மூலமும் உரையும்
புலியூர்க்கேசிகன் ★ 379
நாள்வலை முகந்த கோள்வல் பரதவர்
நுணங்குமணல் ஆங்கண் உணங்கப் பெய்ம்மார்,
பறிகொள் கொள்ளையர், மறுக உக்க
மீன்ஆர் குருகின் கானலம் பெருந்துறை,
தேர்பூட்டு அயர ஏஎய், வார்கோல்
செறிதொடி திருத்திப் பாறுமயிர் நீவிச்,
‘செல்இனி, மடந்தை! நின் தோழியொடு,மனை' எனச்
சொல்லிய அளவை, தான்பெரிது கலுழ்ந்து,
நொதுமலர் போலப் பிரியின் கதுமெனப்
பிறிதுஒன்று ஆகலும் அஞ்சுவல்; அதனால்,
சேணின் வருநர் போலப் பேனா,
இருங்கலி யாணர்எம் சிறுகுடித் தோன்றின்,
துறையும் மான்றன்று பொழுதே; சுறவும்
ஓதம் மல்கலின், மறு ஆயினவே;
எல்லின்று; தோன்றல் செல்லாதீம் என,
எமர்குறை கூறத் தங்கி, ஏமுற,
இல்லுறை நல்விருந்து அயர்தல்
ஒல்லுதும், பெரும! நீ நல்குதல் பெறினே.
பெருமானே!
நாட்காலையிலேயே வலையால் மீனை முகந்துகொணர்ந்த, கொள்ளுந் தொழிலிலே வல்லவரான பரதவர்கள், பின், பறியினாலே கொண்ட கொள்ளையினையும் உடையவராகி, நுண்ணிய மணல் செறிந்துள்ள இடத்திலே அந்த மீன்கொள்ளை காயுமாறு அவற்றைப் பெய்திருப்பார்கள். அவர்கள் வருந்துமாறு மீன்களைத் தின்னும் பறவையினம் வந்து வீழும். அத்தகைய கானற் சோலையினையுடையது கடற்றுறை. அதன் கண் குளிர்ச்சியான சோலையிடத்திலே, பகற்பொழுதும் கழிந்ததாக, நின் ஊருக்குச் செல்வாயாகத் தேரினைப் பூட்டு மாறு ஏவியவனாயினை! நின் தலைவியின் மிகுந்த கோற்றொழிலினையுடைய வளைகளைத் திருத்தியவனாகவும், சிதறிக் கலைந்த கூந்தலைத் தடவி ஒழுங்கு செய்தவனாகவும், ‘மடந்தையே! நின் தோழியோடும் இனி நின் மனைக்குச் செல்வாயாக!’ என்றனை அப்படி நீ சொல்லிய அளவானே,