தாய்மொழி காப்போம்/தமிழர் போக்கு

28. தமிழர் போக்கு

தமிழ்நாட்டின் சிறப்பனைத்தும் புகல்வ தென்றால்
தனிப்பிறவி எடுத்தவர்க்கும் இயலா தாகும்;
அமிழ்துாற்றும் தமிழ்க்குறளின் பெருமை சொல்ல
ஆயிரம்நா போதுவதோ? போதா வாகும்;
தமிழ்காட்டும் பண்பனைத்தும் நாமே சொல்லித்
தற்பெருமை கொள்ளவிலை; உலக மெல்லாம்
இமைகூட்ட மனமின்றி விழித்து நோக்கி
எண்ணரிய வியப்பெய்திப் போற்றக் கண்டோம்.

ஆனாலும் நாம்மட்டும் அறிந்தோ மல்லோம்
அறிந்தாலும் வாய்திறந்து புகழ்ந்தோ மல்லோம்
போனாலும் போகட்டும்; மற்றோர் யாரும்
புகழ்ந்தாலும் ஒருசிறிதும் பொறுப்ப தில்லை;
தானாகக் கதைதிரித்து மறுப்புக் கூறித்
தரியலர்போல் இகழ்ந்துரைத்து வாழ்ந்து செல்லும்
கூனான மனமுடையார் சிலரும் நம்மில்
[1]'குடிலர்களாய் வாழ்கின்றார் உண்மை உண்மை.

நல்லுள்ளங் கொண்டவர்தாம் தமிழ்மொ ழிக்கு
நன்மைசெய முற்படுங்கால் வாழ்த்தல் வேண்டும்;
அல்லுள்ளங் கொண்டவரோ மாறாய்ப் பேசி
அவர்திறமைக் கேற்றபடி எள னங்கள்
சொல்லுவதிங் கியல்பாகக் கொண்டார்; அந்தத்
துயவருந் தமிழினமாம்; பழித்து ரைக்கும்
புல்லுள்ளங் கொண்டவர்க்கும் தமிழே தாயாம்;
புரியாராய் ஏசுகின்றார் அவர்தம் தாயை.

பேருந்து வண்டிகளிற் குறளைக் கண்டால்
பேருவகை தமிழ்நெஞ்சிற் பொங்க வேண்டும்;
யாரந்தக் குறளெழுத முனைந்தா ரோஇங்
கெவர்மனத்துத் தோன்றியதோ என வியந்து
பாரெங்கும் அவர்பெயரை வாழ்த்த வேண்டும்
பைந்தமிழ்க்கு நற்காலம் வந்த தென்று;
யாரிங்கு வாழ்த்துகின்றார்? பொல்லாங் கன்றோ
யார்யாரோ புகல்கின்றார் பித்தர் போல;

விரைந்து செலும் உந்துகளுக் காங்கி லத்தில்
வைத்திருந்த பெயர்மாற்றித் தமிழில் நன்கு
வரைந்ததிருக் கைகளைநான் வாழ்த்து கின்றேன்
வளர்தமிழின் வளர்ச்சியிலே விரைவு கண்டே;
விரிந்தமதி யான்உரைத்தான் விரைவு வண்டி
விறகுவண்டி எனச்செவியில் விழுந்த தென்றே;
திரிந்தவற்குச் செவிபழுதாய் விட்ட தென்றால்
செந்தமிழைப் பழிப்பதற்கா முயல வேண்டும்?

எங்கெங்குக் காணினுமே தமிழ்தான் என்ற
இயல்புநிலை இங்குவர வேண்டு மென்று
பொங்குகிறோம்; ஓரிரண்டு நிலையி லேனும்
பூத்துளதே தமிழென்று மகிழ்கின் றோம்நாம்;
மங்கியவர் எள்ளிநகை யாடு கின்றார்;
மல்லிகைப்பூ [2]வராகத்தால் நுகர்தல் உண்டோ?
இங்கிவர்தாம் திருந்திவரும் நாள்தான் என்றோ?
இனியதமிழ் இகழ்வதுவா கட்சி யாகும்?

தாய்மொழியை வளர்ப்பதிலே கட்சிப் பூசல்
தலைகாட்டல் கூடாது; தமிழர் யார்க்கும்
தாய்மொழியை வளர்ப்பதிலே உரிமை யுண்டு;
தந்தம்மால் இயலும்வரை முயல வேண்டும்;
தாய்மொழியை வளர்ப்பதிலே சாதி வேண்டா
சாதியினைப் புகுத்துவது சதியே யாகும்;
தாய்மொழியை வளர்ப்பதிலே சமயம் வேண்டா
சமயம்வரின் மொழியழியுஞ் சமயந் தோன்றும்.

(விரைவு வண்டி என்று மாற்றி அமைத்ததை விறகு வண்டி என முன்னாள் அமைச்சர் ஒருவர் எள்ளி நகையாடியதைக் கடிந்து பாடியது)

 
  1. (குடிலன் - அடுத்துக் கெடுக்கும் ஓர் அமைச்சன்)
  2. (முன்னாள் அமைச்சர் பெயர் மறைந்துள்ளது அறிக)