நூறாசிரியம்/நாண்மிக வுடைத்தே

30 நாண்மிக வுடைத்தே


ஆயுங் காலை நாண்மிக வுடைத்தே
ஈனாக் கன்றைக் காட்டுநர் கொள்ளும்
ஆமடிச் சிறுபயன் போல
நாமவற் கிளமை நலமழிப் பதுவே!

பொழிப்பு :

ஆய்ந்து பார்க்குமிடத்து மிகுந்த நாணமாக விருக்கின்றது; தான் ஈனாத ஒரு செய்கன்றைக் காட்டி ஆவின் மடியினின்று கொள்ளுகின்ற சிறிய அளவினதாகிய பாலைப் போல, நம்மை மணந்து கொள்ளாத அவனுக்கு நம் இளமை நலத்தைத் தந்து நம்மை அழித்துக் கொள்வது.

விரிப்பு:

இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது.

மணந்து கொள்வதாகக் கூறி தன் தலைவியிடத்துக் களவுப் புணர்ச்சி மேற்கொண்டொழுகும் தலைவன் காதுகளிற் படுமாறு தோழி தலைவிக்குக் கூறியதாகும் இப்பாட்டு.

‘தலைவன் தான் மணந்து கொள்கின்றேன்’ என்று கூறிய கூற்று உண்மையானதன்று. புனைவு சான்றது. அன்றாயின் அதனை அவன் மெய்ப்பிக்க முயலுவான். அவ்வாறின்றி இரவுக் குறியிடத்து அவன் நாளும் வந்து களவின் புணர்ந்து செல்வதும், நாம் அவன் சொல்லை நம்பி அவன் பொருட்டு நம் இளமையை அழித்துக் கொள்வதும் நமக்கு மிகுந்த நாணத்தை விளைவிப்பதாகும். எனவே நீ எச்சரிக்கையாகவிரு என்று தலைவிக்குத் தோழி அறிவுறுத்தினாள் என்க. இதனைத் தலைவனின் காது படும்படி அவள் கூறியது, அவன் அது பற்றி எண்ணி மணந்து கொள்ளும் காலத்தை நீட்டிக்க விடான் என்று கருதி என்க.

ஆயுங்காலை என்றதால் நாம் இதுவரை ஆராயாமல் நடந்து கொண்டோம். இனி அவ்வாறு இருத்தலாகாது என்றாள் என்க. நாம் மட்டுமன்றி அவனும் இது பற்றி ஆராய்ந்து பாராது நடந்து வருகின்றான். இனி அவனும் ஆய்ந்து பார்த்து மணத்திற்கு ஏற்பாடு செய்தல் வேண்டும் என்றும் குறிப்புணர்த்துவாள்.

நாண்மிகவுடைத்து என்றுழி, நாம் இவ்வாறு செய்யும் செயல் மிகுந்த நாணத்தைத் தரத்தக்கது. பிறர்க்கு இது தெரியவரின் மிகவும் இழிவாகும்

என்றாள். யாங்கள் மட்டுமேயன்றி நீயும் எம்மை ஏமாற்றி எம் இளமையை அழிப்பது நாணற்குரியதே என்றும் அஃது ஒர் ஆண்மகன் செய்தக்கது அல்லதென்றும் குறிப்புணர்த்தினாள் என்க.

ஈனாக்கன்று - ஈனப்பெறாத கன்று. செய்கன்று. ஈன்றகன்று இறந்த விடத்து, வைக்கோல் முதலிய செய்பொருள்களைக் கொண்டு கன்று போல் செய்வித்து அதனைக் காட்டி ஆமடி கறப்பர். மெய்க் கன்றையன்றிப் பொய்க்கன்றைக் காட்டிக் கறத்தல் ஆவை ஏமாற்றிக் கறத்தல் ஆகும்.

காட்டுநர் கொள்ளும் ஆடிச் சிறுபயன் - ஈனாக்கன்றைக் காட்டிக் கறப்பவர் கொள்ளுகின்ற ஆமடியின் சிறிய அளவினதாகிய பால்.

மெய்க்கன்றை யூட்டிக் கறக்கும் பாலினது அளவினும் பொய்க் கன்றைக் காட்டிக்கறக்கும் பாலினது அளவு குறைவுபடும் ஆகையால் அதனைச் சிறுபயன் என்றாள். இனிச் சிறுமை பொருந்திய பயனுமாம் என்க.

தலைவன் ‘வரைந்து கொள்வேன்’ என்றுகூறும் கூற்றினைத் தோழி ஈனாக்கன்றுக்கு உவமித்தாள் என்க. நம் ‘நம்பிக்கை'யாகிய மெய்க்கன்று இறந்தவிடத்துப் பொய்க்கன்று ஆகிய ‘வரைந்து கொள்வேன்’ எனும் பொருளில்லாச் சொற்களைக் கூறி நம்மை மேலும் மேலும் ஏமாற்றி வருகின்றான் தலைவன்; எனவே விழிப்பாயிரு’ எனத் தலைவிக்குத்தோழி எச்சரிக்கை செய்தாள். அவ்வாறே இனி நீயும் எங்களைப் பொய் கூறி ஏமாற்றி வருவதை நாங்களும் உணர்ந்து கொண்டோம். இனி மணமுடித்துக் கொண்டாலல்லது களவுப் புணர்ச்சியை நினையாதே’ என்று தலைவனுக்கு விடுத்த எச்சரிக்கையாகவும் கொள்க.

இனி, காட்டுநர் கொள்ளும் என்றதால், யாமே தராது நீயே வலிந்து கொண்டனை என்றும் தலைவற்குக் குறிப்புணர்த்தினாள் என்க.

ஆமடி என்று உறுப்பைப் புலப்படுத்திக் கூறியதால் உள்ளத்துணர்வின் வழிப்பெறாத உறுப்புப் புணர்ச்சிக்கு நீவிர் இருவீரும் அடிமையாகல் வேண்டா என இருவர்க்கும் அறிவு கொளுத்தினாள் என்க.

களவுக் காலத்துப் பிறர் வருகைக்கு அஞ்சியஞ்சி விரைந்து கொள்ளும் புணர்ச்சியின்பம், உள வேட்கையைத் தீர அவிக்காது உடல் வேட்கையை மட்டும் சிறிதே அவிக்கும் தன்மைத்து ஆதலின் சிறுபயன் என்றாள்.

இனி, மணந்து கொள்ளப் பெறாது மெய்யின்பம் பெறும் அவர் செய்கை சிறுமைத்தாகலின் சிறுபயன் என்றாள்.

புறத்தை மறந்து துய்க்க வாய்ப்பின்றி, உரிமையற்ற கொல்லையுட் புகுந்து பறித்தல் போல், அகத்தைப் புறத்து வைத்து வெருவச் சுவைத்தலின் இன்பம் என்னாது பயன் என்றாள் என்க.

தலைவன் முல்லை நிலத்தவனாகலின் அவற்குப் பொருந்திய ஒர் உவமையால் உணர்வித்தாள் என்க.

நாம் அவற்கு - நாம், நம்மை ஏமாற்றும் அத்தலைவனுக்கு.

தலைவியே தலைவனோடு புணர்ந்தாள் எனினும், தோழி தன்மைப் பன்மையிற் பேசுவது, அவளுக்கு வந்த இழிவு தனக்கும் ஆகும் என்பதால் என்க.

இளமை நலம் - இளமையாகிய பெண்மை நலத்தை,

அழிப்பது - அழித்துக் கொள்வது.

உரிமையில் புணர்ச்சி உளத்தைத் தாக்கி உடல் நலத்தையும் கெடுக்குமாகலின் நலம் அழிப்பது என்று கூறினாள் என்க.

உறவும் ஒக்கலும் ஊரும் அறியாது தம்மைக் களவின் ஈடுபடுத்திப் புணர்தல் மேற்கொண்டொழுகும் தலைவனும் தலைவியும் தம் நிலையைத் தாமே நன்கு உணர்தல் பொருட்டுத் தோழி அவர்க்கு அறிவுறுத்தியதாகும் இப்பாடல்.

இது குறிஞ்சி யென் திணையும், இரவுக்குறி வந்து தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைவிக்குச் சொல்லிய தென் துறையுமாம்.