பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/384

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 369


தன்னுடைய பிடியோடுங்கூடி வருத்தத்துடன் தங்கியிருக்கும். கற்கள் பொருந்திய பாதைகளையுடைய அத்தகைய காடுகளையுங் கடந்து,

உப்புச் சுமையினை ஏற்றிய வண்டிகளை இழுத்துவரும் பகடுகள் வருத்தமுற்றனவாக, அவற்றின் களைப்பு நீங்குமாறு ஓரிடத்தே தங்கி, வன்னிலத்தை இடித்து, அகன்ற இடத்திலே உமணர்கள் செல்லும் புதியவர்களின் தளர்ச்சி நீங்குவதற்கு உதவியாகவும் ஊறிக் கிடக்கும். அத்தகைய,

ஒலிசெய்யும் வீரக்கழல் அண்ந்த காலினனான புல்லி என்பானது குன்றத்தைச் சார்ந்த, கடத்தற்கும்அருமையான காட்டினைக் கடந்து, வலிய வில்லிலே தொடுத்தல் அமைந்த அம்புகள் செறிவு கொண்டவையாகக் கொண்டிருக்கும் வடுகர்கள், கள்ளுண்ட மகிழ்வினராய்ச் செருக்குமிகுந்து ஆரவாரித்துக் கொண்டிருக்கும், வேற்றுமொழி வாங்கும் தேயத்தையும் கடந்து சென்றுள்ளனர் நம் தலைவர். ஆயினும்,

மாரிக்காலத்தே மலர்தலையுடைய பிச்சியின் குளிர்ந்த இதழைப் போன்ற அழகொழுகும் சிவந்த கடையினையுடைய தண்மையான கண்களையும், மணம் கமழுகின்ற ஐம்பகுப்பாக முடிக்கும் கூந்தலினையும் உடைய மடந்தையே!

நின்னுடைய அழகு நிலைபெற்ற, பரந்த மென்மையான தோள்களின், குற்றமற்ற மாட்சியினையுடைய நலத்தினை மறவாது வந்து, நின் காதலர் தந்தருள்வார். (அதனால், நீயும் தேறியிருப்பாயாக என்றனள்)

என்று, பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொன்னாள் என்க.

சொற்பொருள்: 2. கோடு அகைய - மரக்கிளைகள் வெப்பத்தால் கருகிப் போக 3 என்றுழ் - வெம்மை, 4. நிலவு நிற மருப்பு - நிலவினைப் போன்ற நிறமுடைய கொம்பு. 6. ஓங்கல் யானை - மலையிடத்து யானையுமாம். 7. கடனிர் உப்பு - கடல் நீரினின்றும் எடுத்த உப்பு; இதனால், உப்பினை நிலத்தினின்றும் சிலவிடங்களில் வெட்டி எடுத்து வந்தனராகலாம்.10. அசை விட - களைப்பாற. 1. புடையல் அம் கழல்- ஒலி முழங்கும் அழகிய கழல்கள். 12. விலங்கி - நடந்து. 17. பித்திகம் - பிச்சி மலர். 18. செங்கடை மழைக்கண் - கடைசிவந்த குளிர்ச்சியான கண்கள்.

விளக்கம்: வேங்கையை வெல்லும் களிறும், வெப்பந் தாளாமல் வாடிச் சோர்ந்து பிடியோடு வருந்திக் கிடக்கும் என்பது காட்டின் கடுமையைக் கூறியதாகும். அவர் விரைந்து