நெய்தற்கலி


ஐந்தாவது, நெய்தல்கலி தொகு

ஆசிரியர்: நல்லந்துவனார் தொகு

பாடல்: 118 (வெல்புகழ்) தொகு

வெல் புகழ் மன்னவன், விளங்கிய ஒழுக்கத்தால்,

நல் ஆற்றின் உயிர் காத்து, நடுக்கு அறத் தான் செய்த தொல் வினைப் பயன் துய்ப்ப, துறக்கம் வேட்டு எழுந்தாற்போல் - பல் கதிர் ஞாயிறு பகல் ஆற்றி மலை சேர, ஆனாது கலுழ் கொண்ட உலகத்து, மற்று அவன் ஏனையான் அளிப்பான் போல், இகல் இருள் மதி சீப்பக், குடை நிழல் ஆண்டாற்கும் ஆளிய வருவாற்கும் இடை நின்ற காலம் போல், இறுத்தந்த மருள் மாலை!

மாலை நீ - தூ அறத் துறந்தாரை நினைத்தலின், கயம் பூத்த போது போல் குவிந்த என் எழில் நலம் எள்ளுவாய்; ஆய் சிறை வண்டு ஆர்ப்ப, சினைப் பூ போல் தளை விட்ட காதலர்ப் புணர்ந்தவர் காரிகை கடிகல்லாய்.

மாலை நீ - தை எனக் கோவலர் தனிக் குழல் இசை கேட்டு பையென்ற நெஞ்சத்தேம் பக்கம் பாராட்டுவாய்; செவ்வழி யாழ் நரம்பு அன்ன கிளவியார் பாராட்டும், பொய் தீர்ந்த புணர்ச்சியுள் புது நலம் கடிகல்லாய்.

மாலை நீ - தகை மிக்க தாழ் சினைப் பதி சேர்ந்து புள் ஆர்ப்பப் பகை மிக்க நெஞ்சத்தேம் புன்மை பாராட்டுவாய்; தகை மிக்க புணர்ச்சியார் தாழ் கொடி நறு முல்லை முகை முகம் திறந்தன்ன, முறுவலும் கடிகல்லாய்.

என ஆங்கு; மாலையும் அலரும் நோனாது, எம் வயின் நெந்ஜ்சமும் எஞ்சும்மன் தில்ல - எஞ்சி, உள்ளாது அமைந்தோர், உள்ளும், உள் இல் உள்ளம் உள் உள் உவந்தே.

119 அகல் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாய் ஆக பகல் நுங்கியது போலப் படு சுடர் கல் சேர, இகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர, நிலவுக் காண்பது போல அணி மதி ஏர்தரக், கண் பாயல் பெற்ற போல் கணைக் கால மலர் கூம்பத் தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச, முறுவல் கொள்பவை போல முகை அவிழ்பு புதல் நந்தச் சிறு வெதிர் குழல் போலச் சுரும்பு இமிர்ந்து இம்மெனப், பறவை தம் பார்ப்பு உள்ளக், கறவை தம் பதி வயின் கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர, மா வதி சேர, மாலை வாள் கொள அந்தி அந்தணர் எதிர்கொள, அயர்ந்து செந்தீச் செவ் அழல் தொடங்க - வந்ததை வால் இழை மகளிர் உயிர் பொதி அவிழ்க்கும் காலை ஆவது அறியார், மாலை என்மனார் மயங்கியோரே!

120 அருள் தீர்ந்த காட்சியான், அறன் நோக்கான், நயம் செய்யான் வெருவுற உய்த்தவன் நெஞ்சம் போல், பைபய இருள் தூர்பு, புலம்பு ஊரக், கனை சுடர் கல் சேர - உரவுத் தகை மழுங்கித் தன் இடும்பையால் ஒருவனை இரப்பவன் நெஞ்சம் போல் புல்லென்று, புறம் மாறிக் கரப்பவன் நெஞ்சம் போல், மரம் எல்லாம் இலை கூம்பத் - தோற்றம் சால் செக்கருள் பிறை நுதி எயிறு ஆக, நால் திசையும் நடுக்குறூஉம் மடங்கல் காலைக், கூற்று நக்கது போலும், உட்குவரு கடு மாலை!

மாலை நீ - உள்ளம் கொண்டு அகன்றவர் துணை தாராப் பொழுதின் கண் வெள்ள மான் நிறம் நோக்கி கணை தொடுக்கும் கொடியான் போல், அல்லற்பட்டு இருந்தாரை அயர்ப்பிய வந்தாயோ? மாலை நீ - ஈரம் இல் காதலர் இகந்து, அருளா இடன் நோக்கிப் போர் தொலைந்து இருந்தாரைப் பாடு எள்ளி நகுவார் போல், ஆர் அஞர் உற்றாரை அணங்கிய வந்தாயோ? மாலை நீ - கந்து ஆதல் சான்றவர் களைதாராப் பொழுதின் கண் வெந்தது ஓர் புண்ணின் கண் வேல் கொண்டு நுழைப்பான் போல், காய்ந்த நோய் உழப்பாரைக் கலக்கிய வந்தாயோ? என ஆங்கு; இடன் இன்று அலைத்தரும் இன்னா செய் மாலை துனி கொள் துயர் தீர காதலர் துனை தர மெல்லியான் பருவத்து மேல் நின்ற கடும் பகை ஒல்லென நீக்கி, ஒருவாது காத்து ஓம்பும் நல் இறை தோன்றக், கெட்டாங்கு - இல்லாகின்றால் இருள் அகத்து ஒளித்தே.

121 ஒள் சுடர் கல் சேர, உலகு ஊரும் தகையது, தெள் கடல் அழுவத்துத் திரை நீக்கா எழுதரூஉம், தண் கதிர் மதியத்து அணி நிலா நிறைத்தரப், புள் இனம் இரை மாந்திப் புகல் சேர, ஒலி ஆன்று, வள் இதழ் கூம்பிய மணி மருள் இரும் கழி பள்ளி புக்கது போலும் பரப்பு நீர்த் தண் சேர்ப்ப!

தாங்க அரும் காமத்தைத் தணந்து நீ புறம் மாறத் தூங்கு நீர் இமிழ் திரை துணை ஆகி ஒலிக்குமே - உறையொடு வைகிய போது போல், ஒய்யென, நிறை ஆனாது இழிதரூஉம் நீர் நீந்து கண்ணாட்கு;

வாராய் நீ புறம் மாற, வருந்திய மேனியாட்கு, ஆர் இருள் துணை ஆகி அசை வளி அலைக்குமே - கமழ் தண் தாது உதிர்ந்து உக, ஊழ் உற்ற கோடல் வீ இதழ் சோரும் குலை போல, இறை நீவு வளையாட்கு;

இன் துணை நீ நீப்ப, இரவின் உள் துணை ஆகித், தன் துணை பிரிந்து அயாஅம் தனி குருகு உசாவுமே - ஒள் சுடர் ஞாயிற்று விளக்கத்தான் ஒளி சாம்பும் நண்பகல் மதியம் போல், நலம் சாய்ந்த அணியாட்கு; என ஆங்கு; எறி திரை தந்திட, இழிந்த மீன் இன் துறை மறி திரை வருந்தாமல் கொண்டாங்கு, நெறி தாழ்ந்து, சாயினள் வருந்தியாள் இடும்பை பாய் பரிக் கடு திண் தேர் களையினோ இடனே.

122 'கோதை ஆயமும் அன்னையும் அறிவுறப், போது எழில் உண் கண் புகழ் நலன் இழப்பக், காதல் செய்து அருளாது துறந்தார் மாட்டு, ஏது இன்றிச், சிறிய துனித்தனை; துன்னா செய்து அமர்ந்தனை; பலவு நூறு அடுக்கினை; இனைபு ஏங்கி அழுதனை; அலவலை உடையை' என்றி - தோழீ ! கேள் இனி; மாண் எழில் மாதர் மகளிரோடு அமைந்து அவன் காணும் பண்பு இலன் ஆதல் அறிவேன் மன்; அறியினும், பேணி அவன் சிறிது அளித்தக் கால், என் நாண் இல் நெஞ்சம் நெகிழ்தலும் காண்பல்;

இருள் உறழ் இரும் கூந்தல் மகளிரோடு அமைந்து அவன் தெருளும் பண்பு இலன் ஆதல் அறிவேன் மன்; அறியினும், அருளி அவன் சிறிது அளித்தக் கால், என் மருளி நெஞ்சம் மகிழ்தலும் காண்பல்;

ஒள் இழை மாதர் மகளிரோடு அமைந்து அவன் உள்ளும் பண்பு இலன் ஆதல் அறிவேன் மன்; அறியினும், புல்லி அவன் சிறிது அளித்தக் கால், என் அல்லல் நெஞ்சம் அடங்கலும் காண்பல்; அதனால்; யாம நடுநாள் துயில் கொண்டு ஒளித்த காம நோயின் கழீஇய நெஞ்சம் - தான் அவர்பால் பட்டது ஆயின், நாம் உயிர் வாழ்தலோ நகை நனி உடைத்தே!

123 கரும் கோட்டு நறும் புன்னை மலர் சினை மிசை தொறும் சுரும்பு ஆர்க்கும் குரலினோடு, இரும் தும்பி இயைபு ஊத, ஒருங்கு உடன் இம்மென இமிர்தலின், பாடலோடு அரும் பொருள் மரபின் மால் யாழ் கேளா கிடந்தான் போல், பெரும் கடல் துயில் கொள்ளும் வண்டு இமிர் நறு கானல் - காணாமை இருள் பரப்பிக் கையற்ற கங்குலான், மாணா நோய் செய்தான்கண் சென்றாய்; மற்று அவனை நீ காணவும் பெற்றாயோ? - காணாயோ? மட நெஞ்சே!

கொல் ஏற்றுச் சுறவு இனம் கடி கொண்ட மருள் மாலை, அல்லல் நோய் செய்தான்கண் சென்றாய்; மற்று அவனை நீ புல்லவும் பெற்றாயோ? - புல்லாயோ மட நெஞ்சே!

வெறி கொண்ட புள் இனம் வதி சேரும் பொழுதினான், செறி வளை நெகிழ்த்தான்கண் சென்றாய்; மற்று அவனை நீ அறியவும் பெற்றாயோ? - அறியாயோ? மட நெஞ்சே! என ஆங்கு; எல்லையும் இரவும் துயில் துறந்து, பல் ஊழ் அரும் படர் அவல நோய் செய்தான்கண் பெறல் நசைஇ, இரும் கழி ஓதம் போல் தடுமாறி, வருந்தினை அளிய என் மடம் கெழு நெஞ்சே!

124 ஞாலம் மூன்று அடித் தாய முதல்வற்கு முது முறைப் பால் அன்ன மேனியான் அணிபெறத் தைஇய நீல நீர் உடை போலத், தகைபெற்ற வெண் திரை வால் எக்கர் வாய் சூழும் வயங்கு நீர் தண் சேர்ப்ப!

ஊர் அலர் எடுத்து அரற்ற, உள்ளாய், நீ துறத்தலின், கூரும் தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்மன் - காரிகை பெற்ற தன் கவின் வாட கலுழ்பு, ஆங்கே பீர் அலர் அணி கொண்ட பிறை நுதல் அல்லாக்கால்;

இணைபு இவ் ஊர் அலர் தூற்ற, எய்யாய், நீ துறத்தலின், புணை இல்லா எவ்வ நோய் என்னையும் மறைத்தாள் மன் - துணையாருள் தகைபெற்ற தொல் நலம் இழந்து, இனி, அணி வனப்பு இழந்த தன் அணை மென் தோள் அல்லாக்கால்;

இன்று இவ் ஊர் அலர் தூற்ற, எய்யாய், நீ துறத்தலின், நின்ற தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள் மன் - வென்ற வேல் நுதி ஏய்க்கும் விறல் நலன் இழந்து, இனி, நின்று நீர் உகக் கலுழும் நெடும் பெரும் கண் அல்லாக்கால்; அதனால்; பிரிவு இல்லாய் போல, நீ தெய்வத்தின் தெளித்தக் கால், அரிது என்னாள், துணிந்தவள் ஆய் நலம் பெயர்தரப், புரி உளைக் கலி மான் தேர் கடவுபு - விரி தண் தார் வியல் மார்ப! - விரைக நின் செலவே!

125 'கண்டவர் இல்', என உலகத்துள் உணராதார், தங்காது தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள், நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும், 'அறிபவர் நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை ஆகலின்', வண் பரி நவின்ற வய மான் செல்வ! நன்கு அதை அறியினும், நயன் இல்லா நாட்டத்தால், 'அன்பு இலை' என வந்து கழறுவல்; ஐய! கேள்:

மகிழ் செய் தே மொழித் தொய்யில் சூழ் இள முலை முகிழ் செய முள்கிய தொடர்பு, அவள் உண் கண் அவிழ் பனி உறைப்பவும், நல்காது விடுவாய்! இமிழ் திரை கொண்க! கொடியை காண் நீ;

இலங்கு ஏர் எல் வளை ஏர் தழை தைஇ, நலம் செல நல்கிய தொடர்பு, அவள் சாஅய்ப் புலந்து அழப், புல்லாது விடுவாய்! இலங்கு நீர்ச் சேர்ப்ப! கொடியை காண் நீ;

இன் மணிச் சிலம்பின் சில் மொழி ஐம்பால் பின்னொடு கெழீஇய தட அரவு அல்குல் நுண் வரி, வாட, வாராது விடுவாய்! தண்ணம் துறைவ! தகாஅய் காண் நீ ;

என ஆங்கு; அனையள் என்று, அளிமதி, பெரும! நின் இன்று இறை வரை நில்லா வளையள் இவட்கு, இனிப் பிறை ஏர் சுடர் நுதல் பசலை மறையச் செல்லும், நீ மணந்தனை விடினே.

126 பொன் மலை சுடர் சேரப், புலம்பிய இடன் நோக்கித், தன் மலைந்து உலகு ஏத்தத் தகை மதி ஏர்தரச், செக்கர் கொள் பொழுதினான் ஒலி நீவி, இன நாரை முக்கோல் கொள் அந்தணர் முது மொழி நினைவார் போல், எக்கர் மேல் இறைகொள்ளும், இலங்கு நீர்த் தண் சேர்ப்ப!

அணிச் சிறை இனக் குருகு ஒலிக்கும்கால், நின் திண் தேர் மணிக் குரல் என இவள் மதிக்கும்மன்: மதித்தாங்கே, உள் ஆன்ற ஒலியவாய் இருப்பக் கண்டு, அவை கானல் புள் என உணர்ந்து பின் புலம்பு கொண்டு இனையுமே;

நீர் நீவிக் கஞன்ற பூக் கமழும்கால், நின் மார்பின் தார் நாற்றம் என இவள் மதிக்கும்மன்; மதித்தாங்கே, அலர் பதத்து அசை வளி வந்து ஒல்கக், கழிப் பூத்த மலர் என உணர்ந்து, பின் மம்மர் கொண்டு இனையுமே;

நீள் நகர் நிறை ஆற்றாள், நினையுநள் வதிந்தக் கால், தோள் மேலாய் என நின்னை மதிக்கும்மன்: மதித்தாங்கே, நனவு என புல்லும்கால், காணாளாய்க், கண்டது கனவு என உணர்ந்து, பின் கையற்றுக் கலங்குமே;

என ஆங்கு; பல நினைந்து இனையும் பைதல் நெஞ்சின், அலமரல் நோயுள் உழக்கும் என் தோழி மதி மருள் வாள் முகம் விளங்கப், புது நலம் ஏர்தரப், பூண்க, நின் தேரே!

127 தெரி இணர் ஞாழலும், தேம் கமழ் புன்னையும், புரி அவிழ் பூவின கைதையும், செருந்தியும், வரி ஞிமிறு இமிர்ந்து ஆர்ப்ப, இரும் தும்பி இயைபு ஊதச் - செரு மிகு நேமியான் தார் போலப் பெரும் கடல் வரி மணல் வாய் சூழும் வயங்கு நீர்த் தண் சேர்ப்ப;

கொடும் கழி வளைஇய குன்று போல், வால் எக்கர், நடுங்கு நோய் தீர, நின் குறி வாய்த்தாள் என்பதோ - கடும் பனி அறல் இகு கயல் ஏர் கண் பனி மல்க, இடும்பையோடு இனைபு ஏங்க, இவளை நீ துறந்ததை!

குறி இன்றிப் பல்நாள், நின் கடும் திண் தேர் வருபதம் கண்டு, எறி திரை இமிழ் கானல், எதிர்கொண்டாள் என்பதோ - அறிவு அஞர் உழந்து ஏங்கி, ஆய் நலம் வறிது ஆகச் செறி வளை தோள் ஊர, இவளை நீ துறந்ததை!

காண்வர இயன்ற இக் கவின் பெறு பனித் துறை, யாமத்து வந்து, நின் குறி வாய்த்தாள் என்பதோ - வேய் நலம் இழந்த தோள் விளங்கு இழை பொறை ஆற்றாள், வாள் நுதல் பசப்பு ஊர இவளை நீ துறந்ததை!

அதனால்; இறை வளை நெகிழ்ந்த எவ்வ நோய் இவள் தீர, 'உரவுக் கதிர் தெறும்' என, ஓங்கு திரை விரைபு, தன் கரை அமல் அடும்பு அளித்தாஅங்கு - உரவு நீர்ச் சேர்ப்ப! - அருளினை அளிமே!

128 'தோள் துறந்து, அருளாதவர் போல் நின்று, வாடை தூக்க, வணங்கிய தாழை ஆடு கோட்டு இருந்த அசை நடை நாரை, நளி இரும் கங்குல், நம் துயர் அறியாது, அளி இன்று, பிணி இன்று, விளியாது, நரலும் கானல் அம் சேர்ப்பனைக் கண்டாய் போலப் புதுவது கவினினை' என்றி ஆயின், நனவின் வாரா நயன் இலாளனைக் கனவில் கண்டு, யான் செய்தது கேள், இனி:

'அலந்தாங்கு அமையலென்' என்றானைப் பற்றி, 'என் நலம் தாராயோ?' எனத், தொடுப்பேன் போலவும், கலந்து ஆங்கே என் கவின் பெற முயங்கிப் 'புலம்பல் ஓம்பு' என, அளிப்பான் போலவும் - 'முலை இடைத் துயிலும் மறந்தீத்தோய்' என, நிலை அழி நெஞ்சத்தேன் அழுவேன் போலவும், 'வலை உறு மயிலின் வருந்தினை, பெரிது' எனத் தலையுற முன் அடிப் பணிவான் போலவும் - கோதை கோலா இறைஞ்சி நின்ற ஊதை அம் சேர்ப்பனை, அலைப்பேன் போலவும், 'யாது என் பிழைப்பு?' என நடுங்கி, ஆங்கே, 'பேதையை பெரிது' எனத் தெளிப்பான் போலவும்

ஆங்கு; கனவினால் கண்டேன் - தோழி! - 'காண்தகக் கனவின் வந்த கானலம் சேர்ப்பன் நனவின் வருதலும் உண்டு' என, அனை வரை நின்றது, என் அரும் பெறல் உயிரே.

129 தொல் ஊழி தடுமாறித் தொகல் வேண்டும் பருவத்தால், பல்வயின் உயிர் எல்லாம் படைத்தான்கண் பெயர்ப்பான் போல், எல் உறு தெறு கதிர் மடங்கித் தன் கதிர் மாய, நல் அற நெறி நிறீஇ உலகு ஆண்ட அரசன் பின், அல்லது மலைந்திருந்து அற நெறி நிறுக்கல்லா மெல்லியான் பருவம் போல், மயங்கு இருள் தலை வர: எல்லைக்கு வரம்பு ஆய, இடும்பை கூர், மருள் மாலை -

பாய் திரைப் பாடு ஓவாப் பரப்பு நீர் பனிக் கடல்! - 'தூ அற துறந்தனன் துறைவன்' என்று, அவன் திறம் நோய் தெற உழப்பார்கண் இமிழ்தியோ? எம் போலக் காதல் செய்து அகன்றாரை உடையையோ? - நீ.

மன்று இரும் பெண்ணை மடல் சேர் அன்றில்! - 'நன்று அறை கொன்றனர், அவர்' எனக் கலங்கிய என் துயர் அறிந்தனை நரறியோ? எம் போல இன் துணைப் பிரிந்தாரை உடையையோ? - நீ.

பனி இருள் சூழ்தரப் பைதல் அம் சிறு குழல்! - 'இனி வரின், உயரும் மன் பழி' எனக் கலங்கிய தனியவர் இடும்பை கண்டு இனைதியோ? எம் போல இனிய செய்து அகன்றாரை உடையையோ? - நீ

என ஆங்கு; அழிந்து, அயல் அறிந்த எவ்வம் மேற்படப் பெரும் பேதுறுதல் களைமதி, பெரும! வருந்திய செல்லல் தீர்த்த திறன் அறி ஒருவன் மருந்து அறைகோடலின் கொடிதே, யாழ நின் அருந்தியோர் நெஞ்சம் அழிந்து உக விடினே.

130 'நயனும் வாய்மையும் நன்னர் நடுவும் இவனின் தோன்றிய இவை' என இரங்கப், புரை தவ நாடிப் பொய் தபுத்து, இனிது ஆண்ட அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழிச் செல்வம் போல், நிரை கதிர்க் கனலி பாடொடு பகல் செலக் கல்லாது முதிர்ந்தவன் கண் இல்லா நெஞ்சம் போல், புல் இருள் பரத்தரூஉம் - புலம்பு கொள் மருள் மாலை.

இம் மாலை; ஐயர் அவிர் அழல் எடுப்ப, அரோ, என் கையறு நெஞ்சம் கனன்று தீ மடுக்கும்! இம் மாலை; இரும் கழி மா மலர் கூம்ப, அரோ, என் அரும் படர் நெஞ்சம் அழிவொடு கூம்பும்! இம் மாலை; கோவலர் தீம் குழல் இனைய, அரோ என் பூ எழில் உண் கண் புலம்பு கொண்டு இனையும்!

என ஆங்கு; படுசுடர் மாலையொடு பைதல் நோய் உழப்பாளைக், குடி புறங்காத்து ஓம்பும் செம் கோலான் வியன் தானை விடுவழி விடுவழிச் சென்றாங்கு, அவர் தொடுவழித் தொடுவழி நீங்கின்றால் பசப்பே.

131 பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கித் தெளித்து, என் திருந்து இழை மென் தோள் மணந்தவன் செய்த அரும் துயர் நீக்குவேன் போல்மன் - பொருந்துபு பூக் கவின் கொண்ட புகழ் சால் எழில் உண் கண், நோக்கும்கால் நோக்கின் அணங்கு ஆக்கும், சாயலாய்! தாக்கி இன மீன் இகல் மாற வென்ற சின மீன் எறி சுறா வான் மருப்பு கோத்து, நெறி செய்த நெய்தல் நெடு நார்ப் பிணித்து யாத்துக் கை உளர்வின் யாழ் இசை கொண்ட இன வண்டு இமிர்ந்து ஆர்ப்பத் தாழாது உறைக்கும் தட மலர்த் தண் தாழை வீழ் ஊசல் தூங்க பெறின்.

மாழை, மட மான் பிணை இயல் வென்றாய்! நின் ஊசல் கடைஇ யான் இகுப்ப, நீடு ஊங்காய் தட மென் தோள் நீத்தான் திறங்கள் பகர்ந்து. நாணின கொல் தோழி? நாணின கொல் தோழி? இரவு எலாம் நல்தோழி நாணின - என்பவை 6 வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர் மேல், ஆனாப் பரிய அலவன் அளை புகூஉம்... கானல் கமழ் ஞாழல் வீ ஏய்ப்பத் தோழி! என் மேனி சிதைத்தான் துறை.

மாரி வீழ் இரும் கூந்தல், மதைஇய நோக்கு எழில் உண்கண் தாழ் நீர முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய்! தேயா நோய் செய்தான் திறம் கிளந்து நாம் பாடும் சேய் உயர் ஊசல்சீர் நீ ஒன்று பாடித்தை. பார்த்து உற்றன, தோழி! பார்த்து உற்றன, தோழி! இரவு எலாம், நல்தோழி! பார்த்து உற்றன - என்பவை, 'தன் துணை இல்லாள் வருந்தினாள் கொல்?' என, இன் துணை அன்றில் இரவின் அகவாவே - அன்று, தான் ஈர்த்த கரும்பு அணி வாட, என் மென்தோள் ஞெகிழ்த்தான் துறை.

கரை கவர் கொடும் கழிக் கண்கவர் புள் இனம் திரை உறப் பொன்றிய புலவு மீன் அல்லதை, இரை உயிர் செகுத்து உண்ணாத் துறைவனை யாம் பாடும் அசை வரல் ஊசல்சீர் அழித்து ஒன்று பாடித்தை. அருளின கொல் தோழி? அருளின கொல் தோழி? இரவு எலாம், தோழி! அருளின - என்பவை, கணம் கொள் இடு மணல் காவி வருந்தப் பிணங்கு இரு மோட்ட திரை வந்து அளிக்கும் - மணம் கமழ் ஐம்பாலார் ஊடலை ஆங்கே வணங்கி உணர்ப்பான் துறை.

என, நாம் பாட, மறை நின்று கேட்டனன், நீடிய வால் நீர்க் கிடக்கை வயங்கு நீர்ச் சேர்ப்பனை யான் என உணர்ந்து, நீ நனி மருளத் தேன் இமிர் புன்னை பொருந்தித், தான் ஊக்கினன், அவ் ஊசலை வந்தே.

132 உரவு நீர்த் திரை பொர ஓங்கிய எக்கர் மேல், விரவுப் பல் உருவின வீழ் பெடை துணை ஆக, இரை தேர்ந்து உண்டு, அசாவிடூஉம் புள் இனம் இறைகொள - முரைசு மூன்று ஆள்பவர் முரணியோர் முரண் தப, நிரை களிறு இடைபட, நெறி யாத்த இருக்கை போல் சிதைவு இன்றிச் சென்றுழிச் சிறப்பு எய்தி, வினை வாய்த்துத் துறைய கலம் வாய் சூழும் துணி கடல் தண் சேர்ப்ப!

புன்னைய நறும் பொழில் புணர்ந்தனை இருந்தக்கால் 'நல் நுதால் அஞ்சல் ஓம்பு' என்றதன் பயன் அன்றோ - பாயின பசலையால், பகல் கொண்ட சுடர் போன்றாள், மாவின தளிர் போலும் மாண் நலம் இழந்ததை?

பல்மலர் நறும் பொழில் பழி இன்றிப் புணர்ந்தக்கால் 'சின் மொழி! தெளி' எனத் தேற்றிய சிறப்பு அன்றோ - வாடுபு வனப்பு ஓடி வயக்கு உறா மணி போன்றாள் நீடு இறை நெடு மென்தோள் நிரை வளை நெகிழ்ந்தந்தை?

அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ, மணந்தக்கால் 'கொடும் குழாய்! தெளி' எனக் கொண்டதன் கொளை அன்றோ - பொறை ஆற்றா நுசுப்பினால், பூ வீந்த கொடி போன்றாள் 8 மறை பிறர் அறியாமை மாணா நோய் உழந்ததை?

என ஆங்கு - வழிபட்ட தெய்வம்தான் வலி எனச் சார்ந்தார்கண் கழியும் நோய் கைம்மிக அணங்கு ஆகியது போலப், பழி பரந்து அலர் தூற்ற, என் தோழி அழி படர் அலைப்ப, அகறலோ கொடிதே!

133 மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன் கானல் அணிந்த உயர் மணல் எக்கர் மேல், சீர் மிகு சிறப்பினோன் மர முதல் கை சேர்த்த நீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முடத் தாழைப் பூ மலர்ந்தவை போலப், புள் அல்கும் துறைவ! கேள்:

'ஆற்றுதல்' என்பது, ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்; 'போற்றுதல்' என்பது, புணர்ந்தாரை பிரியாமை; 'பண்பு' எனப்படுவது, பாடு அறிந்து ஒழுகுதல்; 'அன்பு' எனப்படுவது, தன் கிளை செறாஅமை; 'அறிவு' எனப்படுவது, பேதையார் சொல் நோன்றல்; 'செறிவு' எனப்படுவது, கூறியது மறாஅமை; 'நிறை' எனப்படுவது, மறை பிறர் அறியாமை; 'முறை' எனப்படுவது, கண்ணோடாது உயிர் வௌவல்; 'பொறை' எனப்படுவது, போற்றாரை பொறுத்தல்.

ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின், என் தோழி நல் நுதல் நலன் உண்டு துறத்தல் - கொண்க! - தீம் பால் உண்பவர் கொள் கலம் வரைதல்; நின்தலை வருந்தியாள் துயரம் சென்றனை களைமோ, பூண்க, நின் தேரே!

134 மல்லரை மறம் சாய்த்த மலர் தண் தார் அகலத்தோன் ஒல்லாதார் உடன்று ஓட, உருத்து, உடன் எறிதலின், கொல் யானை அணி நுதல் அழுத்திய ஆழி போல், கல் சேர்பு ஞாயிறு கதிர் வாங்கி மறைதலின், இரும் கடல் ஒலித்து ஆங்கே இரவுக் காண்பது போலப், 5 பெரும் கடல் ஓத நீர் வீங்குபு கரை சேரப், போஒய வண்டினால் புல்லென்ற துறையவாய்ப் பாயல் கொள்பவை போலக் கய மலர் வாய் கூம்ப, ஒரு நிலையே நடுக்குற்று இவ் உலகு எலாம் அச்சுற, இரு நிலம் பெயர்ப்பு அன்ன, எவ்வம் கூர் மருள் மாலை;

தவல் இல் நோய் செய்தவர்க் காணாமை நினைத்தலின், 1 இகல் இடும் பனி தின, எவ்வத்துள் ஆழ்ந்து, ஆங்கே, கவலை கொள் நெஞ்சினேன் கலுழ் தரக், கடல் நோக்கி, அவலம் மெய்க் கொண்டது போலும் - அ·து எவன் கொலோ?

நடுங்கு நோய் செய்தவர் நல்காமை நினைத்தலின், கடும் பனி கைம்மிகக் கையாற்றுள் ஆழ்ந்து, ஆங்கே, நடுங்கு நோய் உழந்த என் நலன் அழிய, மணல் நோக்கி, இடும்பை நோய்க்கு இகுவன போலும் - அ·து எவன் கொலோ?

வையினர் நலன் உண்டார் வாராமை நினைத்தலின், கையறு நெஞ்சினேன் கலக்கத்துள் ஆழ்ந்து, ஆங்கே, மையல் கொள் நெஞ்சொடு மயக்கத்தால், மரன் நோக்கி, எவ்வத்தால் இயன்ற போல் இலை கூம்பல் எவன் கொலோ?

என ஆங்கு; கரை காணாப் பௌவத்துக் கலம் சிதைந்து ஆழ்பவன் திரை தரப் புணை பெற்றுத், தீது இன்றி உய்ந்தாங்கு விரைவனர் காதலர் புகுதர, நிரை தொடி துயரம் நீங்கின்றால் விரைந்தே.

135 துணை புணர்ந்து எழுதரும் தூ நிற வலம்புரி இணை திரள் மருப்பு ஆக எறி வளி பாகனா - அயில் திணி நெடும் கதவு அமைத்து, அடைத்து அணி கொண்ட எயில் இடு களிறே போல் இடு மணல் நெடு கோட்டைப் பயில் திரை, நடு நன்னாள், பாய்ந்து உறூஉம் துறைவ! கேள்:

கடி மலர்ப் புன்னைக் கீழ் காரிகை தோற்றாளைத் தொடி நெகிழ்த்த தோளளாத் துறப்பாயால், மற்று நின் குடிமைக் கண் பெரியது ஓர் குற்றமாய்க் கிடவாதோ?

ஆய் மலர்ப் புன்னைக் கீழ் அணி நலம் தோற்றாளை நோய் மலி நிலையளாத் துறப்பாயால், மற்று நின் வாய்மைக் கண் பெரியது ஓர் வஞ்சமாய்க் கிடவாதோ?

திகழ் மலர்ப் புன்னைக் கீழ் திரு நலம் தோற்றாளை இகழ் மலர்க் கண்ணளாத் துறப்பாயால், மற்று நின் புகழ்மைக் கண் பெரியது ஓர் புகர் ஆகி கிடவாதோ?

என ஆங்கு; சொல்லக் கேட்டனை ஆயின், வல்லே, அணி கிளர் நெடு வரை அலைக்கும் நின் அகலத்து, மணி கிளர் ஆரம் தாரொடு துயல்வர உயங்கினள் உயிர்க்கும் என் தோழிக்கு இயங்கு ஒலி நெடும் திண் தேர் கடவுமதி விரைந்தே!

136 இவர் திமில், எறி திரை ஈண்டி வந்து அலைத்தக்கால், உவறு நீர் உயர் எக்கர், அலவன் ஆடு அளை வரித், தவல் இல் தண் கழகத்துத் தவிராது வட்டிப்பக், கவறு உற்ற வடு ஏய்க்கும், காமரு பூங் கடல் சேர்ப்ப!

முத்து உறழ் மணல் எக்கர் அளித்தக்கால், முன் ஆயம் பத்து உருவம் பெற்றவன் மனம் போல, நந்தியாள் - அத் திறத்து நீ நீங்க, அணி வாடி, அவ் ஆயம் வித்தத்தால் தோற்றான் போல், வெய் துயர் உழப்பவோ?

முடத் தாழை முடுக்கருள் அளித்தக்கால், வித்தாயம் இடைத் தங்கக் கண்டவன் மனம் போல, நந்தியாள் - கொடைத் தக்காய்! நீ ஆயின், நெறி அல்லாக் கதி ஓடி உடைப் பொதி இழந்தான் போல் உறு துயர் உழப்பவோ?

நறு வீ தாழ் புன்னைக் கீழ் நயந்து நீ அளித்தக்கால், மறு வித்தம் இட்டவன் மனம் போல, நந்தியாள் - அறிவித்து நீ நீங்கக் கருதியாய்க்கு, அப் பொருள் சிறு வித்தம் இட்டான் போல், செறி துயர் உழப்பவோ?

ஆங்கு, கொண்டு பலர் தூற்றும் கௌவை அஞ்சாய் தீண்டற்கு அருளித் திறன் அறிந்து, எழீஇப் பாண்டியம் செய்வான் பொருளினும் ஈண்டுக, இவள் நலம்; ஏறுக, தேரே!

137 அரிதே, தோழி! நாண் நிறுப்பாம் என்று உணர்தல்; பெரிதே காமம்; என் உயிர் தவச் சிறிதே; பலவே யாமம்; பையுளும் உடைய; சிலவே, நம்மோடு உசாவும் அன்றில்; அழல் அவிர் வயங்கு இழை ஒலிப்ப, உலமந்து, எழில் எஞ்சு மயிலின் நடுங்கிச், சேக்கையின் அழல் ஆகின்று, அவர் நக்கதன் பயனே.

மெல்லிய நெஞ்சு பையுள் கூரத், தம் சொல்லினான் எய்தமை அல்லது, அவர் நம்மை வல்லவன் தைஇய வாக்கு அமை கடு விசை வில்லினான் எய்தலோ இலர்மன்; ஆய் இழை! வில்லினும் கடிது, அவர் சொல்லினுள் பிறந்த நோய்.

நகை முதல் ஆக, நட்பினுள் எழுந்த தகைமையின் நலிதல் அல்லது, அவர் நம்மை வகைமையின் எழுந்த தொல் முரண் முதல் ஆகப், பகைமையின் நலிதலோ இலர்மன்; ஆய் இழை! பகைமையின் கடிது, அவர் தகைமையின் நலியும் நோய்.

'நீயலேன்' என்று என்னை அன்பினால் பிணித்துத், தம் சாயலின் சுடுதல் அல்லது, அவர் நம்மைப் பாய் இருள் அற நீக்கும் நோய் தபு நெடும் சுடர்த் தீயினால் சுடுதலோ இலர்மன்; ஆய் இழை! தீயினும் கடிது அவர் சாயலின் கனலும் நோய்.

ஆங்கு - அன்னர் காதலர் ஆக, அவர் நமக்கு இன் உயிர் போத்தரும் மருத்துவர் ஆயின், யாங்கு ஆவது கொல்? - தோழி! எனையதூஉம். தாங்குதல் வலித்தன்று ஆயின், நீங்க அரிது உற்றஅன்று, அவர் உறீஇய நோயே.

138 எழில் மருப்பு எழில் வேழம் இகுதரு கடாத்தால் தொழில் மாறித் தலை வைத்த தோட்டி கை நிமிர்ந்தாங்கு, அறிவும், நம் அறிவு ஆய்ந்த அடக்கமும், நாணொடு, வறிது ஆகப் பிறர் என்னை நகுபவும், நகுபு உடன் மின் அவிர் நுடக்கமும் கனவும் போல், மெய் காட்டி - என் நெஞ்சம் என்னோடு நில்லாமை நனி வௌவித் தன் நலம் கரந்தாளைத் தலைப்படும் ஆறு எவன் கொலோ? மணிப் பீலி சூட்டிய நூலொடு மற்றை அணிப் பூளை, ஆவிரை, எருக்கொடு, பிணித்து யாத்து, மல்லல் ஊர் மறுகின் கண் இவள் பாடும், இ·து ஒத்தன் - எல்லீரும் கேட்டீமின் என்று.

படரும், பனை ஈன்ற மாவும் - சுடர் இழை நல்கியாள் நல்கியவை; பொறை என் வரைத்து அன்றிப் பூ நுதல் ஈத்த நிறை அழி காம நோய் நீந்தி, அறை உற்ற உப்பு இயல் பாவை உறை உற்றது போல, உக்கு விடும் என் உயிர்.

பூளை, பொல மலர் ஆவிரை - வேய் வென்ற தோளாள் எமக்கு ஈத்த பூ; உரிது என் வரைத்து அன்றி, ஒள் இழை தந்த பரிசு அழி பைதல் நோய் மூழ்கி, எரி பரந்த நெய்யுள் மெழுகின் நிலையாது, பைபயத் தேயும் - அளித்து - என் உயிர்.

இளையாரும், ஏதிலவரும் - உளைய, யான் உற்றது உசாவும் துணை. என்று யான் பாடக் கேட்டு, அன்புறு கிளவியாள் அருளி வந்து அளித்தலின் - துன்பத்தில் துணை ஆய மடல் இனி இவள் பெற இன்பத்துள் இடம்படல் என்று இரங்கினள் - அன்புற்று அடங்குஅரும் தோற்றத்து அரும் தவம் முயன்றோர் தம் உடம்பு ஒழித்து உயர் உலகு இனிது பெற்றாங்கே.

139 'சான்றவிர் வாழியோ! சான்றவிர்! என்றும் பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி, அறன் அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன் ஆனால், இவ் இருந்த சான்றீர்! உமக்கு ஒன்று அறிவுறுப்பேன்: மான்ற துளி இடை மின்னுப் போல் தோன்றி, ஒருத்தி, ஒளியோடு உரு என்னைக் காட்டி, அளியள், என் நெஞ்சு ஆறு கொண்டாள், அதன் கொண்டும் துஞ்சேன்; அணி அலங்கு ஆவிரைப் பூவோடு எருக்கின் பிணையல் அம் கண்ணி மிலைந்து, மணி ஆர்ப்ப, ஓங்கு இரும் பெண்ணை மடல் ஊர்ந்து, என் எவ்வ நோய் தாங்குதல் தேற்றா இடும்பைக்கு உயிர்ப்பு ஆக வீங்கு இழை மாதர் திறத்து ஒன்று, நீங்காது, பாடுவேன், பாய் மா நிறுத்து.

யாமத்தும் எல்லையும் எவ்வத் திரை அலைப்ப 'மா மேலேன்' என்று, மடல் புணையா நீந்துவேன் - தே மொழி மாதர் உறாஅது உறீஇய காமக் கடல் அகப்பட்டு.

உய்யா அரு நோய்க்கு உயவாகும் - மையல் உறீஇயாள் ஈத்த இம் மா.

காணுநர் எள்ளக் கலங்கித், தலை வந்து, என் ஆண் எழில் முற்றி உடைத்து உள் அழித்தரும் - 'மாண் இழை மாதராள் ஏஎர்' எனக் காமனது ஆணையால் வந்த படை.

காமக் கடும் பகையின் தோன்றினேற்கு ஏமம் - எழில் நுதல் ஈத்த இம் மா.

அகை எரி ஆனாது, என் ஆர் உயிர் எஞ்சும் வகையினால், உள்ளம் சுடுதரும் மன்னோ - முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மாதர் தகையால் தலைக்கொண்ட நெஞ்சு!

அழல் மன்ற காம அரு நோய்; நிழல் மன்ற, நேர் இழை ஈத்த இம் மா.

ஆங்கு அதை, அறிந்தனிர் ஆயின், சான்றவிர்! தான் தவம் ஒரீஇத் துறக்கத்தின் வழீஇ, ஆன்றோர் உள் இடப்பட்ட அரசனைப் பெயர்த்து, அவர் உயர்நிலை உலகம் உறீஇயாங்கு, என் துயர் நிலை தீர்த்தல் நும் தலைக் கடனே.

140 கண்டவிர் எல்லாம் கதுமென வந்து, ஆங்கே, பண்டு அறியாதீர் போல நோக்குவீர்; கொண்டது மா என்று உணர்மின்; மடல் அன்று; மற்று இவை பூ அல்ல; பூளை, உழிந்ஞையோடு யாத்த புன வரை இட்ட வயங்கு தார்ப் பீலி, பிடி அமை நூலொடு பெய்ம் மணி கட்டி, அடர் பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரம் கண்ணி, நெடியோன் மகன் நயந்து தந்தாங்கு, அனைய வடிய வடிந்த வனப்பின், என் நெஞ்சம் இடிய இடைக் கொள்ளும் சாயல், ஒருத்திக்கு அடியுறை காட்டிய செல்வேன்; மடியன்மின், அன்னேன் ஒருவனேன், யான்; என்னானும், பாடு எனில் பாடவும் வல்லேன், சிறிது ஆங்கே ஆடு எனில் ஆடலும் ஆற்றுகேன்; பாடுகோ - என் உள் இடும்பை தணிக்கும் மருந்து ஆக, நல் நுதல் ஈத்த இம் மா?

திங்கள் அரவு உறின், தீர்க்கலார் ஆயினும், தம் காதல் காட்டுவர் சான்றவர் - இன் சாயல் ஒண் தொடி நோய் நோக்கில் பட்ட என் நெஞ்ச நோய் கண்டும், கண்ணோடாது, இவ் ஊர்.

தாங்காச் சினத்தொடு காட்டி உயிர் செகுக்கும் பாம்பும் அவைப் படில் உய்யும்ஆம் - பூம் கண் வணர்ந்து ஒலி ஐம்பாலாள் செய்த இக் காமம் உணர்ந்தும் உணராது இவ் ஊர்.

வெம் சுழிப் பட்ட மகற்குக் கரை நின்றார் அஞ்சல் என்றாலும் உயிர்ப்பு உண்டுஆம் - அம் சீர்ச் செறிந்து ஏர் முறுவலாள் செய்த இக் காமம் அறிந்தும், அறியாது, இவ் ஊர்.

ஆங்க, என் கண் இடும்பை அறீஇயினென்; நும் கண் தெருளுற நோக்கித் தெரியும்கால், இன்ன மருளுறு நோயொடு மம்மர் அகல, இருளுறு கூந்தலாள் என்னை அருளுறச் செயின், நுமக்கு அறனும்ஆர் அதுவே.

141 அரிதினின் தோன்றிய யாக்கை புரிபு தாம் வேட்டவை செய்து, ஆங்குக், காட்டி மற்று ஆங்கே, அறம் பொருள் இன்பம் என்று அம் மூன்றின் ஒன்றன் திறம் சேரார் செய்யும் தொழில்கள் அறைந்தன்று - அணி நிலைப் பெண்ணை மடல் ஊர்ந்து, ஒருத்தி அணி நலம் பாடி வரற்கு.

ஓர் ஒருகால் உள்வழியள் ஆகி, நிறை மதி நீருள் நிழல்போல், கொளற்கு அரியள் - போருள் அடல் மா மேல் ஆற்றுவேன், என்னை, மடல் மா மேல் மன்றம் படர்வித்தவள் - வாழி, சான்றீர்!

பொய் தீர் உலகம் எடுத்த கொடி மிசை, மை அறு மண்டிலம் வேட்டனள் - வையம் புரவு ஊக்கும் உள்ளத்தேன் என்னை இரவு ஊக்கும் இன்னா இடும்பை செய்தாள் - அம்ம, சான்றீர்!

கரந்தாங்கே இன்னா நோய் செய்யும், மற்று இ·தோ - பரந்த சுணங்கின் பணைத் தோளாள் பண்பு?

இடி உமிழ் வானத்து, இரவு இருள் போழும் கொடி மின்னுக் கொள்வேன் என்றன்னள் - வடி நாவின் வல்லார் முன் சொல் வல்லேன் என்னைப் பிறர் முன்னர்க் கல்லாமை காட்டியவள் - வாழி, சான்றீர்!

என்று ஆங்கே, வருந்த மா ஊர்ந்து, மறுகின் கண் பாடத் திருந்து இழைக்கு ஒத்த கிளவி கேட்டு, ஆங்கே பொருந்தாதார் போர் வல் வழுதிக்கு அரும் திறை போலக், கொடுத்தார் தமர்.

142 புரிவு உண்ட புணர்ச்சிஉள் புல் ஆரா மாத்திரை, அருகுவித்து ஒருவரை அகற்றலின், தெரிவார் கண் செய நின்ற பண்ணின்உள் செவி சுவை கொள்ளாது, நயம் நின்ற பொருள் கெடப் புரி அறு நரம்பினும் பயன் இன்று மன்ற அம்ம, காமம் - இவள் மன்னும், ஒள் நுதல் ஆயத்தார் ஓராங்குத் திளைப்பினும், முள் நுனை தோன்றாமை முறுவல் கொண்டு, அடக்கித், தன் கண்ணினும் முகத்தினும் நகுபவள்; பெண் இன்றி யாவரும் தண் குரல் கேட்ப, நிரை வெண் பல் மீ உயர் தோன்ற, நகாஅ, நக்காங்கே, பூ உயிர்த்தன்ன புகழ் சால் எழில் உண் கண் ஆய் இதழ் மல்க அழும்.

ஓஒ! அழிதகப் பாராதே, அல்லல் குறுகினம்; காண்பாம் - கனம் குழை பண்பு. என்று, எல்லீரும் என் செய்தீர்? என்னை நகுதிரோ? நல்ல நகாஅலிர் மன் கொலோ - யான் உற்ற அல்லல் உறீஇயான் மாய மலர் மார்பு புல்லிப் புணரப் பெறின்.

'எல்லா! நீ உற்றது எவனோ மற்று? என்றீரேல், என் சிதை செய்தான் இவன்' என, 'உற்றது இது' என, எய்த உரைக்கும் உரன் அகத்து உண்டாயின், பைதல ஆகி பசக்குவ மன்னோ - என் நெய்தல் மலர் அன்ன கண்?

கோடு வாய் கூடாப் பிறையைப், பிறிது ஒன்று நாடுவேன், கண்டனென்; சிற்றில்உள் கண்டு, ஆங்கே, ஆடையான் மூஉய் அகப்படுப்பேன்; சூடிய, காணான், திரிதரும் கொல்லோ - மணி மிடற்று மாண் மலர் கொன்றையவன்?

'தெள்ளியேம்' என்று உரைத்துத், தேராது, ஒரு நிலையே, 'வள்ளியை ஆக!' என நெஞ்சை வலி உறீஇ, உள்ளி வருகுவர் கொல்லோ? வளைந்து யான் எள்ளி இருக்குவேன்மன் கொலோ? நள்இருள் மாந்தர் கடி கொண்ட கங்குல், கனவினால், தோன்றினன் ஆகத், தொடுத்தேன்மன், யான்; தன்னைப் பையெனக் காண்கு விழிப்ப, யான் பற்றிய கை உளே மாய்ந்தான், கரந்து.

கதிர் பகா ஞாயிறே! கல் சேர்தி ஆயின், அவரை நினைத்து, நிறுத்து என் கை நீட்டித் தருகுவை ஆயின், தவிரும் - என் நெஞ்சத்து உயிர் திரியா மாட்டிய தீ.

மை இல் சுடரே! மலை சேர்தி நீ ஆயின், பௌவ நீர்த் தோன்றிப் பகல் செய்யும் மாத்திரை, கை விளக்கு ஆகக் கதிர் சில தாராய்! என் தொய்யில் சிதைத்தானைத் தேர்கு.

சிதைத்தானைச் செய்வது எவன் கொலோ? எம்மை நயந்து, நலம் சிதைத்தான். மன்றப் பனை மேல் மலை மாந் தளிரே! நீ தொன்று இவ் உலகத்துக் கேட்டும் அறிதியோ? மென் தோள் ஞெகிழ்த்தான் தகை அல்லால், யான் காணேன் - நன்று தீது என்று பிற.

நோய் எரி ஆகச் சுடினும், சுழற்றி, என் ஆய் இதழ் உள்ளே கரப்பன் - கரந்தாங்கே நோய் உறு வெந் நீர்; தெளிப்பின், தலைக்கொண்டு வேவது, அளித்து இவ் உலகு.

மெலியப் பொறுத்தேன் களைந்தீமின் - சான்றீர்! - நலிதரும் காமமும் கௌவையும் என்று, இவ் வலிதின் உயிர் காவாத் தூங்கி, ஆங்கு, என்னை நலியும் விழுமம் இரண்டு.

எனப் பாடி, இனைந்து நொந்து அழுதனள்; நினைந்து நீடு உயிர்த்தனள்; எல்லையும் இரவும் கழிந்தன என்று எண்ணி, எல் இரா நல்கிய கேள்வன் இவன் - மன்ற, மெல்ல மணிஉள் பரந்த நீர் போலத் துணிவாம் - கலம் சிதை இல்லத்துக் காழ் கொண்டு தேற்றக் கலங்கிய நீர் போல் தெளிந்து நலம்பெற்றாள், நல் எழில் மார்பனைச் சார்ந்து!

143 "அகல் ஆங்கண், இருள் நீங்க, அணி நிலாத் திகழ்ந்த பின் பகல் ஆங்கண் பையென்ற மதியம் போல், நகல் இன்று நல் நுதல் நீத்த திலகத்தள், 'மின்னி மணி பொரு பசும் பொன் கொல்? மா ஈன்ற தளிரின் மேல் கணிகாரம் கொட்கும் கொல்?' என்றாங்கு அணி செல, மேனி மறைத்த பசலையள், ஆனாது நெஞ்சம் வெறியா நினையா, நிலன் நோக்கா, அஞ்சா, அழாஅ, அரற்றா, இ·து ஒத்தி என் செய்தாள் கொல்?" என்பீர் - கேட்டீமின்- பொன் செய்தேன்.

மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது, அறை கொன்று, மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச, பறை அறைந்தாங்கு, ஒருவன் நீத்தான் - அவனை அறை நவ நாட்டில் நீர் கொண்டு தரின், யானும் நிறை உடையேன் ஆகுவேன் மன்ற - மறையின் என் மென் தோள் நெகிழ்த்தானை மேஎய், அவன் ஆங்கண் சென்று, சேண் பட்டது என் நெஞ்சு.

'ஒன்றி முயங்கும்' என்று, என் பின் வருதிர்; மற்று ஆங்கே 'உயங்கினாள்' என்று, ஆங்கு உசாதிர்; 'மற்று அந்தோ மயங்கினாள்!' என்று மருடிர்; கலங்கன்மின் - இன் உயிர் அன்னார்க்கு எனைத்து ஒன்றும் தீது இன்மை என் உயிர் காட்டாதோ மற்று?

'பழி தபு ஞாயிறே! பாடு அறியாதார் கண் கழியக் கதழ்வை' எனக் கேட்டு, நின்னை வழிபட்டு இரக்குவேன் வந்தேன் - என் நெஞ்சம் அழியத் துறந்தானைச் சீறும்கால் என்னை ஒழிய விடாதீமோ என்று.

அழிதக, மாஅம் தளிர் கொண்ட போழ்தினான், இவ் ஊரார் தாஅம் தளிர் சூடித் தம் நலம் பாடுப; ஆஅம் தளிர்க்கும் இடைச் சென்றார் மீள்தரின், யாஅம் தளிர்க்குவேம் மன்.

நெய்தல் நெறிக்கவும் வல்லன்; நெடு மென் தோள் பெய் கரும்பு ஈர்க்கவும் வல்லன்; இள முலை மேல் தொய்யில் எழுதவும் வல்லன்; தன் கையில் சிலை வல்லான் போலும் செறிவினான்; நல்ல பல வல்லன் - தோள் ஆள்பவன்.

நினையும் என் உள்ளம் போல், நெடும் கழி மலர் கூம்ப, இனையும் என் நெஞ்சம் போல், இனம் காப்பார் குழல் தோன்றச் சாய என் கிளவி போல், செவ்வழி யாழ் இசை நிற்ப, போய என் ஒளியே போல், ஒரு நிலையே பகல் மாய, காலன் போல் வந்த கலக்கத்தோடு என் தலை மாலையும் வந்தன்று, இனி.

இருளொடு யான் ஈங்கு உழப்ப, என் இன்றிப் பட்டாய், அருள் இலை! வாழி! - சுடர்! ஈண்டு நீர் ஞாலத்துள் எம் கேள்வர் இல் ஆயின், மாண்ட மனம் பெற்றார் மாசு இல் துறக்கத்து வேண்டிய வேண்டியாங்கு எய்துதல் வாய் எனின், யாண்டும் உடையேன் இசை.

ஊர் அலர் தூற்றும்; இவ் உய்யா விழுமத்துப் பீர் அலர் போல பெரியப் பசந்தன - நீர் அலர் நீலம் என, அவர்க்கு, அஞ்ஞான்று, பேர் அஞர் செய்த என் கண்.

தன் உயிர் போலத் தழீஇ, உலகத்து மன் உயிர் காக்கும் இம் மன்னனும் என் கொலோ - இன் உயிர் அன்னானைக் காட்டி, எனைத்து ஒன்றும் என் உயிர் காவாதது?

என ஆங்கு, மன்னிய நோயொடு மருள் கொண்ட மனத்தவள், பல் மலை இறந்தவன் பணிந்து வந்து அடி சேரத், தென்னவன் தெளித்த தேஎம் போல, இன் நகை எய்தினள், இழந்த தன் நலனே!

144 நல் நுதாஅல்! காண்டை; நினையா, நெடிது உயிரா, என் உற்றாள் கொல்லோ? இ·து ஒத்தி - பல் மாண் நகுதரும் - தன் நாணுக் கைவிட்டு, இகுதரும் கண்ணீர் துடையாக், கவிழ்ந்து, நிலன் நோக்கி அன்ன இடும்பை பல செய்து, தன்னை வினவுவார்க்கு ஏதில சொல்லிக், கனவு போல், தெருளும் மருளும் மயங்கி வருபவள் கூறுப கேளாமோ, சென்று?

'எல்லா! நீ என் அணங்கு உற்றனை? யார் நின் இது செய்தார்? நின் உற்ற அல்லல் உரை', என என்னை வினவுவீர்! தெற்றெனக் கேண்மின்; ஒருவன், 'குரல் கூந்தால்! என் உற்ற எவ்வம் நினக்கு யான் உரைப்பனைத் தங்கிற்று, என் இன் உயிர்' என்று மருவு ஊட்டி, மாறியதன் கொண்டு, எனக்கு மருவு உழிப் பட்டது, என் நெஞ்சு.

எங்கும் தெரிந்து அது கொள்வேன், அவன் உள் வழி. பொங்கு இரு முந்நீர் அகம் எல்லாம் நோக்கினை திங்கள்உள் தோன்றி இருந்த குறு முயால்! - எம்கேள் இதன் அகத்து உள்வழிக் காட்டீமோ? காட்டீயாய் ஆயின், கத நாய் கொளுவுவேன்; வேட்டுவர் உள் வழிச் செப்புவேன்; ஆட்டி மதியொடு பாம்பு மடுப்பேன்' மதி திரிந்த என் அல்லல் தீராய் எனின்.

என்று ஆங்கே உள் நின்ற எவ்வம் உரைப்ப மதியொடு வெள் மழை ஓடிப் புகுதி; சிறிது என்னைக் கண்ணோடினாய் போறி, நீ.

நீடு இலைத் தாழைத் துவர் மணல் கானல்உள் ஓடுவேன் ஓடி ஒளிப்பேன்! பொழில் தொறும் நாடுவேன்; கள்வன் கரந்து இருக்கற்பாலன் கொல்? ஆய் பூ அடும்பின் அலர் கொண்டு உதுக் காண், எம் கோதை புனைந்த வழி. உதுக் காண் - சாஅய் மலர் காட்டி, சால்பு இலான் யாம் ஆடும் பாவை கொண்டு ஓடியுழி. உதுக் காண் - தொய்யில் பொறித்த வழி. உதுக் காண் - 'தையால்! தேறு' எனத் தேற்றி, அறன் இல்லான் பைய முயங்கியுழி. அளிய என் உள்ளத்து, உயவுத் தேர் ஊர்ந்து, விளியா நோய் செய்து, இறந்த அன்புஇல் அவனைத் தெளிய - விசும்பினும் ஞாலத்து அகத்தும் வளியே! எதிர்போம் - பல கதிர் ஞாயிற்று ஒளி உள் வழி எல்லாம் சென்று, முனிபு எம்மை உண்மை நலன் உண்டு ஒளித்தானைக் காட்டீமோ; காட்டாயேல், மண்ணகம் எல்லாம் ஒருங்கு சுடுவேன், என் கண்ணீர் அழலால் தெளித்து.

பேணான் துறந்தானை நாடும் இடம் விடாய் ஆயின் - பிறங்கு இரு முந்நீர்! - வெறு மணல் ஆகப் புறம் காலின் போக இறைப்பேன், முயலின் அறம் புணை ஆகலும் உண்டு. துறந்தானை நாடித் தருகிற்பாய் ஆயின், நினக்கு ஒன்று பாடுவேன், என் நோய் உரைத்து. புல்லிய கேளிர் புணரும் பொழுது உணரேன் - எல்லி ஆக, 'எல்லை' என்று ஆங்கே, பகல் முனிவேன். எல்லிய காலை இரா முனிவேன்; யான் உற்ற அல்லல் களைவார் இலேன்.

ஓஒ! கடலே! தெற்றெனக் கண் உள்ளே தோன்ற இமை எடுத்துப் 'பற்றுவேன்' என்று, யான் விழிக்கும்கால் மற்றும் என் நெஞ்சத்துஉள் ஓடி ஒளித்து, ஆங்கே, துஞ்சா நோய் செய்யும், அறன் இல் அவன்.

ஓஒ! கடலே! ஊர் தலைக்கொண்டு கனலும் கடும் தீ உள் நீர் பெய்த காலே சினம் தணியும்; மற்று இ·தோ ஈரம் இல் கேள்வன் உறீஇய காமத் தீ நீர் உள் புகினும் சுடும்.

ஓஒ! கடலே! 'எற்றம் இலாட்டி என் ஏமுற்றாள்?' என்று இந் நோய்

உற்று அறியாதாரோ நகுக! நயந்தாங்கே இற்றா அறியின், முயங்கலேன், மற்று என்னை அற்றத்து இட்டு ஆற்று அறுத்தான் மார்பு.

ஆங்கு, கடலொடு புலம்புவோள் கலங்கு அஞர் தீரக் கெடல் அரும் காதலர் துனை தரப், பிணி நீங்கி, அறன் அறிந்து ஒழுகும் அங்கணாளனைத் திறன் இலார் எடுத்து தீ மொழி எல்லாம் நல் அவைஉள் படக் கெட்டாங்கு, இல்லாகின்று அவள் ஆய் நுதல் பசப்பே.

145 'துனையுநர் விழைதக்க சிறப்புp போல், கண்டார்க்கு நனவின்உள் உதவாது நள் இருள் வேறு ஆகும் கனவின் நிலையின்றால், காமம்; ஒருத்தி உயிர்க்கும்; உசாஅம்! உலம்வரும்; ஓவாள், கயல் புரை உண் கண் அரிப்ப அரி வாரப், பெயல் சேர் மதி போல, வாள் முகம் தோன்ற, பல ஒலி கூந்தலாள் பண்பு எல்லாம் துய்த்துத் துறந்தானை உள்ளி அழூஉம்; அவனை மறந்தாள் போல் ஆலி நகூஉம்; மருளும்; சிறந்த தன் நாணும் நலனும் நினையாது, காமம் முனைஇயாள், அலந்தாள்' என்று, எனைக் காண, நகான்மின்; கூறுவேன், மாக்காள்! மிகாஅது, மகளிர் தோள் சேர்ந்த மாந்தர் துயர் கூர நீத்தலும், நீள் சுரம் போகியார் வல்லை வந்து அளித்தலும், ஊழ் செய்து, இரவும் பகலும் போல், வேறு ஆகி, வீழ்வார் கண் தோன்றும் தடுமாற்றம் ஞாலத்துள் வாழ்வார்கட்கு எல்லாம் வரும்;

தாழ்பு, துறந்து, தொடி நெகிழ்த்தான் போகிய கானம் இறந்து எரி நையாமல், பாஅய் முழங்கி - வறந்து என்னை செய்தியோ, வானம்? - சிறந்த என் கண்ணீர்க் கடலால், கனை துளி வீசாயோ, கொண்மூ குழீஇ முகந்து?

நுமக்கு எவன் போலுமோ? ஊரீர்! எமக்கும் எம் கண் பாயல் கொண்டு, உள்ளாக் காதலவன் செய்த பண்பு தர வந்த என் தொடர் நோய் வேது கொள்வது போலும், கடும் பகல்? ஞாயிறே! எல்லா கதிரும் பரப்பிப் பகலொடு செல்லாது நின்றீயல் வேண்டுவல்; நீ செல்லின், புல்லென் மருள் மாலைப் போழ்து இன்று வந்து என்னைக் கொல்லாது போதல் அரிதால்; அதனொடு யான் செல்லாது நிற்றல் இலேன் .

ஒல்லை எம் காதலர்க் கொண்டு, கடல் ஊர்ந்து, காலை நாள், போதரின் - காண்குவேன் மன்னோ - பனியொடு மாலைப் பகை தாங்கி, யான்? இனியன் என்று ஓம்படுப்பல், ஞாயிறு! இனி, ஒள் வளை ஓடத் துறந்து; துயர் செய்த கள்வன் பால் பட்டன்று, ஒளித்து என்னை, உள்ளி - பெரும் கடல் புல்லெனக் கானல் புலம்ப, இரும் கழி நெய்தல் இதழ் பொதிந்து தோன்ற, விரிந்து இலங்கு வெண் நிலா வீசும் பொழுதினான், யான் வேண்டு ஒருவன், என் அல்லல் உறீஇயான்; தான் வேண்டுபவரோடு துஞ்சும் கொல்? - துஞ்சாது வானும் நிலனும் திசையும் துழாவும் என் ஆனா படர் மிக்க நெஞ்சு.

ஊரவர்க்கு எல்லாம் பெரு நகை ஆகி, என் ஆர் உயிர் எஞ்சும்மன்; அங்கு நீ சென்றீ - நிலவு உமிழ் வான் திங்காள்! ஆய் தொடி கொட்ப, அளி புறம் மாறி, அருளான் துறந்த அக் காதலன் செய்த கலக்குறு நோய்க்கு ஏதிலார் எல்லாரும் தேற்றர், மருந்து

வினைக் கொண்டு என் காம நோய் நீக்கிய ஊரீர்! எனைத்தானும் எள்ளினும் எள்ளலன், கேள்வன்; நினைப்பினும், கண் உள்ளே தோன்றும்; அனைத்தற்கே ஏமராது, ஏமரா ஆறு.

கனை இருள் வானம்! - கடல் முகந்து, என் மேல் உறையொடு நின்றீயல் வேண்டும்; ஒருங்கே - நிறை வளை கொட்பித்தான் செய்த துயரால் இறை இறை பொத்திற்றுத் தீ.

எனப் பாடி, நோய் உடை நெஞ்சத்து எறியா, இனைபு ஏங்கி, "யாவிரும் எம் கேள்வன் காணீரோ?" என்பவட்கு, ஆர்வுற்ற பூசற்கு அறம் போல, எய்தந்தார்; பாயல் கொண்டு உள்ளாதவரை வரக் கண்டு, மாயவன் மார்பில் திருப் போல் அவள் சேர, ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது, என் ஆய் இழை உற்ற துயர்.

146 உரை செல உயர்ந்து ஓங்கிச் சேர்ந்தாரை ஒரு நிலையே வரை நில்லா விழுமம் உறீஇ நடுக்கு உரைத்து, தெறல் மாலை அரைசினும் அன்பு இன்றாம், காமம்; புரை தீர அன்ன மெல் சேக்கையுள் ஆராது அளித்தவன் துன்னி அகலத் துறந்த அணியளாய், நாணும் நிறையும் உணர்கல்லாள், தோள் ஞெகிழ்பு, பேர் அமர் உண்கண் நிறை மல்க, அந்நீர் தன், கூர் எயிறு ஆடி, குவி முலை மேல் வார்தர, தேர் வழி நின்று தெருமரும், ஆய் இழை கூறுப கேளாமோ, சென்று?

'எல் இழாய்! எற்றி வரைந்தானை, நாணும் மறந்தாள்' என்று, உற்றனிர் போல, வினவுதிர்! மற்று இது கேட்டீமின், எல்லீரும் வந்து: வறம் தெற மாற்றிய வானமும் போலும்; நிறைந்து என்னை மாய்ப்பது ஓர் வெள்ளமும் போலும் - சிறந்தவன் தூ அற நீப்ப, பிறங்கி வந்து, என் மேல் நிலைஇய நோய்.

'நக்கு நலனும் இழந்தாள், இவள்' என்னும் தக்கவிர் போலும்! இழந்திலேன் மன்னோ - மிக்க என் நாணும் நலனும் என் உள்ளமும் அக்கால் அவன் உழை ஆங்கே ஒழிந்தன! உக்காண் - இ·தோ உடம்பு உயிர்க்கு ஊற்று ஆகச் செக்கர் அம் புள்ளித் திகிரி அலவனொடு, யான் நக்கது, பல் மாண் நினைந்து.

கரை காணா நோயுள் அழுந்தாதவனைப் புரை தவ கூறிக், கொடுமை நுவல்வீர்! வரைபவன் என்னின் அகலான் - அவனைத், திரை தரும் முந்நீர் வளாஅகம் எல்லாம், நிரை கதிர் ஞாயிற்றை, நாடு என்றேன்; யானும் உரை கேட்புஉழி எல்லாம் செல்வேன்; புரை தீர்ந்தான் யாண்டு ஒளிப்பான் கொலோ மற்று?

மருள் கூர் பிணை போல் மயங்க, வெந்நோய் செய்யும் மாலையும் வந்து, மயங்கி எரி நுதி யாமம் தலை வந்தன்று ஆயின், அதற்கு என் நோய் பாடுவேன், பல்லாருள் சென்று. யான் உற்ற எவ்வம் உரைப்பின், பலர்த் துயிற்றும் யாமம், நீ துஞ்சலை மன். எதிர்கொள்ளும் ஞாலம், துயில் ஆராது ஆங்கண் முதிர்பு என் மேல் முற்றிய வெந்நோய் உரைப்பின் கதிர்கள் மழுங்கி, மதியும் அதிர்வது போல் ஓடிச் சுழல்வது மன்.

பேர் ஊர் மறுகில் பெரும் துயில் சான்றீரே! நீரைச் செறுத்து, நிறைவுற ஓம்புமின்; கார் தலைக்கொண்டு பொழியினும், தீர்வது போலாது, என் மெய் கனலும் நோய். இருப்பினும் நெஞ்சம் கனலும்; செலினே, வருத்துறும் யாக்கை, வருந்துதல் ஆற்றேன்; அருப்பம் உடைத்து, என்னுள் எவ்வம் பொருத்திப் பொறி செய் புனை பாவை போல வறிது உயங்கிச் செல்வேன், விழுமம் உழந்து.

என ஆங்கு பாட, அருள் உற்று, வறம் கூர் வானத்து வள் உறைக்கு அலமரும் புள்ளிற்கு அது பொழிந்தாஅங்கு, மற்றுத் தன் நல் எழில் மார்பன் முயங்கலின் அல்லல் தீர்ந்தன்று ஆய் இழை பண்பே.

147 ஆறு அல்ல மொழி தோற்றி, அற வினை கலக்கிய, தேறுகள் நறவு உண்டார் மயக்கம் போல், காமம் வேறு ஒரு பாற்று ஆனது கொலோ? சீறு அடிச் சிலம்பு ஆர்ப்ப இயலியாள் - இவள் மன்னோ, இனி மன்னும் புலம்பு ஊரப் புல்லென்ற வனப்பினாள் - விலங்கு ஆக, வேல் நுதி உற நோக்கி, வெயில் உற, உருகும் தன் தோள் நலம் உண்டானைக் கெடுத்தாள் போல், தெருவில் பட்டு, ஊண் யாதும் இலள் ஆகி, உயிரினும் சிறந்த தன் நாண் யாதும் இலள் ஆகி, நகுதலும் நகூஉம்; ஆங்கே பெண்மையும் இலள் ஆகி அழுதலும் அழூஉம்; தோழி! ஓர் ஒள் நுதல் உற்றது உழைச் சென்று கேளாமோ?

இவர் யாவர்? ஏமுற்றார் கண்டீரே! ஓஒ! அமையும் தவறிலீர்மன் கொலோ? - நகையின் மிக்க தன் காமமும் ஒன்று என்ப; அம் மா புது நலம் பூ வாடி அற்று, தாம் வீழ்வார் மதி மருள நீத்தக்கடை.

என்னையே மூசிக், கதுமென நோக்கன்மின்; வந்து கலைஇய கண், புருவம், தோள், நுசுப்பு, ஏஎர் சில மழை போல் தாழ்ந்து இருண்ட கூந்தல், அவற்றை விலை வளம் மாற அறியாது, ஒருவன் வலை அகப்பட்டது - என் நெஞ்சு.

வாழிய, கேளிர்! பலவும் சூள் தேற்றத் தெளித்தவன் என்னை முலை இடை வாங்கி முயங்கினன்; நீத்த கொலைவனைக் காணேன் கொல், யான்? காணினும், என்னை அறிதிர்; கதிர் பற்றி, ஆங்கு எதிர் நோக்குவன்- ஞாயிறே? - எம் கேள்வன் யாங்கு உளன் ஆயினும் காட்டீமோ? காட்டாயேல், வானத்து எவன் செய்தி, நீ?

ஆர் இருள் நீக்கும் விசும்பின் மதி போல, நீர் உள்ளும் தோன்றுதி, ஞாயிறே! அவ்வழித் தேரை தினப்படல் ஓம்பு.

நல்கா ஒருவனை நாடி யான் கொள்வனை, பல் கதிர் சாம்பிப் பகல் ஒழியப், பட்டீமோ - செல் கதிர் ஞாயிறே! நீ .

அறாஅல் இன்று அரி முன்கைக் கொட்கும் பறாஅப் பருந்தின் கண் பற்றிப் புணர்ந்தான் கறாஅ எருமைய காடு இறந்தான் கொல்லோ? உறாஅத் தகை செய்து, இவ் ஊர் உள்ளான் கொல்லோ? செறாஅது உளன் ஆயின், கொள்வேன்; அவனைப் பெறாஅது யான் நோவேன்; அவனை என் காட்டிச் சுறாஅக் கொடியான் கொடுமையை, நீயும் உறாஅ அரைச! நின் ஓலைக் கண் கொண்டீ; மறாஅ அரைச! நின் மாலையும் வந்தன்று; அறாஅ தணிக, இந்நோய். தன் நெஞ்சு ஒருவற்கு இனைவித்தல் யாவர்க்கும் அன்னவோ - காம! நின் அம்பு?

கையாறு செய்தானைக் காணின், கலுழ் கண்ணால் பையென நோக்குவேன்; தாழ் தானை பற்றுவேன்; ஐயம் கொண்டு, என்னை அறியான் விடுவானேல், 'ஒய்' எனப் பூசல் இடுவேன்மன், யான் - அவனை மெய் ஆகக் கள்வனோ என்று.

வினவன்மின் ஊரவிர்! என்னை, எஞ்ஞான்றும் - மடாஅ நறவு உண்டார் போல, மருள விடாஅது உயிரொடு கூடிற்று - என் உண்கண் படாஅமை செய்தான் தொடர்பு.

கனவினான் காணிய, கண்படா ஆயின், நனவினான் ஞாயிறே! காட்டாய் நீ ஆயின், பனை ஈன்ற மா ஊர்ந்து அவன் வரக் காமன் கணை இரப்பேன், கால் புல்லிக்கொண்டு.

என ஆங்கு, கண் இனைபு, கலுழ்பு ஏங்கினள்; தோள் ஞெகிழ்பு, வளை நெகிழ்ந்தனள்; அன்னையோ! எல்லீரும் காண்மின்; மடவரல் மெல் நடை பேடை துனை தரத் தன் சேர்ந்த அன்ன வான் சேவல் புணர்ச்சி போல், ஒள் நுதல் காதலன் மன்ற அவனை வரக் கண்டு, ஆங்கு ஆழ் துயரம் எல்லாம் மறந்தனள், பேதை, நகை ஒழிந்து, நாணு மெய் நிற்ப, இறைஞ்சி, தகை ஆகத் தையலாள் சேர்ந்தாள் - நகை ஆக, நல் எழில் மார்பன் அகத்து !

148 தொல் இயல் ஞாலத்துத் தொழில் ஆற்றி ஞாயிறு, வல்லவன் கூறிய வினை தலை வைத்தான் போல், கல் அடைபு, கதிர் ஊன்றி, கண் பயம் கெடப் பெயர, அல்லது கெடுப்பவன் அருள் கொண்ட முகம் போல, மல்லல் நீர்த் திரை ஊர்பு, மால் இருள் மதி சீப்ப, இல்லவர் ஒழுக்கம் போல் இரும் கழி மலர் கூம்ப, செல்லும் என் உயிர் புறத்து இறுத்தந்த மருள் மாலை!

மாலை நீ - இன்புற்றார்க்கு இறைச்சியாய் இயைவதோ செய்தாய்மன்; அன்புற்றார் அழ, நீத்த அல்லலுள், கலங்கிய துன்புற்றார்த் துயர் செய்தல் தக்கதோ, நினக்கு?

மாலை நீ - கலந்தவர் காமத்தை கனற்றலோ செய்தாய்மன்; நலம் கொண்டு நல்காதார் நனி நீத்த புலம்பின் கண் அலந்தவர்க்கு அணங்கு ஆதல் தக்கதோ, நினக்கு?

மாலை நீ - எம் கேள்வன் தருதல் உம் தருகல்லாய்; துணை அல்லை! பிரிந்தவர்க்கு நோய் ஆகிப் புணர்ந்தவர்க்குப் புணை ஆகித் திருந்தாத செயின் அல்லால் இல்லையோ, நினக்கு?

என ஆங்கு, ஆய் இழை மடவரல் அவலம் அகல, பாய் இருள் பரப்பினை பகல் களைந்தது போலப் போய் அவர் மண் வௌவி வந்தனர் - சேய் உறை காதலர் செய் வினை முடித்தே.

149 நிரை திமில் களிறு ஆகத் திரை ஒலி பறை ஆகக், கரை சேர் புள் இனத்து அம் சிறை படை ஆக, அரைசு கால் கிளர்ந்தன்ன உரவு நீர்ச் சேர்ப்ப! கேள்; கற்பித்தான் நெஞ்சு அழுங்க பகர்ந்து உண்ணான், விச்சைக்கண் தப்பித்தான் பொருளே போல் தமியவே தேயுமால்;

ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான், மற்று அவன் எச்சத்துள் ஆயினும், அ·து எறியாது விடாதே காண்; கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள் தாள் இலான் குடியே போல் தமியவே தேயுமால்;

சூள் வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின், மற்று அவன் வாள் வாய் நன்று ஆயினும், அ·து எறியாது விடாதே காண்;

ஆங்கு, அனைத்து, இனி - பெரும! - அதன் நிலை, நினைத்துக் காண்; சினைஇய வேந்தன் எயில் புறத்து இறுத்த வினை வரு பருவரல் போல, துனை வரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே.

150 அயம் திகழ் நறும் கொன்றை அலங்கல் அம் தெரியலான் இயங்கு எயில் எயப் பிறந்த எரி போல, எவ் வாயும், கனை கதிர் தெறுதலின், கடுத்து எழுந்த காம்புத் தீ மலை பரந்து தலைக் கொண்டு முழங்கிய முழங்கு அழல் மயங்கு அதர் மறுகலின், மலை தலைக்கொண்டென, விசும்பு உற நிவந்து அழலும், விலங்கு அரும் வெம் சுரம் -

இறந்து தாம் எண்ணிய எய்துதல் வேட்கையால், அறம் துறந்து - ஆய் இழாய்! ஆக்கத்தில் பிரிந்தவர்; பிறங்கு நீர் சடைக் கரந்தான் அணி அன்ன நின் நிறம் பசந்து, நீ இனையையாய், நீத்தலும் நீப்பவோ?

கரி காய்ந்த கவலைத்தாய்க், கல் காய்ந்த காட்டு அகம், 'வெரு வந்த ஆறு' என்னார், விழுப் பொருட்கு அகன்றவர்; உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கன்ன, நின் உரு இழந்து இனையையாய், உள்ளலும் உள்ளுபவோ?

கொதித்து உராய்க் குன்று இவர்ந்து, கொடிக் கொண்ட கோடையால், 'ஒதுக்கு அரிய நெறி' என்னார், ஒண் பொருட்கு அகன்றவர்; புதுத் திங்கள் கண்ணியான் பொன் பூண் ஞான்று அன்ன, நின் கதுப்பு உலறும் கவினையாய் காண்டலும் காண்பவோ?

ஆங்கு அரும் பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த பெரும் தண் சண்பகம் போல, ஒருங்கு அவர் பொய்யார் ஆகுதல் தெளிந்தனம் - மை ஈர் ஓதி மட மொழியோயே!


கலித்தொகை முற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=நெய்தற்கலி&oldid=6853" இலிருந்து மீள்விக்கப்பட்டது