பக்கம்:அகமும் புறமும்.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294 • அகமும் புறமும்



அழல் கவர் மருங்கின் உரு அறக் கெடுத்து
தொல்கவின் அழிந்த கண் அகன் வைப்பு
                                                                (பதிற்றுப்பத்து 13)
அம்புடை ஆர்எயில்உள் அழித்துஉண்ட
அடாஅ அடுபுகை அட்டு மலர் மார்பன்
                                                               (பதிற்றுப்பத்து 20)
பின் பகலே அன்றி பேணார் அகநாட்டு
நண்பகலும் கூகை நகும்

அளவிற்கு நகர்கள் பாழாயின. ‘அறத்தாறு நுவலும் பூட்கை’ என்று புறநானூறு போர் அறம் கூறுமேனும் அதற்கு மாறாக நிகழ்ந்த போர்வெறிச் செயல்களின் மிகுதியைப் பதிற்றுப் பத்தும், புறநானூறுமே கூறக் காண்கிறோம்.

வாழ்த்தியல் துறையினும், வாடுக, இறைவ! நின் கண்ணி–ஏனோர் நாடு சுடு கமழ் புகை எறித்தலானே என்றெல்லாம் அறம் வேட்கும் புலவர் பெருமக்களே பாடியுள்ளமையும் காணப்படுகிறது.

தமிழ் மன்னர் நாளோலாக்கம் மிக்க சிறப்புடையதாயினும் அவருள்ளும் சில பேதையர் இல்லாமற் போகவில்லை. இளவிச்சிக்கோ என்பானுடைய அரசியலைப் பாட வந்த பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர்,


வயங்குமொழிப் பாடுநர்க்கு அடைத்த கதவின்
அணங்குசால் அடுக்கம்பொழியநும் ஆடுமழை,
மணங்கமழ் மால்வரை வரைந்தனர், எமரே.
                                                                    (புறம், 151)

என்று பாடுவதால், பரிசிலரை வரவேற்காத அவைகளும் ஒரோ வழிச் சில இருந்தன என்பது அறியப்படுகிறது.