பக்கம்:அகமும் புறமும்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் கண்ட அரசன் • 275


இவ்வாறு கூறுவதால், ஆயிரக்கணக்கான தமிழ் மன்னருள் ஒரு சிலரே அவர்தம் சிறப்புக் காரணமாகப் புலவர் பாடும் புகழுடையோராய் விளங்கினர் என அறிய வேண்டும். என்ன சிறப்பைப் புலவர் பாராட்டினர் என்று அறிதல் வேண்டும். அடுத்து, உடல் வீரத்தை அவர்கள் மதிக்கவில்லை எனில், மனவலி அல்லது ஊக்கம் ஒன்றையே போற்றி இருத்தல் வேண்டும். அரசருடைய மனநிலை எவ்வாறு இருந்தது என்று காணத் தமிழ் மன்னன் ஒருவன் பாடிய பாடலே நமக்குத் துணை செய்கிறது. சோழன் நல்லுருத்திரன் என்பவன் அரசனாய் இருந்தமையோடு பெரும் புலவனாயும் இருந்துள்ளான்.

மன்னன் மனநிலை

இத்தகைய உயர்ந்த நோக்கத்துடன் கூடிய மன்னர் வாழும் நாடும் எத்தகைய சிறப்புடன் விளங்கியிருக்கும் என கூறவும் வேண்டுமோ? நெடுஞ்செழியனைப்பற்றி மாங்குடி மருதனார் என்னும் புலவர் கூறிய சொற்கள் இன்றும் இக்கருத்தை விரிவுபடுத்தல் காணலாம், ‘உலகத்தையே பெறுவதாயினும், பொய்கூறாத வாய்மை உடையன். மனிதரே அன்றித் தேவரேவரினும், பகைவர்க்கு அஞ்சிப் பணியமாட்டான். வாணனுடைய புகழ்பெற்ற செல்வத்தையே பெறுவதாயினும், பழியொடு வருவதாயின், விரும்பமாட்டான்!’

‘உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்
பொய்சேண் நீங்கிய வாய் நட்பினையே
முழங்குகடல் ஏணி மலர்தலை உலகமொடு
உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும்
பகைவர்க்கு அஞ்சிப் பணிந்துஒழு கலையே
தென்புல மருங்கின் விண்டு நிறைய
வாணன் வைத்த விழுநிதி பெறினும்
பழிநமக்கு எழுக என்னாய் விழுநிதி
ஈதல் உள்ளமொடு இசைவேட் குவையே’

(மதுரைக்காஞ்சி, 197–205)