86
அகநானூறு -நித்திலக் கோவை
தடிந்துடன் வீழ்த்த கடுங்கண் மழவர்
திறன்இல் சிதாஅர் வறுமை நோக்கிச்
செங்கோல் அம்பினர் கைந்நொடியாப் பெயரக்
கொடிவிடு குருதித் தூங்குகுடர் கறீஇ
வெண்பரல் இமைக்கும் கண்பறி கவலைக்
கள்ளி நீழற் கதறுபு வதிய
மழைகண் மாறிய வெங்காட்டு ஆர்இடை
எமியம் கழிதந் தோயே - பனிஇருள்
இருங்குளிர் வாடையொடு வருந்துவள் எனவே.
நெஞ்சமே!
மலைச்சாரலிடத்தே விளங்கும் யாமரத்தின் கண்ணே, அதன் உச்சிக் கிளைகளிலே, மாரிக்காலத்திலே துளிர்த்த தண்மையான தளிரையொத்த மேனியினை உடையவள் தம் தலைவி. அவளின் பெரிதாக அமர்த்த குளிர்ச்சியான கண்கள் வருத்தங்கொண்டு, தம் அழகு கெடுமாறு, இவ்விடத்தேயாய், நம்மைப்பிரிந்து அவள் தனித்து இருக்கும்படியாக, யாம் செல்லுதல் இனியதன்று, ஆதலால், நீ கருதும் பொருள் அவ்விடத்தே யாகுக! (அதனை அடைதலை யாம் விரும்போம் என்பது கருத்து) எனவும்,
உப்புவாணிகரின் பொதிகளைச் சுமந்துசெல்லும் கழுதைகளைப் போன்று, குறும்பாறைகள் வரிசைப்படக் கிடக்கும் இடத்தினூடே, பலகாலும் தூதுமேற்கொண்டு செல்லுதலையுடைய பார்ப்பானானவன், தன் மடியிலே வெள்ளிய ஒலைச்சுருளுடன் வருகின்றனன். அவன் வருகின்றதனை மழவர்கள் நோக்குவர். 'உண்ணாமையினாலே வாடிய விலாவினையுடைய இவன் கையிலேயுள்ளது பொன்னாக இருத்தலும் உளதாம்' என்று அவர்கள் கருதுவர்; கருதி, வீணாக அவனை அப்போதே கொன்றும் வீழ்த்துவர். கையில் படையினையுடைய கையினரான, கொடுமையினையுடைய அம்மழவர்கள், உடுப்பதற்கான தகுதியற்ற அப் பார்ப்பானுடைய சிதைந்த ஆடையின் வறுமையினைக் கண்டதும், சிவந்த கோலாகிய அம்பினையுடையவராகத், தம் கைவிரல்களை நொடித்தபடியே, பெயர்ந்தும் செல்வர்.