பக்கம்:அகமும் புறமும்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150 • அகமும் புறமும்

தேய்புரிப் பழங்கயிறு போல
வீவது கொல்என் வருந்திய உடம்பே!

(நற்றிணை–284)

(புறந்தாழ்பு–முதுகில் தாழ்ந்து, (நீளமாக) போதின் நிறம் பெறும்–நெய்தற்பூவின் நிறமுடைய; உண்கண்–ஆளை விழுங்குவது போன்ற கண், செல்லல்–வருத்தம்; எவ்வம் செய்தல்–இகழ்ந்து விட்டுப் போதல்; எய்யாமை–அறியாமை; இளிவு–இகழ்ச்சி உறுதி தூக்கத் தூங்கி–உறுதிப்பாடு செலுத்தலினாலே செல்லாது, நனி–மிகுதி; ஒளிறேந்து மருப்பு–ஒளி படைத்த கொம்பு, வீவது கொல்–அழியவேண்டுமா?)

உண்மையான காதலும் கடமை உணர்ச்சியும் ஒருவனுடைய மனத்தில் போராட்டம் நிகழ்த்துவதைச் சித்தரிக்கிறது இப்பாடல். இவை இரண்டில் எது சரியானது என்ற முடிவுக்குத் தலைவன் வர முடியவில்லையாம். ஆகவே, எது சரியென்று கேட்டுக்கேட்டுக் கவலைப்பட்டு அவன் உடம்புகூட இளைத்துவிடுகிறதாம். இன்றும் நம்மில் பலருக்குக் கவலை உண்டு. கவலை இல்லாதவர்களே இவ்வுலகில் இல்லை. ஆனால், இம்மாதிரியான கவலை உண்டா? அன்புக்கும் கடமைக்கும் போராட்டம் நம் மனத்தில் நிகழ்வதுண்டா? உண்மைக் காதல், உண்மைக் கடமை என்ற இரண்டுமே, அருகிய சரக்காகிவிட்ட இற்றை நாளில் இத்தகைய பாடல்கள் ஒரு பெரிய உறுதியையும் உணர்ச்சியையும் நமக்குத் தருகின்றன. இரண்டு யானைகளும் சமபலத்துடன் இழுக்கின்றன என்றமையாற் காதலும் கடமையும் சமபலத்துடன் தலைவனிடம் உள்ளன என்பதையும் கவிஞர் பெற வைத்துவிட்டார்.

*****