தாய்மொழி காப்போம்/ஆணா பெண்ணா

36. ஆணா? பெண்ணா?

உரைநடை என்பதோர் உரம்பெறும் ஆண்மகன்;
கவிநடை என்பது கண்கவர் பெண்மகள்;
கற்பனை என்னும் பொற்புறு சீலையால்
ஒப்பனை செயினும் உரைநடை என்னும்
ஆண்மகன் பெண்மகள் ஆதல் ஒல்லுமோ?
காண்பவர் அன்றோ கைகொட்டிச் சிரிப்பர்;
உடுத்திய சீலை ஒன்றால் மட்டும்
அடுத்தோர் பெண்ணென் றறைதல் செய்யார்;
பருவ மகளெனப் பாருக் குணர்த்த
உருவ அமைப்புடன் உறுப்பெழில் வனப்பும்
பெறுதல் வேண்டும்; பெண்மையும் வேண்டும்;
பேசுமிவ் வொன்றும் பெறாஅ திருந்தும்
ஆசைமீ தூர ஆணைப் பெண்ணெனப்
பேசுதல் ஒழிக; பித்தம் தவிர்க;
புதுமை எனவும் புரட்சி எனவும்
எதையுஞ் செய்தல் இழிவினும் இழிவே

 

(5-12-1980)