பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

அகநானூறு - மணிமிடை பவளம்


        ‘அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும்
        பிறன்கடைச் செலாஅச் செல்வமும், இரண்டும்
        பொருளின் ஆகும், புனையிழை’ என்றுநம்
        இருளேர் ஐம்பால் நீவி யோரே
        நோய்நாம் உழக்குவம் ஆயினும், தாந்தம் 5

        செய்வினை முடிக்க தோழி! பல்வயின்
        பயநிரை சேர்த்த பாண்நாட்டு ஆங்கண்
        நெடுவிளிக் கோவலர் கூவல் தோண்டிய
        கொடுவாய்ப் பத்தல் வார்ந்துகு சிறுகுழி,
        நீர்காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது 10

        பெருங்களிறு மிதித்த அடியகத்து, இரும்புலி
        ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர்வழி,
        செயிர்தீர் நாவின் வயிரியர் பின்றை
        மண்ஆர் முழவின் கண்ணகத்து அசைத்த
        விரலூன்று வடுவில் தோன்றும் 15

        மரல்வாடு மருங்கின் மலைஇறந் தோரே.

தோழி! “எக்காலத்தும்அறநெறியிலே நின்றும் தவறுதல் இல்லாத இல்லறவாழ்க்கையும், பிறன் ஒருவனின் கடை வாயிலிலே சென்று இரந்தும் பணிந்தும் பெறாது, தானே முயன்று ஈட்டியசெல்வமும் ஆகிய இவ்விரண்டின் செப்பமும், பொருளினாலேயே ஆகிவருவதாகும், புனைந்த இழையினை உடையவளே! என்று, அன்று நம்மிடம் சொல்லித், தம் போக்கிற்கு நாமும் உடன்படும் பொருட்டாக, நம்முடைய இருள்போன்ற கருமையான ஐவகையாக முடித்தலையுடைய கூந்தலைக் கோதிவிட்டவாறே நம்மைத் தெளிவித்துச் சென்றவர் நம் காதலர்.

பாற்பசுக்கள் நிரைநிரையாகச் சேர்ந்திருக்கும் வள முடையது பாணனது வளநாடு, அந்த நாட்டின் பற்பல இடங்களிலேயும், நீண்ட சீழ்க்கை ஒலியினை உடையவராகிய கோவலர்கள், தம் ஆநிரைகளுக்கு நீருட்ட வேண்டித்தோண்டிய கூவலாகிய சிறுசிறு குழிகள் விளங்கும். அவற்றிலே, வளைந்த வாயினையுடைய பத்தல்களிலேயிருந்து வார்ந்து ஒழுகும் நீரானது காய்ந்ததனால் உண்டாகிய வருத்தத்துடன், சேர்ந்து தங்குதற்குரிய நிழலிடமும் பெறாது, பெரிய களிறானது மிதித்துச் சென்ற காலடித்தடத்தில், பெரிய புலியும் அடுத்து அடிவைத்துச் சென்றிருக்கும். அப்படிப்பட்ட சேற்றோடு கூடிய சரமுடைய வழியிலுள்ள, அத் தடங்கள் குற்றமற்ற நாவினரான கூத்தர்களது பின்புறத்தே கிடந்து தொங்குகின்ற, மார்ச்சனை