தாய்மொழி காப்போம்/திரும்பி விட்டேன்

34. திரும்பி விட்டேன்

'ஆறணிந்த சடைமுடியான் கூடல் தன்னில்
ஆர்வமுடன் சுந்தரப்பேர் வழுதி யானான்;
கூறமர்ந்த பங்கினளும் மதுரை மன்னன்
குலக்கொடியாய்த் தடாதகையாய்த் தோன்றி வந்தாள்;
வீறமர்ந்த வேலவனும் உக்கி ரப்பேர்
மேவியங்கு வந்துதித்தான்; இவர்கள் ஈண்டுச்
சேரவந்து பிறப்பெடுக்கும் நோக்க மென்ன?
செந்தமிழின் சுவைமாந்தி மகிழ வன்றோ ?'

'தேனிகர்க்குந் தமிழ்மொழியில் நெஞ்சி னிக்கத்
தேவாரம் பாடியருள் மூவ ருள்ளும்
வானிடிக்கும் பொழில்சூழும் ஆரூர் வாழும்
வடிவழகன் சுந்தரனோர் நள்ளி ருட்டில்
ஆனுயர்த்த கொடியானைத் தூத னுப்பி
ஆட்டாத ஆட்டமெலாம் ஆட்டி வைத்தான்
[1]சேனிகர்த்த விழிபங்கன் தமிழை வேட்டுச்
செய்யாத செயலெல்லாஞ் செய்து வந்தான்'.

'நல்லறிஞர் உறைவிடமாம் தொண்டை நாட்டில்
நாடறிந்த காஞ்சிதனில் வாழ்ந்து வந்த
நல்லவனைக் கணிகண்ணன் என்பான் றன்னை
நாடுகடந் தேகுகென அரசன் கூறச்
செல்லுமவன் பின்தொடர்ந்தார் புலமை மிக்க
திருமழிசை யாழ்வாரும்; கார்மே கத்தை
வெல்லுகின்ற நிறத்தானும் அவர்பின் சென்றான்
வேட்டெழுந்த தமிழார்வ மதனால் அன்றோ!

'தூண்டாமல் தோன்றுசுடர்க் காதல் கொண்டு
சூடிமலர் கொடுத்தாளைப் பாவால் நம்மை
ஆண்டாளை ஆண்டானை, நினைந்த ரற்றி
அருட்கடலில் ஆழ்வார்தம் ஆயி ரங்கள்
பூண்டானை, அவர்திருவாய் மொழியைக் கேட்டுப்
புவியிடத்து மாலாகி நின்றான் தன்னை,
வேண்டானெந் தமிழ்மொழியை என்று ரைத்தால்
வெறுமதியர் என்பதலால் வெறென் சொல்வோம்?'

'கடவுளர்கள் உகந்தமொழி, என்புக் கூட்டைக்
காரிகையாக் கண்டமொழி, மறைக்காட் டூரில்
அடைகதவந் திறந்த மொழி, முதலை யுண்ட
ஆண்மகவை மீட்டமொழி, தெய்வப் பான்மை
படருமொழி, பத்திமொழி, தொடுக்குந் தெய்வப்
பழம்பாடல் நிறைந்தமொழி, உள்ள மெல்லாம்
மடைதிறந்த வெள்ளமென அருளைப் பாய்ச்சி
மகிழ்விக்கும் அன்புமொழி தமிழே யன்றோ!'

என்றுரைத்த சொன்மாரி செவியு ளோடி
என்மனத்தை நெக்குருக்க இளகி ஆண்டு
நின்றிருக்கும் நான் மகிழ்ந்தேன்; எதிரில் தோன்றும்
நெடுங்கோவி லுட்புகுந்தேன்; அருளால் நெஞ்சம்
ஒன்றிநிற்கும் பன்னிருவர் நால்வர் மற்றோர்
ஓதிவைத்த பாடலெலாம் உன்னி யுன்னிச்
சென்றிருந்தேன்; திடுக்கிட்டேன்; சிந்தை நொந்தேன்;
செந்தமிழைக் காணவிலை திரும்பி விட்டேன்.

  1. (சேல் - நிகர்ந்த)