பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/217

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 205


பெருந்தோள் தொய்யில் வரித்தும் சிறுபரட்டு
அஞ்செஞ் சீறடிப் பஞ்சி ஊட்டியும்
எற்புறந் தந்து நிற்பா ராட்டிப்
பல்பூஞ் சேக்கையிற் பகலும் நீங்கார்
மனைவயின் இருப்பவர் மன்னே - துனைதந்து  10

இரப்போர் ஏந்துகை நிறையப் புரப்போர்
புலம்பில் உள்ளமொடு புதுவதந்து உவக்கும்
அரும்பொருள் வேட்டம் எண்ணிக் கறுத்தோர்
சிறுபுன் கிளவிச் செல்லல் பாழ்பட
நல்லிசை தம்வயின் நிறுமார் வல்வேல் 15

வான வரம்பன் நல்நாட்டு உம்பர்
வேனில் நீடிய வெங்கடற்று அடைமுதல்
ஆறுசெல் வம்பலர் வேறுபிரிந்து அலறக்
கொலைவெம் மையின் நிலைபெயர்ந்து உறையும்
பெருங்களிறு தொலைச்சிய இருங்கேழ் ஏற்றை  20

செம்புல மருங்கிற் றன்கால் வாங்கி
வலம்படு வென்றியோடு சிலம்பகம் சிலம்பப்
படுமழை உருமின் முழங்கும்
நெடுமர மருங்கின் மலைஇறந் தோரே!

தோழி! என்னுடைய வேதனையை நீ அறியமாட்டாய்.

நெறித்த கொத்தாக விளங்கும் சாந்தணிந்த எம் கூந்தலை ஆற்றி, அதனிடத்து மலரை அணிந்து விடுவார். இன்மணம் உடைய அழகிய எம் நெற்றியிலே திலகம் இடுவார். பல இதழ்களையுடைய எதிர்வனப்புள்ள மலர்களைக் கிள்ளி எடுத்து.நிறம் வேறுபட, அவ்வவற்றின் பொடிகளையும் எம் நலம் விளங்கும் இளைய அழகிய முலைகளிடத்தே அப்புவார். பெருத்த எம் தோள்களிலே தொய்யில் வரைவார். சிறுத்த பரட்டினையுடைய, எம்.அழகிய சிவந்த சிறிய பாதங்களிலே செம்பஞ்சிக் குழம்பினை ஊட்டுவார். இங்ஙனமெல்லாம் என்னைப் பேணிக்காத்தும், என் தோழியாகிய நின்னைப் பாராட்டிப் பேசியும், பலவாகிய பூக்களைப் பரப்பிய பள்ளியி னின்று, பகற்போதிலும் கூட என்னைப் பிரியாதாராக வீட்டிலேயே இருப்பவர் நம் தலைவர். அவர் -

இரப்பவர்களது ஏந்திய கைகள் நிறையுமாறு தந்து புரப்பவராக, வருத்தமற்ற உள்ளத்துடனே விரைந்து புதுப் பொருள்களை ஈட்டிவந்து உவத்தற்கு உரியதான, அரிய பொருளினை ஈட்டிவருதலைக் கருதியவராகப், பகைவரது சிறுமையான புன்சொற்கள் தருகின்ற துன்பம், பாழ்படுமாறும், தம்பால் நல்ல புகழை நிலைபெறுத்துமாறும், அவர் சென்றுள்ளனர்.