பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 83


        ‘உருமுரறு கருவிய பெருமழை தலைஇப்
        பெயல்ஆன்று அவிந்த தூங்கிருள் நடுநாள்,
        மின்னு நிமிர்ந்தன்ன கணங்குழை இமைப்பப்,
        பின்னுவிடு நெறியிற் கிளைஇய கூந்தலள்,
        வரைஇழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி, 5

        மிடைஊர்பு இழியக் கண்டனென், இவள் என
        அலையல்-வாழிவேண்டு அன்னை!-நம் படப்பைச்
        குருடைச் சிலம்பில், சுடர்ப்பூ வேய்ந்து
        தாம்வேண்டு உருவின் அணங்குமார் வருமே;
        நனவின் வாயே போலத் துஞ்சுநர்க் . 10

        கனவாண்டு மருட்டலும் உண்டே
        இவள்தான் சுடரின்று தமியளும் பனிக்கும்; வெறுவர
        மன்ற மராஅத்த கூகை குழறினும்
        நெஞ்சழித்து அரணஞ் சேரும்: அதன்தலைப்
        புலிக்கணத் தன்ன நாய்தொடர் விட்டு, 15

        முருகன் அன்ன சீற்றத்துக் கடுந்திறல்
        எந்தையும் இல்லன் ஆக,
        அஞ்சுவள் அல்லளோ, இவளிது செயலே!

‘இடிமுழக்கம் மிகுந்து தொகுதியை உடையதாகப் பெருமழையும் பெய்தலைத் தொடங்கிப், பெயல் நின்று, எங்கும் ஒலியடங்கியிருக்கிற இருள் செறிந்த நள்ளிரவு'வேளையிலே, மின்னல்கள் பளிச்சென ஒளிருவதுபோலக் கனவிய தன் குழைகள் விட்டுவிட்டு ஒளிரவும் பின்னலிட்டு விடுகின்ற தனாலே நெறிப்போடு கிளைத்த கூந்தலை உடையவளான இவள், மலைச் சாரலினின்று இறங்கி வருகின்றவொரு மயிலினைப்போலத் தளர்நடை நடந்து, பரணினின்றும்இறங்கிச் செல்லுதலைக் கண்டேன்’ என்று கூறி, இவளை வருத்துதலைச் செய்யாதிருப்பாயாக. எம் அன்னையே! நீ வாழ்வாயாக! யான் சொல்லுவனவும் கேட்பாயாக:

தெய்வங்கள் தங்கி இருத்தலையுடைய மலைச்சாரலிலேயுள்ள நம்முடைய தோட்டத்திலே, கோங்கு முதலிய சுடர் ஒளிவீசும் பூக்களைச் சூடிக்கொண்டு, தாந்தாம் விரும்பிய உருவினை எல்லாம் எடுத்துக் கொண்டனவாக, அணங்குகள் தமக்குரிய பலியுண்ணுவதற்கு வருவதும் உண்டு.

நனவினிடத்து வாய்க்கின்ற ஒரு தன்மையினைப் போலவே, கனவானது தூங்குகின்றவர்களைப் பலவற்றையும் காணச் செய்து மயக்கங்கொள்ளச் செய்தலும் உள்ளதாகும்.