நூறாசிரியம்/இனிதுற நினைமே

72 இனிதுற நினைமே


எழுந்தீ நாற்றம் பரத்தலும்
விழுந்துளி நச்சம் விரிபுனற் கலத்தலும்
அதிரொலி மென்செவிக் கழலெனப் படர்தலுங்
கதிரொளி விரிந்துயிர் கனத்தலு முண்மையின்
முன்னிய கோட்டம் மன்னுயிர்க் கெல்லாம் 5
மின்னுவ தாகலின் உன்னுவ தெவையுந்
தம்மிய வென்னா தமக்கும்
எம்மிய லோர்க்கும் இனிதுற நினைமே!


பொழிப்பு :

எழுகின்ற தீயநாற்றம் இனிய காற்றில் பரவுதலும், விழுகின்ற துளியளவு நஞ்சு பரந்த நீரில் யாண்டும் கலத்தலும், இடிமுழக்கம் செவியின் வெப்பம் போல் பரவுதலும் கதிரவனின் ஒளி யாண்டும் விரிவுற்று அதன் வெப்பம் உயிரினங்களை யெல்லாம் சூடேற்றுதலும் இயல்பாய் இருத்தலின் ஒருவர் மனத்துக் கருதிய கோணல், நிலைபெற்ற உயிர்களுக் கெல்லாம் உள்ளத்தின்கட் பளிச்சிடுவது ஆகலின் மக்கள் மனத்தில் எண்ணுவன எவற்றையும் தம்முடைய எண்ணமே என்று கொள்ளற்க! யாவரும் தமக்கும் மற்றும் எவ்வகைப்பட்ட இயல்பு உடையோர்க்கும் நல்லன விளையுமாறு நினையுமின்!

விரிப்பு :

இப்பாடல் புறப்பொருள் சார்ந்தது.

காற்றினும் நீரினும், வானினும் பட்ட பொருள்கள் அவற்றினூடே யாண்டும் பரவுதல் காண்டுமாகவின் அவ்வாறே ஒருவர் மனத்துக் கருதும் எண்ணம் மனவெளியினூடே யாண்டும் பரவி மக்கள் மனத்திலெல்லாம் தோன்றும் ஆதலின் நம்மனத்துத் தோன்றுவனவெல்லாம் நாமே கருதுவன அல்ல என்பதை அறிதலோடு தமக்கும் பிறர்க்கும் நன்மை பயக்கும் எண்ணங்களை மனங்கொள்ளுமாறு அறிவுறுத்துவது இப் பாட்டு,

எழும் தீ நாற்றம் இன் வளி பரத்தலும்- எழுகின்ற தீயநாற்றம் இனிய காற்றில்யாண்டும் பரவுதலும்.நறுமணமும் யாண்டும் பரவுவதே யெனினும் தீய நாற்றமே விரைந்து உணரப்படுதலின் அதனைக் கூறினார். நாற்றம் தீயநாற்றத்தைக் குறிப்பினும் பண்டு நறுமணத்தையும் இரு மணத்தையுங் குறித்தமையின் தீ நாற்றம் என்று அடைமொழி புணர்த்துக் கூறினார்.

இன்வளி-நல்ல காற்று; பரத்தல் -பரவுதல்

விழும் துளி நச்சம் விரிபுனல் கலத்தலும் - விழுகின்ற துளியளவு நஞ்சு பரந்த நீரில் எங்கும் கலத்தலும்.

ஆவியின் இயல்பு மேல்நோக்கி எழும்புதலும், நீர்மத்தின் இயல்பு கீழ்நோக்கி இழிதலுமாதலின் மேலையடியில் எழும் என்றவர் ஈண்டு விழும் என்றார்.

துளி - நீர்மத்தின் சிற்றளவு : மழைத் துளியளவு

நச்சம் . நஞ்சு விரிபுனல் - பரந்துபட்ட நீர்

அதிரொலி மென்செவிக்கு அழல் எனப்படர்தலும் - இடி முழக்கம் மெல்லிய செவியின்கண் தீப்போலப் பரவுதலும்.

அதிர்தல்-முழங்குதல்.ஒலி-இடி அதிரொலி என்றது இடி முழக்கத்தை

மெல்லிய ஒலியையுங் கதுவுமாறு செவிப்பறை மென்மையானதாக இருத்தலின் மென்செவி என்றார் செவிக்கு - செவியின்கண்

விரைந்து பரவுதலுக்குத் தீ உவமையாக கூறப்பட்டது. அழல்-தீ; எனஉவம உருபு.

கதிர்ஒளி விரிந்து உயிர் கனத்தலும் - கதிரவனின் ஒளி யாண்டும் பரவி உயிரினங்களுக்கு வெப்பமளித்தலும்.

கதிர்- கதிரவன் கனத்தல்-கனற்றுதல்; வெப்பமூட்டுதல்.

உண்மையின் உலக இயல்பாய் இருத்தலால்,

முன்னிய கோட்டம்- மின்னுவது ஆகலின் ஒருவர் மனத்துப்பட்ட கோணல் நிலைபெற்ற உயிர்கள் அனைத்திடத்தும் பளிச்சிடுவது ஆதலின்.

முன்னுதல்-கருதுதல்; மனத்தின் வினை. கோட்டம்-கோணல் ஒழுங்கின்மை; உடல்கள் அழிவன வல்லது உயிர்கள் அழிவற்றன என்னுங் கருத்தால் மன்னுயிர் என்றார். மன்னுயிர் நிலை பெற்ற உயிர் மின்னல் வீச்சுப்போல் கருத்துகள் தோன்றுதலின் மின்னுவது என்றார். மின்னுவது - பளிச்சிடுவது.

ஒருவர் கருதும் கருத்து மாந்தர் அனைவர்தம் உள்ளத்திலும் தோன்றுகிறது எனப்படுதலின், தம் உள்ளத்துத் தோன்றுங் கருத்து இன்னொருவரது கருத்தின் தாக்கமாகவும் இருக்கக்கூடும் என்பார் இவ்வாறு கூறினார்.

உன்னுவது எவையும் தம்மிய என்னா- தம் மனத்துத் தோன்றும் கருத்துகள் அனைத்தும் தாமே கருதியன என்று கொள்ளற்க,

உன்னுவது கருதுவது கருதப்படும் கருத்துகள். தம்மிய-தம்முடையன. தாமே கருதியன என்னா-என்று கொள்ளற்க

தமக்கும் எம் இயலோர்க்கும்-நினைம் தமக்கும் மற்றும் எத்திறத்தார்க்கும் நன்மை விளையுமாறு நினைக.

எம் இயலார்க்கும் எவ் இயலார்க்கும். அம்மை-அவ்வை, செம்மை-செவ்வை முதலானவற்றுள் மகரம் வகரமிகத் திரிந்தாங்கு ஈண்டு வகரம் மகரமாகத் திரிந்தெனக் கொள்க.

இப்பாடல் பொதுவியல் என்னும் புறத்தினையும் பொருண் மொழிக்காஞ்சி என்னுந் துறையுமாம்.