சிலம்பின் கதை/வஞ்சின மாலை

21. கண்ணகியின் சூள் உரைகள்
(வஞ்சின மாலை)

கண்ணகி சூளுரை

விழுந்து கிடந்த அரசமாதேவியை நோக்கி எழுச்சி பொங்கக் கண்ணகி சூள்உரைகள் கூறத் தொடங்கினாள். “கோவேந்தன் தேவியே! கேள். தீயவினை என்னை ஆட்டி வைக்கின்றது; எதுவும் தெரியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன்; ஆனால் எனக்குத் தெரிந்ததைக் கூறுகிறேன்; முற்பகல் செய்யின் பிற்பகல் அதற்கு விளைவு உண்டு; இது உறுதி”.

சோழ நாட்டுப் பெருமை

“கற்புடைப் பெண்கள் பிறந்த காவிரிப் பூம் பட்டினத்தில் நான் பிறந்தேன்; அவர்கள் அற்புதச் செயல்களை அறிவிப்பேன்; கேட்பாயாக! வன்னி மரத்தையும், கோயில் மடைப்பள்ளியையும் சான்றாக வைத்து மணம் செய்து கொண்டாள் ஒருத்தி; அவளுக்கு மறுப்பு வந்த போது அவள் அதைப் பொறுக்காமல் அவற்றைச்சான்று கூற அழைக்க அவையோர் முன் அவை வந்து நின்றன. அற்புதம் விளைவித்தாள் இந்தப் பொற்பு நிறைந்த குழலாள்”.

“காவிரிக் கரையில் மணல் பாவை ஒன்று அமைத்து வைத்து, இவன் உன் கணவன் ஆவான் என்று தோழி யர்கள் கூற அச்சிறுமி அப்பாவையைக் காவிரி அலைகள் வந்து அடித்துச் செல்லாமல் அணை போட்டாள்; அதனைத் காத்தாள். அந்த இடத்தை விட்டு அகலவே இல்லை; அவள் கற்பின் திண்மை அது”.

“கரிகாலன் மகள் ஆதிமந்தி வஞ்சி நாட்டு வாலிபன் ஆட்டன் அத்தியைக் காதலித்தாள்; அவனைக் காவிரி அலை அடித்துக் கொண்டு கடலுக்குச் செல்ல வெள்ளத் தோடு இவளும் கரைஒரம் ஒடிச் சென்று கடலை விளித்து என் கணவனைக் காட்டாயோ என்று கதற அதன் அலைகள் அவனைக் கொண்டு வந்து முன் நிறுத்தின. இது தமிழகக் காதல் கதை, அதை ஒதிப் பழகியது நாங்கள்”.

“திரைகடந்து பொருள் தேடச் சென்ற கணவன் வரும் வரை கரையில் கல்லாக நின்றாள் நல்லாள் ஒருத்தி; அவன் கரை வந்து சேர அவள் பழைய கல்லுருவம் கரைந்து தன் நல்லுருவம் பெற்றாள். அசையாத மனநிலை; அவள் எங்களுக்குத் திசைகாட்டியாகத் திகழ்கிறாள்.”

“மாற்றாள் குழந்தை கிணற்றில் தவறி விழ ஆற் றாளாகித் தன் குழந்தையையும் தள்ளி இரண்டு குழந்தை களையும் அக்கிணற்றில் குதித்துக் கரை சேர்த்தாள் ஒரு வீரமகள். அவள் ஆற்றல் எங்களால் போற்றத் தக்கதாக  உள்ளது; தீரச் செயலுக்கு அவள் பெயர் எடுத்த வீர மங்கையாவாள்”.

“வேற்று ஆள் ஒருவன் ஒருத்தியின் பேரழகைக் கண்டு இடம் பெயராமல் நின்றான். அவள் தன்முகத்தைக் குரங்கு முகமாகுக எனக் கூறி ஆடவர் நெஞ்சில் இடம் பெறுவதை அறவே தவிர்த்தாள். தன் கணவன் வந்ததும் தன் திரிந்தமுகத்தை மாற்றிச் சிரித்த முகத்தள் ஆயினாள். பழைய நிலையில் தன்னை அவள் மாற்றிக்கொண்டு சீர் பெற்றாள். அவள் கீர்த்தி இன்றும் பேசப்படுகிறது.”

“பழங்கதை இது, வண்டல் அயர்ந்து விளையாடிய சிறுமியர்கள் அவர்கள் வேடிக்கையாகப் பேசிக் கொண்டார் கள் ஒருத்தி சொன்னாள்,” எனக்கு ஒரு மகள் பிறந்து உனக்கும் ஒரு மகன் பிறந்து இருவரும் பெரியவர்கள் ஆவார் எனின் அவனுக்கு என் மகள் வாழ்க்கைப்படுவாள்” என்று சொல்லி விட்டாள். காலம் சென்றது; தன் மகள் மணப்பருவம் அடைந்தாள். அவளைத் தான் கூறியபடி தன் தோழியின் மகனுக்குத் தரவேண்டும் ஏற்றத் தாழ்வுகள் இருவரையும் பிரித்து விட்டன. இதை எப்படித் தன் கணவனிடம் கூறுவது? தயங்கித் தயங்கி இதனைத் தன் கணவ்னிடம் கூறினாள். அதைக் கேட்டாள் அந்த மகள்: உடனே கூறை உடுத்து மணப்பெண்கோலம் ஏற்று அந்த வீட்டு மகன் முன் மணப்பெண்ணாக நின்றாள். அவன்தான் தன் கணவன் என்று உறுதியாக நின்றாள். ஒருமுறை ஒருவனைக் கணவனாக வரித்தது என்றால் அதனை மாற்றாது உறுதியாக அவள் நடந்து கொண்டாள்; இந்தக் கதை எம் நகரத்தில் காலம் காலமாகப் பேசப்படுகிறது”.

இவ் எழுவர்தம் கதைகளையும் எழில் உற எடுத்துக் கூறி இத்தகைய கற்புடைய பெண்கள் பிறந்த நகரில் தான் பிறந்ததாகவும், தானும் அவர்கள் வழிவந்த கற்புடைய மாது என்றும் கூறினாள்.

கண்ணகி அலறல்

“யானும் ஒரு கற்புடைய பெண் என்பது உறுதி யானால் யானும் அற்புதம் நிகழ்விப்பேன்; இந்த அரசை அடியோடு அழிப்பேன். இந் நகரையும் முழுவதும் எரிப்பேன்; என் செயல் திறத்தை நீகாண்பாய்” என்று கூறி அரசவையை விட்டு அகன்றாள்.

நகருக்குள் வந்தாள். “நான்மாடக்கூடல் மகளிர்களே! வானில் வாழும் தேவர்களே! தவசிகளே! கேளுங்கள். யான் போற்றும் காதலனுக்குக் கேடு சூழ்ந்த மன்னனையும், அந் நகரையும் சீறினேன்; யான் குற்றம் செய்யவில்லை; என் செயல் பழுது ஆகாது” என்று கூறினாள். தன் இட முலையைக் கையால் திருகிப் பிய்த்து எடுத்து நகரை வலம் வந்தாள். மும் முறை சுற்றினாள்; மணம் மிக்க மதுரை மாநகர்த்தெருவில் அலமந்து தன் முலையை வட்டித்து எறிந்தாள்.

எரி நெருப்பு தெய்வ வடிவில் அவள் முன் வந்து நின்றது. நீலநிறமேனி, சிவந்தசடைமுடி, பால்போலும் வெண்பற்கள் உடைய பார்ப்பனனாக அவள் முன் வந்து தோன்றியது. பத்தினியாகிய கண்ணகி முன் நின்றது; “இந்த நகர் எரியுண்ணும்; அதற்கு ஒரு சாபம் எற்கனவே உள்ளது. யாரை விட்டு வைப்பது?” என்று கேட்டு நின்றது.

“பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப்பெண்டிர், முத்தோர், குழவி ஆகிய இவர்களை விட்டு விட்டுத் தீயவர்கள் பக்கமே போய்ச் சேர்க” என்று ஏவினாள். புகையோடு கூடிய நெருப்பு மதுரை மாநகரைச் சுற்றிக் கொண்டது; அது மூண்டு எழுந்து அழிக்கத் தொடங்கியது.

பற்றிய நெருப்பு அந்த நகரை அழித்தது; பாண்டியன், அவன் தன் உரிமை மகளிர், அவன் மாளிகை, வில்லேந்திய காவல் படைவீரர்கள், யானைகள் அனைத் தும் வெந்து ஒழிந்தன.

கற்பு இந்த அழிவினைச் செய்தது; காவல் தெய்வங் கள் அந்நகரை விட்டு வெளியேறிச் சென்றன: கற்பின் பொற்பு இவ்அற்புதத்தை விளைவித்தது.