பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/408

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 393


எட்டுச் செய்யுட்கள் காணப்படுவன. இந்நூலுள், 'கணிவாய்ப் பல்லி’ எனப் பல்லி நன்னிமித்தம் சொல்வதனால் அதனையும், உழிஞ்சிலின் நெற்று ஆடுமகள் அரிகோல் பறைபோல ஒலிக்கும் எனவும், நெல்லியின் திரண்ட காய்கள் வட்டக் கழங்குக் காய்கள் போலத் தோன்றுமெனவும் சுவைபடக் கூறியிருக்கின்றனர். 'பண்பில் கோவலர் தாய் பிரிந்து யாத்த நெங்சமர் குழவிபோல,நொந்து' எனப் பிரிவால் வரும் வருத்தத்தையும் நுட்பமாகக் கூறியுள்ளனர். .

காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் (123,285)

இவர் காவிரிப்பூம் பட்டினத்தவர்; வணிக மரபினர். பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி, சோழன் குராப் பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் (காவிரிக் கிழவன்), ஆய் ஆண்டிரன், பிட்டங் கொற்றன் ஆகியோரைப் பாடியுள்ளவர். உறையூர் மருத்துவன் தாமோதரனார், கோவூர் கிழார், மாடலன் மதுரைக் குமரனார், ஆவூர் மூலங்கிழார், நக்கீரர், மருதனிள நாகனார் போன்ற பெரும்புலவர்களின் காலத்தையொட்டி வாழ்ந்தவர். இவர் செய்யுட்களாகக் காணப்படுபவை அகத்துள் மூன்றும், புறத்துள் ஐந்தும், குறுந்தொகையுள் ஒன்றும் ஆகும். இந்நூலுள், ‘ஆடாப் படிவத்து ஆன்றோர்' என ஆன்றோர் யோகஞ் செய்தலையும், காவிரித் துறையின் சிறப்பினையும், வழியனுப்பும்போது தழுவி விடைபெறுதல் மரபென, 'வாராய் தோழி முயங்குகம் பலவே’ என்ற காட்சியினையும் நயமாகக் கூறியுள்ளனர்.


காவிரிப்பூம் பட்டினத்துச் செங்கண்ணனார் (271)

இவரும் காவிரிப்பூம்பட்டினத்தவர்; வணிகர் மரபினரேயாவர். இவர் பாடியனவாக, அகத்துள் இரண்டும், குறுந்தொகையில் ஒன்றும், நற்றிணையில் ஒன்றும் ஆக நான்கு செய்யுட்களே காணப்படுகின்றன. டாக்டர் உ. வே. சா. அவர்கள் இவர் பெயரினைச் சேந்தங் கண்னார் எனக் குறுந்தொகை உரையுட் கூறுவார்கள். இந்நூற் செய்யுளில், இவர்கள்ளில் என்னும் ஊருக்கு உரியவனாகிய அவியன் என்னும் தலைவனின் மலைவளத்தனைச் சிறப்பித்திருக்கின்றனர். ‘கள்ளில்’ என்பத தொண்டைநாட்டுச் சிவத்தலங்களுள் ஒன்றாகப் பொன் னேரிக்குத் தென்மேற்கே 12மைல் தொலைவில், திருக்கள்ளம்’ என வழங்கும் ஊர் ஆகலாம். ‘பிரிந்துறை நாட்டு மருந்தும் உண்டோ?' எனத் தோழி தலைமகனைச் செலவழுங்கச் சொல்லியது நுட்பமான கருத்தாகும்.