நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/ஊமைக் காயம்

151. ஊமைக் காயம்

வளுடைய நூறாவது பட விழாவைக் கொண்டாட ஊரெல்லாம் ஆளுயரச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. பத்திரிகைகளில் அவளுடைய படங்கள், திரை உலக வரலாறு, துணுக்குகள், பெட்டிச் செய்திகள் எல்லாம் பெரிதாக அமர்க்களப்பட்டன.

நகரின் எல்லாத் திரையரங்குகளிலும் அவள் நடித்த படங்களில் ஏதாவது ஒன்று சிறப்பாக ஓடிக் கொண்டிருந்தது. எங்கும் அவள் மயமாயிருந்தது.

அந்த ஞாயிறன்று டெலிவிஷனில் சிறப்பு நிகழ்ச்சியாக அவள் நடித்த மிகச் சிறந்த படங்களின் தொகுப்புச் சித்திரம் ஒன்றை ஒளிபரப்ப ஏற்பாடு நடந்தது.

தினசரிகளும், வார இதழ்களும், பளீரென்று கவர்ச்சியாய்க் காட்சி அளித்த சினிமா இதழ்களும் டீப்பாயில் குவிந்து கிடந்தன. எல்லாவற்றிலும் அவள் படங்கள், புகழ் மாலைகள், சிறப்புக் கட்டுரைகள் சாதனையின் பெருமிதத்தில் மகிழ்ச்சி பொங்கித் ததும்பியது. அவள் களிப்பின் நிறைவில் இருந்தாள்.

“நடிகையர் ரத்தினம் குமாரி கலாதேவிக்குத் திருமணம் ஆகவில்லை என்றாலும், அவர் கலையையே மணந்து வாழ்க்கைப் பட்டிருப்பது, அவர் நடித்திருக்கும் இந்த நூறு படங்களிலிருந்து நிதரிசனமாகத் தெரிகிறது” என்றும் அவர் மணத்தையே மறந்து வாழ்கிறாள் என்றும் விளக்கி எழுதியிருந்தது ஒரு பத்திரிகை. அவளோ அதைப் படித்துச் சிரித்துக் கொண்டாள்.

“அம்மா ஜூஸ் தயார்” வேலைக்காரி செல்லம்மாள் அழகிய பூ வேலைப்பாடு அமைந்த கிளாஸ் நிறைய ஆப்பிள் ரசத்துடன் தட்டைக் கொண்டு வந்து வைத்தாள்.

கதாநாயகி நடிகை கலாதேவி பழரசத்தைப் பருகி. முடிக்கவும் வேலைக்காரி செல்லம்மா விடைபெற்றுக் கொண்டு போக வந்து நிற்கவும் சரியாயிருந்தது.

“வரேன்மா! தயிர் ‘பிரிஜ்’லே இருக்கு மத்த வேலையெல்லாம் முடிஞ்சிது!”

“ஏண்டி செல்லம்மா, என்னமோ இப்பத்தான் கல்யாணமான சின்னஞ்சிறிசு மாதிரி புருஷனுக்குப் பயந்து நடுங்கி வீட்டுக்கு ஓடறியே! ஒரு நாள்தான் கொஞ்சம் தாமசமாய்ப் போயேன்; குடியா முழுகிடும்?” -

“ஐயோ, என் புருஷன் பொல்லாதது. அடிச்சுக் கொன்னுடும். வூட்லே என்னைக் காணாட்டித் திரும்பவும் போயிச் சாராயக் கடையிலே பூந்துடும்.”

செல்லம்மாளின் குரலிலும், முகத்திலும் தெரியும் நடுக்கத்தையும், பயத்தையும் பார்த்துக் கலாதேவிக்கு வியப்பாகவும், வேடிக்கையாகவும் இருந்தது. சிரிப்புக் கூட வந்தது.

நிலையான வருமானம் இல்லாத மனைவியின் சம்பாத்தியத்தில், காசு திருடிச் சாராயக் கடைக்குப் போகக் கூடிய ஒரு புருஷனுக்கு அத்தனை தூரம் அவள் நடுங்கிச் சாவதைப் பார்த்துக் கலாதேவி சிந்திக்கத் தொடங்கினாள், பரிதாபங் கூடப்பட்டாள். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற பழமொழி பெண்ணடிமைத்தனத்தை வளர்க்க விரும்பியவர்கள் இந்நாண்டில் உண்டாக்கியது என்று அவளுக்குத் தோன்றியது. சராசரி இந்தியப் பெண்களும் இந்தப் பழமொழிக்கு ஏற்பத்தான் நடந்து கொள்கிறார்கள் என்று எண்ணினாள் கலாதேவி,

புருஷன்,குடும்பம், குழந்தை குட்டிகள் எதுவுமே இல்லாமல் புகழும் பணமுமாக உயர்ந்து வாழும் தன்னையும் செல்லம்மாளையும் மனத்துக்குள் ஒப்பிடத் தொடங்கினாள் அவள்.

செல்லம்மாளை விடத் தான் பல மடங்கு புகழோடும், பணத்தோடும், செல்வாக்கோடும் வாழ முடிந்திருக்கிறது. அதற்குப் புருஷனோ, குடும்ப வாழ்க்கையோ தனக்கு இல்லாதது எந்த விதத்திலும் தடையாக இருக்க நேர்ந்தது இல்லை. ஒரு வேளை தான் இந்தக் கலைத் துறைக்கு வராமல் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கை வாழ்ந்து, கணவனுக்கு அடங்கிய மனைவியாக இருந்திருந்தால், இப்படிப் புகழ் பெற்றிருக்க முடியாது. நட்சத்திரமாக ஜொலித்திருக்க முடியாது என்பதை எல்லாம் கூட அவள் நினைத்தாள்.

தன்னையும் தன் வேலைக்காரி செல்லம்மாளையும் பெண் என்ற பொது அடிப்படையில் மனத்தராசில் நிறுத்துப் பார்த்த போது, கலாதேவிக்குத் தன் பங்குக்கு எடை கூடியிருப்பது தெரிந்தது.

இன்று வானத்து நட்சத்திரங்களை விட என் ஆற்றல் அதிகம். அந்த நட்சத்திரங்கள் இரவில் மட்டுமே ஜொலிக்க முடியும், நானோ இரவில் மட்டும் அல்லாமல், பகலிலும் ஜொலிக்க முடிந்தவள். அந்த அப்பாவிப் பத்திரிகைக்காரன் திறமையாகக் கற்பனை செய்து எழுதுவதாக எண்ணிக் கொண்டு நான் கலையையே மணந்து கொண்டு வாழ்வதாக எழுதியிருந்தான். அப்படியானால் கலை எனக்குக் கணவனா? இல்லை; கலை என்னை ஆளவில்லை; நான் கலையை ஆளுகிறேன். அப்பாவி வேலைக்காரி செல்லம்மாளைப் போலவோ, அவளை விடச் சமூகத்தின் மேல் தட்டைச் சேர்ந்த வேறு ஒரு குடும்பத் தலைவியைப் போலவோ, நான் ஒரு சாதாரணப் பெண்மணி அல்ல. பிற பெண்கள் பின்பற்ற ஆசைப்படும் லட்சிய அழகி நான்; பிற ஆண்களைக் கனவு காண வைக்கும் கவர்ச்சிக்காரி.

‘பாவம், செல்லம்மாள் கேவலம் குடும்பம் என்கிற மாட்டுத் தொழுவத்தில் தாலி என்கிற கயிற்றால் கட்டப்பட்டவள் அவள். எனக்கு இருக்கும் இந்த அளவற்ற சுதந்திரம் அவளுக்குக் கிடையாது.’

இப்படி நினைத்து விட்டு நோக்கிய போது வேலைக்காரி செல்லம்மாள் சாராயக் குடிகாரனாகிய கணவனிடம் அடிபடும் ஒரு புழு போலத் தென்பட்டாள். குடித்து விட்டு வீடு திரும்பும் கணவனிடம் கண்மண் தெரியாமல் அடிபட்டு அடிபட்டுச் செல்லம்மாளின் உடம்பெல்லாம் காயமாயிருப்பது போல் அப்போது அவளுக்கு நினைக்கவும், கற்பனை செய்யவும் தோன்றியது.

கலாதேவிக்குச் செல்லம்மாள் மேல் அனுதாபம் பொங்கியது. அவளுக்காக இரக்கப்பட்டாள். பட்டுப் போல மென்மையும், தந்தம் போல் வெளேரென்ற நிறத் கவர்ச்சியும் உள்ள தன் மேனியழகையும், அம்மை வடுக்களும் காயங்களும் நிறைந்த செல்லம்மாளின் முற்றிய உடம்பையும் ,மனக்கண்ணில் ஒப்பிட்டுப் பார்த்தாள் அவள். அந்த ஒப்பீட்டில் செல்லம்மாளைப் பற்றிப் பெருமைப்பட எதுவுமே இல்லை.

‘நல்ல வேளை! யார் செய்த புண்ணியமோ, வாழ்க்கைத் தொழுவத்தில் சிக்காமலே, புகழ் ஏணியின் உச்சியில் இருக்கிறேன். இன்று ஏதோ தேர்த் திருவிழா கொண்டாடுவது போல் எனது நூறாவது பட விழாவை மக்கள் கொண்டாடுகிறார்கள்.’

பொழுது விடிந்ததும் செல்ல்ம்மாள் வேலைக்கு வந்த போது அவள் முகம் முதல் நாள் இரவு முழுவதும் அழுது அழுது வீங்கினாற் போல் இருந்தது. கலாதேவி அவளைக் கேட்டாள்.”என்னடீது? ராத்திரி உம் புருஷனோட ஏதாவது சண்டையா?”

“சாராயமும், சண்டையும் இல்லாத நாளே கெடையாதும்மா?”

“அப்படியாவது அந்தப் புருஷனுக்காக ஏண்டி உயிரை விடறே? ‘டைவர்ஸ்’ பண்ணிக்கிறதுதானே?”

“ஐயே! அதெப்பிடீம்மா முடியும்?”

“ஏன் முடியாது?”

“ஆயிரம் இருந்தாலும் அது எம் புருஷனாச்சே?”

“அப்படியானா உனக்கு வேற வழியே இல்லை. திண்டாட வேண்டியதுதான்.”

“இன்னிக்கு விழாவுக்கு அதுகூட வரணும்னிச்சு. உங்க யசமானிம்மா கிட்டச் சொல்லி ஒரு பாஸ் வாங்கியாந்து குடுன்னு கேட்டிச்சும்மா”

“சாயங்காலமானால் சாராயக்கடைக்குப் போறவன், நூறாவது பட விழாவுக்கு எங்கேடிவரப்போறான்? வந்தாலும் குடிச்சுட்டு கலாட்டா பண்ணாம இருப்பானா?”

“அதெல்லாம் ஒண்ணும் பண்ணாதும்மா. உங்க நடிப்புன்னா அதுக்குப் பிரியம்.”

அடிபட்டு உதைப்பட்டு மாடாகத் தேய்ந்தாலும், செல்லம்மாளுக்குத் தன் குடிகாரப் புருஷன் மேலுள்ள பிரியத்தின் மர்மத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் திணறினாள் திருமணமாகாத நட்சத்திரம் கலாதேவி. மணவாழ்க்கையால் பெண் அடிமைப்படுகிறாள் என்பதே அந்த விநாடி வரை மணவாழ்க்கையைப் பற்றி அவள் கணிப்பாயிருந்தது. அதற்கு மேல் ‘புருஷன்’ என்ற வார்த்தையின் அர்த்தம் அவளுக்குப் புரியவில்லை.

அன்று மாலை அவளுடைய நூறாவது படவிழா ஆடம்பரமாகத் தொடங்கியது. பயங்கரமான ரசிகர்கள் கூட்டம். கூட்டத்திலும் ஜன நெருக்கடியிலும் சிலர் நசுக்குண்டு மிதிப்பட்டு இறந்து போய் விடுவார்களோ என்னுமளவு ஒரே மக்கள் வெள்ளம்.

விழா நாயகி நடிகையர் ரத்தினம் கலாதேவிக்குத் துணையாக வேலைக்காரி செல்லம்மாளும் சென்றிருந்தாள். வேறு பல நடிகைகள், நடிகர்கள் திரளாக வந்திருந்ததால், எல்லோரையும் ஒரு சேரக் காணலாம் என்ற ஆவலில் கூட்டம் அலை மோதியது. -

விழா மேடைக்குப் பின்னால் கையில் வீட்டிலேயே போட்டு எடுத்துச் சென்றிருந்த காபி பிளாஸ்க்குடன் அடக்க ஒடுக்கமாக நின்றிருந்தாள், செல்லம்மாள். கலாதேவிக்கு அவுட்டோர் ஷூட்டிங் நாட்களில் காபி சிற்றுண்டி, சாப்பாடு எல்லாமே வீட்டிலிருந்து செல்லம்மாள்தான் எடுத்துச் செல்வாள். அதே போல் இன்று விழாவுக்கும் காபி எடுத்துக் கொண்டு வந்திருந்தாள்.

விழா மேடையில் அழகு ராணியாக வீற்றிருந்த கலாதேவி கூட்டத்தைக் கம்பீரமாக நிமிர்ந்து பார்த்தாள்.

தனக்கு எதிரே தெரிந்த பறட்டைத் தலையும், களைந்த முகமுமான பல ஆண்களில் யாராவது ஒருவன்தான் செல்லம்மாளின் கணவனாயிருக்க வேண்டுமென்று ஏளனமாகத் தன் மனத்துக்குள் நினைத்துக் கொண்டாள் கலாதேவி.

நிலை கொள்ளாமல் மோதும் அந்தப் பெரிய கூட்டத்தில் மின்சாரத் தடங்கலால் ஒரு நிமிஷம் திடீரென்று இருள் சூழ்ந்தது. இருட்டில் கூட்டம் மேலும் தடுமாறவே, கலாதேவி முதலிய பெண் நட்சத்திரங்கள் அமர்ந்திருந்த மேடை சரிந்து விட ஒரே அமளி, கூச்சல் குழப்பம் உண்டாயிற்று விளக்குத் திரும்ப வந்தும்கூடச் சந்தடிசாக்கில், நடிகைகள் மேல் ரசிகர்கள் மோத ஆரம்பிக்கக் கூக்குரல் எழுந்தது. பரபரப்பிலும், குழப்பத்திலும் நடிகை கலாதேவியே கூட்டத்தில் சிக்கித் தடுமாறி கீழே விழுந்து விட அவளைத் தூக்க வேலைக்காரி செல்லம்மாள் ஓடி வந்தாள்.

செல்லம்மாளையும் முந்திக் கொண்டு வேறு இரண்டொரு ரசிகர்கள் கலாதேவியைத் துரக்கி விட ஓடி வரவே, செல்லம்மாளும், அவர்களும் எதிரெதிராக மோதிக் கொள்ளும்படி நேரிட்டு விட்டது.

செல்லம்மாள் மேல் மோதியவர்கள் ஆண் பிள்ளைகளாயிருப்பதைப் பார்த்தபடி, தூரத்தில் நின்றியிருந்த அவள் கணவன், 'டாய்! யார்ரா பேமானி! கீச்சுப்புடுவேன் கீச்சு” என்று கத்தியோடு கூட்டத்தில் அவர்கள் மேல் பாய்ந்தான்.

“கண்ட கஸ்மாலம்லாம் கையைப் புடிச்சு இஸ்த்துக்கினு போக இது சினிமா எக்ஸ்ட்ரான்னு நினைச்சியா? என் பொஞ்சாதிடா இது ஜாக்கிரதை!” என்று அந்த ஆண்களை எச்சரித்து, மிரட்டி விட்டுச் செல்லம்மாளை மட்டும் ஒதுக்கி அழைத்துச் சென்றான் அவள் கணவன்.

தடுமாறிக் கீழே விழுந்து கிடந்த விழா நாயகியாகிய தன்னைத் திரும்பிக் கூடப் பார்க்காமல், தனக்கு உதவ வந்த ஆண்கள் செல்லம்மாளைத் தீண்டி விட்டார்கள் என்பதற்காகவே, அவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டும் அந்த முரட்டு ஆண்மை கலாதேவியை ஒரு கணம் பிரமிக்கச் செய்து விட்டது.

“யார்ராவன்? விழா நாயகியே இங்கே கீழே விழுந்துட்டாங்க? என்னடான்னா அம்மாவோட விழுந்த யாரோ ஒரு பொம்பளையைத் தொட்டுப்புட்டோம்னு கத்தியைக் காட்டி மிரட்டறான்?” என்று பேசிய இரண்டு சினிமா உலகப் பிரமுகர்கள் பக்கம் திரும்பி, “இந்தாய்யா! அதெல்லாம் வேற இடத்துல வச்சுக்க. நம்ப கையில் வாண்டாம். சினிமாக்காரியை இன்னா வேணாப் பண்ணிக்க. இது குடும்பப் பொண்ணு. எம் பொஞ்சாதி. எவனாவது தொட்டே,கொடலை வுருவிடுவேன்” என்று மீண்டும் கத்தியைக் காட்டிச் சீறினான் செல்லம்மாளின் புருஷன். பாதி குடிபோதை வேறு.

அந்தக் கணத்தில் மின்வெட்டுப் போல் கலாதேவியின் மனத்தில் ஒரு பொறி தட்டியது.

சதா சாராயத்தையே கட்டிக் கொண்டு அழும் அந்தக் குடிகாரக் கணவனைச் செல்லம்மாள் விடாமல் கட்டிக் காத்துப் பணிவிடை செய்யும் மர்மமும், இரகசியமும் கலாதேவிக்கு இப்போது புரிவது போல் இருந்தது.

இந்த அளவு முரட்டுப் பிரியத்தைத் தருகிற ஓர் ஆண்பிள்ளையிடம் ஒரு பெண் எத்தனை தடவை அடிபட்டாலும் ,அவனால் தன் உடல் முழுவதும் காயமானாலும், அவனை விட்டுப் பிரிய மாட்டாள் என்று தோன்றியது.

யாரோ வந்து சமாதானப்படுத்தி அவனைத் தனியே அழைத்துக் கொண்டு போனார்கள். செல்லம்மாளும் கூட வந்தால்தான் போவேன் என்றான் அந்த முரடன். செல்லம்மாள் தயக்கத்தோடு எஜமானி கலாதேவியின் முகத்தைப் பார்த்தாள். எஜமானி பிளாஸ்கை வாங்கிக் கொண்டு, ‘நீ போ; பரவாயில்லை’ என்பது போல் அவளுக்கு உத்தரவு கொடுத்தாள். அவள் கணவனோடு போனாள்.

குடித்து விட்டு வீடு திரும்பும் முரட்டுக் கணவனிடம் அடிபட்டு அடிபட்டுச் செல்லம்மாளின் உடம்பெல்லாம் காயம் பட்டிருப்பதாகத் தான் முன்பு கற்பனை செய்திருந்த காயங்களை விட ஆழமான, ஆனால் வெளியே தெரியாத ஊமைக் காயம் தன்னைத் தானே தாங்கி நிற்பது போல், அந்தக் கணத்தில் விழா நாயகியான நடிகையர் ரத்தினம் கலாதேவிக்குத் தோன்றியது.

“சினிமாக்காரியை இன்னா வேணாப் பண்ணிக்க, இது குடும்பப் பொண்ணு, எம் பொஞ்சாதி” என்ற அந்த முரட்டுக் குடிகாரக் கணவனின் கொச்சை வார்த்தைகள், அவன் உருவி நீட்டிய கத்தியை விடக் கூராயிருந்தன. அந்தக் கூர்மை தொலைவிலிருந்தே எங்கோ அவளைக் காயப்படுத்தியிருந்தது.


(கலைமகள் பொன் விழா மலர், 1982)