திருவாசகம்/திருவம்மானை

(திருவண்ணாமலையில் அருளியது - தரவு கொச்சகக் கலிப்பா / ஆனந்தக் களிப்பு )

    செங்கண் நெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய
    பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி
    எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொண்டு
    தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான்
    அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும்
    அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 175

    பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார்
    ஆராலுங் காண்டற் கரியாற் கரியான் எமக்கெளிய
    பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி
    வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த
    ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும்
    பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய். 176

    இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும்
    அந்தரமே நிற்கச் சிவனவனி வந்தருளி
    எந்தரமும் ஆட்கொண்டு தோட்கொண்ட நீற்றனாய்ச்
    சிந்தனையை வந்தருக்குஞ் சீரார் பெருந்துறையான்
    பந்தம் பறியப் பரிமேற்கொண்டான்தந்த
    அந்தமிலா ஆனந்தம் பாடுதுங்காண் அம்மானாய். 177

    வான்வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனும்
    கான்நின்று வற்றியும் புற்றெழுந்துங் காண்பரிய
    தான்வந்து நாயேனைத் தாய்போல் தலையளித்திட்டு
    ஊன்வந்துரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து
    தேன்வந்த முதின் தெளிவின் ஒளிவந்த
    வான்வந்த வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 178

    கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை
    வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக்
    கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை
    வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத்
    தில்லை நகர்புக்குச் சிற்றம் பலம்மன்னும்
    ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய். 179

    கேட்டாயோ தோழி கிறிசெய்த வாறொருவன்
    திIட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
    காட்டா தனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டித்
    தாள்தா மரைகாட்டித் தன்கருணைத் தேன் காட்டி
    நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடெய்த
    ஆள்தான்கொண்டாண்டவா பாடுதுங்காண் அம்மானாய். 180

    ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச்
    சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின்
    மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை
    நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத்
    தாயான தத்துவனைத் தானே உலகேழும்
    ஆயானை ஆள்வானப் பாடுதுங்காண் அம்மானாய். 181

    பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
    பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
    விண்சுமந்த கீர்த்தி வியன்மண்ட லத்தீசன்
    கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
    மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு
    புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய். 182

    துண்டப் பிறையான் மறையான் பெருந்துறையான்
    கொண்ட புரிநூலான் கோலமா ஊர்தியான்
    கண்டங் கரியான்செம் மேனியான் வெண்ணீற்றான்
    அண்டமுத லாயினான் அந்தமிலா ஆனந்தம்
    பண்டைப் பரிசே பழவடியார்க் கீந்தருளும்
    அண்டம் வியப்புறுமா பாடுதுங்காண் அம்மானாய். 183

    விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை
    மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்
    தண்ணார் தமிழளிக்குந் தண்பாண்டி நாட்டானைப்
    பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற்
    கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
    அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய். 184

    செப்பார் முலைபங்கன் தென்னன் பெருந்துறையான்
    தப்பாமே தாளடைந்தார் நெஞ்சுருக்கும் தன்மையினான்
    அப்பாண்டி நாட்டைச் சிவலோகம் ஆக்குவித்த
    அப்பார் சடையப்பன் ஆனந்த வார்கழலே
    ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தா ருள்ளிருக்கும்
    அப்பாலைக் கப்பாலைப் பாடுதுங்காண் அம்மானாய். 185

    மைப்பொலியுங் கண்ணிகேள் மாலயனோ டிந்திரனும்
    எப்பிறவி யுந்தேட என்னையுந்தன் இன்னருளால்
    இப்பிறவி ஆட்கொண்டு இனிப்பிறவா மேகாத்து
    மெய்ப்பொருட்கண் தோற்றமாய் மெய்யே நிலைபேறாய்
    எப்பொருட்தந் தானேயாய் யாவைக்கும் வீடாகும்
    அப்பொருளாம் நஞ்சிவனைப் பாடுதுங்கான் அம்மானாய். 186

    கையார் வளைசிலம்பக் காதர் குழையாட
    மையார் குழல்புரளத் தேன்பாய் வண்டொலிப்பச்
    செய்யானை வெண்ணீ றணிந்தானைச் சேர்ந்தறியாக்
    கையானை எங்குஞ் செறிந்தானை அன்பர்க்கு
    மெய்யானை அல்லாதார்க் கல்லாத வேதியனை
    ஐயா றமர்ந்தானைப் பாடுதுங்காண் அம்மானாய். 187

    ஆனையாய்க் கீடமாய் மானுடராய்த் தேவராய்
    ஏனைப் பிறவாய்ப் பிறந்திறந் தெய்த் தேனை
    ஊனையும் நின்றுருக்கி என்வினையை ஒட்டுகந்து
    தேனையும் பாலையுங் கன்னலையும் ஒத்தினிய
    கோனவன்போல் வந்தென்னைத் தன்தொழும்பிற் கொண்டருளும்
    வானவன் பூங்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 188

    சந்திரனைத் தேய்த்தருளித் தக்கன்தன் வேள்வியினில்
    இந்திரனைத் தோள்நெரித்திட் டெச்சன் தலையரிந்து
    அந்தரமே செல்லும் அலர்கதிரோன் பல்தகர்த்துச்
    சிந்தித் திசைதிசையே தேவர்களை ஓட்டுகந்து
    செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
    மந்தார மாலையே பாடுதுங்காண் அம்மானாய். 189

    ஊனாய் உயிராய் உணர்வாய்என்னுட்கலந்து
    தேனாய் அமுதமுமாய்த் தீங்கரும்பின் கட்டியுமாய்
    வானோ ரறியா வழியெமக்குந் தந்தருளும்
    தேனார் மலர்க்கொன்றைச் சேவகனார் சீரொளிசேர்
    ஆனா அறிவாய் அளவிறந்த பல்லுயிர்க்கும்
    கோனாகி நின்றவா கூறுதுங்காண் அம்மானாய். 190

    சூடுவேன் பூங்கொன்றை சூடிச் சிவன்திரள்தோள்
    கூடுவேன் கூடிமுயங்கி மயங்கிநின்று
    ஊடுவேன் செவ்வாய்க் குருகுவேன் உள்ளுருகித்
    தேடுவேன் தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன்
    வாடுவேன் பேர்த்தும் அலர்வேன் அனலேந்தி
    ஆடுவேன் சேவடியே பாடுதுங்காண் அம்மானாய். 191

    கிளிவந்த மென்மொழியாள் கேழ்கிளரும் பாதியானை
    வெளிவந்த மாலயனும் காண்பரிய வித்தகனைத்
    தெளிவந்த தேறாலச் சீரார் பெருந்துறையில்
    எளிவந் திருந்திரங்கி எண்ணரிய இன்னருளால்
    ஒளிவந்தென் உள்ளத்தின் உள்ளே ஒளி திகழ
    அளிவந்த அந்தணனனைப் பாடுதுங்காண் அம்மானாய். 192

    முன்னானை மூவர்க்கும் முற்றுமாய் முற்றுக்கும்
    பின்னானைப் பிஞ்ஞசுனைப் பேணு பெருந்துறையின்
    மன்னானை வானவனை மாதியலும் பாதியனைத்
    தென்னானைக் காவானைத் தெண்பாண்டி நாட்டானை
    என்னானை என்னப்பன் என்பார்க்கட் கின்னமுதை
    அன்னானை அம்மானைப் பாடுதுங்காண் அம்மானாய். 193

    பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான்
    கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன்னடியார்
    குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிச்
    சுற்றிய சுற்றத் தொடர் வறுப்பான் தொல்புகழே
    பற்றியிப் பாசத்தைப் பற்றறநாம் பற்றுவான்
    பற்றியபே ரானந்தம் பாடுதுங்காண் அம்மானாய். 194

    திருச்சிற்றம்பலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=திருவாசகம்/திருவம்மானை&oldid=1116271" இலிருந்து மீள்விக்கப்பட்டது