தாய்மொழி காப்போம்/பட்டஞ் சூட்டுக

40. பட்டஞ் சூட்டுக!

பல்கலைக் கழகம் பயிற்றிடும் மொழிகளுள்
தொல்தமிழ் ஒன்று; தூய்தமிழ் விழைந்தோர்
ஈரிரண் டாண்டுகள் இலக்கண இலக்கியப்
போரினுள் மூழ்கித் தேறினர் வென்றனர்;
வென்றவர் தம்மை வித்துவான் என்றனர்;
அன்றது சிறப்பென அயர்ந்தனர் நம்மவர்,
உரிமையின் பின்னர் அரியணை ஏறிய
பெரியவர் துணையால் பெயர்பிறி தாயது;
சொற்றமிழ் பயின்றோர் சூடிய பிறமொழிப்
பட்டயம் போயது பைந்தமிழ் ஆயது;
புலவர் எனும் பெயர் பூத்தது மலர்ந்தது
குலவிய மகிழ்வால்கூறினம் நன்றி;
பெயராற் புதுமை பெற்றதே ஆயினும்
உயர்வால் மதிப்பால் ஒன்றும் பயனிலை;
பட்டயம் எனவே பகர்ந்தனர் அதனைப்
பட்டம் எனச்சொலப் பதைத்தனர் தமிழர்;
ஆங்கிலம் பயின்றவர்க் கடிமைப் புத்தி
நீங்கிய பாடிலை நெடுநாட் பிணியது;
கழகம் அரியணை கண்ட பின்னரும்
இழிநிலை தமிழுக் கிருத்தலும் முறையோ?
தமிழால் வென்றது தமிழால் உயர்ந்தது
தமிழை வளர்ப்பது தமிழை மதிப்பது
கழகம் என்றெலாம் கழறுவர் அதனால்
தமிழுக் குயர்நிலை தரல் அதன் கடமை;
பட்டயம் எனுமொரு பழம்பெயர் மாற்றிப்
பட்டம் என்றொரு சட்டம் செய்தால்
உலகம் குப்புற உருண்டா வீழும்?
அலைகடல் பொங்கி ஆர்த்தா சீறும்?
பட்டமென் றாக்கிடின் பலப்பல சிக்கல்
பொட்டெனப் போகும்; போற்றிடுந் தமிழகம்;
அரசு கட்டில் அமர்ந்தினி தாளும்
[1]கலைஞர் நாவலர் கருதுவீ ராயின்
இலையொரு தடையும் எம்தமிழ் மொழிக்கே;

இன்றுள அரசு நன்றிது செயாவிடின்
என்றுதான் விடியும் எந்தமிழ் வாழ்வு?
தம்மை யின்ற தாய்த்திரு நாட்டைச்
செம்மைத் தமிழால் செப்பிட மறுத்தவர்
பழிக்கவும் இழிக்கவும் பட்டனர் அன்றோ?
மொழிக்குயர் ஆக்கம் முனைந்து தராவிடின்
நாளைய உலகம் நம்மையும் பழிக்கும்;
வேளை மிதுதான் விரைந்திது புரிக!
செய்யத் தகுவ செய்யா விடினும்
எய்துவ தியாதெனத் தெரிந்து செயல்செயும்
நுண்மாண் நுழைபுலம் உடையீர்
நண்பால் வேண்டுதும் நலம்தமிழ் பெறவே.

 

30-11-1974

  1. (கலைஞர், நாவலர் - கலைஞர் மு. கருணாநிதியும், நாவலர்.இரா. நெடுஞ்செழியனும்)