பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/431

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

416

அகநானூறு - மணிமிடை பவளம்


பாடியோர் கபிலர், பரணர், கல்லாடனார், பெருஞ்சித்திரனார் போன்ற, எண்மரவார்.

கட்டி (226)

இவன், இன்றைய சேலம் மாவட்டத்துப் பவானியாற்றுப் பகுதியினை ஆண்டு வந்தவன். உறையூர்த் தித்தனை ஆரியப் பொருனனான பாணனின் துணையுடன் வெல்ல முயன்று பின்னிட்டவன். சேரர்க்குத் துணையாகக் கழுமலப் போரிலே ஈடுபட்டு அதன்கண் தோற்றவன். இப்பாடலுள் பரணர் பெருமான் இவன் தித்தன்பாற் சென்று திரும்பியதை, வலமிகு முன்பிற் பாணனொடு மலிதார்த் தித்தன் வெளியன் உறந்தை நாளவைப், பாடின் தெண்கிணை பாடு கேட்டு அஞ்சிப் போரடுதானைக் கட்டி, பொராஅது ஒடினான்’ எனக் குறிப்பிடுகின்றனர். இவன், கழுமலப்போரிலே சோழர் படைத்தலைவனாகிய பழையனால் வீழ்ந்தான் என, அகம் 44 ஆவது செய்யுள் கூறும்.


கண்ணன் எழினி (197)

இவன் ஒரு குறுநிலத் தலைவன் போலும். இப்பாடலுள் மாமூலனார் இவனை,

..........முளையெழ
முன்னுவர் ஒட்டிய முரண்மிகு திருவின்
மறமிகு தானைக் கண்ணன் எழினி

எனக் குறிப்பிடுகின்றனர்.


கரிகால் வளவன் (125, 141, 246)

சோழன் கரிகாற் பெருவளத்தான் என்ற பெரும்புகழ் பெற்றவன் இவனேயாவான். இவன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னியின் மகன். பொருநராற்றுப் படைக்கும், பட்டினப் பாலைக்கும் பாட்டுடைத் தலைவன். இரும்பிடர்த் தலையாரை அம்மானாகப் பெற்று அவரால் சிறுவயதிலேயே பேணி வளர்க்கப் பெற்றவன். சேரமான் பெருஞ்சேரலாதனோடு போரிட்டு வென்றவன். இவனைப் பாடியோர் கருங்குழலாதனார், வெண்ணியக்குயத்தியார், கடியலூர் உருத்திரங் கண்ணனார் ஆகியோர் 'பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார், சூடா வாகைப் பறத்தலை ஆடுபெற ஒன்பது குடையும் நன்பகல் ஒழித்த பீடில் மன்னர்' என, இவனோடு போரிட்டுத் தோற்ற ஒன்பது மன்னர்களைப் பற்றிப் பரணர் 125 ஆவது செய்யுளிலே கூறுகின்றனர். ‘செல்குடி நிறுத்த பெறும்