சுழலில் மிதக்கும் தீபங்கள்/13

13

பொதுத் தொலைபேசி எப்போதும் ஒழுங்காக இயங்கிய தில்லை. இவளுக்கும் பழக்கம் இல்லை. எனினும் தபால் அலுவலகத்தை ஒட்டிய தொலைபேசி அது. சில்லறைமாற்றி வைத்துக்கொண்டு ரத்னாவின் பல்கலைக்கழக விடுதி எண்ணுக்கு அவள் சுழற்றுகிறாள். உடனே கிடைக்கவில்லை. நாலைந்து தடவைகள் முயன்றபிறகு மணி அடிக்கிறது. ‘ஹலோ...’ என்ற ஆண்குரல் கேட்கிறது. இவள் நம்பரைச் சொல்கிறாள் ‘...எஸ்.திஸ் இஸ் அபு ஸ்பிக்கிங்! ‘ஓ..நா... நான் ரத்னாவின் ஆண்டி’, கிரிஜா பேசுகிறேன். ரத்னா இல்லையா?’

‘...அவ...எம். பி. ரோட் ஹாஸ்டலுக்கு ஷிஃப்ட் பண்ணிட்டாளே? உங்க வீட்டுப்பக்கம்தான்.’

‘..எனக்கு அவசரமா. அவ ஹெல்ப் வேண்டியிருக்கு சந்திச்சுப் பேசணும். கொஞ்சம் வழி சொல்கிறீர்களா? பஸ் எந்த பஸ்னு சொன்னாத் தேவலை...’

‘ஷூர்...உங்கபக்கத்திலேந்து ட்ரிபிள் ஃபோர்...நாலு நாலு நாலு பஸ் போகும்-விமன் ஹாஸ்டல் ஸ்டாப்பிங்கே இருக்கு...நீங்க வீட்டிலேந்துதானே பேசுகிறீக?...

‘இல்ல’ பப்ளிக் பூத். உங்க கொஸ்ச்சினருக்கு நாலஞ்சு நாளுக்குள்ள விரிவா பதில் எழுதித் தரேன் ...நீங்க...முடிஞ்சா. ரத்னாவுக்கு ஃபோன் பண்ணி நான் வரேன்னு சொல்லுறீங்களா?...இங்க... கனெக்ஷன் கிடைக்கிறதே கஷ்டமா இருக்கும் போல...’

சொல்றேன். நீங்க வேற ஏதானும் ஹெல்ப் வேணும்னா சொல்லுங்கம்மா!’

‘சொல்றேன்...பின்னால. தாங்க்ஸ்...’

வாங்கியை வைத்து விட்டுச் சிறிது தொலைவு நடந்து சென்று, பஸ் நிறுத்தத்தில் நிற்கிறாள். கையில் அதிகப் பணம் இல்லை. அன்று ஐநூறு ரூபாய் மட்டுமே கைப்பையில் எடுத்துக் கொண்டிருந்தாள். இனி, ஒவ்வொரு காசையும் எண்ணிச் செலவழிக்க வேண்டும். ஆட்டோவுக்குச் செலவு செய்யக் கூட கணக்குப் பார்ப்பவளாக, பழைய கிரிஜாவாக எண்ணிக் கொள்கிறாள்.

பஸ்ஸிலேறி பெண்கள் விடுதி நிறுத்தத்தில் வந்து இறங்குகிறாள்.

உயர்ந்த சிவப்புக் கட்டிடம். மூன்றடுக்குகள் இருக்கின்றன. நான்காவது மாடிக் கட்டிட வேலை நடக்கிறது. ரத்னாவின் அறை இரண்டாம் மாடி...இருநூற்று மூன்று எண்.

அவள் வந்து கதவை இடிக்கையில், ‘ஸ்கர்ட் ப்ளெவுஸ்’ அணிந்து, வெளியே செல்லத் தயாராக இருந்த பெண்ணொருத்தி கதவைத் திறக்கிறாள்.

இவளைக் கண்டதும் முகம் மலர்ந்து, ப்ளிஸ் கம் இன்- இப்பதான் அபு ஃபோன் பண்ணிச் சொன்னார். ஜஸ்ட் நெள, ரத்னா கொஞ்சம் வெளியே போயிருக்கிறாள். இத இப்ப ஒரு மணிக்கு வந்து விடுவாள்...ப்ளீஸ்...கம்..’ வரவேற்கிறாள். ஆறுதலாக இருக்கிறது. நடுத்தெரு வெயிலிலிருந்து ஒரு நிழலுக்கு வந்திருக்கிறாள். அலமாரியில் இருந்து, ஆரஞ்சுச் சாற்றை எடுத்துக் கலக்கிக் கண்ணாடித் தம்ளருடன் நீட்டுகிறாள் அந்தப் பெண்.

ருஷிகேசத்துக் கிழவியை நினைத்துக் கொள்கிறாள். மூன்றாம் மாடியிலிருந்து ஜன்னல் வழியே துாரத்துப் பசுமை தெரிகிறது. ஒவ்வொரு துளியாக அவள் ரசித்துப் பருகுவதைக் கண்ணுற்ற அந்தப்பெண், ‘ஹாவ் ஸம் மோர்...!’ என்று இன்னொரு தம்ளர் கலந்து வைக்கிறாள். கிரிஜா புன்னகையுடன் ஏற்கிறாள். மேலே விசிறி சுழல்கிறது. இரண்டு பேர் தங்கும் அறை அது.

‘நீங்கள் அவளுடன் இந்த அறையில் இருக்கிறீர்களா..?’

‘...ஆம்...ஐ'ம் ஆனி...’ என்று அறிமுகம் செய்து கொள்கிறாள். புன்னகையுடன்.

‘நீங்கள் வெளியில் கிளம்பிட்டிருந்தீங்க போலிருக்கு...’

‘ஆமாம். நீங்கள்... செளகரியமாக இருங்கள்...இதோ பாத்ரூம்...நான் பையனிடம் சொல்லிட்டுப் போறேன். பிரேக் ஃபாஸ்ட் கொண்டு வருவான் ரத்னா லஞ்ச் அவருக்கு முன்ன வத்துருவா...ரூம் சாவி இதோ...ஒகே. வரட்டுமா?...’

கிரிஜா ஆறுதலுடன் தலையசைக்கிறாள்.

ஆனி சென்ற பிறகு சில நிமிடங்கள் கண்களை மூடிக் கொண்டு நடந்த நிகழ்ச்சிக்களை மறக்க முயலுகிறாள்.

ஒருபெண், எத்தனை வயதானாலும், என்ன நிலையானாலும், வீட்டரணை விட்டால், தறிகெட்டுப் பாலுணர்வின் உந்ததுலினால் தன்னை மாசுபடுத்திக்கொண்டு விடுவாள் என்ற தீர்மானமான, அருவருக்கத்தக்க கருத்தைக் கல்லாய் நிலைப்படுத்தியிருக்கிறார்கள். எந்த வயசானாலும், கணவன் தவிர்த்து ஒரு பெண் எந்த ஆண்மகனுடனும் பேசவோ, பழகவோ, ஒன்றாக நடக்கவோ நேர்ந்தால், அந்த ஒரே கோணப்பார்வைதான் பதிக்கப்படுகிறது. இந்தப் பார்வை ஆணைக் கட்டுப்படுத்தாது.

இத்தனை ஆண்டுகள் படித்து, பெண் பொருளாதார சுதந்திரம் பெற்றபின் உள்ள நிலையா இது? எந்த உண்மை யும் ஒரு சோதனைக் கட்டத்தில்தான் குதித்து வெளி வருகிறது. சாமு அவள்மீது வைத்திருக்கும் மதிப்பை வெளியாக்கி விட்டான். இனி அந்தக் குடும்பத்துடன் அவளால் எவ்வாறு ஒட்டிக்கொண்டு இருக்கமுடியும்?

ஆனால்...கவிதா, சாரு...

நெடுநேரம் கூரையை வெறித்துக் கொண்டு அவள் கிடக்கிறாள். பையன் அவளுடைய பிரேக்ஃபாஸ்ட் உணவைக் கொண்டுவந்து கதவைத் தட்டும் போதுதான் புதிய கரையில் ஒதுங்கியிருக்கிறோம் என்று நினைவு வருகிறது. எழுந்து கதவைத் திறக்கிறாள், டோஸ்ட், ஜாம் வெந்தமுட்டை, சூட்டுக் குப்பியில் காபி முதலியவை வைத்துக் கொண்டு வந்திருக்கிறான். முட்டை வேண்டாம் எடுத்துச் செல் என்று கூறுகிறாள். ஆனால் அவனுக்கு அது புரிய வில்லையோ என்னவோ?...தட்டை எடுத்துச்செல் என்று சொல்வதுபோல், ‘இருக்கட்டும் பின்னால் வருகிறேன்’ என்று போகிறான்.

குளியலறையில் சென்று புத்துணர்வு பெற்று வந்து சேலைமாற்றிக் கொள்கிறாள். இந்த அறையில் ஈரச்சேலை உலர்த்த வசதி கிடையாது. கூடுமான வரையிலும் அறை துப்புரவாக இருக்கிறது. இருவரும் பகிர்ந்து கொள்ள ஒரு பெரிய இரும்பு அலமாரி...பதிக்கப்பெற்றிருக்கிறது. மேசைக்கு இருபுறங்களிலும் இழுப்பறைகள் இருக்கின்றன. அலங்காரக் கண்ணாடி, நடுவில் பவுடர், நகப்பாலிஷ். போன்ற ஒப்பனை சாமான்கள் இருக்கின்றன. இன்னொரு சிறு மேசை எழுது வதற்குப் பயன்படும்; சாப்பிடுவதற்கும் பயன்படும்போலும்!

மூலையில் ஒரு மண் கூசாவும், மொட்டையான உலோகத் தம்ளரும் துப்புரவாக இருக்கின்றன. இரு கட்டில்களுக்கும் நடுவே இருக்கும் மெத்தென்ற விரிப்பு - பூ வேலை செய்த, பருத்தி ரகம்தான். உள்ளே பேர்ட்டுக் கொள்ளும் ஸிலிப்பர்கள் இரண்டு ஜோடிகளும் அந்த கட்டிலுக்குக் கீழே இருக் கின்றன. வராந்தாவைப் பார்த்த ஜன்னலின் சிறு திண்ணை யில் சில புத்தகங்கள்...ஒரு பெரிய சிப்பி ஒட்டில் சாம்பல் குவியல்...அவளுள் ஒரு குலுக்கல்.

ஸிகரெட்டையும் புடிச்சிட்டுப் போறது...!

ரோஜாமாமி கூறியது நிசம்தானா? கட்டவிழ்ந்து உண்மையில் அவள் எந்தக் கும்பலிடையே வந்திருக்கிறாள்?

இவர்களுடைய சுதந்தரம், ஆண் பெண் எந்தக் கட்டுப் பாடின்றியும் உறவு கொள்வதும், மதுவருந்துவதும், புகைப்பதும் என்ற அரண்களைத் தகர்ப்பதும்தானா. உண்மையில்’ இந்தக்குற்றச் சாட்டுக்கள், உண்மைதானா?

ஒராயிரம் கேள்விகள் மொய்க்கின்றன.

சாம்பற் குவியலிலே, வெண்மையாக சிகரெட்டின் ஒரு துண்டு போல் கிடக்கிறது...இருக்கலாம்.

வெட்ட வெளிக்காற்றில் குளிர்ச்சியும் உண்டு; தூசியும் தவிர்க்க முடியாததுதான். ரொட்டித் துண்டுகளையும் குப்பியிலிருந்த தேநீரையும் காலி செய்கிறாள். அடுக்கில் இருந்த புத்தகம் ஒன்றை எடுத்துப் பிரிக்கிறாள். ‘ஸூஸான் க்ரிஃத்ஸ் எழுத்துக்களில் இருந்து பொறுக்கு மணிகளாகத் தேர்ந்தெடுக் கப்பட்ட கட்டுரை, கவிதைகளின் தொகுப்பு. ‘விமன்ஸ் பிரஸ்’ வெளியிட்டது.

எடுத்துப் பிரித்துத் தலைப்புகளைப் பார்க்கிறாள்-

பெண்-தாய்மை-பெண்-சமயம்-

கருச்சிதைவு-பாலுணர்வுச் சிக்கல்கள்-போர்னோகிராஃபி ...இன்றைய தலைமுறையினரை ஆட்டிப் படைக்கும் பிரச்னைகளே முதன்மைப்படுத்தப்பட்டிருக்கின்றன நூலில்.

பெண்ணுரிமைக் கோணத்தில் இப்பிரச்னைகள் சமூகத்தில் எவ்வாறு ஆழ்ந்து போய் அவளைப் பாதிக்கிறதென்று ஆசிரியை பல நிரூபணங்களுடன் விவாதிக்கிறாள் என்பவை மாதிரிக்கு அங்கும் இங்குமாகப் பார்த்துப் புரிந்து கொள்கிறாள்.

அமெரிக்காவில், கருச்சிதைவுக்கு அங்கீகாரமில்லை என்ற நிலையில், கட்டுப்பாடற்ற வாழ்வில் பாதிக்கப்பெற்று சுமக்கும் பெண்ணொருத்தி தன் சுமையைக் கழிக்க அனுபவிக்கும் கொடுமைகளை விளக்கிக் கொண்டு போகிறாள்.

தொடர்ந்து படிக்க முடியவில்லை.

நெஞ்சு இறுகிப் போகிறது.

நாகரிக நாட்டிலே, நாகரிக உலகிலே, பெண் இந்த நிலையிலும் வெறும் தோலும் சதையுமாகவே. சீரழிக்கப் படுகிறாள் என்ற விவரங்களை சீரணிக்க முடியவில்லை.

ஊடே, இந்த நாட்டிலும் இந்தப் பெருநகரிலும், நமக்குத் தெரியாத எத்தனை கோரங்கள் நாகரிக அலங்காரப் பூச்சுக்கும் சுதந்தரத்துக்கும் அப்பால் ஒவ்வொரு பெண்ணையும் ஆட்டி அலைக்கழிக்குமோ என்ற அச்சம் குளிர்திரியாக ஓடுகிறது. அறையில் கடியாரமில்லை. இவள் கைக்கடியாரம் நின்று போயிருக்கிறது. இது மிகப் பழைய கடிகாரம், இவள் திருமணத்துக்கு ருக்மணி டீச்சரும் பாகீரதி டிச்சரும் பகிர்ந்து கொண்டு வாங்கிப் பரிசளித்த ‘ஸூஜா தா கடியாரம்.

மணி இன்னும் ஒன்றடித்திருக்காது?...

கதவு ஒசைப்படுகிறது.

ரத்னாவின் பேச்சுக் குரல்...

கதவைத் திறக்கிறாள். ஆர்கண்டிச் சேலை விறைத்த நிலையில் ஜோல்னாப் பையுடன் ரத்னா;

ஹலோ...

ரத்னா சிரிக்கிறாள். முதுகைத் தட்டுகிறாள். “அபு வந்திருக்கிறார். கீழே போகலாமா?”

பேசிக் கொண்டே இறங்குகிறார்கள்.

அபுவை லைப்ர்ரி சென்டரின் அருகே தற்செயலாகப் பார்த்தாளாம்.

கீழே வட்டமான பார்வையாளர் கூடத்தில் நிற்கிறான்.

“நீங்க பேசிட்டிருங்க. நான் லஞ்ச் கிடைக்குமான்னு பார்த்துட்டு வரேன்...” அவர்களை உட்கார வைத்து விட்டு அவள் உள்ளே செல்கிறாள்.

“அறிவாளியாக இருக்கக் கூடிய ஒவ்வொரு மணமான பெண்ணுக்கும், சராசரி பழைய மரபுக் குடும்ப ஆணுடன் வாழும் வாழ்க்கையில் நியாயம் கிடைப்பதில்லை என்ற கூற்று... நிரூபணமாகி விட்டது இல்ல!...”

“இப்படி ஒரு திருப்பம் நான் நிச்சயமா எதிர்பார்க்கல. எனக்கு மூச்சு முட்டும் இந்த உழைப்பு நெருக்கடியில் அலுத்து வரும் சோர்வில், ஒர் இடைவெளி வேண்டும், தெளிவு வேண்டும் என்றுதான் போனேன். அதை நான் அவர்களிடம் கேட்டுப் பெறமுடியாதுன்னு தெரிஞ்சு போனேன்...ஆனால், ஏன் என்னன்னு தெரிஞ்சிக்கக்கூட இடமில்லாமல் சேற்றை வாரி இறைத்து, வெளியே துரத்தினார்கள் என்றே சொல்லலாம்...” அவன் ஒன்றுமே பேசவில்லை...சிறிது நேரத்துக்குப் பின் ஆழ்ந்த குரலில்,

“நீங்க...நிச்சயமா முடிவா வந்துட்டீங்களா?” என்று கேட்கிறான்.

“எதுவும் புரியல..”

“எனக்கு ஒரு ஸிஸ்டர் இருந்தா. இந்த ஊரில் சுதந்திரமாகப் படித்துப்பழக வளர்க்கப்பட்ட அவளை, எங்கோ நாகப்பட்டினத்துக்குப் பக்கம், பண்ணை, வீடு, மாடு மந்தை பிஸினஸ்னு கல்யாணம் பண்ணிக் கொடுத்தார்கள். என்னை விட நாலைந்து வயசு பெரியவள். அவள் செய்த குற்றம் புருஷனைவிட அதிகம் படித்தது மட்டுமில்லாமல் அறிவாளியாகவும் இருந்ததுதான். பெண் பண்ணைச் சீமாட்டியாக இருப்பாள் என்று என் பெற்றோர் நினைத்தார்கள். அம்மை வார்த்துக் குளிர்ந்து போனான்னு, நாங்கள் சேதி வந்து போவதற்குமுன் மண்ணோடு ஆக்கிவிட்டார்கள். என்...என் ஆத்திரத்துக்குக் காரணம் நீங்கள் தெரிஞ்சுக்கணும்னு சொல்றேன்...!”

“நீங்க ஒண்ணுமே செய்யமுடியல?”

“என்ன செய்ய? பெண்களுக்குக் கல்யாணம் என்றால் வெறும் வளமையுள்ள இடம் மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆண்கள், அவள் அழகு, பணம், அடங்கிப் போகும் இயல்பு மட்டும் குறியாக்குகிறார்கள், அது இல்லை என்றால், நீதி செத்துப் போகிறது. சகோதரி, ரத்னா இப்ப ஒரு சர்வேயில் ஈடுபட்டிருக்கிறாள். இங்க, இந்த நாட்டில், இப்ப அதிகமாக வியாபாரம் ஆகும் பொருள், ஏற்றுமதியாகும் பொருள் என்ன தெரியுமா?...பெண்தான். உடல்னு உச்சரிக்கவே எனக்கு மரியாதைக் குறைவாக இருக்கிறது. நீங்கள் திடுக்கிடக் கூடிய தகவல்களை ரத்னாவிடம் கேட்பீர்கள்!”

“உங்க ரெண்டு பேருக்கும் சப்பாத்தி. சப்ஜி, தயிர் கொண்டு வரச் சொல்றேன். வாங்க, டைனிங் ஹாலிக்கு!”

ரத்னா அழைக்கிறாள்.

“வாட் அபெளட் யூ?” “நான் ஒரு மணிக்கே முடிச்சிட்டேன்...அது சரி, இப்ப என்ன செய்யப்போறீங்க கிரி?”

“அவள் தலைகுனிந்து கீழே விரலால் நெருடிய வண்ணம், மெளனமாக இருக்கிறாள்.

“என்ன நடந்தது, இன்னைக்குக் காலையில?”

கிரிஜா, சுருக்கமாக, அவன் கிளம்பிச் சென்ற நேரத்திலிருந்து, ரோஜா மாமியின் பெட்டி விவரம் உட்பட எடுத்துரைக்கிறாள்.

“பூ...ரெய்ட் தான் பேப்பரில் எல்லாம் வந்து சந்தி சிரிச்சாச்சே? ஸோ, சாமுவும் இதில் இன்வால்வ்ட்?...”

“அதென்னமோ தெரியாது. எனக்கு இப்ப, கவிதாவையும் சாருவையும் பத்தித்தான் கவலை. அந்தக் குழந்தைகளை தாயும் பிள்ளையுமா, எப்படி நடத்துவான்னு நினைக்கவே முடியல...இப்ப. இப்ப, நான் அங்கே இருந்து வெளியே வந்ததுக்குக் காரணமே, அவங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைக்கணும், ஸெல்ஃப் ரிலயன்டா, அறிவினால் மேம் பட்டவர்களாக வளர்க்கணும்னு. இந்த பாஷ், ஸ்கூல்: காலேஜ் இதுவெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. பயமா யிருக்கு...”

‘பையனைப் பற்றிக் கவலை இல்லையா, பஹன்ஜி?...’

“...அவனை விடமாட்டாங்க. ரோபோ வாங்கித் தரேன்: ரிமோட்கன்ட்ரோல் பிளேன் வாங்கித் தரேன், அம்மாவை மறந்துடுன்னு காலமே சொல்லிட்டிருந்தார். நான் ஏன் போனேன், என்மனம் எப்படி நொந்து போயிற்று என்பதை அறியத் துளியும் மனமில்லாமல், உடனே சேற்றை வாரி இறைத்து, இந்த வீட்டை விட்டுப்போ என்று துரத்துபவர்கள்...மனிதர்களா?...பிள்ளையையும் அதே போல் வளர்ப்பான் ...”

‘நீங்க இவ்வளவுக்கு ஆண் எதிர்ப்பாளராக இருக்கக் கூடாது பஹன்ஜி?’ அபுவினால் இப்போது சிரிப்பை வர வழைக்க முடியவில்லை.

‘ரத்னா...எனக்கு உடனடியா ஒருவேலை, தங்குமிடம் வேண்டும். வக்கீல் மூலமாக என் சிடுக்கைத் தீர்ப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். எனது சர்ட்டிஃபிகேட், போன்ற பேப்பர்கள், துணிமணியெல்லாம் முதலில் எடுத்திட்டு வரணும். அதுக்கெல்லாம் நீங்க ஹெல்ப் பண்ணனும்...”

“டோன்ட் வர்ரி. அதெல்லாம் பாத்துக்கறோம். நீங்க ஒருவாரம் அமைதியாக ரெஸ்ட் எடுங்க...!’

“ரெஸ்ட் எடுக்கத்தானே போறேன்! படகு கரைக்கு வந்தாச்சு...”

“சாப்பிடுங்க முதலில்...”

முற்றிலும் புதிய சூழ்நிலைக்குக் கிரிஜா தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்கிறாள்.