தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்/055-066

கலைமகளை அணி செய்தல்

சென்னை மயிலாப்பூரிலுள்ள லா ஜர்னல் அதிபர் நாராயண சுவாமி ஐயர் கலைமகள் என்ற தமிழ் மாதப் பத்திரிகையை ஆரம்பித்தார். ஆரம்பிப்பதற்கு முன்னர் ஆசிரியப் பெருமானிடம் வந்து முதல் இதழுக்கு ஒரு கட்டுரை எழுதித் தரவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அப்படியே ஆசிரியரும் ஒரு கட்டுரை எழுதித் தந்தார். அதோடு என்னையும் அந்தப் பத்திரிகையில் பணியாற்ற அனுப்பி வைத்தார். அதுமுதல் கலைமகளின் தொடர்பு எனக்கு இருந்து வருகிறது. ஆசிரியர் சில நூல்களைக் கலைமகளில் அனுபந்தமாக வெளியிட்டார்கள். தம்முடைய அனுபவங்களையும், புலவர்களின் வரலாறுகளையும் கலைமகளில் கட்டுரையாக எழுதத் தொடங்கினர். அதனால் கலைமகளின் பெருமை உயர்ந்தது. ஆசிரியப் பெருமான் உரைநடையில் பல நூல்களை எழுதக் கலைமகள் இவருக்கு ஒருவகையில் தூண்டுகோலாக இருந்தது என்றும் சொல்லலாம்.

1933-ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம் முதல் பாகம் வெளியாயிற்று.