நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/ஸ்ரீ. கே. நாகரத்தினம் ஐயர்

ஸ்ரீ. கே. நாகரத்தினம் ஐயர்

எனது ஆருயிர் நண்பர் C. ரங்கவடிவேலு காலகதி யடைந்த பிறகு இவரை என்னுடன் முக்கிய பாகங்கள் நடிப்பதற்காக தேர்ந்தெடுத்தேன். இவர் சங்கீதம் மிகவும் நன்றாயிருந்தது. முகக்களையும் நன்றாயிருந்தது. இதில் ஒரு வேடிக்கை யென்ன வென்றால் அது வரையில் ஆண் வேடம் தரிப்பதற்கே விரும்பினவர் நான் இவரிடம் "உனக்கு ஆண் வேடம் சரியாயில்லையப்பா ஸ்திரீ வேடம் தான் சரியாயிருக்கும்" என்று அவர் எண்ணத்தை மாற்றினேன். இவர் என்னுடன் 1923-வது வருட முதல் அவர் கால பரியந்தம் நடித்து வந்தார். ஏறக்குறைய ரங்க வடிவேலு எடுத்துக் கொண்ட முக்கிய பாத்திரங்களை யெல்லாம் நடித்தார். ஆயினும் வள்ளி வேடத்திலும், அபலா வேடத்திலும், (அமலாதித்யனில்) ரங்க வடிவேலுவைப் பார்க்கிலும் கொஞ்சம் நன்றாகவே நடித்தார் என்று நான் சொல்ல வேண்டும். இவர் கடைசி காலத்தில் மதுரையில் உத்தியோகத்தில் மாறியபோது நான் அங்கு சென்று நான்கைந்து முறை மதுரை நாடக சபையில் இவருடன் நடித்துள்ளேன்.