திருமூல நாயனார் ஞானம்

சித்தர் பாடல்கள்

நூல் 19

திருமூல நாயனார் ஞானம்

நூல் பக்கம் 308

1-2 தொகு

1

அடியாகி அண்டர் அண்டத்து அப்பால் ஆகி

அகாரம் எனும் எழுத்ததுவே பாதமாகி

முடியாகி நடுவாகி மூலம் தன்னில்

முப்பொருளும் தானாகி முதலுமாகிப்

படியாய் முப்பாழற்றுப் படிக்கும் அப்பால்

படி கடந்த பரஞ்சோதிப் பதியும் ஆகி

அடியாகும் மூலம் அதே அகாரமாகி

அவன் அவளாய் நின்ற நிலை அணுவதாமே

2

அதுவாகி அவன் அவளாய் எல்லாம் ஆகி

அடி நடுவு முடிவாகி அகண்டமாகிப்

பொதுவாகிப் பல்லுயிர்கள் அனைத்துக் கெல்லாம்

புகலிடமாய் எப்பொருட்கும் மூலம் ஆகி

மதுவாகி வண்டாகிச் சுவையுமாகி

மலராகி மணமாகி மதிக்க ஒண்ணா

அதுவாகும் அகாரமதே மூலமாகி

அண்டம் எல்லாம் தாங்கி நின்ற அம் மூலம்மே

3-4 தொகு

3

மூலமெனும் ஆதார வட்டம் தானே

முச்சுடரும் முக்கோண மூன்று நாடிச்

சீலமெனும் சிவலிவ்க பாத தீர்த்தம்

திருவடியும் திருமேனி நடமும் ஆகும்

கோலமுடன் அண்டம் எல்லாம் தாங்கிக் கொண்டு

கொழுந்து விட்ட கம்பமதாய் மேலே நோக்கி

ஆலமுண்ட கண்டம் எலாம் தானாய் நின்ற

அகார முதல் அவ்வெழுத்தை அறிந்து பாரே

4

அறிந்ததுவும் தற்பரமே அகாரம் ஆகும்

அறிவுடைய உகாரம் சிற்பரம தாகும்

பிறந்ததுவும் மூலகம் எலாம் சமயம் தானாம்

பேதமெனும் கருவிவகை எல்லாம் ஆகும்

அறிந்ததுவும் அகாரமெனும் பாதம் தன்னை

அடிமுடி என்று அனுதினமும் அறிந்து நோக்கே

5-6 தொகு

5

நோக்கமுடன் மூலமெனும் பாதம் தன்னை

நுண்பொருளாம் சிற்பரத்தினூடே நோக்கும்

தீர்க்கமுடன் ஆதார வகையும் தாண்டிச்

திருநயனம் நாசி நெற்றி நடுவே பார்த்துப்

போக்கறிந்து இங்கு இந்த நிலை நோக்க வல்லார்

புரிசடையோன் தன்னுடைய புதல்வர் ஆவார்

ஆக்கமுடன் அருட்சுடர் போல் குருவைத் தானே

அனுதினமும் நோக்கி நிற்பார் ஆசானாமே

6

ஆசானும் ஈசானும் ஒன்றே ஆகும்

அவன் அவளும் ஒன்றாகும் அதுதானாகும்

பேசாத மந்திரமும் இதுவே யாகும்

பேரொளியின் வடிவாகும் பேரும் ஆகும்

நேசாரும் கலைகள் எல்லாம் தானே யாகும்

நிலையான ஓங்கார பீடமாகும்

ஈசானை ஆசானாய்க் காணும் போக்கிங்கு

இன்பமுடன் கைலாசம் எய்தலாமே

7-8 தொகு

7

எய்திய பரசிவத்தின் மூலம் தன்னில்

இருசுடரும் உதித்து ஒடுங்கும் இடமேயென்று

மெய்தொழியும் சுழுமுனையே கம்பமாகி

மெய்ப்பொருளாம் சோதியென மேவி நிற்கும்

இவ்வகையே மூலமெனும் பாதம் தன்னை

இருநேர மற்றிடத்தே இறைஞ்சிக் காணே

காண்பது தான் பேரொளியின் காட்சியாகும்

காணரிய பொருளாகும் காட்டும் போதே

8

ஆண் பெண்ணாய் அலியாகி அடியுமாகி

அப்பாலைக்கு அப்பாலாய் அமர்ந்த சோதி

வீண் பயிலும் வேதம் எல்லாம் தேடிக்காணா

வெறும் பாழதாகியே மேவி நின்றார்

சேண் பயிலும் செக சோதி மூலம் தன்னைத்

தேடரிய பாதம் என்றே தெளிந்து நோக்கே

9-10 தொகு

9

தேளிவரிய பாதமது அகாரம் ஆகிச்

சிற்பரமும் தற்பரமும் தானேயாகி

அழிவரிய சோதியது தானே ஆகி

அடி நடுவு முடியாகி அமர்ந்து நின்று

மொழிவரிய முதலாகி மூலமாகி

முச்சுடரும் தானாகி மிடிந்த சோதி

சுழியினிலே மெனையாகிக் கோபமாகிச்

சொல்லரிய எழுத்தொன்றே தொகுத்துப் பாரீர்

10

தொகுப்பது தாம் மந்திரங்கள் கருவி நூல்கள்

சொல்லரிய தத்துவங்கள் தம்மை எல்லாம்

வகுத்துடனே இவற்றை எலாம் கண்டு நீங்கி

வாகான உடல் உயிரை வகையார் கண்டு

பகுப்புடனே சேராமல் பாதம் தன்னை

பரகதிக்கு வழியெனவே பற்றிக் கொண்டு

விகற்பம் இலா மூலமதில் நின்ற சோதி

மேலான பாதம் என்றே மேவி நில்லே

11 தொகு

11

மேவியதோர் சற்குருவின் பாதம் தன்னை

மெய்ஞானம் என்றதனை மேவிக்கொண்டு

ஆவியுடல் காயம் எல்லாம் அறியது பார்த்தே

அத்தனார் வடிவம் என்றே அறிந்து கொண்டு

பாவனையுள் ஆனவெல்லாம் விட்டு நீங்கிப்

பகலிரவு மற்றிடத்தே கருத்தை வைத்துச்

சீவனையும் சிவந்தனையும் ஒன்றாய்த் தானே

திருமூலர் பாதம் ஒன்றித் திடமாய்க் காணே
  • முற்றும்
"https://ta.wikisource.org/w/index.php?title=திருமூல_நாயனார்_ஞானம்&oldid=973779" இலிருந்து மீள்விக்கப்பட்டது