சூரியானந்தர்

சூரியானந்தர் சூத்திரம்

சித்தர் பாடல்கள் நூல் 27
பக்கம் 412

நூல் தொகு

1 தொகு

சீர்கொண்ட அருமறையின் பொருளாய் நின்ற

தெட்சிணா மூர்த்தியுடைப் பாதங் காப்பு

பேர்கொண்ட சூத்திரமே பதின்மூன் றுக்குள்

பிரித்துவைப்பேன் பூவழலை பெருமையெல்லாம்

நீர்கொண்ட வூசரத்தின் மகிமை தன்னை

நிசமாகச் சொல்லாமல் மறந்து விட்டார்

ஆர்கொண்ட வேணியனார் உமக்குச் சொன்னார்

ஆத்தாளும் அடியேனுக் கறைந்திட்டாளே

2 தொகு

அறைந்திட்ட வகையேது வுப்பே ஆதி

ஆகாச விந்துவினால் செனித்த பிண்டம்

மறைந்திட்ட வுப்பதுவே காரங் காரம்

மண்ணான வுப்பதுவே காரஞ் சாரம்

கறைந்திட்ட வூசருக்கு ஏற்ற வுப்பை

காணாமற் போனதினாக் கலக்க மாச்சு

இறைந்திட்ட மலசலமாய்க் காணலாகும்

இந்தவிரண் டோரிடத்தில் இருக்கும் பாரே

3 தொகு

இருக்கின்ற வுப்பினுக்கு மூலா தாரம்

இந்துவொன் றிரவியொன்று வன்னியொன்று

பெருக்கின்ற வீசனுக்குச் சூட்ச முந்தான்

பிருதிவியே தூலமெனப் பேசலாகும்

கருக்கொண்ட யோனியிலே நாலு பேதம்

கருதையிலே யெழு தோற்றம் காண லாகும்

உருக்கொண்ட சீவசெந்தும் அனேக முண்டாம்

உற்றுப்பார் அண்டபிண்டம் உண்மை தானே

4 தொகு

தானாக நின்றதுவே பாரு மாச்சு

சகலசித்துப் பிரகிருதி உயிருமாச்சு

வானாகி நீன்றதுவே சாட்சி யாகும்

மன்னுயிர் எல்லாம் சோதி மயமுமாச்சு

ஊனாகப் பிறந்தசடம் பிறவா முத்திக்

குதவியல்லோ பிரகிருதி யோனி யோனி

கோனாக நின்றகுரு உபதே சத்தாற்

குருபுகுந்தே யுப்பெடுத்துக் கொள்ளுவாயே

5 தொகு

கொள்ளுவார் முப்பூவின் முதலா மங்கம்

கூர்ந்து பாரூசரத்தைக் கொள்கிக் கொண்டு

விள்ளுவார் யோனியின் படிவிடாமல்

மேலேற்ற மேலுதவி மேவிற் றானால்

துள்ளுவா ரிந்துப்புச் சிவமு மாச்சு

துருசுப்பு பணவிடையாற் றொந்த மேற்றித்

தள்ளுவார் பிரளயமோர் கோடி காலம்

சகலசித்தும் மூலவுப்புத் தன்னி லாச்சே

6 தொகு

ஆச்சப்பா மூலவுப்புக் கஞ்சு தீட்சை

ஆதியுப்புக் கப்படியே தீட்சை யாகும்

மூச்சப்பா தசதீட்சை யார்தான் செய்வார்

மூலகுரு செய்வார்பின் னார்தான் செய்தார்

ஏச்சப்பா கொங்கணவர் தீட்சை மார்க்கம்

ஏற்றிவிட்டார் முப்பத்தி ரண்டாமென்று

பேச்சப்பா பேசினதி லாவ துண்டோ

பிண்டவுப்புக்கு ஏழுவிதம் பேச லாமே

7 தொகு

பேசுகின்ற வுப்பினுக்கு மேலே அங்கம்

பெருமையுள்ள சித்தர்கள் தாம் செய்யும் மார்க்கம்

வீசுகின்ற சூதத்தின் துறைகள் எல்லாம்

மிஞ்சவில்லை மூன்று நாலஞ்சா னாலும்

பாசையினாற் சொன்னார்கள் வெளி தோன்றாது

பாலனுக்குத் தோன்றுமிந்த நூலைப் பார்த்தால்

கூசல்மிஞ்சிப் போடுதென்று என்றன் நூலைக்

குகைக்குள் மறைத்திட்ட தனாற் கூறொண் ணாதே

8 தொகு

ஒண்ணான நூலாகும் இருநூற் றைந்தில்

ஓதிவைத்த கருத்தெரியும் இருபத் தைந்திற்

கண்ணாகும் இந்தநூல் பதின்மூன் றுக்குள்

கருவையொரு கற்பமுறை காட்டி வைத்தேன்

வண்ணானை யறியாத பேருக் கெல்லாம்

வாதியென்ற பேரேது வாத மேது

பெண்ணானின் சுரோணிதமும் விந்துங் கண்டால்

பேரான பூரணத்தின் பெருமை தானே

9 தொகு

பெருமையென்ற காயசித்தி பண்ணா விட்டாற்

பேரான அடியோடு முடியும்போச்சு

அருமையென்ற குண்டலிக்குள் வராகி பூசை

அப்பனே கண்டமதில் அங்கெண் றூணு

புருவமையத் துள்ளேவும் மென்று கும்பி

போதமென்ற மவுன வித்தை கைக்குள் ளாச்சு

தருமவித்தை பிரகிருதி மூச்சா டாது

சகத்திரத்தெண் மலர்ப்பதத்திற் சார்ந்து நில்லே

10 தொகு

நில்லாத மூலிகையாற் காய சித்தி

நிட்டை மவுனத்தாலே யோக சித்தி

கொல்லாத மூலமதில் அபான சுத்தி

கூடாமல் இருந்து விட்டால் ஏது முத்தி

சொல்லாத வீசனுப்பு மதி சூதத்திற்

சூட்டினேன் வெள்ளை யென்ற சூடன் வித்தை

எல்லாரு மிருந்த விதம் பாட மாட்டார்

இதமான சூதகத்தின் வெடியுப் பாச்சே

11 தொகு

உப்பான வெடியுப்புச் செயநீ ராலே

ஒருகோடி வித்தை யெல்லாம் ஆட லாகும்

அப்பான கல்லுப்பு நீரி னாலே

ஆடலாந் துருசினுடை அங்க மெல்லாம்

செப்பாத யோனிருது செந்நீர் மட்டாற்

சிவன்வேறு தானுண்டே இவனல் லாமல்

தப்பாமற் செய்தென்ன சவுக்கார ந்தான்

சட்டிமுதற் பவுரணையுந் தாக்கிப் பாரே

12 தொகு

தாக்கிப்பா ராகா சஞ்சருவ சாட்சி

சதாநித்தம் அந்தரமே சாடி நின்றால்

நோக்கிப்பார் வாயுலயப் படுவதற்கு

நூதனமாய் வன்னியதிற் கூட வேணும்

மூக்கிற்றான் ஓடுவது பிராண வாயு

மூலமெனும் வளையமது நகாரந் தன்னைத்

தூக்கித்தான் விட்டவர்க்கு போக மெய்தும்

சூரிய னந்தனிவை சொல்லும் நூலே

முற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=சூரியானந்தர்&oldid=1028554" இலிருந்து மீள்விக்கப்பட்டது