பக்கம்:அகமும் புறமும்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186 • அகமும் புறமும்


அதற்குள் தோழி அவனை நோக்கி, “ஐயனே, இப்பரந்த கடற்கரையில் இன்னும் எத்தனையோ மரங்கள் இருக்கின்றனவே! அவற்றுள் ஒரு மரத்தடிக்குச் சென்று விடுங்கள்,” என்று கூறினாள். தலைவனின் வியப்பு இன்னும் அதிகமாகி விட்டது. இவ்வாறு தலைவி மறுப்பதற்குரிய காரணத்தைத் தோழியிடம் கேட்டான். இதோ தோழி பேசுகிறாள்.

“புதிதாக வந்த பாணர்கள் பாடும் மெல்லிய இசைப்பாட்டைப் போல வெண்மையான வலம்புரிச் சங்குகள் ஒலிக்கும் விளங்கிய கடல் நீரை உடைய நெய்தல் நிலத் தலைவரே, யாம் ஒருநாள் விளையாடும் எம்தோழிகளுடன் வெள்ளிய கடற்றுறை மணலில் சென்று விளையாடி இருந்தோம். அப்பொழுது ஒரு புன்னை விதையை மணலுள் புதைத்து விளையாடிவிட்டு வரும் பொழுது அவ்விதையை மறந்துவிட்டோம். மீட்டும் அவ்விடம் சென்று காண்கையில் அப்புன்னை விதை வேர் ஊன்றி முளைத்து நின்றது. அது கண்டு நெய் கலந்த பாலுடன் கூடிய நீரை விட்டு அதனை வளர்த்தோம். எம் அன்னை அதனைக் கண்டு மகிழ்ந்து, ‘நீங்கள் வளர்த்து வரும் இப் புன்னையானது நும்மினும் சிறந்தது அன்றோ! இது நும்முடன் பிறந்த தங்கையாகும்,’ என்று அதன் சிறப்பைக் கூறினாள். எனவே, எம் தங்கையாகிய அதன் எதிரே நாம் சந்திப்பது மிகவும் நாணம் தருவதாய் உளது! அதன் எதிர் நகைத்து விளையாட மிகவும் வெட்கப்படுகிறோம். நீர் எம் தலைவிக்கு அருள் புரிவதாயின் இன்னும் எத்தனையோ மரங்கள் இங்குள்ளன கண்டீர்!”


விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
நெய்பொய் தீம்பால் பெய்துஇனிது வளர்ப்ப,
‘நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்’ என்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே;
அம்ம நாணுதும் நும்மொடு நகையே