செயலும் செயல்திறனும்/இழப்பு கண்டு சோர்வுறாமை

19. இழப்பு கண்டு சோர்வுறாமை

1. ஊதியமும் இழப்பும்

செயலின்கண், அடுத்த தடையாக வந்து நிற்பது இழப்பு. ஊதியமற்ற செயலில் ஈடுபட ஒருவரும் விரும்பார். ஊதியம் என்பது உழைப்பால் வரும் செயல் விளைவு தொடக்கத்தில் நாம் ஒரு செயலில் ஈடுபடுத்திய முதல், நம் தொடர்ந்த முயற்சியாலும் உழைப்பாலும், ஒன்றுக்கு இரண்டாகவும், இரண்டுக்கு மூன்றாகவும் பல்கிப் பெருகி, மேன்மேலும் அச்செயலைத் திறம்படச் செய்வதற்கு வரும் இயல்பான கூடுதல் வருவாயே ஊதியமாகும். அக்கூடுதல் வருவாயை நாம் நம் வாழ்க்கைக்கும் ஓரளவு பயன்படுத்திக் கொண்டு, நாம் மேற்கொண்ட செயலை மேலும் பெருக்கவும் சிறப்புற நடைபெறவும் அவ்வருவாயின் எச்சத்தை மீண்டும் ஈடுபடுத்துவதே அச்செயலை நிலைநிறுத்துவதாகும்.

'முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை' (449) என்பதால், முதல் இல்லாது போனால் ஊதியமாக வருவதும் இல்லாமற் போவதும், முதல் குறைவாக இருந்தால், ஊதியமும் குறைவாக வருவதும் உலகியல்பு. ஊதியமே இல்லாத முதலையும் இழந்து போகிற ஒரு செயலை எவருமே செய்யார்.

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார் (463)

என்பது பேரறிஞர் கூற்று.

இனி, முதல் என்பது பொருளும், உழைப்பும் அவ்வுழைப்புக்கேற்ற அறிவும், இவ்வனைத்தையும் சிதறவும் தளரவும் செய்யாத ஊக்கமும் ஆகும். முதல் என்பது வெறும் பொருள் மட்டுமில்லை என்பதைத் தெளிவாக நாம் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். இனி, உழைப்பு என்பது நம்முடைய உழைப்பும், நம்மைச் சார்ந்த செயல்திறமுடையோர் உழைப்புமாகும். இனி, செயலறிவு இல்லையாயின் நாம் முதலீடாகப் போட்ட பொருளும், உழைப்பும் வீணாகப் போய் இழப்பையே ஏற்படுத்தும். எனவே, ஒரு செயலுக்குப் பொருளும், உழைப்பும் எவ்வளவு இன்றியமையாதனவோ அவ்வளவு

இன்றியமையாதது செயலறிவு செயலறிவில்லாமை பொருள், உழைப்பு இவை இரண்டும் இருப்பினும் இழப்பையே தரும், இனி, இழப்பை மட்டுமன்று, சில துன்பங்களையும் தரும். இதை நன்கு விளக்குகிறது. பேராசானின் கீழ்வரும் மெய்யுரை.

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல். (831)

இனி, விருப்பமற்ற, அதுபற்றிய அறிவில்லாத செயலுள் ஈடுபடுவது, அறியாமையிலும் அறியாமை யாகும் என்பார் திருவள்ளுவர். (ஒன்றைப் பற்றி அறிந்தால்தான், நமக்கு அதன்மேல் விருப்பம் ஏற்படும் என்பது மனவியல்)

பேதைமையு ளெல்லாம் பேதமை காதன்மை
கையல்ல தன்கண் செயல் (832)

இனி, 'செயலறிவில்லாமல், பேதைத் தனமாக ஒருவன் ஒரு செயலில் ஈடுபடுவானானால், அவனும் கெடுவான்; அவன் மேற்கொண்ட அச்செயலையும் கெடுத்துவிடுவான்' என்பது அவர் எச்சரிக்கை

பொய்படும் ஒன்றே புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின் (836)

இதில் பொய்படும் என்பது உருப்படியாகாமல் பொய்யாய்ப் போய்விடும் என்பதையும், புனைபூணும் என்பது, 'அச்செயல் நான் இதைச் செய்கிறேன் என்னும் வெறும் ஆரவாரத்தையே விளைவிக்குமேயன்றிப் பயனை அல்லது ஊதியத்தை விளைவியாது' என்பதையும் உணர்த்தும்.

முதலும் உழைப்பும் ஊதியமாக அல்லது வருவாயாக மாற்றம் பெறுதல் வேண்டும். அல்லாக்கால் அந்த முதலாலும் பயனில்லை; உழைப்பாலும் விளைவில்லை என்றே பொருளாகும்.

இனி, செய்கின்ற செயலுள் ஒரொவொருகால் காலநிலை, விலை ஏற்ற இறக்க நிலை, போட்டிகள், பொருள் உருவாக்க மிகுதி, கருவிச் சேதம், ஊழியர் ஒத்துழைப்புக் குறைவு, உழைப்புக் குறைவு முதலியவற்றால் நாம் எதிர்பார்த்த ஊதியம் வராமற் போகலாம்; அல்லது இழப்பு ஏற்படலாம். இவ்வெதிர்பாராத நிலைக்காக நாம் மனம் சோர்ந்துவிட வேண்டியதில்லை என்பதே இக்கட்டுரைப்பகுதியின் அறிவுறுத்தமாகும்.

மேலும், ஊதியம் என்பதும், இழப்பு என்பதும் பொருளளவாக மட்டுமே கணிக்கப் பெறும் கூறுகள் அல்ல.

2. பொருள் வருவாய்க் கணக்கீடு

பொருள் வருவாய்க்காக மட்டுமே ஒரு செயல் அல்லது வினை தொடங்கப் பெற்றதால், அச்செயலில் நாம் கணக்கிட்டு எதிர்பார்த்த பொருள் வராமற் போனால், அது பொருளிழப்பாகும். அவ்வாறின்றி, நாம் எதிர்பார்த்த அல்லது எதிர்பார்ப்புக்கு மேல் அல்லது சிறிது குறைவாக வருவாய் வருமானால் அது பொருளுதியமாகும்.

பொருள் வருவாயின்றி, ஒரு கொள்கைப் பரப்புக்காக ஓர் இலக்கு அல்லது நோக்கத்திற்காக, நாம் ஒரு செயலில் ஈடுபடுவதாக வைத்துக் கொள்வோம். அக்கால் ஊதியமும் இழப்பும், பொருளை மட்டுமே அடிப்படையாக வைத்துக் கணக்கிடப் பெறுதல் வேண்டும். அஃதாவது ஊதியம் என்பது பொருட்பயனாகவும் இருக்கலாம்; செயல் பயனாகவும் இருக்கலாம். அதேபோல் இழப்பு என்பதும் பொருளிழப்பாகவும் இருக்கலாம்; அல்லது செயலிழப்பாகவும் இருக்கலாம். இவ்விடத்தில் இரண்டு நிலைகளை வைத்தே ஊதியமும் இழப்பும் கணக்கிடப் பெறுதல் வேண்டும், அக்கால், கீழ்வரும் சமன்பாடுகளின்படி ஊதிய இழப்பு கணக்கிடப்பெறும்.

1. பொருள் + உழைப்பு = வருவாய் முதல்>(+) ஊதியம்.

2. பொருள் இழப்பு = வருவாய் - முதல்>() இழப்பு

3. செயல் விளைவுக் கணக்கீடு

3. பொருள் கொள்கை + உழைப்பு= பொருள் வருவாய் கொள்கை விளைவு >(+) ஊதியம்.

4. பொருள் + கொள்கை உழைப்பு = பொருள் வருவாய் (-) கொள்கைவிளைவு > பொருளுதியம் (-) செயலிழப்பு.

5. பொருள் + கொள்கை உழைப்பு = (-) பொருள் வருவாய் (+) கொள்கை விளைவு >+ செயலூதியம் - பொருளிழப்பு

4. பொருள், கொள்கை ஒப்பீட்டுக் கணிப்பு:

1. பொருளுதியம் மிகுதி, செயலூதியம் மிகுதி = முழு ஊதியம்.

2. பொருளுதியம் குறைவு, செயலூதியம் குறைவு = முழு இழப்பு.

3. பொருளுதியம் மிகுதி, செயலூதியம் குறைவு = பொருளுதியம்.

4. பொருளுதியம் குறைவு, செயலூதியம் மிகுதி = செயலூதியம்.

எனவே, பொருள் வருவாயை மட்டும் கருதுபவர்கள் மேற்கூறிய பொருள் வருவாய்க் கணக்கீட்டை மட்டும் அளவீடாகக் கொண்டு ஊதியம், இழப்புக் கணக்கிடலாம்.

பொருள் வருவாயுடன் செயல் விளைவையும் கருதுபவர்கள், செயல் விளைவுக் கணக்கீட்டின்படி கணித்துப் பொருள் கொள்கை ஒப்பீட்டுக் கணிப்பின்படி, ஊதியம், இழப்புக் கணக்கிடலாம்.

மேற்கூறிய முதல் சமன்பாட்டில் உள்ள, வருவாயில் கழிபட வேண்டிய முதல் என்பதில், கருவித் தேய்வு, எச்சரிக்கை வைப்பு முதலியவற்றையும், அரரவர் செயல் நிலைகளுக்கு ஏற்ப, சேர்த்துக் கணக்கிடலாம்.

5. இழப்பு கண்டு சோர்வுறாமை

இக்கணக்கீடுகளுக்குப் பின்னர் நாம் ஈடுபட்ட செயலில் உறுதியாக இழப்புதான் ஏற்பட்டது எனில், அதைக் கண்டும் உடனே சோர்வடைந்து விடுதல் வேண்டியதில்லை. மேலும் முயற்சி செய்வது நல்லது; இனி, மேன்மேலும் முயற்சி செய்வது நல்லது.

ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார் (593)

என்பது பேராசானின் பேருரை.

'ஏற்பட்ட இழப்பு எதனால் ஏற்பட்டது. அஃது ஏற்படாமல் காக்கும் வழியென்ன, அவ்விழப்பால், நாம் கொண்ட முதல் எவ்வாறு ஊறடைந்தது முதலியவற்றை யெல்லாம் நன்கு ஆய்ந்து சீர்தூக்கி, மேலும் இழப்பு நேராவண்ணம் நாம் விரும்பி மேற்கொண்ட நமக்குத் தெரிந்த வினையை மேன்மேலும் ஊக்கமாகச் செய்ய வேண்டும் என்றெண்ணிச் செய்வதே நாம் வெற்றியடையும் வழி என்று திண்ணமாக எண்ணிக் கொள்ளுதல் வேண்டும்.

இனி, எல்லா நிலைகளிலும், மிக எச்சரிக்கையாக இருந்து, வேறு புறக் காரணங்களாலோ, இயற்கை அழிவுகளாலோ, ஆளழிவுகளாலோ ஒரு பெரும் இழப்புக்குள்ளாகிய நிலையிலும் கூட, நாம் வருந்த வேண்டியதில்லை. யானை ஒன்று அம்பினது தைப்புக்குள்ளாகிய நிலையிலும் தன் ஊக்கத்தை இழவாதது போல், நாமும் மன, உடல் சோர்வுகளால் ஒரு வினையைக் கைவிட வேண்டியதில்லை.

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பின்
பட்டுப்பா டூன்றும் களிறு. (597)

என்னும் ஊக்கவுரையை என்றும் உயிருரையாகக் கருது.

இனி, புதிய ஒரு வினையை மேற்கொள்வதினும் பல இழப்புகளைக் கண்ட பழைய வினையை மேற்கொள்வதே சிறந்தது.

நம் முதலீட்டை முழுவதும் இழந்து வறுமையுற்றாலும் அதற்காகவும் நாம் வருந்தி நின்று, நம் முயற்சியைக் கைவிடுதல் நன்றன்று.

அற்றேம் என்று அல்லல் படுபவோ பெற்றேமென்று
ஒம்புதல் தேற்றா தவர். (626)

6. இழப்பே இல்லாத ஊதியமும் ஊதியமே இல்லாத இழப்பும்

ஊதியம் பெற்றவிடத்து நாம் மகிழவில்லையா! அது போல் இழப்பைப் பெற்றவிடத்து மட்டும் ஏன் நாம் மகிழக் கூடாது? அல்லது நம்மைத் தேற்றிக் கொள்ளக்கூடாது? மேலும் இவ்வுலகின் செயல்கள் யாவுமே நல்லதும் அல்லதும், ஏற்றமும் இறக்கமும், மேடும் பள்ளமும், இன்பமும், துன்பமும், மகிழ்வும், துயரமும், ஒளியும், இருளும், ஊதியமும், இழப்பும் என்னும் முறையில் தாமே நடைபெற்று வருகின்றன. இவற்றுள் ஒருவர்க்கு எப்பொழுதும், எந்நிலையிலும் நல்லதே, அல்லது மகிழ்ச்சியே அல்லது ஊதியமே நடைபெறும் என்று நினைப்பது எவ்வளவு அறியாமை இழப்பே இல்லாமல் ஊதியமாகவே வருமானால், அவ்வூதியத்தை உயர்வாக நாம் மதிப்போமா? இருளே இல்லாமல் ஒளியாகவே இருந்தால் நாம் ஓய்வு கொள்வது எப்படி? துரங்குவது எப்படி? எப்பொழுதும் உடல் வேலை செய்து கொண்டிருக்க முடியுமா? உடல் ஓய்வு கொள்வதற்குத்தானே இருள், தூக்கம் எல்லாமும், துரக்கம் இன்றி ஊக்கமாகவே இருந்தால் உடல் மிக விரைவில் அழிவுறாதா? இவற்றை ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும். இழப்பே இல்லாமல் ஊதியமாகவே இருந்தால் அவ்வூதியத்தால் என்ன பயன்? அதில் இன்பமே இருக்காதே. அப்பொழுது உள்ளச் செருக்கும், உடல் மதர்ப்பும், அறிவுக் கிறுக்குமன்றோ ஏற்பட்டுப் போகும்? பசியெடுக்காமல் உணவு உண்டது எப்படி? பசித்தால்தானே உணவு உண்ண ஆர்வம் வரும். பெய்த மழைத் தண்ணிர் எல்லாம் வற்றாமலிருந்து மேலும் மேலும் மழை பெய்து கொண்டே இருந்தால், ஊரும் உலகமும் நீருக்குள் அன்றோ மூழ்கிவிடும். அதுபோல் இழப்பில்லாமல் ஊதியமாகவே இருந்தால், மேலும் மேலும் வரும் வருமானத்தை எப்படிச் செலவிடுவது? தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும் என்று வரங்கேட்டவனின் கதையாகவன்றோ ஆகிவிடும். எண்ணிப் பாருங்கள்.

எனவே, இயற்கையின் நெறிமுறையே, இயக்கமே ஏற்றத் தாழ்வுடையதாகத்தான் இருக்கும். அதற்காக நாம் வருந்த வேண்டியதில்லை. நல்லவை ஏற்படும் போது மகிழ்கின்ற நாம், அல்லவை ஏற்படும்போது ஏன் வருந்தவேண்டும்? என்று கேட்கிறார் குறளாசான்.

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்? (379)

வாழ்க்கை முழுநலமாகவே இருப்பின் வாழ்க்கை சுவையாகவே இராது. நலத்தை எதிர்பார்க்க வேண்டும். அது தானே வந்தால் மதிப்பிழந்துபோகும். எதிர்பார்த்தல், ஏங்குதல், ஆசைப்படுதல் என்ற

உணர்வுகள் இருந்தால்தான் ஒரு பொருளோ, நிலையோ, நிகழ்ச்சியோ மதிக்கப்படும்; வரவேற்கப்படும். எதிர்பார்ப்புதான் வரவேற்பை உருவாக்கும். அப்பொழுதுதான் அவ்வரவால் மகிழ்வு இருக்கும். இல்லையானால் இயல்பான நிகழ்வாக அஃது ஆகிவிடும். இயல்பாக இருப்பதற்குப் பெருமை இராது; அதனால் சுவையும் இராது; சுவையில்லையானால் வாழ்க்கையே இல்லை. துய்ப்புதான் வாழ்க்கை. துய்ப்பு என்பது இரண்டு எதிர் நிலைகளையும் உணர்ந்த நிலையில் ஏற்படுவது, காரத்தையும், புளிப்பையும், கசப்பையும் உணரவில்லை யானால், உவர்ப்பையும்,துவர்ப்பையும், இனிப்பையும் உணர முடியாது. எனவே இரு கூறுகளும் கலந்த வாழ்க்கையில் இரு கூறுகளையும் நாம் துய்க்கவில்லையானால், துய்ப்பு என்பதற்கே பொருளில்லை என்பதை உறுதியாக நாம் அறிந்து கொள்ள வேண்டும். எனவே, செயலில் தோல்வி, இழப்பு, ஏமாற்றம், எதிர்பார்த்தது கிடைக்காமை என்பவை பற்றியெல்லாம் கருதி ஊக்கத்தை இழப்பதோ, செயலைத் துறப்பதோ, இடிந்துபோவதோ, செய்த அல்லது அறிந்த செயலை விட்டுவிட்டு வேறொரு செயலைக் கைப்பற்றுவதோ கூடாது; தேவையில்லாதது என்பதைத் தெளிவாக உணர்தல் வேண்டும்.