நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/திரு. P. D. சம்பந்தம்

திரு. P. D. சம்பந்தம்

இவரை நான் முதன் முதல் பார்த்தது ஜகன்னாத ஐயர் பாய்ஸ் கம்பெனியில். அது முதல் இவர் சாதாரணமாக ஹாஸ்ய பாகங்களையே ஆடி வந்தார். இவர் நடித்த முக்கிய பாகங்கள் ரத்னாவளியில் பப்பரவாயன், மனோகராவில் வசந்தன், சபாபதி நாடகங்களில் சாதாரணமாக வேலைக்கார சபாபதி முதலிய பாகங்களாம். பிறகு சினிமாவில் அனேக சில்லரை வேடங்கள் தரித்திருக்கிறார், இவருடைய முக்கியமான நற்குணம் என்னவென்றால் தன் உடல் நலத்தை எப்பொழுதும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொண்டிருப்பதேயாம். இப்பொழுது நடுவயதிற்கு மேற்பட்டவராயினும் இன்னும் சினிமாவில் அடிக்கடி நடித்து வருகிறார். நான் முக்கியமாக இவரைப் பற்றி எழுத வேண்டியது ஒன்றுளது. சுகுண விலாச சபை நாடகங்களை மிகவும் கவனமாய் பார்த்ததினாலேயோ அல்லது கந்தசாமி முதலியார் அவருக்கு கற்பித்ததினாலேயோ எனது நாடகங்களில் எல்லா பாகங்களை மற்றவர்களுக்கு கற்பிப்பதில் நிபுணராயிருக்கிறார். யாராவது எனது நாடகங்களை மேடையிலோ அல்லது பேசும்படத்திலோ ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டால் அதில் யார் யார் எப்படி நடிக்க வேண்டுமென்று அறியவேண்டுமாயின் P. D. சம்பந்தத்தை போய் கேட்டுக் கொள்ளுங்கள் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இவர் இன்னும் பல்லாண்டு திடகாத்திரனாய் வாழ்வாராக.