பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 35


அவன் அங்ஙனம் முயல முயல அவளுடைய ஊடலும் அதிகமாய்க் கொண்டு போயிற்றேயன்றிக் குறைந்த பாடாயில்லை. இதனால் மனம் நொந்து தன் நெஞ்சுடன் இப்படிச் சொல்லுகிறான் தலைவன்.)

        மைப்புஅறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு
        வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப்,
        புள்ளுப் புணர்ந்து இனிய ஆகத் தெள்ஒளி
        அம்கண் இருவிசும்பு விளங்கத், திங்கட்
        சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக், 5

        கடிநகர் புனைந்து, கடவுட் பேணிப்,
        படுமண முழவொடு பரூஉப்பணை இமிழ,
        வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப்,
        பூக்கணும் இமையார் நோக்குபு மறைய,
        மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை, 10

        பழங்கன்று கழித்த பயம்பமல் அறுகைத்
        தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
        மண்ணுமணி அன்ன மாஇதழ்ப் பாவைத்
        தண்நறு முகையொடு வெந்நூல் சூட்டித்.
        தூஉடைப் பொலிந்து மேவரத் துவன்றி, 15

        மழைபட் டன்ன மணன்மலி பந்தர்,
        இழைஅணி சிறப்பின் பெயர்வியர்ப்பு ஆற்றித்
        தமர்நமக்கு ஈத்த தலைநாள் இரவின்,
        ‘உவர்நீங்கு கற்பின்னம் உயிர்உடம் படுவி!
        முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇப், 20

        பெரும்புழுக் குற்றநின் பிறைநுதற்
        பொறிவியர் உறுவளி ஆற்றச் சிறுவரை திற’ என
        ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
        உறைகழி வாளின் உருவுபெயர்ந்து இமைப்ப,
        மறைதிறன் அறியாள் ஆகி, ஒய்யென 25

        நாணினள் இறைஞ்சி யோளே-பேணிப்
        பரூஉப்பகை ஆம்பற் குரூஉத்தொடை நீவிச்
        சுரும்பிமிர் ஆய்மலர் வேய்ந்த
        இரும்பல் கூந்தல் இருள்மறை ஒளித்தே.

குற்றந்தீர நெய்யிடத்துக் கனிந்த இறைச்சியோடு கலந்த வெண்சோற்றைக் குறையாத வண்மையோடு, உயர்ந்ததோரைப் பேணி, அழகிய இடமகன்ற பெரிய வானின்கண் விளங்கும், அந்தத் தெளிந்த ஒளியையுடைய திங்களை உரோகிணி