திருக்கை வழக்கம் (கம்பர்)

விக்கிப்பீடியாவில் பின் வரும் தலைப்புக்கான தகவல் தொகுக்கப்பட்டுள்ளது:

திருவாகிய மங்கை கூடியே வாழுங்கை

கங்கை குலந்தழைக்கக் காட்டும் பெருங்கீர்த்தி
மங்கை பிரியாமல் வாழுங் கை - திங்கள் அணி - 2

சந்தனம் அரைக்கும் கை
மூர்த்தி நாயனார் போன்று விரிஞ்சிபுரசிறுவன்

எம்பிரான் எம்பெருமான் இந்திராதி பர்க் கரிய
தம்பிரா னுக்குரைத்த சந்தனக் கை - அம்பொன் - 3

முளைத்த நெல்லை சோறக்கி ஈந்தகை
இளையான்குடி மாற நாயனார்

வளைவாரி வையகமும் வானகமும் போற்ற
முளைவாரி வந்த முழுக் கை - கிளை வாழக் - 4

எச்சிற்கையால் கல்லெறிந்தகை
சங்கமங்கை சாக்கியநாயனார்

கச்சித் தலத் தரனைக் கல்லால் எறியமறந்து
எச்சில் தயிர்ச்சோ றெறிந்திடுங் கை - பச்சை மிகு - 5

ஈசற்கான மாவடுசிந்தி தன்தலையை அரிந்தகை
கணமங்கலம் அரவாட்தாய நாயனார்

தேமா வடுக் கமரில் சிந்திற் றன்றே கழுத்தை
ஆமா மெனவே அரிந்திடுங் கை - வாம மறை - 6

தொண்டர்பின் ஈசன் எனமுடிபு கொண்டகை
மலைநாட்டுச்செங்குன்றூர் விறல்மிண்டநாயனார்

ஓது புகழ் நாயனுடன் ஊரன் புற கென்றே
மோது தடிகொண்டு முடுகுங் கை - தீ தகல - 7

திருந்தி ஈசனுக்கே பூசைசெய் பெருந்தகை
திருநாவுக்கரசு நாயனார்

அஞ் செழுத்தே ஒன்றாகி அப்பர்எனத் தோன்றிஅரன்
செஞ்சரணத்தே பூசை செய்யும் கை - வஞ்சியர் பால் - 8

ஈசனை ஏவல்கொண்டோர் அளியுதவி மறுத்தகை
ஏயர்கொன் கலிக்காம நாயனார்

தூ தரனைத் தான்விடுத்த சுந்தரனைக் காணாமல்
பேதமறக் தன்வயிறு பீறும் கை - பூதத்தின் - 9

சுந்தரர்பொருட்டு நெற்சிவிகை தாங்கியகை
குண்டயூர் கிழார்

மிக்க புலவனுக்கா ஏகி மனை மட்டாகத்
தக்க சிவிகை கணை தாங்கும் கை - மைக் கடு வாய் - 10

வறுமையிலும் கிடைத்தநாகமணி ஈந்தபொற்கை
சடையப்ப வள்ளல்

மூக்கில் புகைபுரிந்த மூதரவின் வாயிடத்து
நீக்கிய கை நாக் கதனில் நீட்டுங் கை - ஆக்கமுடன் - 11

உழவுக்கே உளோம் என சாசனமிட்ட கை

ஏத மற்ற கீர்த்தியைக் கொண் டேட்டகத்திலே அடிமைச்
சாதனம் இட்டே கொடுத்த தங்கக் கை - மேதினியில் - 12

மகவு தாங்கிய பெண்டிரும் விருந்தினுக் குதவுங்கை

சூலி முதுகில் சுடச்சுட அப்போது சமை
பாலடிசில் தன்னைப் படைக்குங் கை - சாலவே - 13

தனிமையிலிறந்த பாணனுடலை ஈடேற்றியகை
தொண்டைநாட்டு மறவை வாழ் அரங்கேசன்

நாணம் தராமல் நடுங்காமல் கூசாமல்
பாணன் பிணத்தைப் பரிக்குங் கை - காணவே - 14

தானுண்டதும் கூழே என காட்டிய கை
செம்பியனுக்காக பேறையூரான் செய்கை

தண் தமிழோன் தன்மனத்தில் சந்தேகம் தீரக்கூழ்
உண்ட வயிற்றை பீறி ஊற்றுங் கை - கண் டளவில் - 15

நீலிக்கஞ்சிய வணிகனுக்கு உறுதியளித்த கை
தொண்டை நாட்டு திருவாலங்காட்டு குடிகள்

நீலி தனக் கஞ்சிநின்ற வணிகே சனுக்காக்
கோலி யபயம் கொடுக்குங் கை - ஆல மெனும் - 16

நீலியினால் வணிகனிறக்க நெருப்பினிலிறங்கிய கை
மேற்படி

வன்னியிடை முழ்கி வானோர் பழிகழுவிக்
கன்னி தனையே மணந்த காட்சிக் கை - துன்னு மொரு - 17

உற்றோர் செய்ததை தானும்செய்திறந்தகை
மேற்படி

பேருலகை எல்லாம் பிழைப்பிக்கும் ஓர்கொழுவின்
கூரில் ஒருவன் கழுத்தைக் குத்தும் கை - பா ரறிய - 18

தானுண்கலத்தில் கையமைத்துக் காத்திட்டகை
பறைமுழைநந்தன்சாம்பான்-போராவூர்வேளாளன்

வீறு பெறும் பறையன் வீயாமல் ஓர் கலத்தில்
சோறு பிசைந் துண்ட சுடர் மணிக் கை - ஆறாத் - 19

புண்ணைக்காட்ட சீனபட்டாடை கிழித்தகை
சோழனெதிரில் சடையப்பவள்ளல்

தொடையில் எழுசிலந்தி தோற்றுவிக்கப் பட்டின்
புடவை கிழித்த பெருங் கை - கடல் சூழ்ந்த - 20

நாற்படைசெல்ல வெந்தணலில் ஏற்பூட்டும்கை

பார்பூட்டு மன்னர் பரிகரி பூட்டக் கதிரோன்
தேர் பூட்ட ஏர் பூட்டும் செம்பொற் கை - வீரமதன் - 21

காமன் வெற்றிக்கு தாற்றுக்கோல் தாங்குங்கை

ஐங்கோல் தொடுக்க அணைகோ லெடுக்கஉழும்
பைங்கோல் பிடிக்கும் பதுமக் கை - இங்கிதமாம் - 22

மன்னன் கோல்தாங்க தாம்மேழி தாங்குங்கை

சீர் படைத்த பூபாலர் செங்கோல் பிடிப்பதற்கு
பேர்படைத்த மேழி பிடிக்குங் கை - கார்படைத்த - 23

உலகில் நல்லறிவு படர நாற்று விசிறுங் கை

மிஞ்சுமதி கீர்த்த்ியைப் போல் மேதினி எல்லாம் தழைக்கச்
செஞ்சாலி நாற்றை தௌிக்குங் கை - எஞ்சாமல் - 24

கள்ளம் புல்பூண்டொழித்துலகம் காக்குங்கை

வெள்ளைக் களை களைந்து வீறும் பயிர் தழைக்கக்
கள்ளக் களை களைந்த கற்பகக் கை - வள் ளுறையும் - 25

க்ஷஷபல்வகைப் போர் வெற்றிக்கும் மூலமாங்கை

விற்போர் மதகரிப்போர் வெம்பரிப்போர் வெற்றிப்போர்
நெற்போர் முதல் போர் நெறித்திடுங் கை - கற்பகம் போல் - 26

மேழி சிங்கம் குயில் முக்கொடிகள் தாங்குங்கை

மேழிக் கொடி சிங்க வெற்றிக் கொடி குயிலின்
வாழிக் கொடியே மருவுங் கை - நீ ளுலகில் - 27

வறியவர் வேதாகமபுராணம் தழைக்குங்கை
திருநின்றையூர் காளத்திவாண முதலியார்

ஆதுலர்குச் செம்பொ னளிக்குங் கை ஆகமங்கள்
வேத புராணங்கள் விரிக்குங் கை - நீதிநெறி - 28

பதினாறுபேறும் யாவரும்பெற உழைக்குங்கை

மானம் குலம் கல்வி வண்ணம் அறிவுடைமை
தானம் தருமம் தழைக்குங் கை - ஆன தமிழ் - 29

நலிந்தோர் நலமழிந்தோர் தாங்குங்கை

கல்லார்கள் என்னாமல் கற்றோர்கள் என்னாமல்
எல்லாரையுங் காத் தீடேற்றுங் கை - வல்லமை சேர் - 30

ஈடில்லாத ஈடுகொள்ளாது பயனளிக்குங்கை

மைம் மா முகில் உலகை வாழ்விக்கும் மேன்மைபோல்
கைம்மா றிலா தளித்த கற்பகக் கை - சும்மை ஆர் - 31

பலருண்ண பயன்பலபெற வாழும் சீராளர்கை

ஊருணி நீர் போல் உலகத்தவர்க் கெல்லாம்
பேரறிவால் ஈயும் ப்ரதாபக் கை - பாரில் - 32

உற்றபோது வுடனுதவும் தண்கை

உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
கோடுக்க இசைந்த குளிர் கை - இடுக்கணினால் - 33

மூவருக்கும் முதலான மூலமாங்கை

மாமறையோர் மன்னர் வணிகர் முதலாகத்
தாம் அலையாமல் கொடுத்துத் தாங்குங் கை - தே மருவு - 34

இயன்ற மாவையும் ஈந்த ஏழையின்கை
கம்பநாடரிடம் ஓர் வேளாளன்

நாவில் புகழ் கம்பநாடற் கடிமை யென்றே
மாவைக் கரைத்து முன்னே வைக்குங் கை - பாவலர் தாம் - 35

விடநாக கடியினில்மிளிர் நனிநாகரீக நற்கை
சடையப்ப வள்ளல் கை

ஏர் எழுபது ஓதி அரங்கேற்றுங் களரியிலே
காரி விடநாகங் கடிக்குங் கை - பா ரறியச் - 36

பஞ்சகாலத்தில் நீளும் பாசமுள்ளகை
குமிழம்பட்டு, இடையாலம் வாழ்ந்த வேளாளர்

சங்கை யிட்டுத் தள்ளாமல் தன் சோற்றை வந்தவர்க்குப்
பங்கை யிட் டிரட்சித்த பங்கயக் கை - பொங்கமொடு - 37

என்னளவாயினும் ஈந்து சொற் பிறம்பாதகை
பொன்விளைந்த களத்தூர் குடிதாங்கி முதலியார்

செம்பென் விளை களத்தூர் செந்நெல் விளைந்ததனை
நம்பி மறையோர்கு அளித்த நாணயக் கை - அம்பொன் - 38

வந்த பின்னும் வருமுன்னும் காக்குங்கை

விளை பயிரைப் பார்த்து விரைகால் புலத்தை
வளைய மதி லிட்டு வருங் கை - கள மதனில் - 39

எக்காலத்தும் ஈவோமென சாசனமிட்ட கை

ஏற்கவந்த ஆதுலர்க் கில்லை யென்னாமல் செம்பொன்
கார்க் கையினால் முக் கை யிட்ட கற்பகக் கை - தீர்க்கமதாத் - 40

ஈசனுக்கு திருப்பணிகள் பற்பலசெய் கொண்டற்கை

திருப் பருத்திக் குன்றில் சிவன் ஆலயங்கள்
விருப்புடனே கட்டுவித்த மெய்க் கை- திருப்புகழை - 41

கலைஞான பயிர்விளைக்குங் பெற்றிணைகை

எண்ணை எழுத்தை இசையை இலக்கணத்தை
வண்மை பெற உண்டாக்கும் வா குள கை - பண்ணமைந்த - 42

நன்னெறியும் தன்மொழியும் காக்குங்கை
இருமொழி ஞானம் படைத்த நம்மாழ்வார்

வேத மொரு நான்கினையும் மிக்க தமிழ் நாலடியால்
ஓதி உரைத்தே கருணை ஓங்கும் கை - பூதலத்தில் - 43

புலவனெதிர் படைத்தகனி உவக்குங்கை

பாவல னெச்சில் படு மாங்கனியை எடுத்
தாவலுடன் நன்றா கருந்துங் கை - காவலன் - 44

மன்னவன்கண் பெரியதெவை காட்டிய கை
அநபாயனுக்கு சிறார் பருவ சேக்கிழார்

மண்ணில் கடலில் மலையின் பெரிய தென
எண்ணி எழுதிக் கொடுத்த ஏற்றக் கை - திண்ணமதாய் - 45

தமிழின் புகழினுக்கு முடியையே ஈந்தகை
குன்றையூர் எல்லன்

வையக மெங்குந் தேடி வந்த தமிழோன் புகழச்
செய்ய முடியைக் கொடுத்த செம்பொற் கை - துய்ய புகழ் - 46

வேளான் வீரனின் வெற்றிக்கை
கருணாகரத் தொண்டைமான்

அட்ட திக்கும் எண்கீர்த்தி ஆயிரத் தெட் டாணைதனை
வெட்டி பரணிகொண்ட வீரக் கை - திட்டமுடன் - 47

வென்றிபெறு பொருளீட்டம் ஈந்த ஈகைக்கை
முனையடுவார் நாயனார்

பொன்னால் அமுதும் பொரிக் கறியும் தான் கொணர்ந்து
நன் நாவலர்க் களித்த நாணயக்கை - முன்னாள் - 48

வணிகன்தன் கவலை போக்கியகை
ஆறைநகர் பரமேசுவரன் மகன் எல்லன்

மனக் கவலை யுற்ற வணிகன் முன்னே நின்று
தனைக் கா எனக் கேட்ட தண் கை - கனக்கவே - 49

ஆனிரைகளை பலஅளிக்கும் பாங்கானகை

அன் றீன்ற நா கெழுபதான எருமைத் திறத்தைக்
கன்றோடு நல்கும் கடகக் கை - வென்றி தரும் - 50

பாடலுக்கு கலம் நெல்லளிக்குங்கை

ஓர் ஆனை நூராயிரக் கலம்நெல் ஓர் கவிக்குச்
சீராக நல்கும் தியாகக் கை - பே ரியலைச் - 51

பாலாற்றின் கால்பல செய்தாற்றிய ஆண்மைக்கை

சாற்றும் ஒட்டக் கூத்தன் சரச கவி சொல்லப் பால்
ஆற்றுநீர் கால் கொணர்ந்த ஆண்மைக் கை - நேர்த்திபெற - 52

சிவிகை உதைத்த புலவன் காலிற்கு பூணளித்தகை
தொண்டைநாட்டு வல்லம் கச்சியப்ப வள்ளல்

வண் தமிழோன் தான் உதைத்த வாகுள காலுக்குப் பொன்
வெண்டய மிட்டே வணங்கும் வெற்றிக் கை - புண்டரிகக் - 53

முடிமேல் குட்டிய புலவனுக்கு ஆழியிட்டகை

கையால் புலவன் கனகமுடி மேல் குட்டச்
செய்யாழி பண்ணி யிட்ட கை - நொய்ய - 54

அரிசிகேட்டயிடத்து யானையே அளிக்குங்கை
ஏகம்பவாணன்

எறும்புக்கும் ஆகாரந் தானில்லை என்ற மட்டில்
திறம் புக்க யானை தரும் செங்கை - பறம்பு தனில் - 55

முனிகளுக்கு அளித்துவந்த பண்பட்டகை

எண்ணாயிரம் முனிவர்க்கு ஏற்றபடி அப்படியே
பண்ணாக் கொடுக்கும் பராக்ரமக் கை - விண்ணாடர் - 56

விண்ணடைந்தோர் புகழினை ஏற்றுங்கை

கூர்த்த புகழ் அண்ட கோளம் அளவும் படர
நால் திக்கும் மேருவின் நாட்டும் கை - சீர்குகனை - 57

சிவன் முருகன் பிள்ளை மூவரையும் போற்றுங்கை

ஆதார மானவனை ஐங்கரனைச் சங்கரனைப்
பாதாரவிந்தம் பணியும் கை - நீதி - 58

படைத்து காத்து ஈந்து இடர்களையயும் ஈரக்கை

நடக்கை இருக்கை நகைக்கை மிடி தீர்க்கை
கொடுக்கை செழுங்கை குளிர்க் கை- தொடுத்த தெல்லாம் - 59

எக்காலத்துமிடத்தும் ஈடேற்றும் இணையிற்கை
வேளாளர் குலத்துதித்த வல்லாளன்

சீராக உண்டாக்கும் செங்கைப் பெருங்கருணைக்
காராளர் கற்பகப் பூங் கை

திருக்கை வழக்கம் முற்றிற்று.