நான் தருகின்றேன் 1000 கோடிக்கு திட்டம்

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




நான் தருகின்றேன்
1000 கோடிக்கு திட்டம்

 

*

அறிஞர் அண்ணா

 

*

மக்கள் பதிப்பகம்
40, நாட்டுப்பிள்ளையார் கோயில் தெரு,
சென்னை - 1.

முதற்பதிப்பு : 3000

ஜூலை: 1961.
விலை : 50 புதுக்காசு

 

[1000 கோடி ரூபாய் முதலீடு செய்து வளம் கான அரசினருக்கு அறிஞர் அண்ணா அளித்த திட்டம். தமிழாக்கம் : தி. சு. கிள்ளிவளவன்.]

 

இராசேந்திரன் அச்சகம்,

சென்னை-7.

நான் தருகின்றேன்
1000 கோடிக்கு திட்டம்



திட்டக் குழுவில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கும் பொருட்டு அனைத்து கட்சிகளுக்கும் ஆளும் கட்சியினர் அன்பழைப்பு விடுத்திருப்பதானது வரவேற்கத்தக்க ஒன்றாகும். அன்பழைப்புக்குப் பின்னால் பொதிந்து கிடக்கும் நோக்கம் உள்ளபடியே பாராட்டப்பட வேண்டியதாகும். எந்தக் கட்சியினராக இருந்தாலும் அந்த நோக்கத்தினைப் புறக்கணிக்க முடியாது.

இன்றைய அரசியல் அமைப்பில் திட்டம் என்பதானது பெருமளவுக்கானதோர் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது. திட்டத்தின் அளவு பெரிதாக பெரிதாக, நம்முடைய நம்பிக்கைகள் வளர்ந்து கொண்டே போவதானது இயற்கையானதாகும். எனவே திட்டத்தினைத் தொடர்ந்து மதிப்பிட்டுப் பார்க்க வேண்டியது இன்றியமையாததாகிறது. கூடுமான வரையில் கட்டுப்பாடுகளை ஓரளவு தளர்த்திக் கொள்ள வேண்டும். பல்வேறுபட்ட நிலையிலும், புதிய உருவம் தரக்கூடிய மாதிரியாகவும், கூடுதலான ஏற்பாடுகள் செய்யக்கூடிய முறையிலும், திருத்தி அமைக்கக்கூடிய வகையிலும் நகல் திட்டத்தின் அமைப்பு இருக்க வேண்டும்.

இத்துறையில், ஆளும் கட்சியினருடன் ஒத்துழைப்பு என்பதானது திட்டங்களை உருவாக்கவும், அதனை நிறைவேற்றவும் சுறு சுறுப்பான முறையிலும், அனுதாபத்துடனும் இருக்கும் என்பதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதற்கண் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். எனவே என்னுடைய கட்சி மனப்பூர்வமான ஒத்துழைப்பினை அளிக்க முன்வருகிறது.

பல்வேறுபட்ட அரசியல் கட்சிகளின் அடிப்படைக் கொள்கைகளில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன என்பதை இத்தருணத்தல் நாம் நினைவில் கொள்ளவேண்டும். என்றாலும், குறிப்பிடத்தக்க அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்ற முறையில் நாங்கள் அரசியல் கட்சியினரால் உருவாக்கப்பட்டிருக்கும் திட்டத்தின் வரையளவுக்குட்பட்ட விதத்தில் தான் எங்களுடைய ஆலோசனைகளை எடுத்துக்கூறுவதாக இருக்கமுடியும்.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால், ஆளும் கட்சியினரால் கையாளப்பட்டு வரும் பொருளாதாரக் கொள்கையானது ஒரு கலப்படமான பொருளாதாரத் திட்டம் என்று தான் கூறவேண்டும். மேலும் இத்திட்டத்தின் அடிப்படையாக அமைந்துள்ள அரசியல்-பொருளாதாரத் தத்துவத்தைக் கூறுவதென்றால் "சோஷலிச மாதிரி" என்று தான் சொல்ல வேண்டும். தி. மு. கழகம் குழப்பமற்ற, ஒரு திட்ட வட்டமான தத்துவார்த்தத்தையே விரும்புகிறது.

அரசியல், பொருளாதார, சமூகக் கொள்கைகளைத் திருத்தியமைக்கவோ, கலந்துரையாடவோ திட்ட குழுவின் அமைப்பு முறையில் வாழி வகைகள் இல்லாத நிலையில் தான் இருக்கிறது.

நாங்கள் செய்யக்கூடிய தெல்லாம் அதிகமான அளவில் நன்மைகளைப் பெறவும், சுமுகமான முறையில் திட்டங்கள் நிறைவேற்றுவதற்கான முறையிலும் உதவியாகத்தான் இருக்கமுடியும். ஆனால் திட்டக்குழுவின் நிர்வாக இயந்திரம் முற்றிலும் ஆளுங் கட்சியினரால் உருவாக்கப்பட்டதேயாகும்.

எனவே தி. மு. கழகத்தினர் வழங்க இருக்கும் ஆலோசனைகள், குறிப்பிடும் குறைபாடுகள் அல்லது ஏனைய கட்சியினரால் வழங்கப்படும் ஆலோசனைகள் அனைத்தும் ஆளும் கட்சியினர் கடைப்பிடித்து வரும் கலப்படமான பொருளாதாரத் திட்டத்தால் அதனுடைய உண்மையான தத்துவார்த்தங்களைப் புரிந்து கொள்ள முடியாத நிலை இயற்கையாகவே அமைந்து கிடக்கிறது. மக்களின் எதிர்காலம், அவர்களின் முன்னேற்றம் ஆகியவைகளை உருவாக்க திட்டம் இன்றியமையாத ஒரு தேவை என்ற ஒரு உணர்வுதான் பொதுவான ஒரு அடிப்படையாக அமைந்திருக்கிறது.

மாநிலத்தின் திட்டங்கள் அனைத்தும் உயிரோட்டம் அற்ற முறையில் அணைத்தும் இருக்கிறது என்பதனை திட்டம் ஒன்றினை உருவாக்க முயற்சிப்பவர்கள் உணரத்தவறிவிட்டனர் என்ற கருத்தினை மறந்துவிடுவதற்கில்லை. அதனால் கிடைக்கக் கூடிய ஒரு சில பலனும் மத்திய அமைச்சரவையினரால் உருவாக்கப்பட்டுள்ள திட்டக்குழுவின் மூலமாகத்தான் பெறமுடிகிறது.

மரநிலத்தின் முயற்சி ஓரளவிற்கு உண்டு என்ற உண்மை ஒருபுறம் இருந்தாலும் பெரிய அளவிற்கான திட்டங்கள் தீட்டும் அதிகாரம் அனைத்தும் மத்திய ஆட்சியாளரிடத்தில்தான் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட திட்டங்களை ஏற்று நிறைவேற்றுவதற்கு மத்திய சர்க்காரைத் தூண்டுவதற்கு மாநில ஆட்சியினருக்கு வசதியாக இருக்கிறது.

எனவே, மாநிலத் திட்டங்களானது, அதன் போக்கிலேயே முக்கியத்துவம் பெற்றதோர் நிர்வாக அமைப்பினைக் கொண்டதாகவே இருக்கிறது.

நிறைவேற்றப்பட்ட இரண்டு திட்டங்களிலும் பெரும் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட ஆளுங்கட்சி மூன்றாவது திட்டத்தையும் நிறைவேற்றக்கூடிய பேராற்றல் தமக்குருப்பதாக நம்பிக்கொண்டிருப்பது இயற்கையின்பாற்பட்டதாகும். மேலும் அதன் மூலம் உருவாக்கப்பட்ட பலன்கள் அனைத்தும் அனைவராலும் விரும்பி ஏற்றுக் கொள்க்கூடிய முறையில் அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இரண்டு திட்டங்களும் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என்ற பேருண்மையை ஏனைய அரசியல் கட்சிகள் மறந்துவிடக்கூடாது. மறந்துவிடுவதற்கும் இல்லை. குறை பாடுகளை நாம் உணரும்போது, நம்முடைய முயற்சிகளை சரிப்படுத்திக்கொள்ள மேலே கூறிய உண்மைகளை கவனத்தில் கொள்ளவேண்டும் என்று ஆளுங்கட்சியினரை வற்புறுத்தவேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம்.

மக்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் தேசீய வருமானத்தை உயர்த்துவதே முடியுந்தருவாயில் உள்ள இரண்டாவது திட்டத்தின் முதலாவதான தலையாய அடிப்படை நோக்கம் என்று கூறப்பட்டது.

இந்த நோக்கம் தவறுடையது என்று யாரும் கூறுவருவதற்கில்லை. ஆனால் புதியதோர் திட்டத்தை செயல் படுத்த முற்படும்போது, நடைமுறையில் ஏற்கெனவே உருவான உறுப்படியான பலனை நாம் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். வாழ்க்கைத் தரத்தில் நாம் முன்னேற்றம் கண்டுள்ளோமா?

தேசீய வருமானம், தனி நபர் வருவாய் ஆகியவை உயர்ந்திருக்கிறது என்பது உண்மையே. ஆனால் வாழ்க்கைச் செலவினங்கள் அதிகப்பட்டுவிட்டதினால், தனிநபர் வருமானத்தின் மூலம் ஏற்பட்ட பலன் முற்றிலும் பயனற்றுப்போய்விட்டது.

இந்தப்பேருண்மையைக் கருத்தில் கொண்டு, மூன்றாவது திட்டத்தை உருவாக்கும் தருணத்திலும், அதனூடைய நடைமுறைக்காலத்திலும், விலைவாசி உயர்வுகளைக் கட்டுப்படுத்தி மக்கள் வாழ்க்கைத்தரத்தைச்சீர்செய்யக் கூடிய வகையில் இணைந்திருக்கவேண்டும்.

பணவீக்கம், பற்றாக்குறை நிதி நிலை ஆகிய இரண்டும் ஆபத்தான கட்டங்கள் என்று பொருளாதார மேதைகள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். அந்நியச் செலாவணிப் பிரச்சினை மிகவும் தொல்லைகளுக்கிடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

ஆனால், இவைகளைக் கட்டுப்படுத்தவோ, திருத்தியமைக்கவோ நம்முடைய வறையளவுக்கு அப்பாற்பட்ட மத்திய அரசின் கடமை.

அவ்வப்போது ஏற்படக்கூடிய அதிர்ச்சிகள், நன்மை, தீமை ஆகியவைகளை மட்டும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படலாம்.

எனவேதான், மாநிலத் திட்டத்திற்கான அளவினங்கள், அமைப்பு முறைகள் இன்னபிற அனைத்தும் உருவாக்கக்கூடிய அடிப்படை அதிகாரத்தை மத்திய அரசு பெற்றிருக்கிறது.

அடிப்படைத் தொழிற்சாலைகள், கனரக தொழிற்சாலைகள் இரண்டும் முக்கியத்துவம் பெற்றதோர் தீவிரமான தொழில் வளர்ச்சி திட்டத்தின் இரண்டாவது நோக்கமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

அடிப்படைத் தொழிற்சாலைகளும், கனரக தொழில்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஏனெனில் அவைகள்தான் பொருளாதார சீரமைப்புக்கு பல்வேறு துணைத்தொழில்கள் தோன்றுவதற்கு மூலகாரணமாய் அமைந்திருக்கிறது.

இது குறித்து கடந்த இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு வந்திருக்கிறது. மிகப்பிரமாண்டமானவை என்று பண்டித நேரு வால் வர்ணிக்கப்படும் அனைத்தும், ஏனைய மாநிலங்களைப் புறக்கணிக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது.

பெரிய தொழிற்சாலைகள் என்ற பட்டியலின் வரிசையில், இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் நமது மாநிலத்திற்கு ரூ.76 லட்சம் தான் ஒதுக்கப்பட்டது.

மத்திய சர்க்கார் நிர்வாகத்தின் கீழ் ஐம்பது கோடி ரூபாயில் நெய்வேலித் திட்டம் இருக்கிறது என்று கூறி புகலிடம் தேடிக்கொள்வதோடு அத்துடன் மன நிறைவு கொள்கிறோம்.

ஆனால் பல்வேறு அரசியல் கட்சிகள் வற்புறுத்தியும் கூட அடிப்படை, தொழில்களுக்கும், கனரகத் தொழிற்சாலைகளுக்கும் வேண்டிய தேவையான பொருள்கள் இன்று வரை பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறது.

எனவே இந்த மாநிலத்தில் அடிப்படை, கனரகத் தொழிற்சாலைகள் வளருவதற்கான முறையில் சுறுசுறுப்பாக கவனம்செலுத்துவதோடு கருணையும் காட்டி போதுமான நிதி ஒதுக்க வேண்டும்.

பல்வேறு மாநிலத்திலும் தொழிற் வளர்ச்சியில் காட்டப்பட்டு வந்த பேதம் மக்கள் மத்தியில் கசப்புணர்ச்சியை வளர்த்துவிட்டிருக்கிறது என்பது தற்போது நன்கு உணரப்பட்டு வருகிறது. ஏற்றத்தாழ்வுகளை சரி செய்யும் பொருட்டு கட்சிகளின் கோரிக்கைகள் அணைத்தும் புறக்கணிக்கப்பட்டுவிட்டன.

எனவே இந்த மாநிலம் உறுதியான உள்ளத்துடனும், திடமான முயற்சியுடனும் தங்களது பலமான கோரிக்கையை மத்திய சர்க்கார் முன்வைக்கவேண்டும். நாட்டின் சரிசமமான வளர்ச்சியை உணர்ந்து அவைகளுக்கு உறுதியளிக்கும் முறையில் முயற்சி எடுத்துக்கொள்கின்ற தன்மையில், தொழிற்சாலைகள் முறையான வகையில் பகர்ந்தளிக்கவேண்டியது மிகவும் இன்றியமையாததாகும்.

தொழில் வளர்ச்சிக் குறைவுக்கு நிலக்கரி பற்றாக்குறை என்று காரணம் காட்டப்படுகிறது. இந்த வாதத்திற்கு ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை.

தீர்க்க தரிசனத்தோடு துணிவான முறையில் திட்டமிடுவார்களானால் இயற்கைச் செல்வங்களைத் தேடிப் பிடிப்பதோடல்லாமல் இயற்கைச் சக்திகளையும்வென்று தான் வயப்படுத்தி ஆக்க வேலைகளுக்கும் பயன்படுத்திமிகுந்த பலனைக் காணலாம்.

இயற்கை வளங்கள் குறைந்து காணப்படும் நாடுகள் அனைத்தும் வியக்கத்தக்க முறையில் தொழில் மயமாக்கப்பட்டிருக்கிறது. ஜப்பான் நாடு அதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

புனரமைப்பிற்கான அனைத்துத்துறையிலும் நாட்டங்கொண்டு முயற்சி எடுக்கப்பட்டு வரும்போது துவக்கத்திற்கான சில வசதிக்குறைவுகளைச் சுட்டிக்காட்டுவதானது மன்னிக்கமுடியாத குற்றமாகும்.

“தேசீயக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கப் போனால் அந்தந்தப் பகுதியிலிருந்து கிடைக்கக்கூடிய இயற்கை வளங்களை கொண்டு கூடுமான வரையில் அபிவிருத்தி காணுவதே திட்டத்தின் பலன் தரக்கூடிய நோக்கமாக இருக்கவேண்டும்.“

“தேசீய திட்டக் குழுவினர் இந்த முறையில் விஞ்ஞான ரீதியில் தொழில்களைப் பரவலாகத் திட்டமிட்டு நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உற்பத்திப் பொருள்களை உண்டாக்கக்கூடிய தொழில்களை ஒழுங்கான முறையில் நடத்திச்செல்லவேண்டும். எந்த பகுதியிலும் கிடைக்கக்கூடிய வளங்கள் அபிவிருத்தியடையாத நிலை ஏற்படக்கூடாது.“

“இதன் மூலகாக வசதிகள் கொண்ட ஒவ்வொரு பகுதியிலும் உள்ளூரில் உள்ள தொழிலாளர்களுக்கும் தேவையான வேலை வாய்ப்புத்தேடித்தரமுடியும். உள்நாட்டு வளர்ச்சிக்குத் தேவைப்படும் பணிகளுக்கு அந்தந்தப் பகுதியில் உள்ள தொழிலாளர் வர்க்கம் முதல் உரிமை பெற்றவர்களாக இருக்கின்றனர்.

உள்நாட்டில் கிடைக்கக்கூடிய வளங்கள், உள் நாட்டுத் தேவைகள், உள்நாட்டு வாய்ப்புகள் ஆகியவைகளைக் கூர்ந்து கவனித்துப் பார்த்து தக்கமுறையில் துரிதமாகப் பயன்படுத்திக்கொள்ளும் விதத்தில் நிர்வாக இயந்திரம் உருப்படியான வகையில் செயல்படுமானால் எந்த மாநிலம் அல்லது ராஜ்யம் அல்லது பிராந்தியம் பற்றாக்குறையானது என்றும் எந்த மாநிலம் மிதமிஞ்சியது என்றும் நிர்வாக அதிகாரிகள் திட்ட வட்டமாக நிர்ணயிக்க ஏதுவாக இருக்கும்“

“அப்படி நிர்ணயிக்கப்பட்ட பின்னர் பொதுநிதியிலிருந்து பற்றாக்குறைப் பகுதிகளைச் சரிசெய்ய வழிவகைகளை மேற்கொள்ளவேண்டும். அல்லது மிதமிஞ்சிய பகுதிகளில் இருந்து கிடைக்கக்கூடிய இலாபத்தை ஒவ்வொரு துறையிலும் பொதுவான நன்மையை உத்தேசித்து பயன்படுத்தப்பட வேண்டும்.“

என்று பேராசிரியர் கே. டி. ஷா. சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மேற்கண்ட ஆலோசளை நடைமுறைக்கு ஏற்றுக் கொள்ளப்படுமானால், தொழில்துறையில் முன்னோடியாக உள்ள மாநிலங்கள் பொதுநிதியிலிருந்து அதிகத்தொகை பெறுவதைக் காட்டிலும், தொழில் துறையில் மிகவும் பின் தங்கியுள்ள இந்த மாநிலம் பொதுநிதியிலிருந்து அதிகத் தொகை பெறுவதற்கு உரிமை கொண்டதாக இருக்கும்.

எனவே, பொதுத் துறையில் சேலம் உருக்கு, அலுமினியத் தொழிற்சாலைகளை உடனடுயாக மேற்கொள்ள வேண்டும்.

இதனைச் சார்ந்த வேறு பல தொழிற்சாலைகள் தொடங்குவதற்கும் போதுமான வாய்புகள் இருக்கின்றன.

உதாரணத்திற்கு, கிடைக்கக்கூடிய கணிசமான மாங்கனீஸ் தாதுப்பொருளை ஏற்றுமதி செய்வதைக்காட்டிலும் அதனை ஏன் பயன்படுத்தக்கூடாது என்பதில் நம்முடைய கவனத்தை அதிகம் செலுத்தலாம்.

திட்டமிடப்பட்டுள்ள சேலம் உருக்குத் தொழிற்சாலை, ஏனைய மாநிலங்களில் முழு அளவில் இயங்கி வரும் உருக்குத் தொழிற்சாலைகளின் மாதிரி, சிறிய அளவினதாகவே இருக்கும் என்ற எண்ணம் பலருடைய உள்ளத்தில் இருக்கிறது. இந்த எண்ணத்தைப் போக்கி, வேறு பல தொழில்களுக்குத் தேவையான இரும்பு உற்பத்தியை உற்பத்தி செய்யமுடியும் என்ற எண்ணத்தை உள்ளத்தில் கொண்டு மாநில சர்க்கார் பெரிய அளவில் திட்டம் தீட்டவேண்டும்.

சேலம் உருக்கைப் பயன்படுத்தி பொருள்களைக் கொண்டு செல்லும் இரயில்வே பெட்டிகளைத் தயாரிக்க முடியும்.

எண்ணெய் வாய்ப்புக்கான ஆராய்ச்சிகளும் காவேரிப்படுகையில் நடத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இதுபோன்ற திட்டங்கள் நிறைவேற காலதாமதமாகும் என்றாலும் மனப்பூர்வமான துவக்க வேலைகளை மேற்கொள்ளவேண்டும். அத்துடன் இந்த மாநிலத்தில் விரிவானதோர் நிலவள ஆராய்ச்சியும் போதுமான அளவில் மேற்கொள்ளவேண்டும்.

போக்குவரத்துத் துரிதமாக முன்னேறியிருப்பதால் மோட்டார் சாதனங்களுக்கு பாடி கட்டும் தொழிற்சாலைகள் இந்த மாநிலத்தில் குறைந்தது ஆறு இடங்களிலாவது மேற்கொள்ளலாம்.

இந்த மாநிலத்தில் கால்நடைகளில் இருந்து கிடைக்கும் துணைப் பொருள்களிலிருந்து உருவாக்கப்பட்டிருக்கும் தொழிற்சாலைகள் அதாவது இறைச்சி தோல், தோல் சாமான்கள், ரோமங்களிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்கள், கம்பளம், எலும்பு, பால், தசைகள், மிருகங்களின் குளம்பு அல்லது கொம்புகள் ஆகிய தொழிற்சாலைகள் பெரிய அளவில் பொதுத்துறையில் உருவாக்கப்படவேண்டும்.

கைக்கெடியாரம் செய்தல், விஞ்ஞான சாதனங்களுக்குரிய மெல்லிய நுணுக்கமான சாதனங்கள் தயாரித்தல். விளையாட்டுப் பொருள்கள், தையல் இயந்திரங்கள், மின்சாரப் பொருள்கள். இன்னும் இவைபோன்ற சிறு ரக தொழிற்சாலைகள் நிறுவ திட்டமிடப்படவேண்டும்.

இது போன்ற சிறு ரக தொழிற்சாலைகளின் நடைமுறையை அறிந்துவர ஜப்பானுக்கும், ஸ்விட்சர்லாந்து நாட்டுக்கும் மாநில சர்க்கார் குழு ஒன்றை அனுப்பிவைக்கவேண்டும்.

முந்திரியிலிருந்து கிடைக்கக்கூடிய துணைப்பொருள்களை பிளாஸ்டிக் தொழிலுக்குப் பயன்படக்கூடிய சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து பார்த்து அவைகளை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

மூலிகைகள் கிடைக்கக்கூடிய இடங்களில் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறுவக்கூடிய சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
இரண்டாவது ஐந்தாண்டு நகல் திட்டத்தில் காகிதத் தொழிற்சாலை துவங்குவதற்கான இன்றியமையாத அவசரத்தேவை குறித்தும் வற்புறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தத் திட்டம் உருப்படியான பலனைத் தரவில்லை. நீலகிரி மலைப்பிராந்தியத்திலிருந்து கிடைக்கக்கூடிய மரப்பட்டை, மூங்கில் ஆகியவைகளைக்கொண்டும், தஞ்சையில் உள்ள சர்க்கரை ஆலைகளிலிருந்து கிடைக்கக்கூடிய துணைப்பொருள்களைக் கொண்டும் இந்த இரண்டு பிராந்தியங்களிலும் காகித தொழிற்சாலைகள் நிறுவுவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.

ஜிப்சம் என்ற ஒரு வகை கனிப்பொருள் அளவில் கணிசமாகக் கிடைக்கிறது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் மிகுந்து காணப்படும் இந்தக் கனிப்பொருளை முறையாகவும், இலாபந்தரக்கூடிய வகையிலும் பயன்படுத்தி அந்த கிகா அமிலம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றும் நிறுவலாம்.

சர்க்கரை ஆலைகளில் கிடைக்கும் சர்க்கரைப் பாகில் இருந்து கணிசமான அளவில் மின்சார இயக்கத்தை உண்டாக்கக்கூடிய ஒருவித சாராயம் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

இது குறித்து இரண்டு பிரச்னைகள் எழுகின்றன. பொதுவாக அவைகள் பெரிதும் தடையாகவே இருக்கிறது. ஒன்று இவைகளுக்குத் தேவையான இயந்திரங்கள் இறக்குமதி செய்வதில் உள்ள தொல்லைகள், மற்றொன்று இந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான தொழில் நுணுக்கம் ஆகியவைகளாகும்.

ஆனால் இந்தத் தொல்லைகளுக்கு உடனடியாகப் பரிகாரம் தேடத் தவறிவிட்டால், ஏற்கனவே தொழில் துறையில் முன்னேறியுள்ள ஏனைய மாநிலங்களைக் காட்டிலும் இந்த மாநிலம் மிகவும் பிற்போக்கான நிலைக்குப் போய்விடும். எனவே மாநில சர்க்கார், மத்திய சர்க்காரிலிருந்து கிடைக்கக்கூடிய பதில்களைப் பதிவு செய்வதில் மட்டும் மன நிறைவு கொள்ளாமல், இந்த மாநிலத்திற்குத் தேவையான பொருள்களைப் பெறுவதில் உள்ள இறக்குமதி கட்டுப்பாட்டு விதிகளைத் - தளர்த்துவதற்கான விதிமுறைகளை வலியுறுத்த வேண்டும். வேற்று நாட்டுத் தொழில் நுணுக்க நிபுணர்களைப் பயன்படுத்திக்கொள்வதற்கு நாம் வெட்கப்படத் தேவையில்லை. குறிப்பாக ஜப்பான், மற்றும் தொழில் நுணுக்கத்தில் முன்னேறியுள்ள ஏனைய நாட்டுத் தொழில் நுணுக்க வல்லுனர்களைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

நீண்டகால திட்டத்தில் கடினமான உழைப்பின்மூலம் சொந்தத்தில் நம்முடைய தொழில் நுணுக்க வல்லுனர்களை உற்பத்திச் செய்வது என்பது எவ்வளவு சாத்தியமானதாக இருந்தாலும் அதன் காரணமாக ஏற்படக்கூடிய காலதாமதத்தின் மூலம் வேகமாக வளர்ச்சி அடைந்துவரும் நம்முடைய மாநிலத்தின் தொழிலபிவிருத்தியின் எதிர்காலத்தையும், முன்னேற்றத்தையும் தளர்த்தெறிந்துவிடக்கூடியதாக இருக்கக்கூடாது.

இது குறித்து தூதுவாலுவலகத்தின் மட்டத்தின் பல்வேறு நட்புறவு நாடுகளின் துணையை நாடிப்பெறவேண்டும்.

இந்த மாநிலத்தில் போதுமான மக்கள் சக்தியைப் பயன்படுத்தக்கூடிய நிலையில் கைத்தறித் தொழில்கள் இருந்தும், இன்னும் அவைகள் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறது,

உதவி. தள்ளுபடி இன்னும் இதுபோன்ற அணைத்தும் இன்னும் நம்பிக்கை அளிக்கக்கூடிய நிலையிலேயே இருக்கிறது. இத்தொழிலை நிலைநிறுத்தக்கூடிய தேவைகள் என்ன என்பதைப் பார்க்கவேண்டும். மிகவும் பலம் வாய்ந்த வியாபாரப் பெருக்குடைய நிறுவனங்களின் தேவைகளுக்கான கைத்தறித்துணிகள் கிடைப்பதற்கான உத்தரவாதம் இருக்கவேண்டும்.

நம்முடைய ஏற்றுமதி தேவையான அளவுக்குத் தற்போது இல்லை. அவ்வப்போது ஏற்படக்கூடிய அதிர்ச்சிகளிலும், இக்கட்டுகளினாலும் இத்தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டிகுக்கிறது. அமெரிக்கர்களுக்குத் தேவையான கைத்தறி ஆடைகள் எதிர்காலத்தில் நம்பிக்கையூட்டுவனவாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

பெருமளவில் அந்த நாட்டின் தேவையிருப்பதால், இந்தத் தொழில் மாநில ரீதியில் மேற்கொள்ளப்படுமேயானால் இத்தொழிலுக்கு நல்லதோர் எதிர்காலம் இருக்கிறது என்று எண்ணம் எழுவது இயற்கையின் பாற்பட்டதாகும். உத்பத்தியைப் பொறுத்த வரையில் தனிப்பட்டவர்களிடத்திலும் அல்லது கூட்டுறவு நறுவனங்களிடத்திலும் ஒப்படைக்கப்பட்டாலும், அவைகளை ஏற்றுமதி செய்யும் பொறுப்பு முழுவதும் மாநில சர்க்காரின் தலையாய கடமையாக இருக்கவேண்டும்.

கைத்தறி ஆடைகள் மாநில சர்க்காரே பெருமளவில் வாங்கி அவைகளை ஏற்றுமதி செய்யவேண்டும்.

தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புக்களை நிறைவேற்றிக்கொள்கின்ற தன்மையில் ஏற்றுமதியானது தனிப்பட்டவர்கள் வசம் ஒப்படைக்கக்கூடாது.

ஒரு பயனுள்ள காரியத்திற்குப் பல இலட்சக்கணக்கானவர்களைப் பயன்படுத்திக்கொள்கின்ற முறையில் கைத்தறித் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் காவலனாக சர்க்கார் இருக்கவேண்டும்,

கூட்டுறவு ஸ்தாபனங்கள் அமைத்தல், அவர்களுக்குத் தேவையான குடியிருப்பு வசதிகளைத் தேடித்தருதல் இன்னும் இதுபோன்ற வேலைகள் அணைத்தும் மேற்கொள்ளுவதானது சர்க்காரின் வள்ளல் தன்மையை எடுத்துக்காட்டுவதாக அமையும். தற்போது தேவைப்படக்கூடியது என்னவென்றால், கைத்தறித் தொழில் நிலையானதாகவும், இலாபம்தரத் தக்கனவாகவும் அமையவேண்டும் என்பதேயாகும்.

உப்பு, இரசாயண உப்பு இன்னும் இதுபோன்ற வகையராக்களின் ஏற்றுமதிச் சூழ்நிலைகள் அனைத்தும் எதிர்காலத்தில் மிகவும் நம்பிக்கையூட்டுவனவாக இருக்கிறது. தூத்துக்குடி மட்டுமன்றி வேதாரண்யம், சூனாம்பேடு இன்னும் இதுபோன்ற எண்ணற்ற இடங்கள் இத்தொழில் நல்ல முறையில் வளருவதற்கான சாத்தியக்கூறுகள் மிகுந்து காணப்படுகிறது இத்தொழிலுக்கு மக்கள் சக்தி அதிகம் தேவைப்படக்கூடிய நிலையில் இருக்கிறது.

எனவே சர்க்கார் பொதுத்துறையில் உப்பு உற்பத்திக்கான விளை நிலங்களை அதிகம் கொண்டுவருவதற்குப் போதுமான வாய்ப்பு இருக்கிறது.

பல்வேறு விதமான எண்ணெய் வகையராக்கள், காய்கரி வகைகள், தாவரப் பொருள்கள் ஆகியவைகள் உற்பத்தி செய்யவேண்டும். ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்ட இடங்களில் அதிகமான உற்பத்தியைப் பெருக்கவேண்டும்.

தற்போது தனிப்பட்டோர் ஆதிக்கத்திலிருக்கும் பீடி தொழில்களை பொதுத்துறையின்கீழ் கொண்டுவரவேண்டும்.

உதகமண்டலத்தில் கச்சா பிலிம் தயாரிக்கும் திட்டம் மக்கள் -மக்களிடத்தே நம்பிக்கையளிக்கக்கூடியதாக இருக்கிறது. ஆனால் இன்னும் அது நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது.

முக்கியத்துவம் பெற்றுவரும் பிலிம் தொழிலை நாம் புறக்கணிக்க முடியாது,

கலை, கலாச்சாரத் தொழில்களைவிட பிலிம் தொழில் மிகவும் பெரிய தொழில்களாகத் திகழ்கிறது.

கோடிக்கணக்கான ரூபாய்கள் முடங்கிக் கிடக்கும் இத்தொழிலில் பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்புப் பெற்றிருக்கின்றனர்.

பிலிம் தொழில் மெல்ல ஆனால் உறுதியான முறையில் அன்னிய நாட்டு வாணிபத்தில் இடம் பெற்றிருக்கிறது. எனவே அத்தகைய நலவாய்ப்பினை சாதகமாக்கிக்கொண்டு சர்க்கார் அந்த வாணிபத்தினைப் பெருக்க முன்வரவேண்டும். இத்தொழில்பற்றிய செய்திகளைத் திரட்டி தொழில் நுணுக்கப் பயிற்சி அளிப்பதற்கான வழிவகை காணும்பொருட்டு வெளிநாடுகளில் சர்க்கார் கண்காணிப்பாளர்களை நியமிக்கவேண்டும்.

வளர்ந்துவரும் இத்தொழிலில் கிடைக்கும் கிராமத்தில் சர்க்கார் பங்குபெற சினிமாத் தொழிலை தேசீய உடமையாக்குவதோடு, ஸ்டூடியோக்களையும் தாமே எடுத்து நடத்த முன்வர வேண்டும்.

சர்க்கார் பிலிம் மட்டுமின்றி இத்தொழிலுக்கு வேறு பலவிதமான துணைக்கருவிகளும் தேவைப்படுகின்றன. எனவே இவைகளைப் பெறுவதற்கு அன்னிய வாணிபத்தில் பெரும் பொருளை செலவழிக்கும் கணிசமான தொகையை சர்க்காரே இத்துணைக்கருவிகளை தயாரிக்க முற்படுமேயானால் பெருமளவு சேமிக்கலாம்.

இத்தொழிலுக்குத் தேவைப்படும் நவீன கருவிகளின் தரம், தன்மை ஆகியவைகள் குறித்து சர்க்கார் ஆலோசனை வழங்குவதைவிட சர்க்காரே இத்துணைக் கருவிகளை உற்பத்தி செய்யமுற்பட்டால் தரமான கருவிகளை நல்ல முறையில் உற்பத்தி செய்யலாம்.

நவீன விஞ்ஞான சாதனங்கள் தடையின்றி கிடைக்குமானால் நம்முடைய கலைஞர்கள் மேல் நாட்டுக் கலைஞர்களுடன் போட்டியிட முடியும் என்பதோடு உலக நாட்டு வாணிபச் சந்தையில் படத்தொழில் சம்பந்தப்பட்ட நம்முடைய வாணிபத்தை நல்ல முறையில் பலப்படுத்த முடியும்.

தோல் சம்பந்தப்பட்ட தொழில் பொறுத்த வரையில் சென்னை முதலிடம் பெற்றிருக்கிறது. ஆனால் சீரான முறையில் முயற்சிக்கப்படுமானால் தற்போது பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படும் தோல் இங்கேயே தேக்கவைத்து பெருமளவில் மக்கள் சக்தியையும் பயன்படுத்தி இலாபம் தரக்கூடிய தொழிலாக மாற்றி அமைக்க முடியும்.

கம்பள ஏற்றுமதியும் கவனம் செலுத்தவேண்டிய மற்றொரு பொருளாகும். மிகப் பழைய முறைகளைக் கையாள்வோரிடத்தில் இந்தத் தொழில் தற்போது இருந்துவருவதால் மிகவும் பிற்போக்கான நிலையில் இருக்கிறது. தொழில் நுணுக்க ஆலோசனைகள் அவர்களுக்கு வழங்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. என்றாலும் உருப்படியான மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை. ஏற்றுமதிப் பொருளாக இருக்கின்ற காரணத்தால் இது விஷயத்தில் அதிகமான கவனம் செலுத்தவேண்டும்.

இந்த தொழிலும் இன்னும் இதுபோன்ற ஏனைய தொழில்களுக்கும் மாநில சர்க்கார் உதவி வழங்குகிறது என்றாலும் இன்னும் அதிகப்படியான பயன் கிடைக்கவேண்டுமானால் கிடைத்து வரும் நிதி உதவிகள் ஏதோ அடையாளமாக அளிக்கின்ற தன்மையில் இல்லாமல் மனப்பூர்வமான முயற்சிகள் முழு அளவில் எடுத்துக்கொள்ளவேண்டும். பத்துப் பதினைந்து ஆண்டுகளில் அதிக வருவாய் அளிக்த்தக்க வகையில் திட்டமிட்டு செயலாற்றவேண்டும்.

மிகப் பலவற்றை அடைவதற்கு ஒரு சிலவற்றையாவது நாம் எண்ணிப்பார்க்கவேண்டும். சிலவற்றை அடைவதற்கு பலவற்றை நாம் நேரக்கிப் பார்க்கவேண்டும்.

இப்பிரச்சினைகளை நிபுணர் குழு ஒன்று ஆராய்ந்து பார்த்து இந்த மாநிலத்தின் தனிச்சிறப்பாக விளங்கத்தக்க வகையில் ஒரு தொழிற்சாலை அமைக்கக்கூடிய சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து பார்க்கவேண்டும். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த தொழிற்சாலைக்கு மாநில சர்க்கார் போதுமான நிதியுதவியளிக்க முன்வரவேண்டும்.

எல்லாப் பிரச்னைகளையும் பரிசீலிப்பது என்பதுதான் இன்றைய நடைமுறையாக இருக்கிறது. ஆனால் அவையனைத்தும் ஒரு குறிப்பிட்ட மட்டத்தோடு நின்று விடுகிறது.

சாதாரணமானதன்றி திட்டமிட்டபடி பட்டியலில் இடம் பெற தங்களுக்கேற்ற வகையில் பல்வேறு விதமான தொழிற்சாலைகளை சின்னஞ்சிறிய நாடுகள் பல உருவாக்கியிருக்கின்றன. எனவேதான் அந்த நாடுகள் அனைத்தும் வெகுவாக முன்னேற்றம் கண்டிருக்கிறது. கடிகாரத்தொழிலில் சிறந்து விளங்கும் ஸ்விட்சர்லாந்தும், பால் பண்ணைத் தொழிலில் புகழ்பெற்று விளங்கும் டென்மார்க்கும் அளவில் சிறியது என்றாலும் பலம் பொருந்திய இந்த நாடுகள் மிகப்பெரிய தங்கள் தொழிலின் மூலம் உலக நாடுகளின் வாணிபச் சந்தையைப் பெருமளவில் கைப்பற்றியிருக்கிறன.

தோட்டங்களில் உற்பத்தியாகும் காப்பி, தேயிலை, ரப்பர், வாசனைத் திரவியங்கள் ஆகியவைகள் அன்னியச் செலாவணியை ஈட்டித் தரத்தக்கனவாக இருக்கிறது. ஆனால் அவைகள் அனைத்தும் தனிப்பட்டோர் ஆதிக்கத்தில் இருந்து வருகிறது. அவைகள் நல்ல வரிதரக்கூடிய நிறுவனங்களாகவே சர்க்கார் கருதிக்கொண்டிருக்கிறது.

இந்தப் பொருள்கள் அனைத்துக்கும் ஏற்றுமதிக்கான நல்லதோர் எதிர்காலம் இருப்பதால், தனியார்துறை ஆதிக்கத்தை ஒழித்துக்கட்டி நல்லதோர் திட்டத்தின் மூலம் மாநில சர்க்கார் நிர்வாகத்துக்குக் கொண்டுவர வேண்டும்.

ஆனால், திட்டங்களை உறுவாக்கவும், நிறைவேற்றவும் அதிகாரம் பெற்றிருக்கும் கட்சி தனியார் துறையின் இன்றியமையாத தேவையில் பெரிதும் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஏனைய கட்சியினர் இக்கருத்தினை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

இன்றையத்தினம் பெருமளவில் விவசாயத்தையே நம்பிக்கொண்டிருக்கிற காரணத்தால், இந்த மாநிலத்தைத் துரிதமாகத் தொழில் மயமாக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. விவசாயத்தையே பெருமளவில் நம்பிக்கொண்டிருக்கும் நிலைமைமாறி தொழில்துறை விரிவான முறையில் அபிவிருத்தி செய்யப்பட்டாலொழிய எந்த நாடும் முன்னேற்றமடைய முடியாது.

ஆனால் விவசாயத்தையே சுழன்று கொண்டிருக்கும். பொருளாதார நிலைமை மாற்றமடைவதற்கு நீண்டதோர் காலம் பிடிக்கும்போது முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில் விவசாயம் மட்டுமே பெரியதோர் தொழில் வளமாக வளர்ச்சியடைந்துள்ள போது, இங்கே மட்டும் எல்லாவிதமான நடைமுறை உபயோகத்திற்கும் அது ஒரு பரம்பரை பாத்யதையாக இருந்து வருகிறது.

இத்துறையில் அதிக நாட்டம் செலுத்தப்பட்டது. ஆனால் கருத்துவேறுபாடுகளும், எதிரிடையான எண்ணங்களும் உருவானதால் முன்னெற்றத்தின் வேகம் தடைபட்டுவிட்டது.

நாட்டின் உணவுப் பற்றாக்குறையை நிறைவு செய்வதே இரண்டு திட்டங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது. பெருந்தொகை செலவழிக்கப்பட்டது, திட்டங்கள் பல உருவாக்கப்பட்டது. ஆனால் பத்தாண்டுகள் கழித்தும் கூட பழைய நெருக்கடியும் புதிய ஆபத்துக்களும் உணவுக்கட்டத்தை முற்றுகையிட்டுக்கொண்டே இருக்கிறது.

உணவு உற்பத்தியைப் பெருக்க மாநில சர்க்கார் மனப்பூர்வமான முயற்சிகள் எடுத்துக்கொண்டு வெற்றி பெற்று விட்டதாக அறிவிக்கின்றனர். ஆனால் விவசாயம் தொடர்புள்ள அடிப்படைக் கொள்கைகளைப் பொறுத்தவரையில் ஒரே சீரான துணிவான நடவடிக்கைகள் ஏதும் சர்க்கார் மேற்கொள்ளவில்லை.

மிகச்சாதாரணமான நில உச்சவரம்பு இத்துணை ஆண்டுகளாக அரசியல் பேச்சுக்குரியதாகவே இருக்கிறது. நிலை உச்சவரம்புதான் செய்யப்படவேண்டியதோர் மிகக் குறைந்த பொருளாதார நிபுணர்களும் தத்துவமேதைகளும் ஒரே சேர சுட்டிக்காட்டியிருக்கின்றனர். எனினும் நில உச்சவரம்பு சட்டமானது இன்னும் அது தனது உண்மை உருவத்தை அடையவில்லை.

இந்தச் சிறு சட்டத்தை உருவாக்க காலவரையின்றிய இந்தக் காலதாமதம் அவர்களது முன்னேற்பாடான திட்டத்தின் பிரதிபிம்பமாகத் திகழ்கிறது என்பதை அறிவிப்பதற்குப் போதுமான எடுத்துக்காட்டாகவே அமைந்திருக்கிறது.

புரட்சிகரமானதோர் மாற்றங்கள் வெறித்துக்கிளம்புவதற்கான வழிவகைகள் நம்பிக்கையூட்டுவனவாக இருக்கிறது.

அதனுடைய வலிவும் பொலிவும் தகர்த்தெறியப்பட்பட்டாலும் இன்றைய நிலையில் கூட இந்தச்சட்டம் விவசாயத்துறை சீரமைப்பிற்கான திட்டங்கள் தீட்டுவதற்கு இன்றியமையாத ஒரு தேவையாக இருக்கிறது.

" உழுபவனுக்கே நிலம் " என்ற வார்த்தை திறைமறைவுக்குத் துறத்தப்பட்டுவிட்டது. பங்கீட்டுக்கு ஏற்றதோர் தீவிரமான திட்டம் என்று சொல்லக்கூடிய நிலை மாறி அதிக உற்பத்தி செய்யவேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது.

நிலவளம், முயற்சி ஆகியவைகளைப் பொறுத்தே உற்பத்திப் பெருக்கம் இருக்கிறது. முறைகள் மாற்றத்திற்கேற்ப முயற்சியின் மூலம் மட்டும் பல்வேறு பயனை அடையலாம்.

உற்பத்திப் பெருக்கத்திற்கு இயந்திர சாதனம் கொண்ட விவசாயம் நல்லதோர் முறை என்று பேசப்பட்டு வந்தாலும் தொழில் நுணுக்கம் தெரியாத தொழிலாளர்களும், விவசாயிகளும் மிகுதியாக இருக்கும் இந்த மாநிலத்தில் இந்த முறை சாத்தியமான தல்ல. தலைமுறை காலமாக விவசாயத்துறையில் ஈடுபாடு கொண்டுள்ளவர்களின் தொகை கணிசமான அளவிற்கு இருக்கிறது.

பெருவாரியான விவசாயத் தொழிலாளர்கள் இந்த மாநிலத்தில் மட்டும் ஆண்டொன்றுக்கு 115 நாட்கள் வேலையின்றி கெஷ்டப்படுகின்றனர் என்றும், அத்துடன் அவர்கள் பெறும் ஆண்டு வருமானம் இந்தியாவில் ஏனைய

மாநிலங்களைக் காட்டிலும் குறைவாக இருக்கிறது என்றும் கணக்கிடப்பட்டிருக்கிறது.

எனவே இந்தப் பிரச்சினை இரண்டு உண்மைகளை உள்ளடக்கியிருக்கிறது.

உற்பத்தியையும் பெருக்கவேண்டும். அதே நேரத்தில் விவசாயியின் வருமானத்தையும் உயர்த்தவேண்டும்.

உபயோகிப்பவர்களை எந்த வழியிலும் பாதிக்காத வகையில் இதைச் செய்தாகவேண்டும். சிக்கல் நிறைந்த பிரச்சினை தான் என்றாலும் உபசாரமான வார்த்தைகள் தேவையில்லா ஒன்று. மேலும் குழப்பமான எண்ணங்கள் மேலும் விபரீதத்தையே உண்டாக்கும்.

அரசியல் உலகத்தில் உள்ள முக்கியஸ்தர்கள் அவ்வப்போது இதுபற்றி வழங்கிவரும் கருத்துக்கள் எத்தகைய குழப்பமான நிலைமை நிலவிவருகிறது என்பதையே காட்டுகிறது.

நில உச்சவரம்பு சட்டத்தோடு மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தைத் துவக்கவேண்டும்.

பல இலட்சக்கணக்கானவர்கள் உள்ளத்தில் குறைந்தது அமைதியான ஆர்வத்தை உண்டாக்குவதற்குப் பயன்படும்.

வாழ்க்கைத்தரம் சாதாரண மனிதன் சக்திக்கு எட்டிய வகையில் இருக்கச் செய்ய அத்தியாவசியத் தேவைப்பொருள்களின் விலைவாசிகள் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளதாக இருக்கவேண்டும் என்ற பிரச்சினை ஆளும் கட்சியினர், அரசியல் வாதிகள், பொருளாதார நிபுணர்கள், விவசாயிகள், அத்தியாவசியப் பொருள்களைப் பயன்படுத்துவோர்களின் பிரதிநிதிகள் ஆகிய அனைவருடையவும் கருத்தோட்டமாக இருக்கவேண்டும்.

நம்பிக்கைக்கு ஒவ்வாத வகையில் உற்பத்திப் பெருகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் உணவுப்பண்டங்களின் விலைவாசிகளும் உயர்ந்துவிட்டது.

இந்தத் தத்துவம் வியக்கத்தக்கதுமட்டுமல்லாமல் ஆபத்தானதும் கூட.

இத்தகு வருந்தத்தக்க நிலைமைக்கு மத்திய சர்க்கார் எந்த அளவுக்குப் பொறுப்பானது என்பதை கண்டு பிடித்தாகவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

மத்திய சர்க்காரின் கட்டுப்பாடோ அல்லது ஆய்வுரைகளோ ஏதுமின்றி, விலைவாசிகளின் உயர்வைத் தடுக்க வழிவகைகள் காண மாநில சர்க்கார் உரிமைபெற்றிருக்க வேண்டும்.

மத்திய சர்க்கார் அளவுக்குமீறிய செல்வாக்கையும், அதிகாரங்களையும் கொண்ட ஒரு உயர்ந்ததோர் அங்கமாக இருக்கின்ற காரணத்தால், தேவைக்கான மனுப்போடுகின்றபோது அதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கேட்கப்பட்டால் உணவுத்தானியங்களைக் கொள்முதல் செய்யவேண்டும்.

எனவே உணவுத்துறையைப் பொறுத்த வரையில் எப்படியிருந்தாலும் மத்திய சர்க்கார் தலையீடு இன்றிய சுய உரிமை இருக்க வேண்டும்.

நிலவளத்தைப் பொறுத்து உணவு உற்பத்தி இருக்கின்ற காரணத்தால் நிலத்தை வளமாக்குவதற்குண்டான வழித்துறைகளை கூர்ந்து கவனித்துப் பார்த்துக் கட்டுப்படுத்தவேண்டும்.

நீர்ப்பாசனம், உரவகைகள், விதைகள் இன்னும் இதுபோன்றவைகள் விவசாயத்திற்கு இன்றியமையாத தேவைகளாகும். ஆனால் இவைகளைப் பொறுத்த வரையில் கூட விநியோகிக்கக்கூடிய அதிகாரத்தை மாநில சர்க்கார் பெற்றிருக்கவில்லை. அல்லது அதிலும் பல்வேறுவிதமான தொல்லைகள், இடுக்கன்கள் மாநில சர்க்காருக்கு ஏற்பட்டிருக்கிறது.

பெரிய நீர்பாசனத் திட்டங்கள் மாநில சர்க்காரால் நிர்மாணிக்கப்பட்டாலும், துவக்க காலத்தில்கூட மத்திய சர்க்காரின் துணையும் உதவியும் தேவைப்படுகிறது.

சிறு நீர்பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவதில் மாநில சர்க்கார் தாராளமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

ஏரிகளையே நாம் அதிகம் நம்பிக்கொண்டிருக்கிற காரணத்தால், ஏரிகளைப் பழுதுபார்க்கவும், ஆழப்படுத்தவுமான காரியங்களுக்காகச் செலவழிக்கப்படும் தொகை கணிசமான அளவிற்கு உயர்த்தப்படவேண்டும். வேலைமுறைகளையும் துரிதப்படுத்தவேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

மதிப்பீடுகள் தயாரிக்கவும், அநுமதி வழங்கவும், அநுமதி வழங்கப்பட்டவைகள் நிறைவேற்றப்படுவதிலும் ஏற்படும் காலதாமதம் கிராம மக்களின் அளவு கடந்த பொருமையை சோதிக்கும் தன்மையிலேயே இருக்கிறது. மாநில சர்க்கார் அதனுடைய வேலைமுறைகளைத் தீவிரப்படுத்தவேண்டும்.

மாநிலத்தில் உள்ள 23,000 ஏரிகளில் 4,000 ஏரிகள் தான் இதுவரை கவனிக்கப்பட்டிருக்கிறது.

இன்னும் பல ஏரிகள் கவனிக்கவேண்டிய நிலையில் உள்ளன. மேலும் இத்துறையில் வழக்கமாக நடைபெறுவதைப்போன்றில்லாமல் அவசரகாலத் திட்டமாகக் கருத்தில்கொண்டு வேலைமுறைகளைத் துரிதப்படுத்தவேண்டும்.

ஏரிகள் மட்டுமின்றி நீர்ப்பாசனக் கால்வாய்களும் உடனடியாகக் கவனிக்கத்தக்க நிலையில் உள்ளன.

இந்த வேலைகளை நிறைவேற்ற இராணுவத்தினரின் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இந்த வேலைகளுக்கு பிரத்தியேகமான இயந்திரங்களை தேவையை வற்புறுத்திப் பெற்று பயன்படுத்தவேண்டும்.

அப்படி இருந்தபோதிலும் சிறு தீர்ப்பாசன திட்டத்தின் இலட்சியத்தை நாம் அடையக்கூடும். கிருஷ்ணா, கோதாவரி, கிருஷ்ணா-பெண்ணார் போன்ற மாநிலங்களின் நீர்ப்பாசன திட்டம் கேரள மாநிலத்தில் உள்ள ஆறுகளின் தண்ணீரைக் கொண்டு வருதல் போன்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலொழிய நாம் திக்கற்றவர்களாகிவிடுவோம்.

பிரத்தியேகமான இந்த திட்டங்களை உருவாக்க, தொழில் நுணுக்கம் பெற்ற பிரத்தியேகமான நிபுணர் குழு ஒன்றினை அமைக்கவேண்டும்.

ஏற்கனவே அதிகப்படியான வேலைகளில் ஈடுபட்டுள்ள நிர்வாக இயந்திரத்திடம் இந்தப் பிரக்சினையை ஒப்படைப்பதானது காலதாமதத்தையே உண்டாக்கும்.

மாநிலத் தண்ணீர்த் திட்டங்களை பிராந்தியக் குழு ஒன்றிடத்தில் ஒப்படைப்பதே கண்ணுக்குப் புலப்படும் சிறந்த வழியாகும். மேலும் முடிந்தால் பலதரப்பட்டவர்கள் கொண்ட குழு ஒன்றினை நியமிக்கலாம்.

மூன்றாவது திட்டத்தில் இதற்கு முதலிடம் அளிக்க வேண்டும்.

அண்டை நாடுகளின் மாநில முதல்வர்கள் உதவி புரிவதாக ஏற்கனவே வாக்களித்துள்ளதால் இந்தத் திட்டத்தைத் தீட்டுவதில் எவ்வித காலதாமதமும் கூடாது.

மாநில சர்க்கார் இதை வற்புறுத்தி இதற்காக நிதி ஒதுக்குவதற்கான வழிவகைகளைக் காணவேண்டும்.

விஞ்ஞான உதவியின் மூலம் பாலை வனங்களையும், காடுகளையும் வளமுள்ள விளைநிலங்களாக மாற்றுகின்ற நாடுகளை நாம் பார்க்கும்போது, தண்ணீர் பயனற்றுப் போகும் கோதாவரி, கிருஷ்ணா போன்ற ஆறுகளின் மித மிஞ்சிய தண்ணீரை நாம் கொண்டுவருவதென்பது நம்முடைய சக்திக்கப்பாற்பட்டது என்று நாம் சிறிதும் எண்ணக்கூடாது.

தண்ணீர் ஆவியாக மாறி வீணாவதைப்பற்றி அடிக்கடி பேசப்படுகிறதே தவிர அதனை தடுக்க முற்படவில்லை.

கட்டுப்பாடுகள் பெருமளவு அதிகாரிகளின் பயிற்சிக்கு விடப்பட்டிருக்கிறது. இத்தகை பிரச்சினைகளும், கிராம புணர்வாழ்வு, குடிசைத் தொழில்கள், சமூக முன்னேற்றம், எல்லாம் வட்டார வளர்ச்சி துறையின் பொறுப்பில் இருக்கின்றன. செலவிடப்படும் தொகைகளுக்குஏற்ற பலனை ஈடாக காண முடியவில்லை. மேலும் இந்தத் துறை அரசியலுக்கு ஆட்பட்டிருப்பதும் மறுக்க

இயலாது.
பொது மக்களின் கவனத்தை ஈர்த்து,அவர்களின் ஆதரவை திரட்ட, இத்துறைக்கான வழிகளை திட்டக்குழு ஆராயவேண்டும். இந்த வட்டார வளர்ச்சித் துறை நாளுக்கு நாள் சிறப்பைப் பெற்று வருகிறது.

மேலும், சாலை அமைப்பு, நில மீட்பு, புறம்போக்குகளை பயன்படுத்துதல், போன்ற காரியங்களை மேற்கொள்ள ஒரு 'நிலப்படையை' அமைப்பதும் நினைவில் கொள்ளத்தக்கது. இதில் கட்டாயப்படுத்துவதோ, வற்புறுத்துவதோ தேவையற்றது. மாநில அரசு முகாம்களை அமைத்து, அதற்கான செலவுகளை ஏற்று, படையை திரட்டவேண்டும். இதன்மூலம் ஓரளவிற்கு வேலையில் லாத திண்டாட்டத்தையும் போக்க முடியும். விரைவாக முன்னேறவும் வழி ஏற்படும்.

இந்த யோசனைகளுக்கு ஆதாரமாக புள்ளி விவரங்கள் தரப்படவில்லை என்பது உண்மை. அதனால் புள்ளி விவரங்கள் தேவையில்லை என்பதல்ல. சீராக சரியான புள்ளி விவரங்களை பதவியிலிருப்பவர்கள் பெற வழி இருப்பது சாதாரணமாக புலப்படும் உண்மை.

அந்த புள்ளி விவரங்களை நன்னோக்குடன் தரப்பட்ட யோசனைகளை கேலி செய்வதற்கு பயன்படுத்தாமல், துவக்க நேரத்தில் ஏற்படக்கூடிய இன்னல்களையும் பொருட்படுத்தாமல் நல்ல திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

இதற்காக ஆலோசனைக் குழுக்களை அமைத்து, குறிப்பிட்ட திட்டங்களை ஆட்சியிலிருப்பவர்களும், நிபுணர்களும் கலந்துப் பேசி முடிவுகளை மேற்கொள்ள முனைய வேண்டும்.

இரண்டு முக்கியமான விஷயங்களை நினைவில் கொள்ளவேண்டும்.

திட்டங்களின் நோக்கம் நன்மையை அடிப்படையாகக்கொண்டவை என்கிற உணர்வு ஏற்படும்போது, மக்களிடையே ஆர்வம் எழும். இலாபமே நோக்கம் என்கிற எண்ணம் தொழிலாளரிடம் ஏற்படுமானால், உற்சாகம் குறையும். எனவே இலாபத்தை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு திட்டத்தை சிலத் துறைகளிலாகிலும் மேற்கொள்ளவேண்டும். நியாய அடிப்படையில் சம பங்கு கிடைக்கும்போது உற்பத்திக்கு, புது வேகம் ஏற்படும்.

திட்டங்களை உருவாக்கியவர்கள் பொருளாதார ஏற்றத்தாழ்வை போக்கி, சீரான வருமானத்தை உண்டாக்க முனைந்தனர். ஆனால், இன்றுவரை இதில் போதிய வெற்றி காணப்படவில்லை.

மற்றோரு முக்கிய விஷயம் இவ்வளவு பெரிய திட்டத்திற்கு எப்படி தேவையான பணத்தை திரட்டப் போகிறோம் என்பதாகும். ஏற்கனவே வரிக்கொடுமை, அதி லும் மறைமுக வரியின் மூலம், மக்களை அடியோடு வாட்டியிருக்கிறது. எனவே, மேலும் வரிகளை உயர்த்துவது விரும்பத்தக்கதல்ல. சமுதாயத்தில் மேல்தளத்திலிருப்பவர்களிடம் குவிந்திருக்கும் பணத்தை திரட்டும் வழிகளை நாம் கொள்ளவேண்டும். இவை மக்கள் திட்டங்கள் என்கிற உணர்வு ஏற்படும்போதே, மக்களிடம் உற்சாகம் ஏற்படும். மக்களுக்கு அந்த விரும்பத்தக்க எண்ணம் தொடர்புள்ள துறைகளில் ஏற்படவேண்டும்.

பெரிய நகரங்களில் உருவாக்கப்பட்ட திட்டங்களையும் ஆராய்ந்து மேற்கொள்ளவேண்டும். சேரி ஒழிப்பு திட்டங்களை மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தில் தீவிரமாக மேற்கொள்ளவேண்டும்.

மக்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்துவது மிக மிக அவசியம். ஏன் என்றால் எந்த திட்டமும், தனி மனிதனை மையமாகக்கொண்டே உருவாக்கப்பட்டதாகும். அத்துடன் புதிய முற்போக்கு திட்டங்களை துணிவுடன் செயல்படுத்தவேண்டும்.

சூரியனின் சக்தி வீணாவதைத் தடுக்கவேண்டும். இதைப்பற்றி ஆராய்ந்தவர்கள் பல உபயோககரமான யோசனைகளை கூறியிருக்கின்றனர். இதுவரை சூரிய அடுப்பு மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் முயன்று செய்ய ஏராளமாக இருக்கின்றன. சூரிய சக்தியை பயன்படுத்த ஒரு நிபுணர் குழு முற்படவேண்டும்.

சிறு அணைகள், சிறு தேக்கங்கள், போன்றவைகள் பற்றிய போதிய அக்கரை செலுத்தவில்லை. பெரும்பாலும் எல்லா மாவட்டத்தில் இந்த திட்டங்களை மேற்கொள்ள வசதிகள் இருக்கின்றன. அவை மகத்தானவைகளாக இல்லாமலிருக்கலாம். ஆனால் அவை நீர்பாசன வசதியை உறுதியாக ஏற்படுத்தித்தரும்.

பல ஆண்டுகளாக அரசினரிடம் வாளாயிருக்கும் பாலாறு திட்டம் மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டும்.

குழாய் கிணறுகள், 'ஆர்டீகள்' கிணறுகள் பரவலாக ஏற்படவேண்டும்.

வட ஆற்காடு மாவட்டத்தில் செய்யாறு திட்டம், செங்கற்பட்டில் வேகவதி திட்டம், மதுரையில் ஆலாங்குளம் திட்டம், குடகனாறு திட்டம், சிரியாறு திட்டம், இப்படி பல திட்டங்களைப்பற்றி பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களை அமுலாக்கவேண்டும்.

மூன்றாவது திட்டத்தில் வாய்ப்புள்ள இடங்களில் தண்ணீரை தேக்கி நீர்பாசனத்திற்கு பயன்படுத்த வழிகளை காணவேண்டும். இதிலிருந்து, மாநில அரசு, மாற்றாந்தாய் நிலையை மாற்றி, நியாயமான பங்கைப் பெற்று, புறக்கணிப்பு நிலையை தவிர்த்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறது என்றே கருதவேண்டியிருக்கிறது.பதவியிலிருப்பவர்கள் விழிப்புடன் இம்மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு உழைத்தாலன்றி, உரியபங்கை பெற இயலாது. கெஞ்சிக் கேட்பதன் மூலம் பலன் ஏற்படாது. கோரிக்கைகளை வற்புறுத்தவேண்டும், பிச்சையின் மூலம் வெற்றியை தேடமுடியாது.

அடிப்படைத் தொழில்கள், பெரிய துறைமுகங்கள், அணு சக்தி தயாரிப்பு போன்ற திட்டங்களுக்கு பெரிய தொகைகள் ஒதுக்கியாகவேண்டும். மாறிலத்துறையின்கீழ் அமையக் கூடிய திட்டங்களுக்கும் பெரிய தொகைகள் தேவைப்படுகின்றன.

எனவே கேட்கப்பட்டிருக்கும் தொகை, போதுமானதென்று கருத இடமில்லை.

மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தில் குறைந்தது 1000 கோடி ரூபாய் முதலீடு செய்யும் அளவிற்கு மத்திய, மாநில திட்டங்களை ஆராயவேண்டும் என்று அரசினரை கேட்டுக்கொள்கிறேன்.

இதுவரை நீடித்துவந்த புறக்கணிப்புக்கும், பின் தங்கிய நிலைமையும், நினைவில் கொள்ளும்போது, இந்த தொகையைகேட்பது நியாயத்திற்கு புறம்பானதென்றோ, பேராசையானதென்றோ எண்ணவும் இடமில்லை.

திட்டக் குழு இரண்டு மூன்று முறை கூடிவிட்டால் மட்டும் பிரச்சினைகளை தீர்த்துவிட இயலாது. அவ்வப்போது கூடவேண்டும். ஆலோசனைக் குழுக்களும், நிபுணர்களும் கூடி திட்டங்களை ஆராய்ந்து உருவாக்கவேண்டும். இதுதான் ஆளும் கட்சியின் நோக்கமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

திட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கும் ஒன்றாகும். கூடிக் கலந்துப் பேசி, கட்சிகளின் ஆதரவையும், நல்லெண்ணத்தையும் பெறுவது புதிய வலிவையும்,

உணர்வையும் ஏற்படுத்தும்.

எவ்விதக் குறைபாடும் இல்லாமல் தனிப்பட்ட ஒரு கட்சி மட்டுமே திட்டங்களை உருவாக்குவது விரும்பத்தக்கதல்ல.

அத்துடன், யோசனைகளை கூறியவர்களை அடிக்கடி கூட்டி, திட்டங்களின் நடைமுறைகளை மதிப்பிடவும், தக்க தேவையான பறிந்துறைகளை கூறவும் வாய்ப்பிருக்க வேண்டும்.

(திட்டங்களை உருவாக்குவது துவக்கம் — பிறப்பிற்கு ஒத்தது-ஆனால் பிறந்த குழந்தையை சீராக, முறையாக, வளர்ப்பதில் தான் பல நன்மைகள் அடங்கியிருக்கின்றன.)





ராசேந்திரன் அச்சகம், 39, முருகப்ப முதலி தெரு, சென்னை-7.