பக்கம்:அகமும் புறமும்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4*அகமும் புறமும்


எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
                                                                    (குறள்-355)

  என்றும் கூறிச்செல்கிறது. பின்னையது முன்னையதை விடச் சிறந்தது 
  என்பதையும் எளிதில் உணரலாம். அதனாலேயே வள்ளுவரும் 
  பொருளின் தன்மையை அறியும் நுண்ணறிவை 'மெய்யுணர்தல்'என்ற 
  அதிகாரத்தில் வைத்துள்ளார், இரண்டையும், ‘அறிவு’ என்றே குறள் 
  குறிப்பிட்டாலும், இரண்டிற்கும் ஒரளவு வேறுபாடு உண்டென்பதை 
  யாரும் எளிதில் அறியமுடியும்.

முழு வளர்ச்சி

   மனிதன் முழுத்தன்மையடைய (Development of full personality) 
   இவ்வறிவு மிகவும் இன்றியமையாதது. ஆனால், எத்துணைச் 
   சிறந்ததாயினும் அறிவு ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு மனிதன் 
   வாழ முடியாது. வாழ்ந்தாலும், அதனை முழு வாழ்வு என்று கருத 
   முடியாது. மனித வளர்ச்சியில் அறிவு ஒரு பகுதியேயாம். அளவு மீறி 
   இதனையே பெரிதெனப் போற்றி வளர்த்தால் மற்றொரு பகுதியின் 
   வளர்ச்சியை இது தாக்கும்.

உதாரணம்

  குத்துச்சண்டை செய்கிறவர்களைப் பார்க்கிறோம். அவர்கட்குப் 
  போரில் பயன்படுவன இரண்டு கைகளுமே, ஆனால், கைகளில் 
  மட்டும் முழு வன்மையைப் பெற்று விட்டதால் ஒருவன் சிறந்த 
  குத்துச்சண்டை வீரன் ஆதல் இயலுமா? இயலவே இயலாது. ஏனைய 
  உறுப்புக்களையும் உடன் வளர்க்காமல் கைகளை மட்டும் 
  வலுவடையச் செய்த ஒருவன் குத்தினால் அதைப் பொறுப்பது 
  எதிரிக்கு இயலாதுதான். ஆனால், பொறுத்துக் கொண்டு அவன் 
  மீண்டும் குத்தினால் அதனைப் பொறுக்கவும் நைவின்றி