பக்கம்:அகமும் புறமும்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26 • அகமும் புறமும்


யானை தின்பது பச்சை நிற அதிமதுரத் தழை. இதன் பயனாக விளைவது மதம். அது கரு நிறத்தது. மரத்தின் தழைகள் அம் மரத்திற்கு எவ்விதமான மாற்றத்தையும் தருவதில்லை. தழையைத் தின்று முடிக்கும் வரையில் யானை எவ்வித மாற்றமும் பெறுவதில்லை. யானை மட்டுமா, பிற விலங்குகளும் அல்லவா தின்கின்றன. அவை எவ்வித மாற்றமும் பெறுவது இல்லையே.

தினமும் உண்ணும் அத் தழையால் ஏதோ ஒருநாள் மட்டுமே அது மதம் பெறுகின்றது.

எனவே குளகிற்கும், மதத்திற்கும் உள்ள தொடர்பு என்ன என்று விளங்கிக் கொள்ள முடிவதில்லை.

அது போலவே பலமுறை காணும் தலைவனை ஏதோ ஒருநாள் கண்ட போது தலைவிக்கு மனமாற்றம் ஏற்படுகின்றது. தலைவனுக்கும் இந்த மனமாற்றத்திற்கு அவர்கள் சந்திப்புதான் காரணம் என்று சொல்லமுடியாது. ஏன்? பலமுறை சந்தித்தவர்களேதாம். ஆனால் இன்றுதான் அவர்களுக்குள் இம் மனமாற்றம் நிகழ்கிறது.

இது எது போலத் தெரியுமா? தழையைப் பலகால் தின்றாலும் ஏதோ ஒருநாள் யானைக்கு மதம் ஏற்படுகின்றதே அதுபோல. எனவே இத்தொடர்பை நம்மால் பூரணமாக விளங்கிக் கொண்டு சொல்லமுடியாது என்ற கருத்தை மிளைப் பெருங்கந்தன் இப்பாடலில் பாடியுள்ளான்.

இதே புலவன் குறுந்தொகை பாடலில்,

காமம் காமம்’ என்ப; காமம்
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்,
முதைச் சுவல் கலித்த முற்றா இளம் புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோளோயே

(குறுந்தொகை–204)