67. வினைத்திட்பம்
(செயலில் உறுதி)

ஒரு செயலை ஏற்றால் அதனைச் செய்து முடிப்பது என்ற மனஉறுதி இருக்க வேண்டும்.

இடையூறு வருமுன்பே அறிந்து நீக்குக: வந்தபின் அதனைக் கண்டு தளராதே.

எதனையும் முன்கூட்டிச் சொல்லிவிடாதே; செய்து முடித்தபின் மற்றவர்கள் தாமே அறியட்டும்; இடையில் அதனை வெளிப்படுத்தினால் தடைகள் ஏற்படும்; அதனைக் கெடுத்துவிடுவர்.

சொல்வது யாருக்கும் எளிது; அதனைச் செய்து முடிப்பதில்தான் சிரமம் இருக்கிறது. வாய்ச்சொல் பயன் தாராது.

வினைத்திட்பம் ஆளுமையைத் தரும்; எதனையும் செய்து முடிக்க இயலும், எண்ணியது கிட்டும்; கருதியது முடிக்கலாம்.

இவனால் என்ன முடியும் என்று ஆளைக் கண்டு எடை போடாதே; தேருக்கு அச்சாணி சிறிதுதான்; அதனைப் போலப் பயன்படுவார் உளர்.

வெற்றி தரும் என்று திட்டமிட்டுச் செயலில் இறங்கிய பிறகு சோம்பிக் கிடக்காதே; காலத்தை வீணாக்காதே; தொடர்ந்து செயலில் இறங்குக.

துன்பம் மிக்கு வந்தாலும் எடுத்த வினையைத் தளர விட்டுவிடாதே; அதனால் நன்மை உண்டாகும் என்று தெரிந்தால் செயற்படுத்துக.

செயலாற்றலுக்கு உறுதி காட்டாதவரை உலகம் மதிக்காது; வாய்ச்சொல்லில் வீரம் காட்டினால் போதாது; வினை செய்வதில் உறுதி காட்டவேண்டும்; மனக் கோட்டை கட்டிக்கொண்டு மவுனம் சாதிப்பவரை உலகம் ஏற்காது.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/67&oldid=1106426" இலிருந்து மீள்விக்கப்பட்டது