பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௧௭௮

அகநானூறு

[பாட்டு


(சொ - ள்.) நெஞ்சே !

க-க0. வலம் சுரி மராஅத்து சுரம் கமழ் புது வீ - வலமாகச் சுரித்த வெண்கடம்பினது சுரமெல்லாம் கமழும் புதிய பூக்களை, சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி - சுருள் கொண்ட உளை போன்ற மயிரினை யுடைய தலையில் விளங்கும்படி அணிந்து, கறை அடி மடப் பிடி கானத்து அலற - உரல்போன்ற அடியினையுடைய இளைய பெண் யானை காட்டிற் (பிரிந்து) அலற, களிற்றுக்கன்று ஒழித்த உவகையர் - யானைக் கன்றினைப் பிரித்துக்கொண்ட மகிழ்ச்சியை யுடையராய், கலி சிறந்து - செருக்கு மிக்கு, கருங்கால் மராஅத்துக் கொழுங் கொம்பு பிளந்து - வலிய அடி.மரத்தினை யுடைய வெண் கடம்பின் வளவிய கொம்பினைப் பிளந்து, பெரும் பொளி வெண் நார் - பெரிதாக உரித்த வெள்ளிய நார்க் கயிற்றால், அழுந்து படப் பூட்டி - அக் கன்றினை அழுத்தம்பெறக் கட்டிக் கொணர்ந்து, நெடுங் கொடி நுடங்கும் நியமம் மூதூர் - நீண்ட கொடிகள் அசையும் . அங் காடிகளையுடைய பழைமையான ஊரில், நறவு நொடை நல்லில் புதவு முதல் பிணிக்கும் - கள்விற்கும் நல்ல இல்லின் வாயிலிடத்தே பிணித்திடும், கல்லா இளையர் - தம் வேட்டுவத் தொழிலன்றிப் பிறிது தொழில் கல்லாத வேடர்கட்கு, பெருமகன் - தலைவனான, புல்லி - புல்லி என்பானது, வியன் தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும் - விரிந்த இடத்தினை யுடைய நல்ல நாட்டின் கண்ணுள்ள வேங்கட மலையினைக் கடந்து செல்லினும்,

கக--௪. நெய்தல் கூம்பு விடு நிகர் மலர் அன்ன - நெய்தலினது முகை யவிழ்ந்த ஒளி பொருந்திய மலரை யொத்த, ஏந்து எழில் மழைக் கண் எம் காதலி குணன் - அழகினை ஏந்திய குளிர்ந்த கண்ணினளாய நம் காதலியின் குணங்கள், சேயர் என்னாது - சேய்மைக்கண் சென்றவர் என்னாது, அன்பு மிகக் கடைஇ - அன்பு மிகச் செலுத்திட, எய்தவந்தன தாம் - தாம் நம்பால் அணுக வந்தன.

(முடிபு) நெஞ்சே! (நாம்) புல்லி வேங்கடம் கழியினும், எம் காதலி குணன் தாம் சேயர் என்னாது அன்பு மிகக் கடைஇ எய்த வந்தன. (வி - ரை.) உளை - தலையாட்டம். ஒழித்த உவகையர் : ஒழித்த, பெயரெச்சம் காரணப் பொருட்டாக வந்தது.

(மே - ள்.) 1'வெறியறி சிறப்பின்' என்னுஞ் சூத்திரத்து, தருதலும் என்ற மிகையால், நிரையல்லாத கோடலும் அத் துறைப்பாற்படும் என்றுரைத்து, 'கறையடி மடப்பிடி கானத் தலறக், களிற்றுக் கன்றொழித்த வுவகையர் கலிசிறந்து, . . . கல்லா விளையர் பெருமகன் புல்லி' என்ற அடிகளைக் காட்டி, . . . யானைக் கன்றைக் கவர்ந்தவாறு காண்க என்றனர் நச்.




1. தொல். புறத். ௫. .