோலங்களும்/அத்தியாயம் 17

17


மாமா வீட்டுக்கு அவன் வந்து அழைத்துப் போவதாக இல்லை. சரோ, தன்னை வைகையில் ஏற்றி அனுப்பினால் தானே போய் விடுவதாகப் பிடிவாதம் செய்கிறாள். சரவணனுக்கு இன்னும் பரீட்சை ஆகவில்லை. தினம் தினம் காலையில் எழுந்து சண்டைதான்.

“இத பாரு சரோ, உன் மாமனுக்கு லெட்டர் எழுதிப் போடு. வயசுப் பெண்ணை நான் தனியா அனுப்ப மாட்டேன். உங்கப்பா வந்தால் கொண்டுட்டு விடச் சொல்லு!” என்று தீர்த்து விட்டு செவந்தி, வேப்பம் பிண்ணாக்கும் யூரியாவும் கலந்து வைக்கிறாள். “தார் கிடைத்தால் கொஞ்சம் கலந்து வைத்தால் மறுநாள் விசிற நல்லா வரும் அக்கா” என்று சாந்தி சொன்னாள். மீசைக்காரர் தங்களுக்கும் இவருக்கும் எங்கிருந்தோ தார் வாங்கி வந்து, கன்னியப்பனிடம் அனுப்பினார். கன்னியப்பன் இப்போது அவர்களுக்கு மிக நெருக்கம். எப்போது கரண்ட் விடுவார்களோ பார்த்துக் தண்ணீர் பாய்ச்சுவதில் அவனுக்கு ஒரு தனி அக்கறை விழுந்திருக்கிறது. வேர்க்கடைலையுடன் ஊடு பயிராக நட்ட பயிறு கொத்துக் கொத்தாக காய்ப்பிடித்திருக்கிறது. அங்கே இரவு காவல் இருப்பதை விட, காவலே தேவையிராத கொல்லை மேட்டு நெற்பயிருக்குக் காவல் என்று கழிக்கிறான்.

“ஓரெட்டு ராவுல இப்படிப் பார்த்து வாங்க...” என்று புருசனிடம் சொல்வதை விடுத்து, வீம்புடன் செவந்தியே வீட்டில் எல்லோரும் அடங்கிய பின் பயிரை இரவில் பார்க்கப் போகிறாள். இரவில் வானில் நட்சத்திரங்கள் ஒளிர, தனியாளாகப் போகும் அச்சமில்லை. வேல்ச்சாமியோ, பழனியோ தென்படுவார்கள். மடையில் நீர் பாயும் ஓசை வருகிறது. மணங்கள்... பயிரின் மணம், பசுமையின் மணம், தவளை, பாம்பு சரசரக்கும் உணர்வுகள்... எதிலும் இப்போது அச்சம் தோன்றவில்லை. ஆனால், இந்த சரோ ஒட்டாமல் போகும் பாதையும், முரண்டு பிடிவாதமும் அவளுக்கு அடிமனதில் பீதியைக் கலக்குகிறது. இளங்கன்று பயமறியாது. ஏதேனும் ஆகிவிட்டால்...? சரக்கென்று வரப்பில் கால் நழுவுகிறது.

வழுவழுவென்று காலடியில் ஏதோ போனாற்போல உடல் முழுவதும் துடிப்பாகப் பரவுகிறது.

கையில் டார்ச் விளக்கு இருக்கிறது.

அதை அழுத்துகிறாள். மஞ்சளாக ஒளி...

பயிரை மிதித்திருக்கிறாள். பயிறு பிஞ்சுக் காய்களுடன் மிதியுண்டிருக்கிறது. ஆனால் அவள் அங்கே கால் வைக்கவில்லையே? பிரமையா? அப்படித்தான் நடந்து வந்தாளா?

“யாரு? செவந்தியக்கா? நீங்க எங்க?” பின்னிருந்து வேல்ச்சாமி.

“நீங்க ஏம்மா இந்த ராவுல? தண்ணிதா நா பாக்குறனே? ஈரம் இருக்கு. இனிமே நாளக்கிக்கூட ஆறப்போடலாம். கன்னியப்பன் செத்த முன்ன வந்திட்டுப் போனா, பயிர யாரம்மா எடுத்துப் போகப் போறாங்க?”

“கன்னியப்ப வந்தானா?”

“வந்தா. அம்மா, உங்ககிட்ட ஒண்னு சொல்லவா? பட்டாளக்காரர் வூட்ல ஒரு பொண்ணிருக்குமே! அதுக்கு... அது அவுரு மகளா...?"

"மகளாமா...?"

“நாங்கேட்டா, நீங்க என்னக் கேக்குறிய திருப்பி இவன் அந்தப் பொண்ணுக்கூட ஒரு இதுவா இருக்காப்புல. பாட்டி வந்து செத்த நேர்முன்ன பிலுபிலுன்னு புடிச்சித் திட்டிச்சி. பய மவனே, உன்ன நா நாயா ஒழச்சிக் கஞ்சியூத்தி ஆளாக்கின, ஏதோ சாதி... அறுத்துப் போனது. அத்தப் போயி கட்டுவேங்குற, அறிவிருக்காடா? ஒனக்கு ராசாத்தி போல பொண்ணக் கட்டக் காத்திருக்காங்கடா. அறுவு கெட்ட பயலே? அது ஏற்கனவே கெட்டி, அத்தங்கெட்டு அறுத்துக் குளிச்சி நிக்கிது. ஒரு பொட்டப் புள்ள வேற, நீ ஏண்டா அங்க போற? இத்தினி நா நீ கன்னிப்பா, ஒழுக்கம்னு பேரெடுத்தவன். இப்ப ஏண்டா... அந்த மலத்த எடுத்துப் பூசிக்கிறே?ன்னு கெஞ்சிச்சி. அழுதிச்சி... பாவம்...”

“அவ என்ன சொன்னா?”

“த நீ என்ன எதெல்லாமோ கனாக்கண்டுட்டுப் பேசுற? எங்கே போனாலும் வந்து தொந்தரவு பண்ணுற. எனக்கு எங்கப் போகணும் எங்க வரணும்னு தெரியும். போற எடமெல்லாம் வந்திட்டு! என்று சண்டை போட்டான். கிழவி வுடல; ‘செவந்திக்கு சரோவக் கட்டி வூட்டோட வச்சிக்கணுமின்னு ஆசயிருக்குப்பா. அது புரிஞ்சி நாமும் நல்ல விதமா நடக்கணுமில்ல? என் ராசா... அந்தக் கழுநீர்ப் பான வாணாம்பா. நீ அங்க போவாதடா'... னிச்சி அதாங் கேட்ட...”

“ந்தா வேல்ச்சாமி, உனக்கு வெவகாரம் பண்ணணுமின்னா வேற எதானும் பேசு. ந்த மாதிரி ஏதானும் ரீல் வுட்டுட்டுத் திரியாத.”

இந்த வேல்ச்சாமி ஐந்து வருவடித்துக்கு முன்பே மாமன் மகளைக் கட்டினான். இவன் அம்மாவுக்கும் அவளுக்கும் மயிர்ப் பிடிச் சண்டை. கடைசியில் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்குப் போய் விட்டாள். மாமன் கட்டிட வேலை செய்பவன். இவனும் இந்த அறுபது சென்ட் பூமியை விட்டுவிட்டுத் தன்னுடன் வரவேண்டும் என்று தூபம் போடுகிறாள். இவன் அம்மா பையனைக் கொக்கி போட்டுப் பிடித்துக் கொண்டிருக்கிறாள். படிப்பு இல்லை. உழவு, அறுப்பு என்று போவதில் காசு இருக்கிறது. சுதந்திரமாகத் திரிய முடிகிறது. சாராயம் குடிப்பான். பெண்சாதிக்கும் இவனுக்கும் இது நிமித்தமே சண்டை.

“அதெல்லாம் இல்லக்கா. நா ஏ ரீல் வுடுற? நிசமாலும் சொல்ற... இவ இப்பல்லாம் வூட்டுக்கே போறதில்ல போல. கெழுவி வந்து அழுதிச்சி. அதாங் கேட்ட நீங்க சரோவக் கெட்டி வக்கிறதில எனக்கென்ன இருக்குது! ஆனா உரும இதுன்னு உங்க காதுல போட்டு வச்ச...” “இதப் பாரு, அத்தப் பத்தி எதும் பேசாத சரோ டென்த் பரிட்சை எழுதியிருக்கு. இவ, ஆறாவது கூடப் படிக்கல! கேவுறில நெய்யொழுகுதுன்னா கேப்பாருக்குமதி வாணாம்! இதுபோல யாரிட்டயும் சொல்லிட்டுத் திரியாத அவங்கப்பா காதுல வுழுந்தா, உன்னியே உண்டில்லன்னு பண்ணிடுவாங்க.”

இப்படி ஓர் ஆத்திமாக அவளையும் அறியாமல் சொற்கள் வருமென்று அவளே நினைத்ததில்லை.

ஏதோ ஓர் ஆசை மெல்லிழையாக இருந்தது உண்மைதான். ஆனால், அது நடப்பின் உண்மைகளில் ஊட்டம் பெறும் வாய்ப்புக்களே இல்லை. ஒரே மகளின் கல்யாணம். அந்த மகள் சந்தோசப்பட வேண்டாமா? புருசன், அம்மா, அப்பா...ஏன், அந்த ஒரு மாமன் பந்தலில் நின்று வரிசை வைத்துப் பெருமைப்பட வேண்டாமா? இந்தக் கன்னியப்பனுக்கு என்ன இருக்கிறது? பெற்ற தாய், தந்தை கூடத் தெரியாது. அந்தக் கிழவி மகா சூசனைக்காரி. இவள் பொங்கலன்று அவனைத் தேடிச் சென்று துணி வாங்கிக் கொடுத்ததைக் கிழவியிடம் சொல்லி இருப்பான். அவர்கள் சரிகைக் கனவுகள் காணும்படி இடம் கொடுத்தவள் அவள்தான்...

மனம் எப்படியெல்லாமோ கணக்குப் போடுகிறது.

பட்டாளக்காரர் கெட்டிக்காரர். இந்த மாதிரி ஒரு பிடிப்பை அவனுக்கு அவரே ஏற்படுத்தி இருக்கலாம். இப்போது என்ன குடி முழுகிப் போயிற்று? நல்ல சாய்கால். ஒரே பெண். பூமி சொந்தமாகலாம். இவனும் மக்கள் மனிதர் இல்லாதவன். பெண் அடக்கம். புறாப் போல் சாது. நல்ல ஜோடிதான்...

இப்படி ஒரு பக்கம் கணக்குப் போடுகிறது மனம்.

ஆனால் ஊடே கை நழுவிப் போனாற் போலும் ஆற்றாமை தவிர்க்க முடியவில்லை.

கொல்லை வழியாக அவள் வீட்டுக்கு வருகிறாள். பசு இவளை இனம் கண்டு கொள்கிறது. “லச்சுமி’ என்று தட்டிக் கொடுத்துவிட்டு உட்கதவை மெல்லத் திறந்து கொண்டு வருகிறாள். அப்பா கட்டிலில் உட்கார்ந்திருக்கிறார். டார்ச் விளக்கை ஆணியில் தொங்க விடுகிறாள்.

“ஏம்மா, என்னக் கூப்பிடக் கூடாது. தனியே நீ இருட்டில் போற? கன்னிப்பன் வாரதில்லயா இப்ப?”

“வர்ரான். எனக்குத்தான் அவனையும் ரொம்ப எதிர் பார்க்கக்கூடாதுன்னு... சரோ தூங்கிடிச்சா...?”

“அவப்பாகூட இந்நேரம் பேசிட்டிருந்திச்சி. முருகனோட மச்சினிச்சி மட்ராசில இருக்கால்ல ? அதா நாகு கூடச் சொல்லிச்சே வூடு கட்டிருக்காங்க, அவ இஸ்கூல்ல வேல செய்யிறாங்கன்னு, அவ மதுரைக்கு அக்கா வூட்டுக்குப் போறாளாம். இவெம் பாத்தாப்புல. இங்க கொண்டாந்து வுட்டுப் போடுங்க. நாங்க பத்திரமா கூட்டிப் போறம்னு சொன்னாங்களாம். கேக்கணுமா? குதிச்சிட்டிருக்கு. இப்பவே உடனே துணி மணியெல்லாம் பையில எடுத்து வச்சிட்டிருக்கா. இந்த வூட்ல ஒரு நல்ல பொட்டியோ, எதுவோ இல்லேன்னு சிலுப்பிட்டிருந்திச்சி. அதும் அவப்பா காலம வாங்கித்தாரேன்னு சொல்லியிருக்காப்பல...”

அவள் பேசவேயில்லை.

காலையில் இவளுக்கு விழிப்பு வருவதற்கு முன்பே சரோ தயாராகிவிட்டது தெரிகிறது. கிணற்றடியில் தண்ணிர் இரைத்துக் குளிக்கிறாள். அவள் அப்பாவும், குளித்தாயிற்று. இவள் பூப்போட்ட பளபளப்புப் பாவாடையும், பெரிய கை ஜாக்கெட்டும் போட்டுக் கொண்டு தாவணி அணிந்திருக்கிறாள். முன் பக்கம் சுருட்டையாக முடியை அலங்காரம் செய்து கொண்டிருக்கையில் செவந்தி பக்கத்தில் போய்ப் பார்க்கிறாள்.

“இப்ப. கால பஸ்ஸுக்குப் போறீங்களா?”

“ஆமா..இன்னைக்கு மத்தியானம் அவங்க வைகையில் போறாங்களாம். எப்படின்னாலும் டிக்கட் சமாளிச்சிக்கலான்னு சொன்னாங்களாம். ... ஒரு நல்ல பொட்டிகூட இல்ல... பையில வச்சிக் கொண்ட்டுப் போற...” “நா அப்பாகிட்டச் சொல்லுற வாங்கிக் குடுப்பாங்க. கண்ணு... அவங்ககிட்டப் புதுசாப் போற. எப்பவோ பத்து வருசம் முன்ன கலியானத்துக்குப் போனது...”

“அதெல்லாம் எனக்கு நீ சொல்லித் தர வேண்டாம். நீ நினைக்கிறாப்பல மாமா ஒண்ணும் இல்ல. அவுரு என்ன பி.இ. படிக்க வச்சிப்பாரு...”

“வச்சிக்கட்டும். எனக்குச்சந்தோசம்தா...” அவளாகவே பூவை வைத்துக் கொள்கிறாள்.

இவர்கள் வீட்டை விட்டுப் போன பின் வாசல் தெளிக்கக் கூடாது என்று நினைவு வருகிறது. சரசரவென்று சாணம் கரைத்து வாசல் தெளித்துப் பெருக்குகிறாள்.

“தெரிஞ்சிருந்தால் பால் கொஞ்சம் வச்சி காபி போட்டுக் குடுத்திருப்பே... இப்ப மாடு கறக்குமா...?”

“நேரமாச்சி. கெளம்பு. ஆறு மணிக்குப் பஸ் போயிடும். எட்டரைக்குள்ள நாம போயிடணும்... கிளம்பு...”

அப்பாவும் அம்மாவும் எழுந்து உட்காருகிறார்கள்.

வாசல் வரை வந்து அவர்கள் சைக்கிளில் ஏறிச் செல்வதைப் பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள்.

அன்று பகல் நெல்வயலுக்கு இரண்டாம் மேலுரம் வைக்க வேண்டுமே பிசிறி வைத்திருக்கும் யூரியா வேப்பம் பிண்ணாக்கை வண்டியில் போட்டு அப்பன் ஓட்டி வருகிறார். வண்டி இவர்களுடையது அல்ல. இரவல்தான்.

"வெயில் கொளுத்துகிறது சித்திரைக்கு முன்ன இப்படி இருக்கு. இந்தப் பட்டத்தில, கொல்ல மேட்டுல நெல்லு வைப்போம்னு யாரு நினைச்சாங்க!”

“நாம நினைக்கிற தெல்லாம் நடக்கிறதில்ல. மேல ஒருத்தன் இருக்கிறான். அவன் நடத்துறான். உன் சின்னாத்தாவுக்கு இதில விளைஞ்ச மொதப் பயிரில், ஒரு படிக் குடுக்கணும். அவ. புள்ளக்கி ஒரு சீலயோ, பேத்திங்களுக்கு ஒரு கவுனோ வாங்கிக் கொண்டு குடுக்கணும்...” “ஆனா நமுக்குப் போக என்ன மூஞ்சிருக்கு! அவ ரோசக்காரி. இப்ப எதினாலும் கொண்டுக் குடுத்தாத் துக்கியெறிவா. உங்கம்மா போல இல்ல. உங்கம்மா கொணம், அல்லாம் தனக்கு வேணும். ஆதாயம் பாப்பா. சொல்லு... ரோசம் கெடையாது. கலியாணத்தின் போது முருகனின் மச்சான் சம்சாரம் அதா அமெரிக்காவிலோ எங்கியோ இருக்காளே... அவ தஸ்ஸா புஸ்ஸ்-ன்னு இங்கிலீஸ்-ல பேசி, எப்படித் தூக்கியெறிஞ்சா. பந்தலுல! என்னிய வந்து, யாரோ சாமான் கொண்டாந்த ஆளுன்னு நினைச்சி, போய்யா இங்க சேர்ல உக்காரதீங்கன்னு வெரட்டினாள்ள? அப்பமே எனக்கு ஒரு நிமிசம் அங்கதங்கக் கூடாதுன்னு. அவுங்க என்ன செஞ்சாங்க? சம்பந்தின்னு பந்தல்ல மரியாதி வச்சாங்களா? சந்தனம் பூசுனாங்களா? என்ன மரியாதி செஞ்சாங்க?”

“நம்ம பைய போயிக் கால வுட்டுக்கிட்டா. பெரிய வெளக்குப் போட்டாங்க, படம் புடிச்சாங்க... நம்ம பையன் கோட்டு சூட்டு போட்டுட்டு நின்னா.... படம் புடிச்சிட்கிட்டே இருந்தாங்க. உங்கம்மாவுக்கு அங்க போயி நாமு நிக்கணும். வீடிஒ புடிச்சிக்கணும்னு ஆசதா. நம்ம புள்ள, எங்கப்பா, எங்கம்மா, தங்கச்சின்னு கூட்டி வச்சிட்டுப் படம் புடிக்கச் சொல்லணும். இவங்க படம் புடிக்கிற சமயத்துல, மாப்பிள்ளையையும் உன்னயும் காருவச்சி ஊரு பாக்கப் போங்கன்னு சொல்லிட்டான். எவ்வளவு குசும்பு! என் சகோதரி பயந்தா. அவனுக்கும் ரோசம் உண்டு. பட்டுக்கவே இல்லை. அடுத்த நாளே கிளம்புவம்னு கிளம்பிட்டா. பொண்ணக் கூட்டி வந்து வச்சிக்கிறது. மறுவூடு அழைக்கிறது. என்ன நடந்திச்சி? ரெண்டு பேரும் கலியாணமானதும் அனிமூன் போனாங்க. இங்க ரெண்டு பேரும் வந்து தலை காட்டிட்டு அன்னைக்கே போனாங்க. அப்பதா, அவஞ் சொல்றான்,அப்பா, இந்த ஸ்கூல் வேல அவங்க முப்பதாயிரம் குடுத்து எனக்கு வாங்கினாங்க. உங்ககிட்ட கேட்டா மூக்காலழுவீங்க. நம்மால முடியாதபோது ஒண்ணும் சொல்லுறதுக்கில்லங்கிறா. இவனப் படிக்க வச்சதே தப்புன்னு அப்ப தோணிச்சி. அதும் ஊரவுட்டுச் சிதம்பரம் போயிக் காலேஜூல சேத்தது அத்தவுட தப்புன்னு. பர்ஸ்ட் கிளாசில் எம். ஏ. படிச்சா. அதுக்கு மேல வாத்தியார் படிப்பு, இங்க உள்ளுர்ல ஒரு எடத்திலும் வேலை கிடைக்கலன்னா, இவ காலேஜிலேயே கொக்கி போட்டுட்டா... என்னத்த சொல்லிக்கிறது!”

“ஒரு வேள அதுக்கெல்லாம் பரிகாரமா நம்ம தங்கச்சி புள்ளையப் படிக்க வச்சி முன்னுக்குக் கொண்டு வரலாம்னு இருக்கும்பா... சரவணனை நா வுட மாட்டே... அவம் படிச்சாலும் நம்ம பூமிய வுட்டுப் போகக் கூடாது. இது பொம்புளப்புள்ள. எப்படியோ அவம் மூலமாகவேப் படிச்சி, அவம் மூலமாகவே மாப்பிள்ளையும் கட்டினா, சரித்தான். .” செவந்தி ஏதோ ஒர் ஆறுதலுக்காகச் சொல்லிக் கொள்கிறாள்.

அந்த நிலப்பரப்பு முழுவதும் யூரியா வேப்பம் பிண்னாக்குக் கலவையுடன் பொட்டாஷ் கலந்து விசிறுகிறார்கள். கன்னியப்பன் அடுத்து வயலில் இருக்கிறான்.

ஒரு புல்லைப் பல்லில் கடித்துக் கொண்டு மஞ்சள்துண்டு முண்டாசுடன் உல்லாசமாகக் களைக் கொட்டினால் சீர் செய்து கொண்டிருக்கிறான்.

“யக்கோ, மாமா வந்திருக்காரா? அதா நா வரல. மாமாவுக்கு வாலிபம் திரும்பிடிச்சி!” என்று சம்பந்தமில்லாமல் ஏதோ பேசுகிறான். லட்சுமி கீரை பிடிங்கிக் கொண்டிருக்கிறாள். ஆராக்கீரை. கிணற்றில் நீர் இறைத்துக் கைகளையும் கழுவிக் கொள்கிறாள் செவந்தி.

“யக்கோ” என்று லட்சுமி கூப்பிட்டுக் கொண்டு வருகிறாள்.

“கீரை சமைக்கிறீங்களா? நல்லா பச்சுன்னு இருக்கு...”

‘குடு.”

“எதுல வாங்குறீங்க. அந்த பாண்டு சட்டில போடட்டுமா?”

“வாணாம். இப்படிச் சீலையிலே போடு. அது தார் நாத்தம் அடிக்கும். ...” சேலை முந்தியை நீட்டி விரிக்கிறாள். அவள் கீரையை எடுத்துப் போடும்போதுதான் கையைப் பார்க்கிறாள். வலது உட்கையிலும் இடது உட்கையிலும் பச்சை குத்தியிருக்கிறாள். கோலம் போல் நீண்ட கொடி இடது கையில்... வலது கையில் ஏதோ பெயர் குத்தியிருக்கிறாள். காலம் சென்ற புருசனின் பெயரோ?

“பச்சப் பருப்புப் போட்டுக் கடஞ்சா பஷ்டாருக்கும்...”

“அப்பா... இல்ல எனக்கு அப்பான்னே வருது. மாமா இல்லையா?”

“மாமா பங்களுருக்குப் போயிருக்காங்க. அங்க மக இருக்குல்ல இங்கதா வெயில் அடிக்குதே! ஒரு அஞ்சாறு நாள் இருந்திட்டு வருவாங்க...”

“சொந்த வூடு இருக்குதா?”

“இருக்கு. ஆனா ரொம்பத் தள்ளி, ஓசூர் ரோடுல.”

“நீங்க போவீங்களா?”

“அதாம் பயிருப் போட்டிருக்கே. இதுதா நல்லாருக்கு. அங்க போனா பொழுது போவாது. அக்கா டீச்சரா இருக்கு. வேலய்க்குப் போயிடும். மாமா கடை வச்சிருக்காங்க. ரெண்டு புள்ளங்க இருக்கு... ஆச்சி, முப்பத்தஞ்சா நா ஊரியா வைக்கணுமால்ல. இவக தா பாத்துக்கறாங்க...” என்று கன்னியப்பனைச் சொல்லும் போது நாணம் முகத்தில் மின்னி மறைகிறது.