செவ்வாழை/பதிப்புரை

பதிப்புரை


மூகத்தின் மூலை முடுக்குகளில் ஒளிந்து கிடக்கும் உயிர்த் துடிப்புள்ள பிரச்னைகளில் ஏதாவது ஒன்றை எடுத்து, வெளிப்படுத்தி, அதற்குப் பரிகாரம் காண முயல்வது எதுவோ அதுவே சிறுகதை.

இதில் வெற்றி கண்டவர் விரல்விட்டு எண்ணத்தக்க அளவிலேதான் இன்றளவும் இருந்து வருகிறார்கள்.

ரசனைக்காக எழுதுவதை, கவலையை மறப்பதற்காக கற்பனையில் சிறகடித்துப் பறப்பதையெல்லாம் சிறுகதையாக ஒருக்காலமும் அங்கீகரிக்க முடியாது.

படிப்பதற்காக மட்டுமல்ல, படிப்பினை பெறுவதற்காகவும் அந்தச் சிறுகதை இருக்க வேண்டும்.

துவண்டு போயிருக்கும் மனத்தைத் தூக்கி நிறுத்தும் வல்லமை கவிதைக்கு எந்த அளவுக்கு

உண்டோ, அதே அளவுக்கு சிறுகதைக்கும் உண்டு.

இதிலே கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை பலிக்காது.

கதைக்கென்று சிருஷ்டிக்கப்படும் ஒரே ஒரு பாத்திரத்தின் நேர்முக தரிசனமே இதற்குத் தேவை.

புறப்படும் இடத்திலிருந்து அந்தப் பயணம் முடியும் கட்டத்திற்குள்ளே வந்து போகும் கிளைவழிகளுக்கெல்லாம் இதிலே இடமில்லை.

பயணத்தின் குறிக்கோளே இதற்குப் பிடித்த நைவேத்தியம்.

உணர்ச்சி மயமான சொற்களால் படிப்போர் நெஞ்சை உருகிடச் செய்யும் யுக்தியே கதைக்குரிய சிறந்த ஆராதனை.

மனித சமுதாயத்தில் இன்னமும் ஜடமாகவும் முடமாகவும் இருக்கின்ற விகாரங்களை— விவஸ்தை கெட்ட விஸ்வரூபங்களை அளந்து காட்டும் அடையாளச் சீட்டாக இது அமைய வேண்டும்.

மனித மனத்தை நிறைவு படுத்தும் வேலையை, கொஞ்சம் அழகாக எழுதத் தெரிந்த யாராலும் செய்து காட்ட முடியும். அதுவல்ல, சிறுகதை.

ஒரு மனத்தின் சேஷ்டையை மற்றொரு மனத்துக்கு எடுத்துக் காட்டுவது மட்டுமல்ல; அந்த மனத்தின் கசிவைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும் அது பொருந்தி இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட கதையைத்தான் 'சிறுகதை’யாகக் கொள்ள முடியும்.

காலத்துக்கேற்ற மாதிரி — சூழ்நிலைக்குத் தகுந்த விதத்தில் எந்த ஒரு பூவும் தன் நிறத்தை மாற்றிக் கொள்வதில்லை. ஆனால் மனிதருக்கு புத்தி சொல்லக் கிளம்பும் சில புஸ்வாண எழுத்தாளர்கள் மட்டும் உடையைமாற்றிக்கொள்வது போல மனத்தை மாற்றிக் கொண்டு, எழுதுவதையெல்லாம்'கதை' என்றுகதைக்கின்ற இந்தக் காலகட்டத்தில், உங்கள் கரங்களில், உண்மையான -உயிருள்ள கதைகளைச் சிருஷ்டித்த பெருமைக்குரிய பேரறிஞர் அண்ணா அவர்களின் சிறு கதைத் தொகுப்பை, 'செவ்வாழை என்னும் தலைப்பில் தவழவிட்டிருக்கிறோம்.

மனித சமுதாயத்துக்கு அவசியமாகத் தேவைப்படும் ஒன்றை, அது எங்கு பிறந்திருந்தாலும் அதைச் சுவீகாரம் கொள்வதில் எந்த ஒரு தவறும் கிடையாது.

தமிழகத்தைப் பொறுத்த வரையில் 'சிறு கதை’ என்பது சுவீகாரக் குழந்தைதான். அதுவும் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட குழந்தை அது.

அந்தக் குழந்தையை அமரர் அண்ணா அவர்கள், தம் கரத்தில் ஏந்தித் தவழவிட்டிருக்கும் பாங்கை இதில் நீங்கள் பரவலாகக் காணலாம். அந்தக் குழந்தையின் மூலமாக அவர் வெளிப்படுத்தியிருக்கும் ஒவ்வொரு விஷயமும் விழிப்பை மட்டுமா, நல்ல வெளிச்சத்தையும் கொடுக்கக் கூடிய ஒன்றாகும். . அத்தகு சிறப்புள்ள—உயிர்த் துடிப்புள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் கதைகளை நாங்கள் வெளியிட்டுக் கொள்ளும் உரிமையைப் பூரணமாக வழங்கி இருக்கும் திருமதி ராணி அண்ணாதுரை அவர்கட்கு எங்களின் இதய பூர்வமான நன்றி.

பூம்புகார் பிரசுரத்தார்
"https://ta.wikisource.org/w/index.php?title=செவ்வாழை/பதிப்புரை&oldid=1531523" இலிருந்து மீள்விக்கப்பட்டது