நெருப்புத் தடயங்கள்/அணிந்துரை

"நெருப்புத் தடயங்கள்" மூன்று குடும்பங்கள் சம்பந்தப்பட்ட கதை. காதலர் இருவர் உடன்போக்காகச் சென்று விட்டதையும், அதனால் விளைந்த சிக்கல்களையும் கதை சித்திரிக்கிறது. இந்தச் சிக்கலையும் குடும்ப வட்ட அளவினதாக அதன் பரிமாணத்தைக் குறுக்கிவிடாமல், சமுதாயம் தழுவிய மாபெரும் போராட்டமாக சமுத்திரம் உருப்பெருக்கிக் காட்டுகிறார். அதிகார வர்க்கத்திற்கும் அப்பாவியான பொது மக்களுக்கும் இடையே நடக்கும் 'பாரதப் போர்' என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

மனித வாழ்க்கை இடையறாத போராட்டங்களின் சங்கிலிப் பிணைப்பாகவே விளங்குகிறது. இப் போராட்டக் களத்தில் சாதாரண மனிதனே கூட வெறும் பார்வையாளனாக நிற்க முடியவில்லை; பங்கு பெறுவோனாக மாற வேண்டியுள்ளது. இந்த நிலையில் இலக்கியக் கலைஞன் வாளா இருக்க முடியுமா? ஏதோ ஒரு பக்கத்திற்காகக் களத்தில் இறங்கியே ஆதல் வேண்டும். தோழர் சமுத்திரம் இந்த நவீன பாரதப் போரில் யார் பக்கம் நிற்கிறார் என்பதை நான் சொல்லியா நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்? அவர் மக்கள் பக்கமே. போராட்டத்தின் இறுதியில் மக்கள் சக்தியே வெற்றி பெறும் என்னும் நம்பிக்கையை ஊட்டும் வகையில் நாவலின் முடிவு அமைந்துள்ளது.

உணர்ச்சி மயமான நாடகக் காட்சிகளைப் படைத்துக் காட்டி, அக் காட்சிகளின் வாயிலாகவே கதையை நகர்த்திச் செல்வது சமுத்திரத்தின் பாணியாக உள்ளது. மனத் தடத்தில் அழுத்தமாகப் பதியும் கதை மாந்தர்கள். அவர்தம் இயல்பான பேச்சு வழக்குகள்-இவை இரண்டும் சமுத்திரத்திற்கு இலக்கிய வெற்றியை ஈட்டித் தரும் கூறுகளாக விளங்குகின்றன. கதையின் மையப் பாத்திரமாகிய தமிழரசி சமூகக் கொடுமைகளோடு போராடும் போராட்டச் சக்தியின் குறியீடாகப் படைக்கப்பட்டுள்ளாள். அப்பாத்திரத்தின் மனவளர்ச்சியையும் மாற்றத்தையும் ஆசிரியர் படிப்படியே நுணுக்கமாகக் காட்டிச் செல்கிறார். பட்டிமன்றத்து வாய்ச்சொல் வீராங்கனையாக இருந்த அவள்-மகிஷாசுரர்களை வதைக்கவல்ல பராசக்தியாக எப்படி மாறினாள் என்பதைச் சமுத்திரம் காட்டும் திறம் போற்றத்தக்கது. 'பைத்தியக்கார தர்மரு' என்று கூறப்படும் மாடக்கண்ணு கதையில் அதிகம் பேசவே இல்லை. அதிகம் பேசாத அப்பாத்திரமே கதையின் வலிவிற்கு அழுத்தம் கொடுக்கிறது. இதுவும் சமுத்திரத்தின் வெற்றியோ!

III

நாவலாசிரியர் கதையைத் தாமே 'சொல்ல'வும் வேண்டும். படிப்போர் உணருமாறு உணர்ச்சி மயமான நாடகக் 'காட்சி'களைக் காட்டவும் வேண்டும். சொல்லுதல் காட்டுதல் என்னும் இருவகை வினைத் திறப்பாடே ஊடும் பாவுமாய் மிடைந்து நாவலுக்கு இழைவமைதி ஊட்டுகின்றன. 'காட்டுதல்' என்னும் வினையில் வெற்றி பெறும் ஆசிரியர் தாமாக நின்று கதையைச் 'சொல்லும்' போது இடர்ப்படுகிறார். பாத்திரங்களாக மாறி மாறி அவரால் மிக எளிதாகப் பேசப்படுகிறது; தாமே தனி நின்று பேசும் போது திணறுகிறார். அவர் சில சொற்களுக்கு வலிந்து ஊட்டும் தொனிச் சாயலும், அர்த்த கனமும் பல இடங்களில் முட்டுக் கட்டையாய் அமைந்து கலையனுபவத்திற்குத் தடையாக நிற்கின்றன. மொழிப் பிரயோகத்தில் கவனக் குறைவாலோ அளவுக்கு அதிகமான கவனத் தாலோ-தடுமாற்றம் விளைகிறது. இது குறையே! குறையே இல்லாத கலை உலகில் ஏது?


V

ஆசிரியர் கதை மாந்தர் கூற்றாக ஆங்காங்கே சுட்டிச் செல்லும் சில நடைமுறை இலக்கிய விவகாரங்கள் தேவையற்றவை; சிலவற்றில் எனக்கு உடன்பாடும் இல்லை. “தக்காரும் மிக்காரும் இல்லாத தனிப்பொருள் (தனிப் பெரும்) படைப்பாளியான விந்தன் திறனாய்வாளர்களாலும் முட்டாள் வாசகப் பரப்பாலும் அமுக்கப்பட்டு விட்டதாக (பக்., 117) சமுத்திரம் குற்றம் சாட்டுகிறார். யாரும் யாரையும் அமுக்கிவிட முடியாது. திறமான புலமையெனில் எத்தனை பேர் சேர்ந்து அமுக்கினாலும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு விடும் ஆற்றல் அதற்கு உண்டு.

V

இறுதியாக ஒரு குறிப்பு

நம் நாட்டுப் புராணங்கள் சிலவற்றில் வடமுகாக்கினி என்பது பற்றிச் சில குறிப்புகள் வருகின்றன.

வடமுகாக்கினி என்பது குதிரையின் முகம் போன்ற வடிவுடைய தீ! அது சமுத்திரத்தின் உள்ளே இருந்து புறப்பட்டு மெல்ல மெல்ல வந்து கொண்டிருக்கிறதாம். அது முழுமையாக வெளிப்பட்டு விட்டால் மகா பிரளயம். நிகழ்ந்து புதிய உலகு தோன்றுமாம்.

“சமுத்திரத்'தின் நெருப்புத் தடயங்களை நான் ஒரு. வடமுகாக்கினியாக உருவகம் செய்து பார்க்கிறேன்.

ஒரு மகத்தான சமுதாயப் புரட்சியையும், அதன் விளைவான புதிய உலகத்தையும் நமக்கு நினைவூட்டி நம்பிக்கை கொள்ளச் செய்கிறார் சமுத்திரம்!

தோழர் சமுத்திரம் வாழ்க! அவரது இலக்கியப் படைப்புகள் வெல்க!