திருக்கோவையார்/பத்தொன்பதாம் அதிகாரம் - மணம் சிறப்புரைத்தல்

பத்தொன்பதாம் அதிகாரம்
19. மணம் சிறப்புரைத்தல்

பேரின்பக் கிளவி
மணஞ்சிறப் புரைத்தல் வரும் ஓர் ஒன்பதும்
உயிர்சிவ மணம்பெற்(று) உண்மைஇன் பாகிய
பரைகடந் தின்பப் பண்பாய் நிற்றல்.

1. மணமுரசு கூறல்
பிரசம் திகழும் வரைபுரை யானையின் பீடழித்தார்
முரசம் திகழும் முருகியம் நீங்கும் எவர்க்குமுன்னாம்
அர(சு)அம் பலத்துநின்(று) ஆடும் பிரானருள் பெற்றவரின்
புரைசந்த மேகலை யாய்துயர் தீரப் புகுந்துநின்றே. ... 299


கொளு
வரைவு தோன்ற மகிழ்வுறு தோழி
நிரைவ ளைக்கு நின்று ரைத்தது.

2. மகிழ்ந்துரைத்தல்
இருந்துதி என்வயின் கொண்டவன் யான்எப் பொழுதும்உன்னும்
மருந்து திசைமுகன் மாற்கரி யோன்தில்லை வாழ்த்தினர்போல்
இருந்து திவண்டன வால்எரி முன்வலம் செய்(து)இடப்பால்
அருந்துதி காணும் அளவும் சிலம்பன் அருந்தழையே. ... 300


கொளு
மன்னிய கடியிற் பொன்னறுங் கோதையை
நன்னுதல் தோழி தன்னின் மகிழ்ந்தது.

3. வழிபாடு கூறல்
சீரியல் ஆவியும் யாக்கையும் என்ன சிறந்தமையால்
காரியல் வாட்கண்ணி எண்ணக லார்கம லங்கலந்த
வேரியம் சந்தும் வியல்தந் தெனக்கற்பின் நிற்பர்அன்னே
காரியல் கண்டவர்வண் தில்லை வணங்கும்எம் காவலரே. ... 301


கொளு
மணமனை காண வந்தசெவி லிக்குத்
துணைமலர்க் குழலி தோழி சொல்லியது.

4. வாழ்க்கை நலங்கூறல்
தொண்டினம் மேவும் கடர்க்கழ லோன்தில்லைத் தொல்நகரில்
கண்டின மேவும்இல் நீஅவள் நின்கொழு நன்செழுமெல்
தண்டின மேவுதிண் தோளவன் யானவள் தற்பணிவோள்
வண்டின மேவும் குழலாள் அயல்மன்னும் இவ்அயலே. ... 302


கொளு
மணமனைச் சென்று மகிழ்தரு செவிலி
அணிமனைக் கிழத்திக்(கு) அதன்சிறப்(பு) உரைத்தது.

5. காதல் கட்டுரைத்தல்
பொட்டணி யான்நுதல் போயிறும் பொய்போல் இடையெனப்பூண்
இட்டணி யான்தவி சின்மலர் அன்றி மிதிப்பக் கொடான்
மட்டணி வார்குழல் வையான் மலர்வண் டுறுதல் அஞ்சிக்
கட்டணி வார்சடை யோன்தில்லை போலிதன் காதலனே. ... 303


கொளு
சோதி வேலவன் காதல்கட் டுரைத்தது.

6. கற்பறிவித்தல்
தெய்வம் பணிகழ லோன்தில்லைச் சிற்றம் பலம்அனையாள்
தெய்வம் பணிந்தறி யாள்என்று நின்று திறைவழங்காத்
தெய்வம் பணியச்சென் றாலும்மன் வந்தன்றிச் சேர்ந்தறியான்
பெளவம் பணிமணி யன்னார் பரி(சு)இன்ன பான்மைகளே. ... 304


கொளு
விற்பொல நுதலி கற்பறி வித்தது.

7. கற்புப் பயப்புரைத்தல்
சிற்பம் திகழ்தரு திண்மதில் தில்லைச் சிற்றம்பலத்துப்
பொற்பந்தி யன்ன சடையவன் பூவணம் அன்னபொன்னின்
கற்பந்தி வாய்வட மீனும் கடக்கும் படிகடந்தும்
இற்பந்தி வாயன்றி வைகல் செல்லாதவன் ஈர்ங்களிறே. ... 305


கொளு
கற்புப் பயந்த அற்புதம் உரைத்தது.

8. மருவுதல் உரைத்தல்
மன்னவன் தெம்முனை மேற்செல்லு மாயினும் மாலரியே(று)
அன்னவன் தேர்புறத்(து) அல்கல்செல் லாது வரகுணனாம்
தென்னவன் ஏத்துசிற்றம் பலம் தான்மற்றைத் தேவர்க்கெல்லாம்
முன்னவன் மூவல்அன் னாளும்மற்(று) ஓர் தெய்வம் முன்னலளே. ... 306


கொளு
இருவர் காதலும் மருவுதல் உரைத்தது.

9. கலவி இன்பம் கூறல்
ஆனந்த வெள்ளத்(து) அழுந்தும்ஓர் ஆருயிர் ஈருருக் கொண்(டு)
ஆனந்த வெள்ளத் திடைத்திளைத் தால்ஒக்கும் அம்பலஞ்சேர்
ஆனந்த வெள்ளத்(து) அறைகழ லோன்அருள் பெற்றவரின்
ஆனந்த வெள்ளம்வற் றாதுமுற்றா(து)இவ் வணிநலமே. ... 307


கொளு
நன்னுதல் மடந்தை தன்னலங் கண்டு
மகிழ்தூங்(கு) உளத்தோ(டு) இகுளை கூறியது.