தாவிப் பாயும் தங்கக் குதிரை/13



நெருப்பு மூச்சுவிடும் எருதுகள்

தன் தோழர்களான ஐம்பது வீரர்களும் புடைசூழ வெற்றிவேலன் அந்த நிலத்திற்குள் நுழைந்தான். வீரர்களை ஒரு புறத்தில் நிற்க வைத்துவிட்டு அவன் அந்த எருதுகளை நெருங்கினான். வெற்றிவேலன் எருதுகளின் அருகில் வந்தவுடன், அரசனுடைய ஆட்கள் அவற்றைக் கட்டியிருந்த கயிற்றை வாளால் வெட்டித் துண்டித்து விட்டார்கள். உடனே அவை பெரு மூச்சுவிட்டுக் கொண்டு அனல் கக்கியவண்ணம் வெற்றிவேலனை நோக்கிப் பாய்ந்தன.

அவற்றின் கொம்புகள் இருப்பாணிபோல் கூர்மையாக இருந்தன. வெயில் ஒளிபட்டுப் பளபளவென்று மின்னின. அவை பாய்ந்தோடி வந்த போது நிலம் அதிர்ந்தது. அவற்றின் மூக்குத் துவாரங்களிலிருந்து முன்னிலும் அதிகமாக நெருப்புச்சுழல்கள் வெளிப்பட்டன. அந்த நிலமே நெருப்புப் பற்றி எரிவதுபோல் காட்சியளித்தது. ஆனால், அவை வெற்றி வேலனை ஒன்றும் செய்யவில்லை. மேகமாலையின் மாய மருந்து அவன்கையில் இருந்ததால் நெருப்பின் அனல் அவனை ஒன்றும் செய்யவில்லை. வெற்றிவேலன் நிலத்தின் நடுவில் நின்றான். எதிர்ப் புறத்திலிருந்து அவனைத் தாக்க ஓடி வந்தன எருதுகள். இரண்டும் நெருங்கி வரும் நேரம் வெற்றிவேலன் சட்டென்று தான் நின்ற இடத்தை விட்டு விலகிக் கொண்டான். இரண்டு எருதுகளும் ஒன்றையொன்று முட்டிக்கொண்டன. உடனே அந்த எருதுகளுக்கு ஒன்றுக்கு ஒன்று கோபம் ஏற்பட்டு இரண்டும் முட்டி மோதிக் கொண்டு சண்டையிட்டன. தங்கள் பொது எதிரியை அவை மறந்துவிட்டன. வெற்றிவேலன் அவற்றைக் கவனித்துக் கொண்டு நின்றான். அவை சண்டையிட்டுத் களைத்த நேரம் பார்த்து அவற்றின் அருகில் பாய்ந்து சென்று இரண்டையும் கொம்பைப் பிடித்து இழுத்தான். தயாராக இருந்த ஏரின் நுகத்தடியின் கீழ் அவற்றை நுழைத்துப் பூட்டினான். அவை பசுப் போல் அடங்கிவிட்டன. அவன் முதுகில் தட்டிக் கொடுக்கக் கொடுக்க முன் நடந்து சென்றன. தட்டிக்கொடுத்துத் தட்டிக்கொடுத்து அவன் அந்த நான்கு காணி நிலத்தையும் உழுது விட்டான். தங்களை அவன் அடித்துத் துன்புறுத்தாததால் அவை அவனுக்கு நன்றியுடன் வேலைபார்த்தன. மக்கள் எல்லோரும் இந்தச் சாதனையை வைத்த கண் வாங்காமல் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வெற்றிவேலன் உழுது முடித்து எருதுகளை மீண்டும் கட்டிப்போட்டபோது மாலைக் கதிரவன் மேலை மலைகளில் சாய்ந்து விட்டான்.

மறுநாள் காலையில் நிலத்தில் விதையிடலாம் என்று அரசர் கூறினார். மக்கள் கலைந்து சென்றார்கள். வெற்றிவேலன் தன் வீரத் தோழர்களுடன் மரக்கலத்திற்குத் திரும்பினான். அரசர் தன் ஆட்களோடும் மக்களோடும் அரண்மனை சென்றார்.